Saturday, December 30, 2006

குழலினிது யாழினிது!!!

சமீபத்தில் திரு.சர்வேசன் அவர்களின் "மாதவன் கலக்கல்ஸ்" என்ற ஒரு பதிவை படிக்க [பார்க்க] நேர்ந்தது. அதில் மழலை மாறாத மாதவன் அமெரிக்க மாகாணங்களின் தலை நகரங்களை சரியாக கூற, அதை அவனது தந்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். பதிவின் முடிவில் "Excellent Madhava!" என்று பாராட்டு வேறு. இவர் என்றில்லை, பொதுவாகவே இன்றைய இந்திய பெற்றோர்களிடையே தத்தம் குழந்தைகளை இது போன்ற செயல்களை செய்ய வைத்து பெருமை அடையும் ஒரு வித மன நோய் இருக்கிறது. ஆம் இதுவும் ஒரு வகை மன நோயே. மூன்று நான்கு வயதிலிருந்தே பாட்டு, நடனம், ஓவியம் இன்னும் பிற கலைகள் பொன்றவற்றை பயின்று வரும் குழந்தைகள் பலர் அதை TVயில் கூற நான் கேட்டிருக்கிறேன். அந்த வயதில் தனக்கு பிடித்த ஒரு துறையை தேர்வு செய்யும் அறிவு குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? ஆக பெற்றோர் தாங்கள் விரும்பும் ஒரு துறையில் தங்களது குழந்தைகளை சாதிக்க வைத்து தாங்கள் பெருமை அடைய தங்களது குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலி கொடுக்கிறார்கள்.

ஐந்து வயது குழந்தை பொருள் தெரியாமல் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதாலும், மாகானங்களின் தலை நகரங்களை கூறுவதாலும் என்ன பலன் ஏற்படப் போகிறது? இந்திய கல்வித்திட்டத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டியது மனப்பாடம் செய்யும் முறை என்று ஆய்வாளர்கள் பல முறை கூறியும் இத்தகைய பெற்றொர்கள் திருந்தவில்லை. இவர்களின் ஊக்குவிப்பாலும், பாராட்டுகளாலும் குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்வதே அறிவை வளர்க்கும் முறை என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடாதா?

ஒரு மனிதனின் தற்போதைய சராசரி வாழ்நாள் 65 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் 15 ஆண்டுகள் மட்டுமே அவனால்/அவளால் உடலளவிலும் மனதளவிலும் குழந்தையாக இருக்க முடியும். ஆனால் இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை மனதளவில் குழந்தைகளாக இருக்க விடுகிறார்களா? அரட்டை அரங்கம் போன்ற TV நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகள், குழந்தைகள் போலவா பேசுகிறார்கள்?

குழலையும் யாழையும் விட இனிமையானது குழந்தைகளின் மழலை என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய குழந்தைகள் பலருக்கு மழலை பேச்சே வருவதில்லை. நான்கு வயதிலேயே நன்றாக பேச தொடங்கி விடுகிறார்கள். 11 வயதில் பூப்படைந்து விடும் பெண் குழந்தைகள் பலர் இருக்கிறார்கள்.

குழந்தை திருமணத்தை தடை செய்தது போல, பெற்றோர்கள் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலி இடுவதையும் தடை செய்ய வேண்டும். சட்டத்தின் மூலம் அது முடியாது. தனி மனிதர்கள் திருந்துவதின் மூலம் மட்டுமே அது முடியும். நாம் இனியாவது நமது குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போம். அவர்களின் குழந்தை பருவம் அவர்களுக்கு சொந்தமானது. அதை அவர்களிடமிருந்து பிடுங்குவது, பிறர் சொத்துக்களை கொள்ளையடிப்பதை போன்றது.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்