Monday, August 21, 2006

பொறியியல் கல்லூரிகளின் பரிதாபமான நிலை

இந்த ஆண்டும் தமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் நடை பெறுகிறது. ஆகஸ்டு 15, 2006 தேதி வரை 22000 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மாணவர் சேர்க்கை முடியும் போது இது 17000 என்ற அளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


மேலும் மொத்தம் உள்ள 250 கல்லூரிகளில் 12 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பி இருக்கின்றன.


தமிழ் நாடு என்று இல்லை. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற பல மாநிலங்களிலும் இந்த நிலை தான்.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டி பொட்டுக் கொண்டு இருந்தனர். இன்று மட்டும் ஏன் இந்த நிலை?


இதோ எனக்கு தெரிந்த சில காரனங்கள்
  • புற்றீசல் போல கிளம்பிய சுய நிதிக் கல்லூரிகள்
  • அவற்றின் கல்வித் தரம் பற்றி மாணவர்களிடையே இருக்கும் சந்தேகம்
  • வருவாய்க்காக எந்த விதமான பரிசோதனைகளும் செய்யாமல் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கும் அரசு
  • ஆங்கில இலக்கியம், Visual Communication போன்ற துறைகளுக்கு மாணவர்களிடையே அன்மை காலமாக வளர்ந்து வரும் வரவேற்பு
  • Call Centre, BPO போன்ற நிருவனங்களில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள்

இந்நிலையில் சற்றும் மாறாத ஒன்று, தங்களின் பிள்ளைகள் பொறியியல் கல்லூரிகளிலோ அல்லது மருத்துவ கல்லூரிகளிலோ படிப்பதே தங்களுக்கு பெருமை என்று பல பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருப்பது. அவ்வாறு படிப்பதே அவர்களது வாழ்க்கையை நன்கு அமைக்கும் என்று நினைக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சில மாணவ மாணவியரும் அவ்வாறு படிப்பதே பெருமை என்றெண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளிலோ வருடாந்திர கட்டணங்கள் ஆயிரங்களை தாண்டி லட்சங்களில் வந்து நிற்கிறது. பணம் படைத்த பெற்றோர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டில்லை. ஆனால் ஏழை/நடுத்தர குடும்பத்தை சேர்ந்தோருக்கு?

VRS வாங்கிக் கொண்டு, வீட்டை விற்று, நகைகளை விற்று அவர்கள் தங்களது பிள்ளைகளை பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள். அவ்வாறு சேர்த்த கல்லூரி நன்றாக அமைந்தால் கவலையில்லை. ஆனால் 80% மேற்பட்ட கல்லூரிகள் அடிப்படை வசதி கூட இல்லாமலே இருக்கின்றன.

இதன் உச்ச கட்டமாக பல கல்லூரிகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதே கல்லூரியில் படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத முன்னாள் மாணவர்களை கொண்டே பாடம் நடத்துகின்றனர். நல்ல ஆசிரியர்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாத காரனத்தினால் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்களை படிப்பதற்கோ, தேர்வுகளில் அகிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெருவதற்கோ மாணவர்களால் இயலவில்லை.

உலகிலேயே அதிகமான பொறியியல் பட்டதாரிகளை தேர்விக்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தரும் முன் இனியாவது இதை கவனிப்பார்களாக. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் பொறியியல் மீதான மோகம் நீங்கி பல புதிய துறைகளில் நுழைந்து படித்து சாதனை புரிவார்களாக.

Tuesday, August 15, 2006

பிரதாப முதலியார் சரித்திரம் - ஒரு பார்வை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது (நன்றி : http://www.tamil.net/projectmadurai/) தமிழின் முதல் நவீனம் அல்லவா அது. எந்த விஷயத்திலுமே முதல் முயற்சி என்பது பாராட்டப் படவேண்டியதே ஆகும். அந்த வகையில் இதை படித்த உடன் இதை பற்றிய எனது கருத்துக்களை எழுத முடிவு செய்தேன்.

இந்த நவீனத்தில் முதலில் என்னை கவர்ந்தது இதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளே. இதில் உள்ள பல துணுக்குகள் தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக இடம் பெற்றிருக்கின்றன. கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரின் பல சிறந்த நகைச்சுவைகள் இந்த நவீனத்திலிருந்தே சுடப்பட்டிருக்கின்றன (வாழைப்பழ காமெடி இதில் இல்லை:-)). முன்னரே பல முறை பார்த்து, கேட்டு ரசித்து விட்ட காரனத்தினாலோ என்னவோ இப்பொழுது இதை படிக்கும் போது சிரிப்புணர்ச்சி அதிகம் வரவில்லை. ஆனாலும் அக்காலத்தில் இதை அனைவரும் வியந்து ரசித்திருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

உதாரணத்திற்கு, கண்களை மூடிக்கொண்டு மணலை கண்களில் போட்டுக்கொள்வது, போர்க்களத்தில் எதிரியின் தலையை கொய்யாமல் காலை கொய்ததற்கான காரனமாக அவன் முன்னரே இறந்து விட்ட செய்தியை கூறுவது போன்றவற்றை குறிப்பிடலாம்.

திரைப்படத்தில் இடம் பெறாத நல்ல நகைச்சுவைகளும் பல இதில் உள்ளன. குறிப்பாக, கனகசபை உட்பட நால்வரின் திருமணத்தின் போது ஒருவருக்கு தாலி எடுத்துக் கொடுக்க மறந்து விட்ட புரோகிதர், பின்னர் அதை தெரிந்து கொண்டு இரவு மணப்பெண்கள் தூங்கும் அரைக்கு வந்து தாலி இல்லாத ஒரு பெண்ணிற்கு தாலி கட்டி விட முயற்சிக்கும் செயல் நல்ல தமாஷ்.


இதில் அடுத்ததாக என்னை கவர்ந்தது, பல இடங்களில் மிக நல்ல கருத்துக்களை ஆங்காங்கே கதைகள் மற்றும் பல கதா பாத்திரங்களின் வாயிலாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது.


உதாரணத்திற்கு, கல்வி செல்வம் படைத்தவருக்கு தேவை இல்லை என்று பிரதாப முதலியார் குறிப்பிடும் பொழுது, அவரது அண்ணை, கல்வியின் சிறப்பை அழகாக விளக்குகிறார். பிரதாப முதலியார் கல்வி கற்று முடித்த உடன், அவரது ஆசிரியர், "ஏட்டுக்கல்வி தான் முடிந்ததே அன்றி கல்வி முடியவில்லை. பள்ளியில் கற்பது வெறும் அஸ்திவாரமே. அனுபவக்கல்வியாகிய கட்டடத்தை இதன் மீது நீ கட்டவில்லை என்றால் அஸ்திவாரத்திற்கு பலனே இல்லை." என்று அழகாக கூறுகிறார்.


மேலும் பெண்களை உயர் பண்புள்ள கதாபாத்திரங்களாக உலவ விட்டிருக்கிறார். பிரதாப முதலியாரின் தாயார் மற்றும், அவரது மனைவி ஞானாம்பாள் இருவரின் உயர் பண்புகளும் பல இடங்களில் தெரிகின்றன.


உதாரணத்திற்கு வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்யலாம் என்ற பிரதாப முதலியாரின் யோசனையை நிராகரித்து, ஞானாம்பாள் சொல்லும் பதில். அழகாக இருக்கிறது.

மற்றொரு பொழுதில் தங்களது கணவன்மார்கள் அனைவருக்கும் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டு அவர்களின் மனைவியர் அழுது புலம்ப, பிரதாப முதலியாரின் தாயார் மட்டும் சிந்தித்து செயல் பட்டு அவர்களை அந்த இக்கட்டிலிருந்து மீட்டெடுக்கிறார்.

தையற்காரனிடன் ஒரு ரூபாய் திருடி அகப்பட்டு கொண்ட திருடன் தனது பக்க நியாயத்தை தேவராஜ பிள்ளையிடம் அழகாக விளக்குகிறான். தான் ஒரு ரூபாய் திருடியதற்கு தண்டனை என்றால், அரசர்கள் பலரும் பல நாடுகளுக்கு படை எடுத்து சென்று அங்கே கொள்ளையடிக்கின்றனரே அதற்கு என்ன தண்டனை என்று கேட்கிறான்.

மேலும் தான் கடன் வாங்கிய சொற்ப பணத்தை திருப்பி தர இயலாத நிலையில் வழக்கை சந்திக்கும் ஒரு கடனாளி, "வறுமையின் காரனமாக சொற்ப பணத்தை திருப்பி தராத எனக்கு கடும் தண்டனை என்றால், வங்கிகளில் பல ஆயிரம் கடன் வாங்கி திருப்பி தராதவர்களுக்கு என்ன தண்டனை?", என்று வினவுகிறான்.

இதை படிக்கும் பொழுது ஆச்சரியமாக இருந்த மற்றொரு விஷயம்,


1. லஞ்ச ஊழல்

2. பொய் சாட்சியம் உரைத்தல்

3. பொய் சான்றிதழ் அளித்தல்

4. பிறர் மனைவியை பெண்டாடுதல்

5. அரசாங்க சொத்தை அபகரித்தல்


போன்ற பல குற்றங்களை அக்காலத்திலும் அரசு பதவியில் இருந்தோர் செய்து வந்தனர் என்று ஒருவர் குறிப்பிடுகிறார்.


நம்மில் பலர் ஏதோ சுதந்திரம் கிடைத்த பின்னர் தான் இதெல்லாம் தலை தூக்க ஆரம்பித்தது என்றும், பிரிட்டிஷார் ஆண்டிருந்தால் இந்த தேசம் நன்றாக இருந்திருக்கும் என்றும் நினைத்துக் கொண்டிருக்க, அவர்கள் ஆட்சியிலும் அரசியல் மற்றும் சமூக சீர்கேடுகள் பல இருந்தன என்பது தெளிவாகிறது.

வேட்டைக்கு சென்ற கணவனை தேடிச் சென்ற ஞானாம்பாள் தற்செயலாக ஒரு நாட்டின் அரசியாகி விட, அதை அவள் மறுத்தளிக்கும் காரனம் அழகாக சொல்லப்பட்டிருக்கின்றது.

இராஜ்ய பாரம் எத்தகையது என்றும், அரசனானவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் அழகாக அவள் குறிப்பிடுகிறாள். பிற ஸ்த்ரிகள் காணாத மார்புடையவனாகவும், எதிரிகள் காணாத முதுகுடையவனாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

அதே போன்று, வக்கீல்கள் தமக்கு வரும் வழக்குகளை எவ்வாறு ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் தமிழிலேயே வழக்கு விசாரனையின் போது பேச வேண்டிய அவசியத்தையும் அழகாக விளக்குகிறார்.

இவ்வாறு பாராட்டத்தக்க விஷயங்கள் பல இருக்கும் இந்த நவீனத்தில் என்னை முகம் சுளிக்க வைத்த சிலவற்றை பார்ப்போம்.


இந்த நவீனத்தில் அக்காலத்து வாழ்க்கை முறை தெளிவாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அக்காலத்தில் இருந்த குல ஏற்றத்தாழ்வுகள்.


உதாரணத்திற்கு, பிரதாப முதலியார் நகைச்சுவையாக இவ்வாறு குறிப்பிடுகிறார். "எல்லோருக்கும் மரியாதை தர வேண்டும் என்று என் தாயார் குறிப்பிட்டதால் நான் என் வீட்டிற்கு வரும் வண்ணானுக்கும் தோட்டிக்கும் கூட மரியாதை குடுத்தேன்". மேலும் பிரதாப முதலியாரின் தந்தையும், சம்பந்தி முதலியாரும் சண்டை போடும் பொழுது, "நீ வண்ணான் பரம்பரை அல்லவா?" என்றும், "நீ அம்பட்டன் பரம்பரை அல்லவா?" என்றும் திட்டிக் கொள்கிறார்கள்.


அதாவது முடிதிருத்தும் தொழிலோ அல்லது துணி துவைக்கும் தொழிலோ செய்வதே பாவம் என்றும், அவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் நகைப்புக் குறிய செயலென்றும் குறிப்பிடுகிறார்.


மேலும் ஆங்காங்கே அக்காலத்தில் இருந்த பெண்ணடிமைத்தனம் நன்றாகவே தெரிகிறது. உதாரணத்திற்கு, பிரதாப முதலியார், தனது மனைவியான ஞானாம்பாளிடம் பெண்களை உயர்த்தி பேசும் பொழுது, "இந்நாட்டில் தனது கணவர் இறந்த உடன் தானும் உடன்கட்டை ஏறிய பதிவிரதைகள் பலர் உள்ளனர்." என்கிறார். மேலும் பொல்லாத கணவன் , மனைவி பற்றி அவர்கள் பேசும் பொழுது, பொல்லாத கணவனை (விபச்சாரிகளிடன் சென்ற கணவனை) பொருமை காட்டி மனைவி திருத்தினாள் என்றும், பொல்லாத மனைவியை (பிடிவாத குணம் உள்ள மனைவியை) பிறம்பால் அடித்து கணவன் திருத்தினான் என்றும் கூறுகிறார்.


இதில், ஒழுக்கம் இல்லாத கணவனை திருத்த மனைவிக்கு வழியாக கூறியது பொருமை, ஆனால் பிடிவாத குணம் கொண்ட மனைவியை திருத்த கணவனுக்கு வழியாக கூறியது தண்ட உபாயம். மேலும் உடன்கட்டை ஏறியவர்களே பதிவிரதைகள் என்ற சான்றிதழ் வேறு.

அதே போன்று, புலி துரத்திக் கொண்டு வரும் பொழுது தங்களுடைய மனைவிகளை விட்டு விட்டு ஓடி ஒளிந்த கணவர்களை பார்த்து அவர்களது மனைவியர் ஓடிய பொழுது அவர்களது கால்களில் முட்கள் குத்தி இருக்குமே என்று கவலை கொள்கிறார்கள்.

பிரதாப முதலியாரின் தாயார் அவரது கணவரையும், பிரதாப முதலியாரையும் மற்றும் பலரையும் ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றிய உடன் அவரை பாராட்ட பலர் வருகிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் அநேகம் பேர் பிற புருஷர்கள் ஆகையால் அவர்களை பிரதாப முதலியாரின் தாயாரை பார்க்க அனுமதிக்கவில்லை.


அதாவது உறவினர்கள் அல்லாத வேற்று ஆண்கள் தம் வீட்டு பெண்களை பார்க்க கூட அனுமதி இல்லை என்ற நிலைதான் அக்காலத்தில் இருந்தது.


இதன் உச்ச கட்டமாக கலாச்சார சீரழிவு என்று ஒரு உதாரணம் குறிப்பிடுகிறார். அது என்னவென்றால், ஒரு ஆண் பிற புருஷர்கள் பங்கு கொள்ளும் பல விசேஷங்களுக்கு தன்னுடைய மனைவியை கூட்டி செல்கிறான். இதனால் அவன் கெட்டு சீரழிந்தான் என்று கூறுகிறார்.


இதை எல்லாம் பார்க்கும் பொழுது தீண்டாமையும், பெண்ணடிமையும் அக்காலத்தில் (1850 களில்) படித்த மக்களிடையே கூட தலை விரித்து ஆடியது என்பது தெளிவாகிறது.

ஆனாலும் இத்தகைய முகம் சுளிக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் கருத்தாக கொள்ளாமல் அக்காலத்து வாழ்க்கை முறை இவ்வாறு தான் இருந்தது என்பதை உணர்ந்து பார்க்கும் பொழுது இது ஒரு நல்ல நவீனம் என்று கூறலாம். தமிழ் இலக்கிய உலகில் இது முதல் நவீனம் என்ற ஒரு உண்மையை சேர்த்து பார்த்தோமானால், இது ஒரு சிறந்த படைப்பு, அனைவரும் அவசியம் படித்து மகிழ வேண்டிய ஒரு படைப்பு.

Thursday, August 10, 2006

தீங்கு விளைவித்தால்!!

மகாபாரதத்தில் உள்ள எத்தனையோ கிளைக் கதைகளில் இதுவும் ஒன்று.


பாரதப் போரின் 17ஆம் நாள். கர்ணன் இறந்து விட்டான். அன்று இரவு பாண்டவர்களின் கூடாரமே மகிழ்ச்சியின் எல்லைக்கு செல்வதற்கு பதிலாக சோகமாகவே இருந்தது. அதற்கு காரனம் குந்தி. அவள் கர்ணனின் பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறாள். உண்மையை அறிந்த பாண்டவர்களோ சோகத்தின் எல்லையில் இருக்கிறார்கள்.


அர்ஜுணனோ இன்னும் ஒரு படி மேலே போய் கிருஷ்ணனிடம், "உண்மை அனைத்தும் அறிந்தும் என்னை இப்படி சகோதரனை கொன்ற பாவத்திற்கு ஆளாக்கி விட்டீர்களே. இது நியாயமா? என் வாயாலேயே பல முறை எனது மூத்த சகோதரனை தேரோட்டி மகன் என்று குறிப்பிடுள்ளேனே, இந்த பாவம் என்னை விட்டு நீங்குமா? ஒவ்வொரு முறையும் பலர் அவரை தேரோட்டி மகன் என்று குறிப்பிட்ட போதும் அவரது மனம் என்ன பாடு பட்டிருக்கும்?" என்றெல்லாம் பலவாறு புலம்பினான். அதற்கு கிருஷ்ணனோ எதுவும் சொல்லாமல் புன்னகை பூத்த முகத்துடன் இருந்தான்.


இதைக் கண்ட தருமன் கிருஷ்ணனிடம், "அய்யா! எனது சகோதரன் இவ்வாறு புலம்புவதை கண்டும் புன்னகை சிந்தும் உமக்கு கல் நெஞ்சோ?" என்றான்.


உடனே கிருஷ்ணன், "தருமா! சற்று பொரு. அர்ஜுணன் தனது சகோதரனை கேவலப்படுத்தி விடோமே என்று கவலைப் படுகிறான். ஆனால் தனது சகோதரனை வேறொருவர் மகன் என்று கூறி உண்மையில் அவன் கேவலப்படுத்தியது அவனது தாயாரைத்தான்." என்றான்.


இக்கதை உண்மையோ பொய்யோ. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது நல்ல நீதி. நாம் பல நேரங்களில் அடுத்தவருக்கென்று செய்யும் தீங்குகள் நமக்கே தீங்காக முடியும்.


இதை வள்ளுவப் பெருந்தகை,


"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்"


என்கிறார்.


இளங்கோவடிகள்,


"ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்"


என்கிறார்.


நாமும் நம்மால் முடிந்த வரையில் மனதாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவருக்கு நன்மையே செய்வோமாக.

Wednesday, August 02, 2006

இப்படியும் நடக்கலாம் ஜாக்கிரதை!

அலுவலகத்தில் வேலை செய்கிறேனோ இல்லையோ, காலை முதல் வேலையாக அங்கே சென்று விடுவேன். அப்பொழுது தான் ஒரு நிம்மதி. எனது அலுவலகத்தில் உள்ள கழிவறையை தான் சொல்கிறேன். இன்றும் அவ்வாறே நான் சென்று அமர்ந்து இருந்த போது, பக்கத்து அரையிலிருந்து ஒரு குரல் வந்தது.

குரல்:Hello! எப்படி இருக்கே?

பொதுவாகவே கழிவரைகளில் எல்லாம் நான் பேசுவதில்லை. அதுவும் இது தெரியாத குரல். ஆனாலும் அந்த குரலை என்னால் ஒதுக்க முடியவில்லை. அதனால் சிறிது தயக்கத்துடனேயே பதில் கூறினேன்.

நான்:ம்.... நல்லா இருக்கேன்.

உடனே அதற்கு அடுத்த கேள்வி வந்தது.

குரல்:வாழ்க்கை எப்படி போகுது?
நான்:பரவாயில்லை. ஏதோ போய்கிட்டு இருக்கு.
குரல்:அப்புறம், அங்கே என்ன செஞ்சுகிட்டு இருக்கே?

என்னடா கேள்வி இது? இங்கே என்ன புதையலா எடுப்பாங்க? நீ செஞ்சுகிட்டு இருக்கறத தான்டா நானும் செய்யறேன், பரதேசி!

நான்:ஹி ஹி...... சும்மா ஒக்காந்துகிட்டு இருக்கேன்.
குரல்:சரி, நான் அங்கே இப்போ வரட்டுமா?

இதற்கு மேலும் என்னால் அவனுக்கு இடம் கொடுக்க முடியவில்லை. இத்துடன் பேச்சை முடித்து கொள்ளலாம் என்றெண்ணி, பின் வருமாறு கூறினேன்.

நான்:இல்லை. எனக்கு வேறு முக்கியமான வேலை இருக்கு.
குரல் (சற்றே பதற்றமாக):ஹேய்! நான் சொல்றத கேளு. நான் உனக்கு மறுபடியும் கால் செய்யறேன். இங்கே ஒரு முட்டாள் நான் உன் கூட பேசரதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கான்.

[நன்றி : எனக்கு இதை அனுப்பிய என் நண்பன் ராஜேஷ்]