Thursday, December 29, 2011

ச்சும்மா விளையாட்டுக்கு

படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.








Photos © Getty Images

Tuesday, December 27, 2011

2011 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்



எப்பொழுதும் ஆண்டின் கடைசி நாளில் தான் பின்னோட்டங்களை போடுவது என் வழக்கம். இம்முறை சிறிது முன்னதாகவே.

முந்தைய பின்னோட்டங்களை காண கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்லவும்.

2010 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்

2009 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்

டாப் ஐந்து கமர்ஷியல் படங்கள்:

1. மங்காத்தா
2. வேலாயுதம்
3. கோ
4. ஏழாம் அறிவு
5. காஞ்சனா

டாப் ஐந்து வித்தியாசமான படங்கள்:

1. ஆடுகளம்
2. எங்கேயும் எப்போதும்
3. ஆரண்ய காண்டம்
4. தெய்வத் திருமகள்
5. மயக்கம் என்ன?

டாப் ஐந்து தழுவிய படங்கள்:

1. காவலன்
2. சிறுத்தை
3. ஒஸ்தி
4. முரண்
5. வானம்

டாப் ஐந்து எனக்குப் பிடித்த ஆனால் ஊத்திக் கொண்ட படங்கள்:

1. ரௌத்திரம்
2. யுத்தம் செய்
3. தூங்கா நகரம்
4. 180
5. சதுரங்கம்

டாப் ஐந்து ஏமாற்றங்கள்:

1. அவன் இவன்
2. நடுநிசி நாய்கள்
3. வெடி
4. வேங்கை
5. பயணம்

டாப் ஐந்து மொக்கை படங்கள்:

1. மாப்பிள்ளை
2. எங்கேயும் காதல்
3. யுவன் யுவதி
4. ராஜ பாட்டை
5. வந்தான் வென்றான்

இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட்கள்:

1. குள்ள நரி கூட்டம்
2. மௌனகுரு

இந்த ஆண்டின் வருத்தமளிக்கும் தோல்வி:

அழகர் சாமியின் குதிரை

எனது மனம் கவர்ந்த படம்:

எங்கேயும் எப்போதும்

Sunday, December 25, 2011

பொடிமாஸ் - 12/25/2011

இன்று சென்னை அருகில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஒரு படகு கவிழ்ந்ததில் சுமார் 22 பேர் இறந்து விட்டனர். அது ஒரு மீனவப் படகு என்றும், அதிகரப் பூர்வமான உரிமம் எதுவும் இல்லாமல் விடப்பட்டதாகவும் தெரிகிறது. லைப் வெஸ்ட் போன்ற பாதுகாப்புகள் இல்லாமல், தேவையான உரிமங்கள் இல்லாமல் விடப்படும் படகுகளில் உல்லாசத்திற்காக பயணித்தால் இப்படித்தான் நடக்கும். இறந்தவர்கள் மீது அனுதாபத்திற்கு பதிலாக கோபமே வருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு தான் உண்மையில் அனுதாபம் தேவை. இதை பார்த்தாவது சிலராவது திருந்தினால் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். பொதுவாக வெளி நாட்டிலிருந்து இந்தியா வரும் இந்தியர்கள் இது போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி கருத்து தெரிவித்தால் சீன் போடுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கு எது தெரியுமோ தெரியாதோ, மனித உயிரின் மதிப்பு அவசியம் தெரியும்.



விளையாட்டு வீரர்களுக்கும் பாரத ரத்ணா விருது வழங்க இயலும் விதமாக ஒரு சிறு விதியை மாற்றி அமைத்திருக்கிறது அரசு. பலர் இது சச்சினுக்காக செய்தது என்று கருதுகிறார்கள். எனக்கும் அப்படியே தோன்றுகிறது. ஆனால் அதில் தவறொன்றும் இல்லை. இலக்கியத்திற்காகவும், இசைக்காகவும் விருது கொடுக்கலாம் என்றால் விளையாட்டிற்காகவும் கொடுக்கலாம். என்ன?, கிரிக்கெட் அல்லது சச்சின் என்றாலே பலருக்கும் வயிற்றெரிச்சல் வந்து விடும்.



இன்று படித்த மற்றுமொரு செய்தி. இந்திய முஜாஹிதீனின் தலைவனை ஒரு கள்ள நோட்டு வழக்கில் கைது செய்து டில்லி போலீஸார் மூன்று மாதங்கள் சிறையில் வைத்திருக்கிறார்கள். பின்னர் அவன் யாரென்று தெரியாமல் அவனை விடுதலை செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவன் திட்டமிட்டு செயல்படுத்தியது தான் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு. வாழ்க நமது புலனாய்வு.



Don 2 - The King is Back அட்டகாசமாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களை விட நன்றாக இருந்தது. இம்மாதிரியான ஆங்கிலப் படங்கள் பொதுவாக ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் இரண்டரை மணி நேரத்திற்கு திரைக்கதை அமைப்பது எளிதல்ல. "The King is Back" என்பது பொதுவாக ஷாருக்கை குறித்து கூறப்பட்டாலும், எனக்கு என்னவோ ஃபர்ஹான் அக்தரை குறிப்பதாகவே தோன்றியது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படம் இயக்கி சிக்ஸர் அடித்திருக்கிறார். Welcome back Farhan.



நண்பன் டிரைலர் அட்டகாசமாக இருக்கிறது. ஓமி வைத்யா கேரக்டருக்கு சத்யன் சரியான தேர்வு. நமது எஸ். ஜே. சூர்யா எந்த பாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியவில்லை. கிளைமேக்ஸ் மாற்றி இருக்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று. நிச்சயம் விஜய் காவலன், வேலாயுதத்தை தொடர்ந்து நண்பனிலும் ஹாட்ரிக் அடிப்பார் என்றே நினைக்கிறேன்.



ராஜ பாட்டை ராஜ விட்டையாக போய்விட்டது. பீமா, கந்தசாமி என்று மரண மொக்கைகளுக்கு பிறகும் இயக்குனர் சுசீந்திரனின் முந்தைய படைப்புகளின் மீதுள்ள மரியாதையினால் நம்பி போய் இம்மாதிரி ஆப்புகள் வாங்க வேண்டி இருக்கிறது. விக்ரம் நாங்க பாவம் இல்லையா? எவ்வளவு நாள் தான் நாங்க வலிக்காத மாதிரியே நடிக்கறது?



குளிர் காலம் தொடங்கி விட்டது. குளிர் உறைநிலை வெட்பத்தில் இருக்கிறது. மாண்டியை வாக்கிங் அழைத்து செல்வது கடினமாக இருக்கிறது. இரண்டு நாட்களாக ஒரே ஜலதோழம் வேறு. கிரிஸ்துமஸ் காரணமாக நாளையும் இங்கு அலுவலகம் விடுமுறை. நாளைக்குள் குணமாகி விட்டால் நல்லது. இல்லையென்றால் கஷ்டம்.



வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wednesday, December 21, 2011

ஹிந்தி திணிப்பு பற்றி அறிஞர் அண்ணா


தேசிய மொழியாக ஹிந்தியை அங்கீகரிப்பதை பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ராஜ்ய சபையில் ஆற்றிய உரையின் சிறு பகுதி.

தமிழில்:

"இந்தியாவில் பெரும்பான்மையாக பேசப்படுவதால் ஹிந்தியை பொதுவான தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அது சரியான வாதமாகும் பட்சத்தில் நாம் ஏன் புலியை நமது தேசிய விலங்காக கருதுகிறோம்? எலி தானே தேசிய விலங்காக இருக்க வேண்டும். அது தானே எண்ணிக்கையில் அதிகம் உள்ளது. மயிலை ஏன் தேசிய பறவையாக கருதுகிறோம்? காகம் தானே எண்ணிக்கையில் அதிகம் உள்ளது."

"இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆங்கிலத்தை கற்பிப்பதால் அதையே நாம் ஏன் பொதுவான தேசிய மொழியாக கருதக் கூடாது? அதன் மூலமே ஏன் நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள கூடாது? தமிழர்கள் ஏன் வெளி நாட்டினருடன் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தையும், மற்ற மாநிலத்தினருடன் தொடர்பு கொள்ள ஹிந்தியையும் கற்க வேண்டும்? பெரிய நாய்க்கு பெரிய கதவும், சிறிய நாய்க்கு சிறிய கதவும் அவசியமா? சிறிய நாய் ஏன் பெரிய கதவினை உபயோகிக்க கூடாது?"

ஆங்கிலத்தில்:

"It is claimed that Hindi should be common language because it is spoken by the majority. Why should we then claim the tiger as our national animal instead of the rat which is so much more numerous? Or the peacock as our national bird when the crow is ubiquitous?"

"Since every school in India teaches English, why can't it be our link language? Why do Tamils have to study English for communication with the world and Hindi for communications within India? Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!"

Monday, December 19, 2011

பொடிமாஸ் - 12/19/2011

சசிகலா கோஷ்டியினர் ஒட்டு மொத்தமாக அதிமுகவிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளனர். அம்மா எந்த சூழ்நிலையில் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. பலரும் பலவற்றை யூகிக்கிறார்கள். இனி சசிகலா கோஷ்டியினர் மீது நில அபகரிப்பு புகார்கள் எழும். கைதும் நடக்கலாம். இதிலெல்லாம் நேரத்தை செலவிடாமல் இனியாவது மக்களுக்கு நல்லது செய்வதில் முதல்வர் நேரத்தை செலவிட்டால் அவருக்கும் நல்லது, அவரது கட்சிக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது. செய்வாரா?



ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகளை செய்யும் டார்ச்சர் தாங்க முடியவில்லை. பேசவே முடியாத குழந்தைகளிடம் மைக்கை கொடுத்து பாடு பாடு என்று இம்சை செய்வதுடன் இதில் ராகம் நொள்ளை, தாலம் நொட்டை என்று டவுசரை கழட்டுகிறார்கள், பார்ப்பவர்களுக்கும் சேர்த்து. இதனிடையில் யாரேனும் வெளியேற்றப்பட்டால் ஒப்பாரி வேறு. குழந்தைகள் மனதில் சுய பச்சாதாபத்தை விதைக்கிறார்கள். இவர்கள் மீதெல்லாம் குழந்தைகள் வன்முறை சட்டம் பாய்ந்து கடித்து துப்ப வேண்டும். அப்பொழுது தான் புத்தி வரும்.



அஜித் - விஜய் யார் படம் பெஸ்ட்? என்றொரு தொடர் விளையாட்டு தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. நம்மையெல்லாம் யார் ஆட்டைக்கு அழைக்கப் போகிறார்கள். பந்தக் கால பார்த்தாலே பந்திக்கு போகும் ஆள் நான். கூப்பிட்டால் தான் ஆட்டையில் சேரனுமா என்ன? இதோ அஜித் மற்றும் விஜய் படங்களில் எனது தேர்வு.

அஜித்: முகவரி, இதன் ஒரிஜினல் கிளைமேக்ஸுடன். அம்சமான படம். அருமையான கதை களம். நல்ல நடிகர்கள் தேர்வு. வாழ்க்கையில் எப்பொழுது எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை அருமையாக சொல்லி இருப்பார் இயக்குனர்.

விஜய்: லவ் டுடே. இதன் முடிவிலும் ஒரு சோகம் இருந்தாலும், படத்தினை பார்த்த அனைத்து இளைஞர்களையும் தனக்கும் இப்படி ஒரு அப்பா, இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் கிடைக்காதா என்று ஏங்க வைத்த படம். "புக்க டிக்கில வச்சா டிகிரி எங்கடி வாங்கறது?", "பொண்ணுங்க படிப்ப ஃபாலோ பன்றாங்க; நம்ம பசங்க அவங்க இடுப்பு மடிப்ப ஃபாலோ பன்றாங்க", "வாந்தியோட சேர்ந்து வசந்தியும் வெளிய வந்துட்டா" போன்ற வசனங்கள் எவர்கிரீன்.



இந்த மாதம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கும் இசைஞானியின் கான்சர்ட் டீசர்கள் ஜெயா டிவியில் வந்து கொண்டிருக்கின்றன. ஆவலை தூண்டுகிறது. நேரலை ஒளிபரப்பு செய்வார்களா என்று தெரியவில்லை. அதன் பேரில் "இசைஞானியின் இனிய பத்து" என்ற தலைப்பில் அவரின் பத்து பாடல்களை பட்டியலிட்டு அனுப்பி வைக்கும்படி கேட்டிருக்கிறார்கள். ராஜாவின் பாடல்களில் பத்தே பத்து பாடல்களை தேர்வு செய்வது நடக்கும் காரியமா? வைரத்தில் எந்த வைரம் உயர்ந்தது? எந்த வைரம் தாழ்ந்தது? எல்லாமே வைரங்கள் தான். எல்லாமே பொக்கிஷங்கள் தான். இருந்தாலும் எனது பத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

1. இளைய நிலா
2. பனிவிழும் மலர்வனம்
3. அந்தி மழை பொழிகிறது
4. என்ன சத்தம் இந்த நேரம்
5. இது ஒரு பொன்மாலை பொழுது
6. ராக்கம்மா கைய தட்டு
7. தூங்காத விழிகள் ரெண்டு
8. ஓ வஸந்த ராஜா
9. ராஜ ராஜ சோழன் நான்
10. பூ மாலையே தோள் சேர வா



சரி ராஜாவின் பாடல் நினைவுகள் தந்த போதையில் ரெஹ்மானையும் கொஞ்சம் கவனித்து பதிவினை முடிப்போம். கீழே உள்ள பாடலின் ஆர்கெஸ்ட்ரேஷனை கொஞ்சம் கேளுங்கள். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த படத்தில் செய்தது என்றால் நம்ப முடிகிறதா? சென்ற வாரம் வெளிவந்த பாடல் போல அவ்வளவு ஃபிரெஷ் ஆக இருக்கிறது. எனது வருத்தமே இது போன்ற முயற்சிக்கு கொடுக்காமல் ஜெய் ஹோ போன்ற மொக்கைக்கு ஆஸ்கார் கொடுத்தது தான்.


Friday, December 16, 2011

ஜீமெயில் சொதப்புகிறது ஜாக்கிரதை



பதிவினை படிப்பவர்கள் அவசியம் பின்னூட்டங்களையும் படியுங்கள். அதில் பந்து, மதுவதணன் மற்றும் டாக்டர் புரூணோ மூவரும் இச்செயல்பாட்டை விளக்கி இருக்கிறார்கள். இது ஜீமெயிலின் குறைபாடு அல்ல என்றும் அது ஒரு வசதி என்றும் தெரிகிறது.

நண்பர்களே,

நீங்கள் ஜீமெயில் உபயோகிக்கிறீர்களா? உங்களது முகவரியில் புள்ளி (Dot) இருக்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஜீமெயில் முகவரியில் உள்ள புள்ளியை அங்கீகரிப்பதில்லை.

உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், எனது மின்னஞ்சல் முகவரி sathya.priyan@gmail.com என்று வைத்துக் கொள்வோம். வேறு யாரோ ஒருவரின் முகவரி sathyapriyan@gmail.com என்று வைத்துக் கொள்வோம், எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களும் sathyapriyan@gmail.com முகவரிக்கும் அனுப்பப்படும். புள்ளி மின்னஞ்சலில் எங்கு எவ்வளவு இருந்தாலும் இதே செயல்பாடுதான். sath.ya.pri.yan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களும் sathyapriyan@gmail.com முகவரிக்கும் அனுப்பப்படும்.

ஆனால் இதை கூகுள் அதிகாரப் பூர்வமாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதனை கூகுள் அங்கீகரித்து சரி செய்யும் வரை உங்கள் மின்னஞ்சலில் உள்ள புள்ளியை நீக்கி விடுங்கள். அது இயலாதென்றால் முக்கியமான வங்கி கோப்புகள், டீமேட் வர்த்தகங்கள் போன்றவற்றை யாஹூ, லைவ், ஹாட்மெயில் போன்ற வேறு வழங்கிகளுக்கு மாற்றி விடுங்கள்.

கூகுளை போன்ற நிறுவனம் இது போன்றதொரு அடிப்படை விஷயத்தில் சொதப்புவது கேவலமாக இருக்கிறது.

இவன்,
சத்யப்ரியன்

Friday, December 09, 2011

இதெல்லாம் ஒரு பிழைப்பு, த்தூ!



நேற்று கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று திடீரென்று தீப்பிடித்தது. (தீ என்ன தபால் முலம் சொல்லி விட்டா வரும்?). தீ பிடித்த உடன் நோயாளிகளை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற மருத்துவமனை ஊழியர்களும் நோயாளிகளை பற்றிய கவலை இல்லாமல் வெளியே ஓடி இருக்கிறார்கள். நோயாளிகளில் நடக்க முடியாதவர்கள் பலர் புகையினால் சூழப்பட்டு சுவாசிக்க முடியாமல் இறந்து விட்டார்கள். பொதுமக்களும், தீயணைப்பு படை வீரர்களும் சேர்ந்து தான் பல நோயாளிகளை மீட்டிருக்கிறார்கள். தற்பொழுது கிடைத்த செய்தியின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 89.

மருத்துவமனையின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்ப்பற்றக்கூடிய பொருட்களால் இது நடந்திருக்கலாம் அன்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். வழக்கம் போலவே எல்லா தனியார் மற்றும் அரசு வளாகங்கள் போலவும் இதிலும் போதுமான அவசர கால வசதிகள் இல்லை. அரசு இயந்திரம் வழக்கம் போலவே எல்லாம் நடந்து முடிந்த உடன் மருத்துவமனை நிர்வாகிகளை கைது செய்திருக்கிறது. மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறது.

மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற மருத்துவமனை ஊழியர்களும் செய்ததை பார்க்கும் பொழுது "மனிதம் செத்துவிட்ட ஒரு சமூகத்தில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?" என்று கேட்க விழைந்தாலும் பொதுமக்களின் சேவையை பார்க்கும் பொழுது மனிதம் இன்னும் பல இடங்களில் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது, செத்து விடவில்லை என்று தெரிகிறது. அதை தட்டி எழுப்ப இம்மாதிரி விபத்துக்கள் தேவை இல்லாமல் அதாகவே எழுந்து நின்று சோம்பல் முறித்தால் சமூகத்திற்கு நல்லது.

இறந்த ஆத்மாக்களுக்கு எனது அஞ்சலிகள்.

Thursday, December 08, 2011

மீண்டும் ஒரு 200!

வாழ்த்துக்கள் சேவாக் ஜீ.



Photos © Associated Press


முந்தைய இருநூறை காண இங்கு செல்லவும்.

Monday, December 05, 2011

பொடிமாஸ் - 12/05/2011

சென்ற வாரம் ஜெர்மனியில் சுமார் 1.8 டன் எடையுள்ள ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது மண்ணில் புதைந்து இருந்தது. இரண்டாம் உலகப் போரின் எச்சங்களில் இதுவும் ஒன்று. ஒரு நகரத்தையே அழிக்கும் சக்தி வாய்ந்தது அது என்று கூறுகிறார்கள். ப்ரிட்டிஷ் காரர்கள் விமானத்தில் இருந்து வீசி இருக்கலாம் என்று கருதுகிறார்கள். நல்ல வேளையாக அது செயலிழக்க செய்யப்பட்டது. உயிர் சேதம் ஒன்றும் இல்லை. வரலாறு ஹிட்லரையும் முஸோலினியையும் மட்டுமே கொடுங்கோலர்களாக காட்டுகிறது. சர்ச்சிலும், ருஸ்வோல்ட்டும், ஸ்டாலினும் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதையே இம்மாதிரி குண்டுகள் எடுத்துக் காட்டுகின்றன.



இரண்டாம் உலகப் போர் என்றதும் நினைவிற்கு வருகிறது, இரண்டாம் உலகப் போரினை பற்றிய ஒரு தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்று நெடு நாட்களாக ஆசை. நேரம் கிடைக்க வில்லை. விரைவில் எழுத வேண்டும்.



சென்ற வார இறுதியில் ஒஸ்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பார்த்தேன். ரெக்கார்டட் பாடல்களுக்கு லிப் சிங்க் செய்கிறார்கள். அதையே ஒழுங்காக செய்து தொலைத்தால் என்ன? ஏதோ டப்பிங் படம் பார்ப்பது போல இருந்தது. பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கிறது. இதனிடையே டி.ஆர். அவர்களின் அலம்பல் வேறு. தாங்க முடியவில்லை. இதுவரை சிம்பு நடித்துள்ள படங்களில் கோவில், தொட்டி ஜெயா, மன்மதன், VTV தவிர்த்து வேறு எந்த படத்தையும் பார்க்க சகிக்காது. இதற்கே இந்த அலம்பல் என்றால் இவர் பெரிய வெற்றியெல்லாம் அடைந்து விட்டால் நம்மவர்களின் கதி?



"வாங்க சினிமாவை பத்தி பேசலாம்" நிகழ்ச்சி முதல் வாரத்தில் சுவாரஸ்யமாகவே தொடங்கியது. பிரபு சாலமன், சத்யா (எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர்) மற்றும் ராதா மோகன் மூவரும் பாக்யராஜுடன் உரையாடினார்கள். இரண்டாம் வாரம் நடந்த வித்தகன் படத்தின் விமர்சனத்தை பற்றிய விமர்சனம் எதுவும் எனக்கு இல்லை. ஏனென்றால் நான் படத்தை பார்க்க வில்லை. ஆனால் மயக்கம் என்ன விமர்சனம் படு சொதப்பலாக இருந்தது. படத்தினை "காமெடி" என்ற ஒரே அளவு கோலை கொண்டு அளந்தார் பாக்யராஜ். அவரே நிகழ்ச்சி முழுதும் பேசிக் கொண்டு இருந்தார். செல்வராகவனையும், தனுஷையும் பேசவே விடவில்லை. சுவாரஸ்யமே இல்லாமல் இருந்தது. மனித உணர்வுகளின் பிறழ்வுகளை காட்சிப்படுத்திய இப்படத்திற்கு இம்மாதிரியான மொக்கை விமர்சனங்கள் உச்ச கட்ட அவமானம்.



அதே நேரத்தில் சன் டிவியின் "குழந்தை பராமரிப்பு" நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு. அதில் கலந்துரையாட ஒரு குழந்தை மருத்துவர் மற்றும் ஒரு செலிப்ரிட்டி கப்பிள். நன்றாக நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். குறிப்பாக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.



சமீப காலமாக ஏதோ கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் எல்லாம் மடையர்கள் போலவும் அது இல்லாதவர்கள் எல்லாம் அதி புத்திசாலிகள் போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப் படுகிறது. ஏதேனும் விவாதம் என்று வந்தால் உடனே விஞ்ஞானம் அனைத்தையும் சந்தேகத்தின் அடிப்படையில் அனுகி நிரூபிக்க வேண்டுகிறது, ஆனால் ஆன்மீகம் அனைத்தையும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறது என்று உளறுகிறார்கள். ஐன்ஸ்டீனின் தியரி ஆஃப் ரிலேடிவிடிக்கு நிரூபணம் கிடையாது. பிதகோரஸ் தியரத்திற்கு நிரூபணம் கிடையாது. அவ்வளவு ஏன்? நம்மவர் ஆர்யபட்டா கண்டு பிடித்த வட்டத்தின் சுற்றளவிற்கு நிரூபணம் கிடையாது. விஞ்ஞானமும் அறிவியலும் பல நேரங்களில் நம்பிக்கையின் அடிப்படையில் பல விஷயங்களை ஏற்றுக் கொள்கின்றன. அய்யா அதி புத்திசாலிகளே! ஆன்மீகம் என்பது கலவியை போன்றது. அதில் ஈடு படாதவர்களால் அதன் இன்பத்தை உணர முடியாது. அதில் ஈடு பட்டவர்களால் அதன் இன்பத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.



சரி, பதிவை எதற்காக ஸீரியஸாக முடிக்க வேண்டும்? மகிழ்ச்சியாக முடிக்கலாம். மகிழ்ச்சி என்றால் சந்தோஷம். சந்தோஷம் என்றால் ஜாலி. ஜாலி என்றால் காமெடி. காமெடி என்றால் வேறு யார்? தலைவர் கவுண்டர் தான். கவுண்டரின் பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா.......... எஞ்ஜாய்



Saturday, December 03, 2011

அஞ்சலி!!!


Friday, December 02, 2011

PIT புகைப்பட போட்டி - டிசம்பர் 2011

பல நாட்களுக்கு பின்னர் மீண்டும் PIT புகைப்பட போட்டிக்காக புகைப்படங்களை நேற்று எடுத்தேன். சரியாக சொன்னால் சுமார் மூன்றாண்டுகளுக்கு பின். அப்பொழுது நான் எடுத்த படம் டாப் 10 ல் தேர்வானது. ஆனால் பரிசு கிடைக்கவில்லை.

இப்பொழுது ஒரு படம் தான் அனுப்ப முடியும். எந்த படத்தை அனுப்புவது என்று தெரியவில்லை.

ஒரு வேளை அனுப்பாமலே கூட இருக்கலாம். படம் எடுப்பது தான் முக்கியம், போட்டியில் பங்கேற்பதோ இல்லை ஜெயிப்பதோ அல்ல.

படங்களை பற்றிய விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்.

படம் 1:

Pairs

படம் 2:

Pairs

படம் 3:

Pairs

Thursday, December 01, 2011

அமெரிக்காவில் ஆந்திர கம்யூனிஸ்டுகள்

சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அது ஒரு பூஜை. நண்பர் ஆந்திராவை சேர்ந்தவர். இங்கு அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் நம்மவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. விழா தட புடலாக நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது திடீர் என்று ஒரு பரபரப்பு. ஒரு நபர் விழாவிற்கு வந்தார். அவருக்கு ஒரு ஐம்பது அல்லது அறுபது வயது இருக்கும். உடனே பலரும் ஓடி சென்று அவரை அழைத்து வந்து அமர வைத்தார்கள். அதன் பிறகு விழா முடியும் வரை அவரை சுற்றி ஒரு பத்து பேர் இருந்து கொண்டே இருந்தார்கள். எனக்கு அவர் யாரோ பெரிய மனிதர் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை.

எனதருகில் இருந்த வேறு ஒரு நண்பரிடம் அவர் யார் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆந்திராவின் கம்யூனிஸ்டு கட்சியின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்று அவரது பெயரை குறிப்பிட்டார். அவரது மகன் மற்றும் மகள் இருவரும் இங்கே அமெரிக்காவில் வசிப்பதாகவும், அவர்களை பார்க்க வருடத்திற்கு ஒரு முறை இங்கே அவர் வருவதாகவும், விழாவை நடத்தும் நண்பர் அவருக்கு உறவு என்றும் குறிப்பிட்டார்.

எனக்கு முதலில் வியப்பாக இருந்தது. அவர் மீது மரியாதை அதிகம் வந்தது. தனக்கு இருக்கும் கம்யூனிஸ்டு கொள்கையை தனது பிள்ளைகளிடம் திணிக்காமல் இருக்கிறாரே என்று. எனது வியப்பையும் மரியாதையையும் அந்த நண்பரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் லேசாக சிரித்தார். அதில் ஒரு நக்கல் தெரிந்தது. அதற்கான காரணம் என்ன என்று வினவினேன். அவர் அங்கு அப்பொழுது பலரும் இருப்பதால் அடுத்த நாள் அலுவலகத்தில் சொல்வதாக சொன்னார்.

அடுத்த நாள் அவர் அலுவலகத்தில் சொன்ன செய்திகள் எனக்கு பெரும் வியப்பளித்தது. அதன் சுருக்கம் கீழே.

ஆந்திராவில் உள்ள கம்யூனிஸ்டுகள் பெரும்பாலானோர் தங்கள் மக்கள் அமெரிக்காவில் இருப்பதையே விரும்புகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் பல ஆண்டுகள் இருந்தாலும், அவர்கள் பச்சை அட்டை தான் வாங்குகிறார்களே தவிர அமெரிக்க குடியுறிமை வாங்குவது இல்லை. ஏனென்றால் அவர்களில் பலருக்கும் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்களை விட விவசாய நிலங்கள் அதிகம். வெளிநாட்டு குடியுறிமை பெற்றவர்கள் விவசாய நிலங்களை வைத்துக் கொள்ள பல சட்ட சிக்கல்கள் இருப்பதாலும், பின் காலத்தில் இந்தியாவிற்கு வந்து கட்சியிலும், அரசியலிலும் பங்கு வகிக்க சிக்கல்கள் வந்து விடக் கூடாதென்றும் அவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். இதற்கே வாய் பிளந்த நான் கடைசியாக அவர் சொன்னதை கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். முந்தைய நாள் விழாவிற்கு வந்த நமது கம்யூனிஸ்ட் தலைவர் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஒரு காரை ஜெர்மனியிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்திருக்கிறார் என்பது தான் அது.

இவர்களுடன் நான் தமிழகத்தின் கம்யூனிஸ்ட் தலைவர்களான நல்லகண்ணு, சங்கரையா, தா. பாண்டியன், ராமகிருஷ்ணன் போன்றவர்களை ஒப்பிட்டேன். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நல்லகண்ணு அவர்கள் கட்சி தொண்டர்கள் பல நாட்கள் தொடர்ந்து திரட்டி அளித்த சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்க மறுத்து அதை கட்சிக்கே திருப்பி அளித்தார்.

நல்லா இருங்கடே! என்று தான் சொல்ல தோன்றியது.