Monday, August 17, 2015

பாங்காக்

சென்ற ஆண்டு அலுவல் நிமித்தமாக ஒரு பத்து நாட்கள் பாங்காக் சென்றிருந்தேன். ராஜ்ப்ரசாங் பகுதியில் இருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் நாங்கள் (ஆறு பேர்) தங்கி இருந்தோம். எங்கள் ஹோட்டலின் அடுத்த கட்டிடம் தான் இன்று குண்டு வெடிப்பு நடந்த கோவில். இந்துக் கோவிலாக இது இருந்த போதிலும், தாய் தேசத்தினர் பலரும் இந்த கோவிலுக்கு வருவதை பார்த்திருக்கிறோம். தினமும் காலை அந்த பகுதியில் வேலை செய்யும் தாய் தேசத்தினர் இங்கு வந்து இந்த கோவிலில் வாசனை பொருட்களை ஏற்றி வைப்பார்கள். அதன் பின்னரே அலுவல் செல்வார்கள்.

இந்த கோவிலை நாங்கள் தங்கி இருந்த பத்து நாட்களில் ஒரு நூறு முறை கடந்திருப்போம். ஒரு வேளை இந்த குண்டு அப்போது வெடித்திருந்தால் எங்களில் ஒருவர் கூட இறந்திருக்கலாம்.

இறந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இன்று யாரோ ஒரு மிருகத்தின் சிந்தனையில் உதித்த திட்டத்தினால் ஒரு சில குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்க கூடும், ஒரு சிலர் தங்கள் வாழ்க்கை துணையை இழந்திருக்க கூடும், ஒரு சிலர் தங்கள் உடல் உறுப்புகளை  இழந்திருக்க கூடும்.

இத்தகைய செயலை செய்தவனுக்கு மரண தண்டனை கொடுக்காமல், வேறு என்ன தண்டனை கொடுப்பது? மரண தண்டனையை எதிர்ப்பது ஒரு ஃபேஷனாக இப்போது ஆகி விட்டது. இம்மாதிரியான குற்றங்களுக்கு அவர்கள் ஏதேதோ காரணங்களை கற்பித்து மரண தண்டனைக்கு எதிராக வாதம் செய்கிறார்கள்.

என்ன செய்வது இறைவன் ஒரு சிலருக்கு தலையில் மூளையை வைப்பதற்கு பதிலாக குதத்தில் வைத்து விட்டான். தாய்லாந்தில் அம்மாதிரி குத மூளைக்காரர்கள் குறைவாக இருப்பார்கள் என்று நம்புவோம்.

குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, August 03, 2015

பொடிமாஸ் - 08/03/2015

கடந்த டிசம்பர் அல்லது ஜனவரியில் ஏதோ ஒரு நாள். தொடர்ந்து ஒரே வாரத்தில் இரு பெரும் பனிப் பொழிவுகள். வழக்கம் போல தங்கமணி உள்ளிருந்து உத்தரவு போட எனது drive way யை தனியாக சுத்தம் செய்து கொண்டிருந்தேன். முன்னரே பெய்த பனியினால் drive way இன் இரு ஓரங்களிலும் இடுப்பளவு பனிக்கட்டிகள் குவிந்து விட்டன.

மனதில் பல சிந்தனைக் குவியல்கள். அப்போது தான் ப்ரணவின் ஆசிரியர் அவன் படிப்பில் இன்னும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றும், சரியாக எழுதுவது இல்லை என்றும், வகுப்பில் கவனம் செலுத்துவது இல்லை என்றும், ஏரோப்ளேன் ஓட்ட தெரியவில்லை என்றும், மல்டிபில் ரெக்ரஷன் அனாலிஸிஸ் தெரியவில்லை என்றும், அமிர்த வர்ஷினி க்கும் ஆபேரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றும், இப்படி இன்னும் பல இல்லை என்றும் பெரிய பட்டியல் ஒன்றை அளித்திருந்தார்.

சார் அவனுக்கு வயசு நாலு தான் ஆகுது என்று சொல்ல வந்து, ஆனால் சொற்கள் வெளிவராமல் நாவின் அடியில் அடங்கி, பெரு மூச்சாக வெளிப்பட்டது.

நான் சுத்தம் செய்வதை அறையில் இருந்து ப்ரணவ் பார்த்துக் கொண்டே இருந்தான். முன்பே சொன்னது போல அங்கே இருந்த பனிக்குவியலால் அவனுக்கு நான் சுத்தம் செய்வது சரியாக தெரியவில்லை. நான் எங்கள் வீட்டின் பனிக்கட்டிகளை எடுத்து சாலையில் போடுவது போல அவனுக்கு தெரிந்தது. உடனே தடால் புடால் என்று மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன், "அப்பா! you can't make a mess like this. Others will fall." என்றான். அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்பதை விளங்கி கொள்ளவே எனக்கு சில விநாடிகள் ஆனது.

ஒரு தகப்பனாக மிகவும் பெருமையடைந்த தருணம் அது. வெளியில் கடும் குளிர், இவனோ ஒரு மெல்லிய ஷார்ட்ஸ் மற்றும் சட்டை அணிந்திருக்கிறான். அவனுக்கே குளிர் நடுக்குகிறது. இந்த நிலையிலும், தனது தந்தையால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று நினைக்கும் அந்த சிவிக் சென்ஸ் இருந்தால் போதும். பெரிய படிப்பு படித்து கிழித்தவர்கள் எல்லாம் நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்?


இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க சுதந்திர தினத்தை தொடர்ந்து இங்கிலாந்து சென்றோம். ஒரு வார சுற்றுப் பயணம். மிகவும் நன்றாக இருந்தது. அதுவும் நாங்கள் சென்ற நேரத்தில் மூன்று முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடந்தன, விம்பிள்டன், ஆஷெஸ் கிரிக்கெட், மற்றும் ப்ரிடிஷ் க்ரான்ட் ப்ரி. எங்கு சென்றாலும் நல்ல கூட்டம். முதலில் நுழையும் போதே இமிக்ரேஷன் ஆஃபீசர் மிகுந்த நட்புடன் உரையாடினார். அமெரிக்காவில் செந்திலை பார்க்கும் கவுண்டர் போலவே மூஞ்சியை வைத்துக் கொண்டிருப்பார்கள். உள்ளே நுழையும் போதே எதற்கு இந்த ஊருக்கு வந்தோம் என்று இருக்கும். அடுத்ததாக கட்டிடங்கள் எல்லாம் பெரும்பாலும் கலோனியல் காலத்தின் பதிவுகளாகவே இருக்கின்றன. ஐந்தடுக்கு பாதாள மெட்ரோ ரயில் போக்குவரத்து. சுமார் 12 கிலோ மீட்டர்கள் பாதையை கட்டி முடித்து அது என்னால் முடிந்ததா உன்னால் முடிந்ததா என்று நம்மவர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லண்டன் மெட்ரோ 1863 ஆம் ஆண்டு தொடங்கியது என்பதை அறியும் போது நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. "ஊர கொள்ளையடிச்சு உலையில போட்டா ஏன் செய்ய முடியாது?" என்று எனக்கு நானே அதற்கு சமாதானமும் சொல்லிக் கொண்டேன்.

லண்டன் நகரின் பரப்பளவு சுமார் 600 சதுர மைல்கள் தான். அதனை ஒரு வட்டமாக பாவித்தால் சுமார் 25 மைல்கள் பயணம் செய்தால் அதனை முழுதுமாக கடந்து விடலாம். அப்படிப்பட்ட நகரத்தின் அடியில் சுமார் 260 மைல் நீள ரயில் பாதைகள் போடப்பட்டு இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு காரோ, பஸ்ஸோ, டாக்சியோ தேவையே இல்லை.

பொது வெளியில் மது அருந்துவது சட்டப்படி தவறு என்றாலும் அங்கே பலர் அவ்வாறு செய்வதை பார்க்க முடிந்தது. பக்கிங்காம் மாளிகையின் வெளியே உள்ள ஒரு பகுதியில் பலர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டேன். அது போலவே லண்டனில் இருந்து மில்டன் கெய்னஸ் என்ற பகுதிக்கு வெர்ஜின் விரைவு ரயிலில் பயணம் செய்யும் போது அங்கும் பலர் மது அருந்துவதை கண்டேன்.

அடுத்ததாக என்னை ஆச்சரியப்படுத்தியது அந்நகரின் பசுமை. உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரில் இருந்து சுமார் 20 மைல்கள் பயணத்தில் என்னால் பல ஆடு, மாடு, மற்றும் குதிரை பண்ணைகளை பார்க்க முடிந்தது. நம்மூராக இருந்திருந்தால் லண்டனுக்கு மிக அருகில் என்று அதிகாலை இரண்டு மணிக்கு யாராவது கூவிக் கூவி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

அமெரிக்கர்களை விட பலர் அங்கே கட்டுக் கோப்பாக இருக்கிறார்கள். உணவின் அளவு அமெரிக்க அளவில் பாதி கூட இல்லை. சென்ற முதல் நாள் ஒரு கடையில் எக்ஸ்ட்ரா லார்ஜ் பர்ரீடோ வாங்கினோம். அது அமெரிக்க அளவில் பாதி இருந்தது. மாலை ஐந்து மணிக்கே எல்லா கடைகளையும் மூடி விடுகிறார்கள். இப்படி இருந்தால் எப்படி வியாபாரம் நடக்கும், லாபம் வரும்?

நாங்கள் சென்ற நேரம் கோடை காலம் ஆனதால் இரவு 11 மணி வரை வெளிச்சம் இருந்தது. அதனால் இரவு நேர லண்டனை பெரிதாக மகிழ்ந்து அனுபவிக்க இயலவில்லை. அடுத்த முறை டிசம்பர் மாதம் செல்ல வேண்டும். மொத்தத்தில் லண்டன் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.


சென்ற வாரம் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு முதலாளித்துவமே காரணம் என்று பலர் ஜல்லியடித்துக் கொண்டனர். உண்மையில் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு சோஷியலிசமே காரணம். 54 வயதில் ஓய்வு, அதிக அளவு ஓய்வூதியம், வாரத்துக்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை, என்றெல்லாம் இருந்தால் எப்படி ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும்? இன்னும் 30 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டில் 60 வயதை கடந்தவர்கள் சுமார் 50 சதவிகிதம் இருப்பார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. இப்படி இருக்கும் ஒரு நாட்டில் ஓய்வூதியத்தை அளித்துக் கொண்டே இருந்தால் எப்படி? யாருடைய உழைப்பு அதனை ஈடுகட்டும்?

சோஷியலிசம் ஒரு வித sense of entitlement ஐ மக்கள் மனதில் விதைத்து விடுகிறது. மக்களை பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை தான். நான் மறுக்கவில்லை. ஆனால் அது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பெற்றோர்களின் கடமை போன்றது. ஒரு வயது வரை நாம் பார்த்துக் கொள்ளலாம், அதன் பின்னர் அவர்கள் தான் தங்கள் காலில் நிற்க வேண்டும். அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி. அதன் பின்னர் நீ என்ன ஆனாலும், நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்தாலும் அரசாங்கம் கவலைப்படாது. அதே நேரம் பணக்காரர்களாக பார்த்து அதிக வரி விதித்து அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையையும் அமெரிக்க அரசு செய்யாது. ஒருவன் வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி அமெரிக்க அரசு கண்டு கொள்ளாது. அது தான் சரி என்பது தான் என்னுடைய கருத்தும்.


50 before 50 என்பதை இலக்காக வைத்திருக்கிறேன். இது வரை பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு வாரம் தங்கிய நாடுகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை ஒன்பது. வயதாகிக் கொண்டே போகிறது. குழந்தை, படிப்பு என்றாகிவிட்ட பிறகு முன்பு போல பயணம் செய்ய இயலவில்லை. ஆனாலும் செய்ய வேண்டும் என்ற ஆவல் அப்படியே இருக்கிறது.

சென்ற ஆண்டு தான் ஜே கண்ணையன் பற்றி அறிந்தேன். அமெரிக்காவில் நல்ல வேலை வாய்ப்பு, வசதி என்று இருந்தவர், அவை அனைத்தையும் விட்டு விட்டு தனது மோட்டர் சைக்கிளில் உலகம் முழுதும் பயணம் செய்ய தொடங்கினார். அமெரிக்காவில் தொடங்கி, மெக்சிகோ சென்று, அனைத்து தென் அமெரிக்க நாடுகளையும் கடந்து, தென் கோடிக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பா கப்பலில் சென்று, அங்கிருந்து ஆப்ரிக்கா வந்து, ஆப்ரிக்காவின் தென் கோடி வரை வந்து, அங்கிருந்து இந்திய தென் கோடிக்கு கப்பலில் வந்து, பின்னர் அங்கிருந்து லடாக் சென்று தனது பயணத்தை முடித்திருக்கிறார். இந்த பயணத்தை மேற்கொள்ள அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. இப்போது இந்தியாவில் இருந்து இது போன்ற பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் நான் அறிந்து மிகவும் வியந்த ஒரு நபர்.

அவரை பற்றி அறிந்து கொள்ள http://jamminglobal.com/ தளத்திற்கு செல்லவும்.


Put Chutney தளத்தை முன்பே அறிமுகப்படுத்தி இருக்கிறேனா என்பது தெரியவில்லை. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ. அட்டகாசம். நீங்கள் மார்வெல் காமிக்ஸ் ரசிகராக இருந்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.



Saturday, August 01, 2015

இரு மரணங்களும் கொஞ்சம் வலியும்

சென்ற வாரத்தில் இரண்டு மரணங்கள். இறந்தவர்கள் இருவருமே இஸ்லாமியர்கள். ஆனால் ஒருவர் மரணத்துக்கு இந்த தேசமே அழுதது. மற்றொருவர் மரணத்தை இந்த தேசமே கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் வேதனை என்னவென்றால் பலரும் அந்த மரணத்தையும் எதிர்த்தார்கள் என்பது தான்.

எப்படி அப்துல் கலாம் போன்றவர்களை தமிழர், இஸ்லாமியர் என்ற குறுகிய வட்டத்துக்குள் வைக்க முடியாதோ, அது போலவே யகூப் மேமன் போன்றவர்களையும் அடக்க முடியாது. அப்துல் கலாம் இந்த தேசத்தின் சொத்து. அனைவருக்கும் பொதுவானவர். அது போலவே யகூப் மேமன் இந்த தேசத்தின் எதிரி.

அவன் ISI பணத்தினை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவியவன். 300 அப்பாவிகளை பலி வாங்கிய குண்டு வெடிப்பு சம்பவத்தினை நடத்த உதவியவன். திட்டமிட்டபடி குண்டு வெடிப்பு நடந்த உடன் கராச்சியின் உள்ள ISI உளவாளி ஜாலியாவாலாவின் உதவியுடன் குடும்பத்துடன் தப்பி சென்றவன். பாகிஸ்தானின் ISI ஆல் அவனுக்கு யூஸுஃப் அஹமத் என்ற போலி பெயரில் போலி பாகிஸ்தான் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது, அவன் தாய்லாந்தில் ஒளித்து வைக்கப்பட்டான். இறுதி வரை அவனை பாதுகாக்க ISI முயன்றது.

அவன் தானாகவே முன் வந்து சரணடைந்தான் என்பதெல்லாம் கட்டுக் கதை. அவனை நேபாளத்தில் நேபாள போலீசார் கைது செய்தனர் என்பது தான் உண்மை. உண்மை இப்படி இருக்க, என்னமோ அவன் ஒரு மஹாத்மா போலவும் இந்தியா திட்டமிட்டு இஸ்லாமியர்களை பழிவாங்குகிறது என்பது போலவும் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. முக நூலில் ஒருவர் ஒன்றை பகிர்ந்திருந்தார். சுதந்திர இந்தியாவில் இது வரை 174 பேர் தூக்கில் இடப்பட்டதாகவும், அதில் 15 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும். இதிலிருந்தே தெரியவில்லையா எது உண்மை எது திட்டமிட்டு சொல்லப்பட்ட பொய் என்பது.

அவன் இந்திய உளவுத்துறைக்கு தான் கைதான பிறகு ஒத்துழைப்பு கொடுத்தான் என்பதாலும் தனது குடும்பத்தினர் இந்தியா வர உதவி செய்தான் என்பதாலும் மட்டுமே அவன் செய்த குற்றங்கள் சரியாகி விடுமா? உயிரிழந்த 300 பேருக்கும், உடல் உறுப்புகளை இழந்த 2,000 பேருக்கும் இந்திய அரசும் நீதித்துறையும் நியாயம் அளிக்க வேண்டாமா?

பம்பாய் குண்டு வெடிப்பு என்பது பாகிஸ்தானின் ISI யால் திட்டமிடப்பட்டு இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர். இதில் மாற்றுக் கருத்து இருப்பவர்களுடன் விவாதிப்பதே சுவற்றில் முட்டிக் கொள்வதற்கு நிகர். ஒருவர் என்னடா வென்றால் பம்பாய் குண்டு வெடிப்பு பாஜக மற்றும் சிவசேனையின் மத அரசியலுக்கான பதிலடி என்று சொல்கிறார். பாகிஸ்தானில் எத்தனையோ இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கெல்லாம் அங்குள்ள இந்துக்கள் குண்டு வெடிப்பு நடத்திக் கொண்டா இருக்கிறார்கள்? இதை சொல்வதன் மூலம் மசூதி இடிப்பை நான் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. நான் கூறுவது அப்பாவி மக்களுக்கெதிரான தீவிரவாதம் எதன் காரணமாக வந்தாலும், எதன் பெயரில் வந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டியதே. ஒரு தவறை இன்னொரு தவறால் நியாயப்படுத்தவே முடியாது.

மற்றொருவர் யாரோ ஒரு பாஜக எம்பி இஸ்லாமியர்கள் எல்லோரும் பாகிஸ்தான் போங்கள் என்று உளறினான் என்பதற்காக இந்திய தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சரி என்று எழுதுகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒவைசி, "சட்டம் தனது கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த தேசத்தின் 80 கோடி இந்துக்களையும் 15 நிமிடங்களில் அழித்து விடுவோம்" என்று சொன்னது பாவம் அவருக்கு தெரியவில்லை போலும்.

இஸ்லாமியர்கள் ஹிந்து மத வெறியர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தங்களை ஒவைசி போன்ற மத வெறியர்களிடமிருந்தும், செக்யூலரிசம் பேசும் பன்னாடைகளிடமிருந்தும் காப்பாற்றிக் கொள்வது. இவர்கள் தான் தீவிரவாதிகளுக்கு இஸ்லாமியர்கள் என்ற மத சாயம் பூசுபவர்கள். இவர்கள் தீவிரவாதிகளால் இறந்த இஸ்லாமியர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்க மாட்டார்கள். ஆனால் அஃப்சல் குருவுக்கும், யகூப் மேமனுக்கும் ஆதரவாக வருவார்கள். ஒரு வேளை கசாப் பலரை கொல்லும் காட்சிகள் படமாக்கப் படவில்லை என்றால் அவனுக்கும் ஆதரவாக கிளம்பி இருப்பார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியின் நீட்சியாகவே இவர்கள் இருக்கிறார்கள்.



அது சரி, யகூப் பற்றி நிறைய பேசியாகி விட்டது. கலாம் பற்றி பேச ஒன்றும் இல்லையா? என்று கேட்டால், பேச நிறைய இருக்கிறது. ஆனால் தேவை இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை. யாருமே பேசவில்லை என்றால் தான் நாம் பேச வேண்டும். இங்கு தான் எல்லோருமே கலாம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே. குறிப்பாக ஜெயமோகனின் கலாம் குறித்த கட்டுரை அருமை. கீழே அதிலிருந்து சில பகுதிகள்.

"அவர் தனக்கென வாழவில்லை. இந்த நாட்டை அவர் விரும்பினார். இதன் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமென கனவுகண்டார். அதற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனக்கென எதையும் சேர்க்கவில்லை. அத்தகைய மகத்தான முன்னுதாரணங்கள் நம் முன் இன்று குறைவே.

தனக்கும் தலைமுறைகளுக்கும் சொத்துசேர்ப்பதன்றி பிறிது எதையுமே அறியாதவர்கள் தலைவர்களாகக் கொண்டாடப்படும் இந்நாட்டில் இளைய தலைமுறையினர் அண்ணாந்து நோக்கும் இலட்சிய வடிவங்கள் மிகச்சிலவே. ஆகவேதான் கலாம் கொண்டாடப்படுகிறார். இலட்சியவாதத்திற்கு இன்னும் இங்கே பெருமதிப்பு உள்ளது என்பதையே காட்டுகிறது இது.
"

ஒரு சோறு பதம். அதனால் இதுவே போதும் என்று நினைக்கிறேன். கட்டுரையை முழுதும் படிக்க இங்கே செல்லுங்கள்.

http://www.jeyamohan.in/77432#

சாரு கேட்கிறார், "கலாம் பற்றிப் பேசும் போது அவர் நல்லவர் என்று பாராட்டுகிறார்கள். ஒருவரை நல்லவர் என்று பாராட்டுகின்ற அளவுக்காக நாட்டில் நல்லவர்களின் எண்ணிக்கை அருகி விட்டது? மனிதனாகப் பிறந்த ஒருவரின் அடிப்படைப் பண்பு அல்லவா அது?" என்று. நியாயமான கேள்வி தான். ஆனால் எந்த நிலையில் இருந்து அப்படி வாழ்கிறோம் என்பது தான் ஒருவனது தன்மையை நிர்ணயிக்கிறது. சாதாரண மக்களாகிய நீங்களும் நானும் நல்லவர்களாக வாழ்வது ஒன்றும் பெரிய செயல் அல்ல. ஆனால் அதிகார மையத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு தவறு செய்ய பல வாய்ப்புகள் இருக்கும் பட்சத்திலும் அதனை செய்யாமல் இருக்க அசாத்திய மன திடம் வேண்டும். அதற்காகவே கலாம் போற்றப்படுகிறார்.

ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி விமர்சிக்க கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை, என்றாலும் அவர் செய்த செயல்களை வைத்து தான் அவரை விமர்சிக்கலாமே தவிர அவர் செய்யாததை வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பது சரி என்று எனக்கு படவில்லை. எத்தனையோ பாரதரத்னாக்களை இந்திய மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவர்களுள் முதன்மையானோர்களின் பட்டியல் ஒன்று தயாரித்தால் அதில் கலாம் நிச்சயம் இடம் பெறுவார். RIP Mr. Kalam.

Friday, May 08, 2015

Disgusting - அருவருப்பின் உச்சம்

சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வந்தாலும் வந்தது மும்பையின் திரைத்துறையினருக்கு பித்தம் தலைக்கேறி விட்டது.

அதிலும் குறிப்பாக அபிஜித் பட்டாசார்யா என்ற ஒரு பாடகன் செய்த செயல் அருவருப்பின் உச்சமாக இருக்கிறது. இந்த பரதேசி நாய் தனது ட்விட்டரில் கீழ்கண்டவாறு சொல்லி இருக்கிறான்.

"மும்பையின் சாலைகளும், நடை பாதையும் தூங்கும் இடமா? அப்படி தூங்க வேண்டும் என்றால் எங்காவது கிராமத்திற்கு சென்று எங்கே எந்த வாகனங்களும் உங்களை கொல்ல முடியாதோ அங்கே தூங்க வேண்டியது தானே."

"திரை உலகத்தினருக்கு ஒரு வேண்டுகோள். சல்மானுக்கு ஆதரவு தெரிவியுங்கள். மும்பையின் சாலைகளும், நடை பாதையும் தூங்குவதற்கான இடங்கள் அல்ல. அங்கே தூங்கியது அவர்களின் தவறு. அந்த விபத்து சல்மானின் குற்றமும் அல்ல, மதுவின் குற்றமும் அல்ல."

"சாலைகள் வாகனங்கள் செல்வதற்கும், நாய்களுக்குமானவை. அதில் தூங்கும் மனிதர்களுக்கானவை அல்ல. சல்மான் மீது ஒரு தவறும் இல்லை."


இந்த அறிவு ஜீவியின் கருத்துப்படி அஜ்மல் கசாப் சும்மா சுடத்தான் செய்தான். அது தவறா? அவன் சுடும் போது அவனது குண்டுகளுக்கு முன்னால் மக்களை யார் சென்று நிற்க சொன்னார்கள்? தர்மபுரியில் அதிமுகவினர் சும்மா பேரூந்தைதான் எரித்தார்கள். அது தவறா? அப்படி அவர்கள் எரிக்கும் போது அந்த மாணவிகளை யார் அந்த பேரூந்துக்குள் இருக்க சொன்னார்கள்?

கீழே உள்ளது அந்த நாதாரியின் ட்விட்டர்.


போடாஆஆஆஆஆஆஆஆஆங்ங்ங்ங்ங்ங்க்க்க்க்க்க்க்க்க்................. வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. I think we must really mandate a license to procreate. Genes like Abhijeet’s should not be allowed to thrive or mutate.

நேற்று ஒருவர் ஒரு இணைய தளத்தில் கீழ்கண்ட பின்னூட்டத்தை இட்டிருந்தார். அதனுடன் நான் முழுதும் உடன்படுகிறேன். Those who stand by Salman, must stand in front of his SUV.

Wednesday, May 06, 2015

Avengers: Age of Ultron

கடந்த 2012 ஆம் ஆண்டு பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது The Avengers திரைப்படம். Avengers series என்பது ஆங்கில சூப்பர் ஹீரோ படங்களுக்கெல்லாம் சிகரம் போன்றது. அதை பற்றி தெரியாதவர்களுக்காக சில குறிப்பிட்ட மார்வெல் சூப்பர் ஹீரோக்களை பற்றிய குறிப்புகள் கீழே.

Peter Parker (Spider Man):

நியூயார்க் நகரில் தனது மாமாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பீட்டர் பார்க்கர் தனது பெற்றோர்களை இழந்தவர். அப்பாவியாகவும், நோஞ்சானாகவும் இருக்கும் அவரை ஒரு நாள் ஒரு சிலந்தி கடித்துவிடுகிறது. சிலந்தியின் DNAவும் அவரது DNAவும் ஒன்று சேர்வதால் அவர் ஒரு சூப்பர் ஹுமனாக மாறுகிறார். பல அபூர்வமான சக்திகள் அவருக்கு கிடைக்கின்றன. அப்போது ஒரு திருடனால் அவரது மாமன் இறந்துவிட, நியூயார்க் நகரில் நடக்கும் குற்றங்களை அழித்து குற்றவாளிகளை ஒடுக்க போராட்டத்தில் களம் இறங்குகிறார்.

Tony Stark (Iron Man):

ஸ்டார்க் இன்டஸ்ட்ரீஸ் ஒரு முன்னணி ஆயுத தயாரிப்பு நிறுவனம். அந்நிறுவனத்தின் தலைவர் டோனி ஸ்டார்க். அவர் ஒருமுறை போர்க்களத்தில் தனது நிறுவனம் தயாரித்த தளவாடங்களை ஆய்வு செய்யும் போது ஒரு விபத்தில் சிக்குகிறார். எதிரிகள் அவரை கடத்தி செல்கிறார்கள். அவரையும் இன்னொருவரையும் ஒரு குகையில் அடைத்து வைத்து அவர்களை ஆயுதம் தயாரிக்க சொல்கிறார்கள். ஆனால் இருவரும் ரகசியமாக ஆயுதம் தாங்கிய ஒரு இரும்பு கவசத்தை தயாரிக்கிறார்கள். உண்மையை அறிந்து கொண்ட எதிரிகள் அவர்களை அழிக்க முயல, அந்த போராட்டத்தில் அவருடன் குகையில் இருந்த மற்றொருவர் இறந்துவிட ஆத்திரம் கொண்ட ஸ்டார்க் எதிரிகளை அழித்துவிட்டு நியூயார்க் திரும்புகிறார். அந்த கவசத்தின் உதவி கொண்டு அமெரிக்காவின் எதிரிகளை அழிக்க உறுதி கொள்கிறார்.

Steve Rogers (Captain America):

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவில் மிகவும் நோஞ்சானாக இருக்கும் ஸ்டீவ் ரோஜர்ஸ், அமெரிக்க படையில் சேர்ந்து ஜெர்மானியர்களை எதிர்த்து போர் செய்ய ஆவல் கொள்கிறார். ஆனால் அவர் மிகவும் நோஞ்சானாக இருப்பதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்க படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ரகசிய மருந்தை கண்டுபிடிக்கிறார்கள். அது ஒருவரது உடலில் செலுத்தப்பட்டால் அவருக்கு என்றும் இளமையும், மித மிஞ்சிய பலமும் கிடைக்கும். அதன் சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறார் ஸ்டீவ் ரோஜர்ஸ்.

அந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெறுகிறது. ஆனாலும் அந்த மருந்தை கண்டு பிடித்த தலைமை விஞ்ஞானி இறந்துவிடுகிறார். அவரது குறிப்புகள் அழிந்து விடுகின்றன. அதனால் அந்த மருந்தை தொடர்ந்து தயாரிக்கவோ, வேறு யாருக்கும் அந்த மருந்தை செலுத்தவோ இயலாத நிலை ஏற்படுகிறது.

கேப்டன் அமெரிக்காவாக மாறும் ஸ்டீவ் ரோஜர்ஸ் ஜெர்மனி வீரர்களை எதிர்த்து போர் செய்து அமெரிக்காவையும் பிரிட்டனையும் காப்பாற்றுகிறார். அதன் பின்னர் உலகையும் அதற்கு வரும் ஆபத்துகளில் இருந்த காப்பாற்ற உறுதியளிக்கிறார்.

Dr. Bruce Banner (Hulk):

டாக்டர் ப்ரூஸ் பேனர் ஒரு அணு ஆராய்ச்சி விஞ்ஞானி. அவர் ஒருமுறை ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது காமா கதிர்களின் முழு வீச்சில் சிக்கிக்கொள்கிறார். அந்த கதிர் வீச்சின் பாதிப்பால் அவருக்கு எப்போதெல்லாம் அதிக கோபம், உயரிய அழுத்தம், ஆத்திரம் எல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மிகப் பெரிய பச்சை நிற ராட்ச்சஸ உருவமாக மாறி விடுவார். அந்த நிலையில் அவரை யாராலும் தடுக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் இவருக்கும் மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம், இவர் ஹல்க் நிலையில் இல்லாத போது மிகவும் வீக்காக இருப்பார். அடிக்கடி தனது நிலையால் மன அழுத்தத்துக்கு ஆளாகி விடுவார்.

Thor:

மற்ற சூப்பர் ஹீரோக்களை போல இவர் ஒரு பூமியை சேர்ந்த மனிதன் கிடையாது. இவர் பூமிக்கு அப்பால் உள்ள அஸ்கார்ட் என்ற கற்பனை நகரத்தின் இளவரசர். பல அபூர்வ சக்திகள் இருந்தாலும், இளவயதில் தனது சக்திகளை மறந்துவிடுகிறார். அதன் பின்னர் அவருக்கு ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த சுத்தி கிடைக்கிறது. அதை ஒரு பாறையில் அடித்தவுடன் அவருக்கு இடி மற்றும் மின்னல் சக்தி கிடைக்கிறது. அவர் மறந்த தனது பழைய சக்திகளும் அவரது நினைவுக்கு வருகின்றன.

இன்னும் Hawk Eye, Black Widow என்று பல Avengers. யோசித்து பாருங்கள். இவர்கள் எல்லாம் தனித் தனியாக பல எதிரிகளை வீழ்த்தியவர்கள். உலகை பல முறை காப்பாற்றியவர்கள். பல அபூர்வ சக்திகளை கொண்டவர்கள். இவர்கள் எல்லோரும் ஒரே திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? முதலில் Avengers அறிவிப்பு வந்த உடனே தெரிந்து விட்டது. ஒன்று இப்படம் சூப்பர் ஹிட், இல்லையென்றால் பப்படம். இம்மாதிரி படங்களுக்கெல்லாம் சுமாரான வெற்றி சுமாரான தோல்வி என்பதெல்லாம் கிடையாது.

இப்படத்தின் முதல் பாகத்தில் தோரின் வளர்ப்பு சகோதரன் லோகி, தெசராக்ட் என்ற ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த கல்லை அபகரிப்பதற்காக பூமிக்கு வருகிறான். அந்த கல்லை தனது செங்கோலின் உதவி கொண்டு அபகரித்தும் விடுகிறான். அவனை தடுத்து நிறுத்தும் Avengers இடமிருந்து அவனை காப்பாற்றுகிறான் தோர். லோகியின் மனதை மாற்றிவிட முடியும் என்று அவன் நம்புகிறான். ஆனால் லோகியோ அங்கிருந்து தப்புவது மட்டும் அல்லாமல், ஒரு பெரும் படை கொண்டு உலகை அழிக்க முயல்கிறான். Avengers அனைவரும் ஒன்று கூடி அவனை எப்படி அழித்தார்கள் என்பது தான் இப்படத்தின் முதல் பாகம்.

இப்படத்தின் இரண்டாம் பகுதி முதல் பகுதியின் முடிவில் இருந்து தொடங்குகிறது. லோகியுடன் நடந்த போராட்டத்தின் விளைவாக லோகியின் செங்கோல் பூமியில் விழுகிறது. அந்த செங்கோலை வைத்து சொகோவியா வில் உள்ள ஹைட்ரா தளத்தில் வூல்ஃப் கேங்கை சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சியில் ஒரு ஆண் பெண் இரட்டையர்களுக்கு அபூர்வ சக்தி கிடைக்கிறது. அந்த ஆணுக்கு மின்னல் வேகத்தில் நகரும் சக்தி கிடைகிறது. அதனால் அவன் Quick Silver ஆகிறான். அவனது சகோதரிக்கு தனது மனதின் சக்தியால் மற்றவர்களின் மனதை அறியவும், அதனை மாற்றவும், மற்றவர்களின் செயலை கட்டுப்படுத்தவும் தேவையான சக்தி கிடைக்கிறது. அவள் Scarlet Witch ஆகிறாள். இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோர்களை கொன்று தங்களது நகரத்தை அழித்தது ஸ்டார்க்கின் ஆயுதங்கள் தான் என்றும் அதனால் ஸ்டார்க்கை பழிவாங்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். வூல்ஃப் கேங்கை சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரையும் கொண்டு Avengers ஐ கொல்லவும், உலகை வெல்லவும் முயல்கிறார்கள். இதனை அறிந்து கொண்ட Avengers அங்கு வந்து அந்த தளத்தை அழித்து லோகியின் செங்கோலை கைப்பற்றுகிறார்கள்.

இடையில் ஸ்கார்லெட் விட்ச், தனது சக்தியால் டோனி ஸ்டார்க்கின் எண்ணங்களை மாற்றி விடுகிறாள். அந்த செங்கோலை நியூயார்க் நகருக்கு எடுத்து வரும் ஸ்டார்க் அதில் ஒரு அபூர்வ element இருப்பதை அறிகிறார். அதற்கு artificial intelligence அளிக்கும் முயற்சியில் அவர் இறங்குகிறார். அதற்கு பேனரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். தன்னிடம் முன்னரே உள்ள JARVIS (Just A Rather Very Intelligent System) என்ற ஸிஸ்டத்தின் உதவி கொண்டு அதனை செய்ய முயல்கிறார். அப்போது திடீரென்று சிந்தனை திறன் பெரும் அந்த தனிமம் Ultron ஆக மாறுகிறது. ஜார்விஸை அழிக்கிறது. பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் மனிதர்களை அழித்து இவ்வுலகில் மனித இயந்திரங்களை உலவ விடுவதுதான் என்று நம்புகிறது அல்ட்ரான். செங்கோலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்புகிறது.

மற்ற Avengers ஸ்டார்கின் இந்த செயலை கண்டு கடும் கோபம் கொள்கிறார்கள். மனிதர்களை அழிக்கும் மனித இயந்திரங்களை உருவாக்க அணுகுண்டு வெடித்தாலும் உருகாத வைப்ரேனியம் (கேப்டன் அமெரிக்காவின் கேடயம் இதனால் செய்யப்பட்டது தான்) என்ற உலோகத்தை அடைய ஆப்ரிக்கா செல்கிறது அல்ட்ரான். இதனை அறிந்து கொண்டு அங்கே வரும் Avengers இன் மனதை குழப்புகிறாள் ஸ்கார்லெட் விட்ச். அதன் காரணமாக ஹல்க் சீற்றம் கொண்டு பேரழிவை ஏற்படுத்துகிறது. மற்ற Avengers அனைவரும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். Avengers ஐ கண்டு மக்கள் பயப்பட தொடங்குகிறார்கள். ஹல்க் சம நிலைக்கு திரும்பி பேனராக மாறிய பின்னர், நடந்ததை எண்ணி வருந்துகிறார் பேனர். மேலும் குழப்பத்தை தவிர்க்க வேண்டி அங்கிருந்து சென்றுவிட விரும்புகிறார். அப்போது அங்கு வரும் ஃபூரி அல்ட்ரானை வெல்ல அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

அல்ட்ரான் வைப்ரேனியத்தால் ஆன எலும்புகளாலும், ஸிந்தெடிக் டிஷ்யூ கொண்டும் தனக்கு ஒரு உடம்பை தயாரிக்க முயல்கிறது. உடல் தயாரானதும் அந்த உடலில் அல்ட்ரான் தனது அறிவை புகுத்த முயலும் போது ஸ்கார்லெட் விட்ச் தனது சக்தியால் அல்ட்ரான் உலகை அழிக்க முயல்கிறது என்பதை அறிகிறாள். அவ்வுடலை அங்கிருந்து எடுத்து ஸ்டார்க்கிடம் வந்து ஒப்படைக்கிறாள். ஸ்டார்க் இந்த உடலில் அல்ட்ரானின் தாக்குதலில் இருந்து தப்பிய ஜார்விஸை செலுத்துகிறார். தோர் அதற்கு உயிரளிக்கிறார். விஷன் உறுவாகிறது. இதனால் கடும் கோபம் கொண்ட அல்ட்ரானின் இயந்திரப் படை உலகை தாக்க தொடங்குகிறது. பழைய Avengers உடன் புதிதாக விஷன், க்விக் ஸில்வர், ஸ்கார்லெட் விட்ச் ஆகியோர் ஒன்று சேர்ந்து எப்படி அல்ட்ரானை வீழ்த்துகிறார்கள், முடிவில் என்ன ஆகிறது என்பது தான் இந்த இரண்டாம் பாகம்.

படத்தில் சிறப்பு திரைக்கதை. இவ்வளவு பாத்திரங்கள் இருந்தாலும் ஒரு நேர் கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை. சண்டை காட்சிகளில் அட்டகாசமாக இருக்கிறது ஒளி மற்றும் ஒலிப்பதிவு. குறிப்பாக க்விக் சில்வர் காட்சிகள் அட்டகாசம். சிறிய சிறிய காட்சிகள் அழகாக அமைத்திருக்கிறார்கள். உதாரணமாக படம் நெடுகிலும் வரும் "Watch your language." காமெடி, தோரின் சுத்தியை தூக்க மற்றவர்கள் முயலும் காட்சி, அதையே ஒரு சண்டை காட்சியில் தோர் தூக்கி வீச, அதிலிருந்து தப்பிக்கும் க்விக் ஸில்வர், அதை பிடிக்க முயன்று அதை தூக்க முடியாமல் அதனுடன் சேர்த்து தூக்கி வீசப்படும் காட்சி, க்ளைமாக்ஸில் விஷன் ஒரே கையால் அதனை தூக்கி தோரிடம் கொடுக்கும் காட்சி, ப்ளாக் விடோ "Big guy!" என்று ஹல்கை கூப்பிடும் காட்சிகள், அவர்களுக்கிடையே இருக்கும் மெல்லிய காதல், என்று பல இடங்களில் சுவாரசியதை சேர்த்திருக்கிறார்கள். போரை அடிப்படையாக கொண்ட படம் என்பதாலும், முதலிலேயே நாம் எல்லோரும் திரும்ப மாட்டோம் என்று டோனி ஸ்டார்க் குறிப்பிட்டு விட்டதாலும் அவசியம் யாராவது ஒருவர் இறப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் யார் அது என்பது தெரியாததால் சுவாரசியமாக இருந்தது. ஒரு நகரமே வானத்தில் மிதப்பது அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.

பெரிய குறை என்று பார்த்தால் சுவாரசியமே இல்லாத கடைசி 30 நிமிடங்கள். விஷனும், ஸ்கார்லெட் விட்சும், க்விக் ஸில்வரும் Avengers டீமில் சேர்ந்த பிறகு ஒரு சுவாரசியமும் இல்லை. சூப்பர் ஸ்டார் படத்தில் பவர் ஸ்டார் வில்லனாக இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது. அல்ட்ரானும் கூட பெரிதாக எதுவும் செய்யவில்லை. உலகில் உள்ள அனைத்து கணினிகளையும் இயக்கும் சக்தி வாய்ந்த ஒன்று இவ்வளவு மொக்கையாக உலகை அழிக்க முயல்வது சிரிப்பாக இருந்தது. மற்றபடி Marvel Comics ரசிகர்களுக்கு இப்படம் சரியான பொழுதுபோக்கு. படத்தின் இறுதியில் ஸ்டார்க் மற்றும் பேனர் இருவருக்கும் விடை கொடுத்து அனுப்பி விட்டார்கள். தோர் மீண்டும் வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் அதனால் பாதகமில்லை. அடுத்த பகுதியில் ஸ்பைடர் மேன் வருகிறார். ஆன்ட் மேன் அதற்கடுத்த பகுதியில் வரக்கூடும் என்று எதிர் பார்க்கிறார்கள். அதனால் ரசிகர்களுக்கு நல்ல வேட்டை இருக்கிறது.

Saturday, May 02, 2015

உத்தம வில்லன் - மரணத்தை வென்றவன்

தமிழ் திரைத்துறையில் முடி சூடா மன்னனாக விளங்கும் நாயகன் மனோரஞ்சன். அவனுக்கு ஒரே நாளில் அவனது வாழ்வை திசை திருப்பும் இரண்டு செய்திகள் வந்தடைகின்றன. ஒன்று, அவன் இன்னும் சில நாட்களில் மூளையில் இருக்கும் ஒரு கட்டியினால் இறப்பான் என்பது. மற்றொன்று, அவனது இளவயது காதலின் காரணமாக அவனுக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பது.

அதுவரை ஈகோ பிடித்தவனாக இருக்கும் நாயகன் அதன் பின்னர் தனது வாழ்வை அசை போடுகிறான். தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்தினருக்கு அவன் செய்ய மறுத்தவைகளை செய்ய முயல்கிறான். திரையுலகில் தன்னை அறிமுகம் செய்த தனது குருநாதரின் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடிக்க ஆசைப் படுகிறான்.

இது இரண்டையும் எவ்வாறு செய்து முடிக்கிறான் அல்லது முடிக்காமல் போகிறான் என்பது தான் கதை. இப்படத்தின் திரைக்கதை இரண்டு பாதைகளில் பயணிக்கிறது. ஒன்று அவன் நடிக்கும் படம். இது கடந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சாகாவரம் பெற்றுவிட்டதாக நம்பப்படும் உத்தமன் என்பவனின் நகைச்சுவை கதை.

மற்றொன்று சமகாலத்தில் அவன் எதிர் கொள்ளும் உறவுச்சிக்கல்கள். இது பல பரிமாணங்களில் சொல்லப்படுகிறது. மனோரஞ்சனுக்கும் அவனது மகளுக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது மகனுக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது மனைவிக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது காதலிக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது குருநாதருக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல், மனோரஞ்சனுக்கும் அவனது மாமனாருக்கும் இடையில் உள்ள உறவுச்சிக்கல் என்று பல திசைகளில் பயணிக்கிறது.

படிக்கும் பொழுது சிறிது ஆயாசமாக இருந்தாலும், திரைக்கதை நம்மை பார்க்கும் போது கட்டிப்போட்டு விடுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் இதில் எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு சொல்லும் முயற்சியில் ஈடுபடாமல் வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறித்தியதை தான்.

நடிகர்களில் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் முதலில் MS பாஸ்கர். என்னா நடிப்பு சார்? குறிப்பாக கமலிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியாகட்டும், அவர் தன்னிடம் தனது நிலையை சொல்லாமல் இருந்துவிட்டாரே என்று ஆதங்கப்படும் காட்சியாகட்டும், மனிதர் அமர்களப்படுத்தி விட்டார்.

அடுத்ததாக ஆன்ட்ரியா. கமலின் மீதுள்ள காதலையும், அதனை வெளி உலகுக்கு சொல்ல இயலாத தனது நிலையையும், அவரது உடல் நிலை கண்டு மறுகுவதும், அட்டகாசம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கமலிடம் ஊர்வசி அவரது கடந்த கால காதலை பற்றி கேட்கும் போது அவர் கொடுக்கும் expressions, simply out of the world.

அடுத்தது கமலின் மகன். யார் அது என்று தெரியவில்லை. முதலில் கமல் மீது அவன் காட்டும் வெறுப்பும், பின்னர் கமல் தனது உடல்நிலையை பற்றி அவனிடம் கூறும் அந்த கட்டத்தில் அவர் வெளிக்காடும் பாசமும், கமலின் பழைய உறவின் தொடர்ச்சியாக வரும் பார்வதியை சகோதரியாக கட்டித்தழுவும் நேசமும் மிகவும் அருமை.

அடுத்தது பார்வதி மேனன். கமலின் மகளாக வருகிறார். பார்வதியின் நடிப்புக்கு பூ மற்றும் மரியான் இரண்டுமே சாட்சி. இதிலும் அட்டகாசப் படுத்தி இருக்கிறார். மற்ற நடிகர்கள் ஊர்வசி, K. விஷ்வநாத், பாலசந்தர், ஜெயராம், நாசர் அனைவரும் அவர்களுக்கான திரையிடத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இறுதியாக கமல். கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்பதெல்லாம் சொல்ல தேவையில்லாத ஒன்று. அவர் சரியாக நடிக்காவிட்டால் தான் அதை சொல்ல வேண்டும். தனது குழந்தைகளிடம் உரையாடும் போது குற்ற உணர்ச்சியில் தத்தளிக்கும் தந்தையாகவும், ஆண்ட்ரியாவுடன் உரையாடும் போது காதலனாகவும், ஊர்வசியுடன் உரையாடும் போது காதலே இல்லாத ஆனால் தனது மகனின் தாயை நேசிக்கும் கணவனாகவும், இப்படி ஒவ்வொரு காட்சியிலும் மொழியால், உடலசைவால், பார்வையால் வேறுபாடு காட்டி அசத்திவிட்டார். என்னை போன்ற அக்மார்க் கமல் ரசிகர்களுக்கு இது ஒரு ஃபுல் மீல்ஸ்.

படத்தில் அடுத்தபடியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டியது வசனம். "இது தான் கதையா?" என்று ஏளனமாக கேட்கும் பாலசந்தரிடம் "இது கதை இல்லை சார், இது தான் காரணம்." என்பதாகட்டும், "என் சொத்தை விட நான் அதிகமா நேசிப்பது எனது டிரைவர், அவரையே தருகிறேன்." என்பதாகட்டும், "என்னோட காதலால் என்னோட கவுரவத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது" என்று ஆன்ட்ரியா கமலிடம் சொல்லும் காட்சியாகட்டும், "ஒரு அருமையான ஸ்க்ரீன்ப்ளே எழுதி எங்கப்பா யாருன்னு இந்த கோடம்பக்கத்துக்கு காட்டனும்" என்று கமலின் மகன் கூறும் வசனமாகட்டும், கமலும் அவரது காதலியும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொள்ளும் கடிதங்களாகட்டும், அனைத்தும் உணர்ச்சிக் குவியல்கள்.

கிப்ரானின் பாடல்களை விட என்னை அதிகம் கவர்ந்தது அவரது பின்னணி இசை. உத்தமனின் வாழ்க்கையை சொல்லும் பகுதிகளில் வேறு மாதிரியும், மனோரஞ்சனின் வாழ்க்கையை சொல்லும் பகுதிகளில் வேறு மாதிரியும் இசையமைத்திருக்கிறார். குறிப்பாக பல இடங்களில் கமலின் நடிப்பின் மீதுள்ள நம்பிக்கையில் அமைதியாக இருக்கிறது அவரது இசை. அடுத்ததாக நடனம். முதல் பாடலில் கெட்ட ஆட்டம் போடும் கமலுக்கு 60 வயது என்றால் எவன் நம்புவான்.

படத்தில் குறைகளே இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறது. மனோரஞ்சனின் வாழ்க்கை ஒரு உணர்ச்சிக் குவியலாக இருப்பதால், உத்தமனின் வாழ்க்கையில் இருக்கும் ப்ளாக் ஹியூமர் சரியாக எடுபடவில்லை. அதே போல உத்தமனின் வாழ்க்கை பகுதிகளை சிறிது குறைத்திருக்கலாம். க்ராஃபிக்ஸ் புலி படு சொதப்பல். பட்ஜெட் காரணமா என்று தெரியவில்லை. மனோரஞ்சனின் வாழ்க்கை பகுதியில் அட்டகாசமாக இருக்கிறது ஒளிப்பதிவு. ஆனால் உத்தமனின் வாழ்க்கை பகுதியில் சில இடங்களில் டல்லாகவும், சில இடங்களில் பளிச் என்றும் இருக்கிறது லைட்டிங். ஒருவேளை எனக்கு தான் அப்படி தெரிந்ததோ என்னவோ.

இறுதியாக, இப்படம் சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். படம் பார்க்கும் அனைவரையும் "எவ்வாறு மரணத்தை வெல்வது?" என்று இது சிந்திக்க வைக்கும். ஒரு கலைஞன் தனது கலை படைப்புகளால் மரணத்தை வெல்லலாம். ஒரு தலைவன் தனது தொண்டுகளினால் மரணத்தை வெல்லலாம். ஆனால் நம் போன்ற சாமானியர்கள் என்ன செய்ய முடியும்? நாம் மரணித்த பிறகு நமது உறவுகளிடம் நாம் விட்டு செல்வது நம்மை பற்றிய நினைவுகளையே. அந்த நினைவுகளை செம்மைப்படுத்தினாலே நம்மால் எளிதில் மரணத்தை வெல்ல முடியும் என்பதையே இப்படம் நமக்கு உணர்த்துகிறது.

Thank you Kamal for another wonderful experience.

Sunday, April 26, 2015

பொடிமாஸ் - 04/26/2015

நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் பீதியை ஏற்படுத்துகிறது. மலை பிரதேசம் என்பதால் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. சுமார் 3000 உயிர்களை இதுவரை பலி வாங்கியுள்ளது. இறந்தவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இதிலிருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.


கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் பரிந்துரைத்த திருநங்கைகளுக்கான தனி உரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இதில் குறிப்பிட வேண்டியது இது ஒரு தனிநபர் மசோதா என்பது தான். சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேறிய ஒரு தனி நபர் மசோதா இது தான்.

இந்தியாவில் திருநங்கைகளின் வாழ்வு மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கிறது. திருநங்கைகளின் முன்னேற்றத் திட்டங்களுக்கு தேசிய அளவிலான கொள்கை உருவாக்கவும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கவும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

திருச்சி சிவா திருச்சியை சேர்ந்தவர் மட்டும் அல்ல, நான் படித்த ஈ. ரெ. மேல்நிலை பள்ளியில் படித்தவர். சென்ற ஆண்டு தான் அவரது துணைவியார் தனது இன்னுயிரை நீத்தார். அந்த நிலையிலும் பொது வாழ்க்கையில் இருந்து விலகாமல் தொடர்ந்து அவர் உழைப்பது எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

சக திருச்சிக்காரனாக மட்டும் அல்ல, சக பள்ளி மாணவனாகவும் அவரது சாதனைக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.


கடந்த முறை இந்தியா சென்ற பொழுது பல நாவல்களை வாங்கி வந்தேன். அவற்றில் ஆறு சுஜாதா நாவல்களும் அடக்கம். அவை அனைத்தும் முன்னரே படித்தது தான் என்றாலும் படித்து நெடு நாட்கள் (இன்னும் சொல்ல போனால் பல வருடங்கள்) ஆகி விட்டதால் வாங்கினேன். அவற்றை படிக்க இப்போதுதான் நேரம் கிடைத்தது. அவரது கொலையுதிர் காலம் அப்போது படிக்கும் போது எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது மிகவும் தட்டையாக இருப்பது போல தோன்றியது. சுத்தமாக பிடிக்கவில்லை. அதே நேரத்தில் வாய்மையே சில சமயம் வெல்லும் அப்போது படிக்கும் போது ஏற்படுத்திய அதே உணர்வுகளை இப்போதும் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். சுஜாதா எப்போதுமே ஒரு புதிர் தான். இன்னும் இரண்டாவது காதல் கதை, பிரிவோம் சந்திப்போம் (2 பாகங்கள்), ஸ்ரீரங்கத்து தேவதைகள் எல்லாம் இருக்கின்றன. விரைவில் படித்துவிட வேண்டும்.


தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வரும் என்பது உறுதியாகி விட்டது. தளபதியா அல்லது கேப்டனா என்பது தான் கேள்வி. கேப்டன் காய் நகர்த்த தொடங்கிவிட்டார். ஒரே நாளில் நேற்று கலைஞர், ஸ்டாலின், இளங்கோவன், வைகோ, வாசன், தமிழிசை சௌந்தர்ராஜன் என்று பல தலைவர்களை சந்தித்து பேசி இருக்கிறார். மேகதாது அணை தொடர்பாகவும், ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பாகவும் பிரதமர் மோதியை சந்திக்க தலைமையேற்று இருக்கிறார். தளபதி முதல்வர் போட்டியில் இருந்தாலும் தமிழக நன்மையை ஒட்டி கனிமொழி மற்றும் திருச்சி சிவா இருவரும் கேப்டன் தலைமையில் செல்வார்கள் என்று உறுதியளித்துள்ளார். இது ஆரோக்கியமான செயலாக தெரிகிறது. நமக்குள் பல கருத்து வேறுபாடு இருந்தாலும் பொது நன்மை என்று வரும் போது நாம் ஒன்று கூடுவது அவசியம். தமிழக அரசியலில் இந்த மாற்றம் மகிழ்ச்சியை தருகிறது.


சென்ற முறை போல் இல்லாமல் இம்முறை CSK அட்டகாசமாக விளையாடி வருகிறது. இப்போது இருக்கும் ஃபார்மில் ப்ளே ஆஃபுக்கு நாம் தகுதி பெறுவது நிச்சயம் என்றே நம்புகிறேன். முரளி விஜய் இல்லாதது சற்று வருத்தம் அளித்தாலும், மெக்கல்லமும், ஸ்மித்தும் அட்டாகாசமாக விளையாடுகிறார்கள். தோனிக்கு வயசாகி விட்டது நன்றாக தெரிகிறது. முன்பு விளையாடியது போல ஷார்ட் பால்களை விளையாட அவரால் முடியவில்லை. ஆனாலும் அவரது விக்கெட் கீப்பிங்கும், தலைமையும் அட்டகாசம். லெக் ஸ்லிப், லெக் கல்லி, ஸில்லி மிட் ஆன் போன்ற இடங்களில் எல்லாம் இப்போது டெஸ்ட் போட்டிகளிலேயே ஆட்களை வைப்பது இல்லை. இவரோ T20 யில் ஆட்களை வைத்து பேட்ஸ்மேனை அவுட் ஆக்குகிறார். பேட்ஸ்மேனின் உடலசைவை வைத்தே அவரது நோக்கத்தை அறியும் இவரது திறமை அட்டகாசம்.

MS is undoubtedly the best captain in today's contemporary cricket.


சமீபத்தில் பார்த்த படங்களிலேயே மிகவும் பிடித்திருந்தது Furious 7. பால் வால்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஜேசன் ஸ்டேதமை கொல்லாமல் விட்டு விட்டதால் அடுத்த பகுதியிலும் அவர்தான் வில்லன் என்பது உறுதியாகி விட்டது. நான்கு வாரங்களில் உலகலவில் $1.32 பில்லியன் டாலர்கள் (சுமார் எட்டாயிரம் கோடி) கலெக்க்ஷன் செய்திருக்கிறது. தற்பொழுது உலகலவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் மூன்றாம் இடத்துக்கு சென்றுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.


சமீபத்தில் பார்த்ததில் என்னை மிகவும் கவர்ந்த வீடியோ. நீங்களும் நிச்சயம் இதனை ரசிப்பீர்கள். பார்த்து ரசியுங்கள்.



Saturday, April 18, 2015

Attendance

நண்பர்களே,

நலமா? உங்களை எல்லாம் பார்த்து நெடு நாட்கள் ஆகிவிட்டன. சரியாக இரண்டு வருடங்கள். நண்பர்கள் சிலர் பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் ஏன் எழுதவில்லை என்று தொடர்ந்து விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. வேறு ஒன்றும் விஷயம் இல்லை. 2013 ஆம் ஆண்டு இங்கே ஒரு பல்கலைகழகத்தில் MBA படிக்க தொடங்கி இருந்தேன். அந்த பல்கலைகழகம் அமெரிக்காவில் முதல் 10 இடங்களுக்குள் தொடர்ந்து வரும் பல்கலைகழகம். ஐவி லீக் (Ivy League) என்பார்கள், அந்த ஐவி லீக் பல்கலைகழகங்களில் இதுவும் ஒன்று. அதனால் வேலை பளு சற்று அல்ல மிகவும் அதிகமாக இருந்தது.

படிப்பு தொடங்கி இரண்டு வருடங்கள் முடிய போகின்றன. 25 பாடங்கள். 60 Credits என்பார்கள் அமெரிக்காவில். ஒரு நாளைக்கு சுமார் 4 மணி நேர தூக்கம் தான் கிடைத்தது. ஒரு வாரத்தில் அசைன்மென்ட், ப்ராஜெக்ட் ரிப்போர்ட், ப்ரெசன்டேஷன், எக்சாம் என்று எதாவது வந்து கொண்டே இருந்தன. பல வாரங்களில் இவை கலவையாகவும் வந்தன. இதில் எங்கே பதிவெழுதுவது.

சரி எனது புலம்பல் கதையை பின்னர் வைத்துக் கொள்வோம். அதிகம் பதிவு எழுதாமல் இருப்பதற்கு காரணம் இதுதான். வேறு ஒன்றும் இல்லை. படிப்பை நல்லபடியாக முடித்து விட்டேன். 3.8+ GPA வுடன் வகுப்பில் முதலிடத்திலும் (Top 5%) இருக்கிறேன். இந்த மே மாதம் இறுதியில் பட்டம் வாங்குகிறேன்.

இப்போது இந்த பதிவை நான் எழுதுவதற்கு எனது நிலை விளக்குவது மட்டும் காரணம் இல்லை. உலகளவில் சிறந்த கல்லூரிகளில் MBA படிக்க விரும்புபவர்களுக்கு உதவவே இதை எழுதுகிறேன். ஏனென்றால் நான் இந்த கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து எனது நண்பர்கள் பலரும் இது குறித்து பல கேள்விகளை கேட்டபடியே இருக்கிறார்கள். MBA படிப்பு என்பது டிரைவிங் லைசன்ஸ் போன்றது கிடையாது. உங்களிடம் டிகிரி இருக்கிறதா என்று மட்டும் நிறுவனங்கள் பார்ப்பதில்லை, அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும் பார்ப்பார்கள். அதை வைத்தே அந்த படிப்பின் தரம், பேராசிரியர்களின் தரம், உடன் படிக்கும் சக மாணவர்களின் தரம் போன்றவை முடிவு செய்யப்படும். அதனால் இயன்றவரை நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது அவசியம்.

நல்ல தரமான நிறுவனங்கள் GMAT தேர்வினை (இந்தியாவில் CAT போன்றது) கட்டாயமாக்கி விட்டன. அதனால் அந்த தேர்வை நீங்கள் மிகவும் கவனமாக எழுத வேண்டியது அவசியம். ஆனால் ஒரு வேளை நீங்கள் அதில் விரும்பிய மதிப்பெண்கள் பெறவிலை என்றாலும் பாதகம் இல்லை. நல்ல நிறுவனங்கள் அதன் ஒரு அடிப்படையில் மட்டும் மாணவர்களை தேர்வு செய்வதில்லை.

GMAT தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து நீங்கள் செல்ல விரும்பும் இலக்காக ஒரு ஐந்து அல்லது ஆறு கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு ரியலிஸ்டிக் லிஸ்டாக இருப்பது அவசியம். MBA படிக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட் போன்ற பல்கலைகழகங்கள் தான் முதல் தேர்வாக இருக்கும். ஆனால் அது நம்மால் இயலுமா? என்ற கேள்வியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இயலும் என்பது உங்கள் பதிலானால் நிச்சயம் அந்த கல்லூரிகளை உங்கள் லிஸ்டில் சேர்க்கலாம். அப்படி இல்லை என்றால் எது உங்களால் முடியுமோ அந்த கல்லூரிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அந்த ஒவ்வொரு நிறுவனத்தை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குங்கள். உதாரணத்திற்கு ஹார்வேர்ட் பிஸினெஸ் ஸ்கூலில் கற்றுக் கொடுக்கப்படுவது அனைத்தும் (100 சதவிகிதம்) கேஸ் ஸ்டடி முறையில் இருக்கும். அது மேனேஜ்மென்ட் கன்சல்டிங் துறைக்கு செல்பவர்களுக்கு பெரிதும் உதவும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் உதவாது. அதே போல் ஃபைனான்ஸ் என்று எடுத்துக் கொண்டால் வார்ட்டெனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அதே போல டெக்னாலஜிகல் மேனேஜ்மென்ட் என்றால் ஸ்டான்ஃபோர்ட் மற்றும் MIT ஸ்லோன் இரண்டுமே முந்தி இருப்பன. ஆக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நீங்கள் உங்களது இயல்பு, தேவை ஆகியவற்றுக்கு தகுந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது அவசியம்.

அதன் பின்னர் அந்த லிஸ்டில் உள்ள கல்லூரிகள் ஒவ்வொன்றுக்கும் சென்று விண்ணப்பம் செய்யுங்கள். ஒவ்வொரு கல்லூரியும் பல கட்டுரைகளை உங்களை எழுத சொல்லும். இயன்றவரை உண்மையாக அதை எழுதுங்கள். உதாரணத்துக்கு உங்கள் சாதனைகளை பற்றி எழுத வேண்டும் என்றால் இல்லாத ஒன்றை எழுதாதீர்கள். நீங்கள் உண்மையிலேயே செய்த சாதனை ஒன்றை எடுத்து கூறுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி. அதே போல நேர்முக தேர்விலும் இயன்ற வரை உண்மையாக இருங்கள்.

இது போன்ற MBA படிப்பு என்பது திருமணம் செய்வது போன்றது. பல ஆண்டு பந்தம் தொடர இது ஒரு தொடக்க புள்ளி. நீங்கள் எப்படி இந்த கல்லூரி உங்களுக்கு பொருத்தமானது என்று நினைக்கிறீர்களோ அதுபோலவே அவர்களும் உங்களை பொருத்தமானவரா என்று பார்ப்பார்கள். நீங்கள் உங்கள் உண்மை முகத்தை மறைத்தால் ஒரு வேளை உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதன் பின்னர் உங்களால் அங்கு இயல்பாக படிக்க இயலாது. ஏமாற்றி திருமணம் செய்வது போன்றது அது. தேவை இல்லாத மனக்கசப்பையே ஏற்படுத்தும். நேர்முக தேர்வில் என்னை அவர்கள் கேட்ட கேள்விகள் சிலவற்றை கீழே தந்துள்ளேன். எனது நினைவில் இருந்து எழுதுவதால் இன்னும் சில விடுபட்டு இருக்கலாம்.

1. ஏன் MBA படிக்க விரும்புகிறீர்கள்?

2. இப்போது ஏன்?

3. ஏன் எங்கள் கல்லூரியை தேர்ந்தெடுத்தீர்கள்?

4. இந்த கல்லூரியை தவிர வேறு எந்த கல்லூரிகளுக்கெல்லாம் விண்ணப்பித்து இருக்கிறீர்கள்?

5. அவை அனைத்திலும் இடம் கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

6. உங்கள் ரெஸ்யூமே பற்றி சிறிது விளக்கவும்.

7. உங்கள் கேரியர் இலக்குகள் சிலவற்றை குறிப்பிடவும். ஏன் அவற்றை தேர்ந்தெடுத்தீர்கள் என்பதையும் குறிப்பிடவும்.

8. உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன?

9. அலுவலகத்தில் நீங்கள் சந்தித்த ஒரு சவாலான விஷயம் பற்றி குறிப்பிடவும். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள், அதை எப்படி சமாளித்தீர்கள்?

10. நீங்கள் எப்போதாவது பெரிய தவறு ஒன்றை அலுவலகத்தில் செய்திருக்கிறீர்களா? அதை எப்படி சரி செய்தீர்கள்?

11. நீங்கள் தெளிவின்மையை (ambiguity) எப்படி கையாள்வீர்கள்?

12. உங்கள் மேலாளரிடம் எப்போதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா? அதனை விளக்கவும்.

இயன்ற வரை இது போன்ற கேள்விகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். நேர்முக தேர்வுக்கு குறித்த நேரத்தில் செல்லுங்கள். நன்றாக உடையணித்து கொள்ளுங்கள். தேர்வுக்கு செல்லும் போது விண்ணப்பத்தில் நீங்கள் எழுதிய கட்டுரைகள், உங்களது ரெஸ்யூமே, பள்ளி கல்லூரி மதிப்பெண் பட்டியல் போன்ற அனைத்தையும் இரண்டு மூன்று காப்பிகள் எடுத்து செல்லவும். நேர்முக தேர்வு நடத்துவது ஒரு குழுவாக இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காப்பி கொடுக்க இயலும். தேர்வு முடிந்த பிறகு அவர்களிடம் படிப்பு மற்றும் கல்லூரி குறித்த உங்கள் கேள்விகளை தவறாமல் கேளுங்கள். அதே போல அவர்களின் பெயர், ஃபோன் நம்பர் மற்றும் தொழில் ஆகியவற்றை தவறாமல் குறித்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் உங்களுக்கு இடம் கிடைத்தால் ரேங்கிங் அடிப்படையில் கண்ணை மூடிக் கொண்டு எது முதலில் இருக்கிறதோ அதில் சேர்ந்து விடாதீர்கள். இரண்டு கல்லூரிகளிலும் நடக்கும் வகுப்புகளுக்கு செல்லுங்கள். ஓரிரு நாட்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள். அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் பேசுங்கள். உங்களது தேவையை கூறி அது இந்த கல்லூரியினால் கை கூடுமா என்பதை கேட்டறியுங்கள். அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வாருங்கள்.

இறுதியாக ஒன்று. முயற்சி செய்வது தான் நம் கையில் இருக்கிறது. முடிவு பல நேரங்களில் நமது கையில் இல்லை. அதனால் ஒரு வேளை உங்களுக்கு படிக்க இடம் கிடைக்காவிட்டால் சோர்ந்து விடாதீர்கள். இதை விட வாழ்வில் முக்கியமானவை பல இருக்கின்றன. All the best.

இவன்,
சத்யப்ரியன்

Sunday, May 26, 2013

பனீஷ் மூர்த்தி

பில் கிளின்டன் - மோனிகா லெவன்ஸ்கி விவகாரத்துக்கு பிறகு அதிகமாக இந்திய ஊடகங்களாலும், கார்பரேட் வட்டாரத்திலும் பெரிதாக பேசப்பட்ட விவகாரம் பனீஷ் மூர்த்தி - ரேகா மேக்ஸிமோவிட்ச் விவகாரம் தான்.

இந்த செக்ஸ் விவகாரத்தை விலக்கிவிட்டு பார்த்தால் பனீஷ் ஒரு கார்பரேட் ஐகான். சென்னை IIT யில் இஞ்சினியரிங் படிப்பையும் அஹமதாபாத் IIM இல் MBA படிப்பையும் முடித்தவர். 1995 ஆம் ஆண்டு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மிக விரைவில் பல பதவி உயர்வுகளை பெற்று அந்நிறுவனத்தின் போர்ட் ஆஃப் டிரக்டர்களுள் ஒருவராகவும் க்ளோபல் சேல்ஸ் ஹெட் ஆகவும் ஆனார். அவர் சேரும் போது 2 மில்லியன் டாலராக இருந்த அந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் சில ஆண்டுகளிலேயே சுமார் 700 மில்லியன் டாலர்களை தொட்டது. அதற்கு காரணம் அவர் தான் என்று அனைவருமே அவருக்கு புகழாரம் சூட்டினர்.

ஆனால் வாழ்க்கை எப்போதும் ஃபேரி டேல் போல இருப்பதில்லையே. பொது வாழ்வில் அல்லது தங்கள் துறையில் பல வெற்றிகளை குவிப்பவர்கள் கூட சில நேரங்களில் தங்களின் சொந்த வாழ்வில் லூசுத்தனமாக ஏதேனும் செய்து விடுவார்கள். அதற்கு காந்தி, எயின்ஸ்டீன் என்று பல உதாரணங்கள் கூறலாம். பனீஷும் அதுமாதிரி ஒரு லூஸுத்தனத்தை செய்தார். அவரிடம் இருந்த காசுக்கு ஒரு ப்ரைவேட் ஜெட்டை எடுத்துக் கொண்டு வேகாஸோ, தாய்லாந்தோ, ஆம்ஸ்டர்டாமோ சென்று தினமும் ஒரு ஹுக்கர் என்று கொட்டம் அடித்து இருக்கலாம். ஆனால் பித்தம் தலைக்கு சென்றதால் தனக்கு கீழே பணி செய்த ரேகா மேக்ஸிமோவிட்ச் மீது கை வைத்து விட்டார்.

பாலியல் தொல்லைக்கு ஆளான ரேகா இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் மீது தொடர்ந்த வழக்கின் காரணமாக இன்ஃபோஸிஸ் நிறுவனம் 3 மில்லியன் டாலர்கள் பணத்தையும் தனது சிறந்த க்ளோபல் சேல்ஸ் ஹெட்டையும் இழந்தது. பனீஷ் அவ்வளவு காலம் சம்பாதித்த பெயரையும், புகழையும் தனது வேலையையும் இழந்தார்.

பனீஷின் காலம் முடிந்தது என்று பலரும் கருதிய போது க்வின்டென்ட் நிறுவனத்தை அவர் தொடங்கினார். தொடங்கிய ஒரே ஆண்டு காலத்தில் அந்நிறுவனத்தை ஐகேட் நிறுவனத்துக்கு விற்றார். கூடவே ஐகேட் நிறுவனத்தின் டிரெக்டர் ஆனார். அவர் சேர்ந்த போது கடும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஐகேட் நிறுவனத்தை லாபமடைய செய்தார். எட்டே ஆண்டுகளில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கொண்ட நிறுவனமாக மாற்றினார். பாட்னி நிறுவனத்தை ஐகேட் வாங்கியதில் இவரின் பங்கு தான் முக்கியமானது.

இப்படி எல்லாமே நல்லவிதமாக சென்று கொண்டிருக்கும் போது அரிப்பெடுத்தவன் கை சும்மா இருக்காது என்பது போல மறுமுறை கிடைத்த வாழ்வில் பொச்சை மூடிக் கொண்டு இல்லாமல் மீண்டும் தனக்கு கீழே பணி செய்த அராஸெலி ராய்ஸ் என்பவர் மீது கை வைத்திருக்கிறார். ஐகேட் நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்திருக்கிறது.

வாழ்வில் வெற்றியின் உச்சியில் இருந்து அதள பாதாளத்தில் விழுபவர்கள் அனைவருமே மீண்டும் எழுவது இல்லை. அப்படி பார்த்தால் பனீஷின் வாழ்க்கை நிச்சயம் அனைவருக்கும் ஒரு பாடம் தான். ஆனால் துரதிருஷ்டவசமாக கார்பரேட் வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அவரின் வாழ்க்கை பாடமாக அமைந்தது போலவே என்ன செய்ய கூடாது என்பதற்கும் அவரின் வாழ்க்கை பாடமாக அமைந்து விட்டது.

தனிப்பட்ட ஒருவர் செய்யும் தவறுகளுக்கு அவர் சார்ந்த நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றாலும் இந்த விவகாரத்தில் ஐகேட் நிறுவனம் மீதும் தவறு உள்ளதாகவே தெரிகிறது. பனீஷ் மீது செக்ஸ் குற்றச்சாட்டு பதிவான சூழ்நிலையிலும், அவர் மீது அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையிலும், தனது தேவைக்காக அவருக்கு வேலை வாய்ப்பளித்து அவரை பயன்படுத்திக் கொண்டது அந்த நிறுவனம். இப்போது நஷ்டத்தில் இருந்து மீண்ட உடன் பனீஷின் தேவை அந்நிறுவனத்துக்கு தேவை இல்லாமல் போய் விட்டது. அதனால் பணி நீக்கம் செய்திருக்கிறது.

பனீஷால் பாதிக்கப்பட்ட இருவருமே அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அவரால் இந்தியா போன்ற நாடுகளில் எவ்வளவு பேர் பாதிக்கப் பட்டார்களோ, அதில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் அமுக்கப்பட்டனவோ, யாருக்கு தெரியும்?

ஆனால் ஒன்று நிச்சயம், கார்பரேட் உலகம் கரும்பு சாறு எடுக்கும் இயந்திரம் போன்றது. நம்மை சக்கையாக புழிந்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு பின்னர் துப்பி விடும். நாம் தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முந்தைய இன்ஃபோஸிஸ் வழக்கில் நடந்தது போலவே இதிலும் அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட் தான் நடக்க போகிறது. ஐகேட் நிறுவனமும் சில பல மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக கொடுத்து வழக்கை முடித்துக் கொள்ள போகிறது. நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் லாப தாகம் எடுத்த வேறொரு கார்பரேட் நிறுவனம் பனீஷை வேலைக்கு அமர்த்த தான் போகிறது. அங்கேயாவது அவர் எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருப்பார் என்று நம்புவோம்.

Tuesday, May 21, 2013

பொடிமாஸ் - 05/21/2013

1999 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் வெல்ல முடியாமல் போனதை பற்றி லான்ஸ் க்ளூஸ்னரிடம் கேள்வி கேட்ட போது, "அதனால் என்ன? யாராவது செத்து விட்டார்களா?" என்று திருப்பி கேள்வி கேட்டாராம். உண்மையோ, பொய்யோ, நாம் அறியோம். ஆனால் இப்போது ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் குய்யோ முறையோ என்று ஓசையிடும் நபர்களை பார்த்தால் இது தான் சொல்ல தோன்றுகிறது.

IPL மேட்சுகளில் பெட்டிங் பிரச்சனை பற்றி ஆளாளுக்கு உணர்ச்சிவசப்பட்டு ஓலமிடுகிறார்கள். IPL மேட்சுகளில் எல்லாம் பெட்டிங் இல்லாமல் இருந்தால் தான் அது செய்தி. இது போன்ற மேட்சுகள் எல்லாம் முன்கூட்டியே கொரியோக்ராஃப் செய்யப்பட்டு நமது அட்ரினல் பம்பை ஏற்றுவது போல இருக்க வேண்டும். சும்மா டொச்சு போல முதல் டீம் 200 ரன், இரண்டாவது டீம் 90 ரன் என்று இருந்தால் எவன் பார்ப்பான்.

துப்பாக்கி படத்தில் விஜய் கடைசியில் தோற்பாரா ஜெயிப்பாரா என்றா யோசிப்போம்? அவர் ஜெயிப்பார் என்று தான் குழந்தைக்கு கூட தெரியுமே. எப்படி ஜெயிப்பார் என்று தானே யோசிப்போம்.

IPL என்பது ஒரு சிலருக்கு பொழுதுபோக்கு, ஒரு சிலருக்கு பிசினஸ். யாரும் விளையாட்டுக்கு சேவை செய்ய அதை பல ஆயிரம் கோடி செலவு செய்து நடத்தவில்லை. இந்த பெட்டிங் செய்பவர்களை பிடிக்க முயற்சிக்கும் நேரத்தில் ஜாதி சண்டை போடுபவர்களையும், பிரிவினையை தூண்டுபவர்களையும், தீவிரவாதம் செய்பவர்களையும் பிடித்து தொலைக்க முயற்சி செய்தால் நலம்.

இன்னும் சொல்லப்போனால் புக்கிகளின் பணம் எல்லாம் இந்தியாவிற்குள் வருவது நன்மையே. கொஞ்சமே கொஞ்சம் கருப்பு வெளுப்பாக மாறும் வாய்ப்பு உள்ளது. இல்லை, இம்மாதிரி சூதாட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உங்கள் வாதமானால், டாஸ்மாக்கினால் ஏற்படும் பாதிப்பை விட சூதாட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு என்பது எனது பதில்.

Legalize betting and tax the income.


"IPL is the tournament in which the rest of the teams compete among themselves to gain a slot in the final match against Chennai Super Kings." என்று இரண்டாண்டுகளுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் விளையாட்டாக குறிப்பிட்டார். இம்முறையும் அது உண்மையாகிவிடும் போல உள்ளது. சென்ற முறை போல இல்லாமல் இம்முறை தடுமாற்றம் ஏதும் இல்லாமல் சென்னை அரையிறுதிக்கு தேர்வாகி இருக்கிறது. இம்முறை ராஜஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று நான் ஆசை படுகிறேன். டிராவிட் கோப்பையை வெல்வது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நீங்கள் யாராவது ஷில்பா ஷெட்டியினால் தான் நான் ராஜஸ்தானை சப்போர்ட் செய்கிறேன் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


இப்போதெல்லாம் அம்மாவின் அரசியல் சந்தானத்தின் காமெடியை போல இருக்கிறது. ஒரு சில படங்களில் அபாரமாக இருக்கிறது, ஒரு சில படங்களில் செல்ஃப் எடுக்க மறுக்கிறது. அம்மா உணவகம் சூப்பராக இருப்பதாக நான் இந்தியா சென்ற போது ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் சொன்னார்கள். ஒரு டீ 8 ரூபாய் விற்கிற காலத்தில் 10 ரூபாய்க்குள் காலை உணவினை முடித்துக் கொள்ளலாம் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் அடுத்த உணவகம் தொடங்கப்பட இருக்கிறது என்று திருச்சியில் உள்ளவர்களும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதே போல தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியும் கூடுதலாக கிடைக்கும் என்பது மகிழ்ச்சியே. ஆனால் பெயரளவில் ஆங்கில வழி கல்வி என்று இல்லாமல், ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளித்தால் அனைவரும் பயனடைவார்கள். இப்படி நல்லதாக ஒன்றிரண்டு இருக்க, நூறு கோடி ரூபாய் செலவில் தமிழண்ணைக்கு சிலை என்று காமெடி பீஸாக சில நேரம் மாறி விடுகிறார். கலைஞருக்கு வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை என்று இருப்பது போல இவருக்கும் ஏதாவது தேவை படுகிறதோ என்னமோ. கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல அரசு பணத்தை எடுத்து செலவழிக்கிறார்.


இம்முறை இந்தியா சென்ற போது வழக்கம் போலவே, எங்கள் குல தெய்வமான குமரமலை முருகன் கோவிலுக்கு சென்றேன். கோவில் புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை செல்லும் வழியில் இருக்கிறது. இம்முறை சென்ற போது சித்தன்னவாசலுக்கு அருகே வெக்காளியம்மனுக்கும், வேலாங்கன்னிக்கும் கடும் போட்டியே நடந்தது. புதிதாக ஏதோ மதக் கலவரம் என்று நினைத்து விடாதீர்கள். நான் சொல்வது இரண்டு இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கிடையே நடக்கும் விளம்பர போட்டி. சாலை முழுவதும் தட்டிகள். சித்தன்னவாசலை கடந்து திருச்சி-மதுரை சாலையை தொடும் போது, மஹாத்மா காந்திக்கும் அண்ணை தெரசாவுக்கும் போட்டி. "புற்றீசல் போல" என்று சொல்லுவார்கள். ஆனால் இது அதை விட மோசமாக இருக்கிறது. எனது நண்பர் SRM பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். அவர் சொன்ன தகவலின் படி நான்கு ஆண்டு இஞ்சினியரிங் படிப்புக்கு 12 லட்சத்திலிருந்து 25 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்பது கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.


நல்ல தமிழ் படம் பார்த்து நெடு நாட்களாகி விட்டது போல ஒரு தோற்றம். பரதேசிக்கு பின்னர் எதுவும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அப்படியே ஏதாவது பார்த்திருந்தாலும் எனது நினைவில் இல்லை. சூது கவ்வும், நேரம் இரண்டும் பார்க்க ஆவல். ஆனால் இங்கே வெளியிடப்படவில்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் வரையோ அல்லது DVD வரும் வரையோ காத்திருக்க வேண்டும். இப்போது ஆவலுடன் காத்திருப்பது தலைவா மற்றும் சிங்கம் 2 படங்களுக்கு தான்.


ஒரு படத்தின் பெயர் சொன்னால் அப்படத்தின் தொடர்புடைய ஏதாவது ஒன்று, அது நல்லதோ கெட்டதோ, சட்டென்று நமக்கு நியாபகம் வரும். அது அப்படம் பார்த்த போது நடந்த நிகழ்வாக இருக்கலாம் அல்லது அப்படத்தின் காட்சிகளாக இருக்கலாம். அதுபோல ஆண் பாவம் என்றால் எனக்கு உடனே நியாபகம் வருவது இளையராஜாவின் புல்லாங்குழல் இசை. காதுகளில் உடனே ஒலிக்க தொடங்கும். நெட்டில் தேடியபோது கிடைத்தது. உங்கள் காதுகளுக்கு விருந்து.


Friday, May 10, 2013

சற்றே அவசரமான ஒரு இந்திய பயணம்

பதிவெழுதி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. தனி மடலிலும், பின்னூட்டத்திலும் ஏன் தாமதம் என்று நண்பர்கள் விசாரிக்கிறார்கள். வேறு ஒன்றும் இல்லை. சில தனிப்பட்ட காரணங்களில் சற்று பிஸியாக இருந்தேன். இடைப்பட்ட காலத்தில் பதிவும் அவ்வளவாக படிக்க இயலவில்லை.

கல்லூரியில் எனது நெருங்கிய நண்பன் இவன். நான்கு ஆண்டுகளாக என்னுடன் படித்தவன். ஒரே வகுப்பு, ஒரே பெஞ்ச். லண்டனில் இருந்தான். துரதிருஷ்டவசமாக விவாகரத்து செய்து விடும் சூழ்நிலை. இந்தியா திரும்பி விட்டான். அவனது மனைவியும் (முன்னாள்) எனது நெருங்கிய நண்பியே. கல்லூரியில் இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

யார் மீது தவறு யார் செய்தது சரி என்றெல்லாம் எனக்கு தெரியாது, நான் இருவரிடமும் என்ன நடந்தது என்று கடைசி வரை கேட்கவே இல்லை. எட்டு வருட அமெரிக்கா வாசம் எனக்கு முக்கியமாக கற்றுக் கொடுத்தது அடுத்தவரின் தனிப்பட்ட விஷயங்களை கேட்பது அநாகரீகம் என்பதே. ஆனாலும் அவன் தனியாக இந்தியாவில் இருந்தது எனக்கு சற்று கஷ்டமாக இருந்தது. அதனால் இந்தியா சென்று அவனுடன் சில நாட்களை செலவிட விரும்பினேன்.

திடீர் என்று முடிவு செய்து ஒரு வார பயணம் மேற்கொண்டேன். ப்ரணவ் இல்லாமல் தனியாக பயணம் செய்வது ஒரு மிகப் பெரிய லக்ஷுரி. விமானம் ஏறியதுமே ஒரு ரெண்டு லார்ஜ் விட்டுக் கொண்டு தூங்கி விடலாம். பெரிய மூட்டை முடிச்சுக்களுடன் செல்ல தேவை இல்லை. அவனுக்கு இந்தியாவில் சாப்பாடு ஒத்துக் கொள்ளுமா, வெதர் ஒத்துக் கொள்ளுமா என்ற கவலை எல்லாம் இல்லை.

எப்போதும் லுஃப்தான்ஸாவில் தான் பயணம் செய்வேன். இம்முறை கத்தாரில். லுஃப்தன்ஸாவை விட நன்றாகவே இருந்தது. சுமார் 300 படங்களுக்கு மேல் லைப்ரரியில் இருந்தன. பல தொலைக்காட்சி தொடர்கள் வேறு. 20 மணி நேர பயணம் போனதே தெரியவில்லை. போகும் போது ஆர்கோவும், ஸ்கை ஃபாலும் பார்த்தேன்.

ஒரு சூப்பர் ஃபிகர் பக்கத்தில் வந்து அமர்ந்தது. பேசலாம் என்று நினைக்கும் போது டமரூகம் படத்தை பார்க்க தொடங்கியது. யப்பா சாமி தப்பித்தேன் என்று நினைத்து வேறு பக்கம் திரும்பி கொண்டேன்.

சென்னை விமான நிலையத்தை புதிதாக கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நன்றாக இருந்தது. இறங்கியதும் நண்பன் ஒருவன் வந்து என்னை அழைத்து சென்றான். முதல் நாள் அவனது வீட்டில் என்னை அவனது படுக்கை அறையில் படுக்க வைத்து விட்டு அவர்கள் தங்கள் ஒரு வயது குழந்தையுடன் தரையில் படுத்துக் கொண்டார்கள். மிகவும் கஷ்டமாக இருந்தது. தங்கமணியிடம் சொல்லி அடுத்த நாள் ரெசிடென்சியில் அறை ஏற்பாடு செய்து விட்டேன். அதில் அவனுக்கு சிறிது கோபமும் கூட.

அடுத்த ஒரு வார காலத்துக்கு சென்னையின் சுமார் 20, 25 பப்களை நாங்கள் நண்பர்கள் அனைவரும் சுற்றி சுற்றி வந்தோம். ஒரு சில பப்களில் ஒரு லார்ஜ் 2000 ருபாய் வரை விற்கிறார்கள். கூட்டம் அம்முகிறது. எல்லாம் பெத்தவன் காசு என்று நினைத்துக் கொண்டோம்.

நடுவில் இரண்டு நாட்கள் திருச்சி சென்று அப்பாவையும் அம்மாவையும் பார்த்து விட்டு வந்தேன். அவர்களிடம் நண்பனின் விவாகரத்தை பற்றி சொல்ல வில்லை. சொன்னால் மிகவும் வருத்தப் படுவார்கள். திருச்சி செல்லும் போது முதலில் ஸ்பைஸ் ஜெட்டில் தான் பதிவு செய்திருந்தான். ஆனால் கடைசி நேரத்தில் தான் விமானம் தாமதமாக புறப்படுகிறது என்று சொன்னார்கள். உடனே ஜெட் ஏர்வேஸில் பதிவை மாற்றி விட்டேன். அப்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவன அலுவலகத்தில் ஒரு பெரிசு இந்துவில் எழுதுவேன் சந்துவில் எழுதுவேன் என்று கத்திக் கொண்டிருந்தார். அந்த பெண்களும் அவருக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு பார்க்கவே பாவமாக இருந்தது.

விமானம் ரத்தானால் இவர்கள் என்ன செய்வார்கள். அடிக்கும் வெய்யிலில் பத்துக்கு பத்து அறையில் தடியான கோட் சூட் போட்டுக் கொண்டு குளிர் சாதன வசதி இல்லாமல் அவர்கள் எல்லாம் வேலைக்கு வருவதே பெரிய சேவை. இதில் இப்படி பயணிகளின் டார்ச்சர் வேறு. திருச்சி விமான நிலையம் முன்னர் பார்த்ததற்கு இப்போது மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல வசதியாக மாற்றி விட்டார்கள். திருச்சியில் 8 மணிநேரம் மின்சாரம் ரத்தாகிறது. ஃபேன் போட்டால் அணல் காற்று அடிக்கிறது. நல்ல வேளை குழந்தையை அழைத்து செல்லவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

ராமதாஸ் கைது பரபரப்பாக இருந்தது திருச்சியில். திருச்சி சிறையின் வழியாகத்தான் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்பதால் வாகனங்களை கடுமையாக சோதித்து கொண்டிருந்தார்கள். மக்கள் தொலைக்காட்சியில் கொங்கு வேளாள கட்சியை சேர்ந்தவர் ஒருவர் வந்து உயர் சாதி பெண்களை தலித்துகள் மயக்குவது குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார். "உயர் சாதி பெண்கள்", "உயர் குல பெண்கள்", "உயர் வகுப்பு பெண்கள்" என்று நான் பார்த்த 15 நிமிடங்களில் 20 முறைக்கு மேல் சொல்லி இருப்பார். அதற்கு மேல் என்னால் பார்க்க இயலவில்லை. இட ஒதுக்கீடு தேவைப் படும் போது நாங்கள் ஒதுக்கப்பட்டவர்கள், மற்ற நேரத்தில் நாங்கள் உயர் வகுப்பினர். We are the biggest hypocrites.

ஒரு வார பயணம் முடிந்து சென்ற வாரம் அமெரிக்கா வந்து விட்டேன். கடுமையாக ஊர் சுற்றியதில் உடல் சோர்வு மிக அதிகமாக இருக்கிறது. சிறிது ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு உங்களை மீண்டும் வந்து டார்ச்சர் செய்கிறேன். This post is only to say I am alive, hale and healthy.

Saturday, March 16, 2013

பரதேசி

இது போன்ற படங்களுக்கெல்லாம் விமர்சனம் எழுதும் யோக்கிதை எனக்கு இல்லாததால் கீழே உள்ள படத்தையே விமர்சனமாக படைக்கிறேன்.

Thursday, March 14, 2013

பிரபாகர்

பிரபாகர். இவர் எனக்கு அறிமுகமானது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான். எனது மனைவியின் சகோதரியின் கணவர் வழியில் தூரத்து உறவு. மும்பையில் தான் அவரது வீடு. மனைவி, அழகான இரண்டு மகள்கள். மூத்த மகள் கல்லூரி மூன்றாம் ஆண்டும், இளைய மகள் முதல் ஆண்டும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி ஒரு உறவினர் இருக்கிறார் என்பதே எனக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை தெரியாது. 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா சென்ற போது ஷீரடி செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். ப்ரணவ் அப்போது 5 மாத குழந்தை. மும்பை சென்று அங்கிருந்து ஷீரடி செல்ல வேண்டும் என்பதாலும், எனது ஹிந்தி ஏக் காவுமே ஏக் கிஸான் ரகு தாத்தா ஹிந்தி என்பதாலும், மும்பையில் யாராவது நண்பர்களோ இல்லை உறவினர்களோ இருக்கிறார்களா? என்று வீட்டு பெரியவர்களிடம் கேட்டதில் கிடைத்தவர் தான் பிரபாகர்.

எனக்கு இம்மாதிரி விஷயங்களுக்காக முன் பின் தெரியாதவர்கள் வீட்டுக்கு சென்று தங்குவது என்பது துளியும் பிடிக்காத விஷயம். அதனால் பயணம் முழுவதும் லஜ்ஜையாகவே இருந்தது. ஆனால் அதெல்லாம் அவரையும் அவரது குடும்பத்தினரையும் பார்க்கும் வரை மட்டுமே. பார்த்த உடனே பல நாட்கள் பழகியது போல உணர்வினை தந்தார்கள் அவர்கள்.

பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதை உண்மையில் பார்த்தது அவரிடம் தான். அவர் இருக்கும் இடத்தில் மற்றவர்கள் பர்ஸை வெளியில் எடுப்பதே இயலாது. அவரது உறவினர்களுக்கு அவர் ஒரு காட் ஃபாதர் போல இருப்பதை அங்கு உணர முடிந்தது. பலருக்கும் பல விதமான உதவிகளை அவர் செய்து வருவதும் தெரிந்தது. இதெல்லாம் அவர் மீதான மதிப்பை கூட்டியது. அருமையாக வயலின் வாசிப்பார். ஒரு முறை "என் இனிய பொன் நிலா" பாடலின் தொடக்கத்தில் வரும் கிடாரை கூட தனது விரல்களாலேயே வயலின் கொண்டு அருமையாக வாசித்து காட்டினார். அவரது மனைவிக்கும், பெண்களுக்கும் ப்ரணவ் மீது கொள்ளை ஆசை. ப்ரணவ் சாப்பிட அதிகம் படுத்துவான் என்பதால் எங்கே வெளியில் சென்றாலும் எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது ஃபோன் செய்து அவன் சாப்பிட்டானா தூங்கினானா என்று கேட்டுக் கொண்டே இருப்பார் அவரது மனைவி.

சென்ற ஆண்டு இந்தியா சென்ற போது அவரை பார்க்க வேண்டும், அவர் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே எப்போதும் சென்னை செல்லும் நாங்கள், அந்த முறை மும்பை வழியாக இந்தியா சென்றோம். அவரும் நாங்கள் வருகிறோம் என்பதாலேயே அவரது மகள்களின் நாட்டிய அரங்கேற்றத்தை நாங்கள் மும்பையில் இருக்கும் போது நடத்தினார். 10 நாட்களுக்கு மேல் மும்பையிலும், கோவாவிலும் அவருடன் நேரத்தை செலவழித்தோம். நாங்கள் கிளம்பும் போது அவர் குடும்பத்தினருடன் ஒரு முறை அமெரிக்கா வருவதாக உறுதி கூறினார்.

ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? இறைவன் வழி விளங்கா புதிர் நிலை அல்லவா? மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு ஒரு நாட்டிய விழாவிற்காக குடும்பத்துடன் வந்தவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். செய்தி கேட்டதில் இருந்து பித்து பிடித்தது போல இருக்கிறது. 41 வயது சாகும் வயதா? தனது உறவினர் வீட்டு பெண்களுக்கெல்லாம் தனது செலவில் திருமணம் செய்து மகிழ்ந்தவர், தனது இரு பெண்கள படித்து முடிப்பதையும், வேலைக்கு செல்வதையும், திருமணம் முடித்து மகிழ்வுடன் வாழ்வதையும் பார்க்காமலே சென்று விட்டார். விஷயம் தெரிந்த உடனே கவுதமும், அபியும் இந்தியா சென்று விட்டார்கள். நேற்று எல்லாம் முடிந்து விட்டது.

பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்த கரிகாலன் இளமையில் இறப்பவர்களுக்கு முதுமையே கிடையாது என்பார். அது போலவே பிரபாகரின் முகத்தில் சுருக்கம் இனி வரப்போவதில்லை, தலை முடி இனி நரைக்க போவதில்லை, உடல் தளர்ந்து விடப்போவதில்லை, இப்படி இன்னும் பல இல்லைகள். பிரபாகரை தெரிந்தவர்களுக்கு அவர்களது நினைவில் இனி இளமையான பிரபாகர் மட்டுமே இருப்பார். RIP Prabhakar. நீங்கள் இது வரை செய்த புண்ணியம் உங்கள் குடும்பத்தினரை இனி பாதுகாக்கும்.

Sunday, March 03, 2013

விஜயகாந்த் என்றால் அவ்வளவு மட்டமா?

சென்ற மாதம் விஷ்வரூபம் குறித்து எழுதிய விமர்சனப் பதிவுக்கு என்னை திட்டி தினமும் பல பின்னூட்டங்கள் வருகின்றன. தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகம் இருப்பதால் அவற்றை வெளியிட விரும்புவதில்லை. திட்டுபவர்கள் என்னை மட்டும் திட்டினால் ஒரு பிரச்சனையும் இல்லை. எனது குடும்பத்தினரையும் சேர்த்து திட்டுவதனால் தான் வெளியிட முடிவதில்லை.

ஒரு திரைப்படத்தை விமர்சித்தால் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்பது மட்டும் எனக்கு விளங்கவே இல்லை. ஒரு கலைஞனை விமர்சிப்பது என்பது வேறு, அவனது கலை படைப்பை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் நம் நாட்டில் தான் இரண்டையும் பிரித்து பார்க்காமல் சேர்த்து பார்த்து குழம்புகிறார்கள், நம்மையும் குழப்புகிறார்கள். ஒரு கலைஞனை பிடிக்கவில்லை என்றால் அவனது படைப்பு எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதை தெருவில் வீசி 'குப்பை' என்று கூறுகிறார்கள், அதே நேரத்தில் நமக்கு பிடித்த கலைஞனின் படைப்பு உண்மையிலேயே குப்பையாக இருந்தாலும் கோபுரத்தின் உச்சியில் வைத்து 'காவியம்' என்று போற்றுகிறார்கள். அவர்களின் இந்த லூசுத்தனத்தை அவர்களுடனேயே வைத்துக் கொண்டால் ஒன்றும் பாதகம் இல்லை. ஆனால் அதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பே எரிச்சலை ஏற்படுத்துகிறது.

உலகில் மற்ற நுகர்வு பொருட்களை விமர்சிப்பதை விட ஒரு படி அதிகமாகவே திரைப் படங்களை விமர்சிக்க நுகர்வோனுக்கு உரிமை உண்டு. ஏனென்றால் திரைப்படங்களை தான் ஒருவன் பார்ப்பதற்கு முன்னரே காசு கொடுத்து வாங்குகிறான். மற்ற பெரும்பான்மையான நுகர்வு பொருட்கள் ஒரு முறையாவது பார்த்த பிறகே வாங்கப்படுகின்றன. சரி அதையெல்லாம் விட்டு விடுங்கள். பதிவு அதை பற்றியது இல்லை.

நேற்று வந்த ஒரு பின்னூட்டத்தில் "உங்களுக்குள்ள மழுங்கல் மூளைகளுக்கெல்லாம் விஜயகாந்த் படங்கள்தான் லாயக்கு!" என்று ஒரு அறிவு ஜீவி கருத்து தெரிவித்திருந்தார். ஒருவர் என்னை முட்டாள் என்று கருதுவதில் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை, அதே போல ஒருவர் என்னை அறிவாளி என்று கருதுவதிலும் எனக்கு ஒரு சகாயமும் இல்லை. அதனால் பதிவு அவரது என்னை பற்றிய கருத்தை பற்றியதும் அல்ல. ஆனால் விஜயகாந்த் படங்கள் எல்லாம் மழுங்கல் மூளை உள்ளவர்களுக்கு தான் லாயக்கு என்ற கருத்து தான் என்னை இப்பதிவெழுத தூண்டியது.

அறிவு ஜீவிகள் என்று தங்களை தாங்களே கருதுபவர்கள் தேவையே இல்லாமல் தங்களை ஒரு வரையறைக்குட்படுத்திக் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு தமிழ் சினி ரசிகர்களை எடுத்துக் கொண்டால், கமலை, மணிரத்னத்தை, சுஜாதாவை சிலாகிப்பவர்கள் அறிவு ஜீவிகள் என்றும், விஜயகாந்தை, அர்ஜுனை, சரத் குமாரை ரசிப்பவர்கள் குறைந்த ரசனை உடையவர்கள் என்றும் கருதுவது; அதே போல தமிழ் புத்தக வாசிப்பில் கி வா ஜவையும், லா ச ராவையும், ஜெயகாந்தனையும், ஜானகிராமனையும், பிரபஞ்சனையும், நீல. பத்மநாபனையும் படிப்பவர்கள் உயர்ந்த ரசனை உடையவர்கள் என்றும், பாக்கெட் நாவல் வாங்கி ராஜேஷ் குமாரை படிப்பவர்கள் குறைந்த ரசனை உடையவர்கள் என்றும் கருதுவது எல்லாம் அவர்களின் பொது புத்தியின் வெளிப்பாடே. பொது புத்தியெல்லாம் சரியாகவே இருக்க வேண்டும் என்பது ஒன்றும் அவசியம் இல்லை. வெள்ளையா இருக்கிறவன் பொய் பேச மாட்டான் என்று கருதுவதும் கூட ஒருவகை பொது புத்தி தான்.

பொதுவாகவே இந்த ஆதிக்க உலகில் வாழும் மக்களுக்கு ஒரு படி நிலை தேவைப் படுகிறது. தங்கள் மொழி மேல், மற்ற மொழிகள் எல்லாம் கீழ்; தங்கள் கலாச்சாரம் மேல், மற்ற கலாச்சாரங்கள் எல்லாம் கீழ்; தங்கள் மதம் மேல், மற்ற மதங்கள் எல்லாம் கீழ்; தங்கள் சாதி மேல், மற்றவர் சாதிகள் எல்லாம் கீழ்; ஆண்கள் மேல், பெண்கள் கீழ்; பெரியவர்கள் மேல், குழந்தைகள் கீழ்; படித்தவர்கள் மேல், படிக்காதவர்கள் கீழ்; சிகப்பாக இருப்பவர்கள் மேல், கருப்பாக இருப்பவர்கள் கீழ்; பணக்காரர்கள் மேல், ஏழைகள் கீழ்; இது போலத்தான் தங்கள் ரசனை மேல், மற்றவர் ரசனை கீழ் என்ற படி நிலையும்.

வகுப்பில் எல்லோரும் முதல் ரேங்க் வாங்கினால் முதல் ரேங்க் வாங்குபவன் எப்படி மற்றவர்களிடம் தனது சாதனையை சொல்லி பீற்றிக் கொள்ள முடியும்? எல்லோரிடமும் BMW இருந்தால் எப்படி BMW வைத்திருப்பவன் பேரூந்தின் படியில் தொத்திக் கொண்டு அலுவலுக்கு செல்பவன் முன்பு பந்தா விட முடியும்? அதனாலேயே இந்த ஆதிக்க படி நிலையின் போதையில் வாழ்பவர்களுக்கு தாங்கள் ஆதிக்கம் செலுத்த குறைந்த ரசனை உள்ளவர்கள் தொடர்ந்து தேவை படுகிறார்கள். குறைந்த ரசனை உடையவர்கள் இல்லை என்றால், இவர்கள் யாருடன் தங்களை ஒப்பிட்டு தங்களின் அறிவு ஜீவித்தனத்தை காட்டிக் கொள்ள முடியும்?

Ayn Rand எழுதிய Atlas Shrugged நாவலில் ஒரு கதாபாத்திரம் இப்படி சொல்லும். அறிவு ஜீவிகள் மற்றவர்களின் ரசனையை மட்டம் தட்டும் போது எனக்கு இது தான் நினைவுக்கு வந்தது.

"I like to think of fire held in a man's hand. Fire, a dangerous force, tamed at his fingertips. I often wonder about the hours when a man sits alone, watching the smoke of a cigarette, thinking. I wonder what great things have come from such hours. When a man thinks, there is a spot of fire alive in his mind–and it is proper that he should have the burning point of a cigarette as his one expression."

நெருப்பை உங்கள் விரல் இடுக்குகளில் வைத்து உள் இழுப்பதனால் நீங்கள் அதனை வெற்றி கொண்டீர்கள் என்று பொருள் இல்லை. அப்படி உங்களை நம்ப வைத்து நெருப்பு உங்களை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி கொள்கிறது அல்லவா, அது தான் நெருப்பின் வெற்றி.

அறிவு ஜீவிகளே! இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் முன் வரிசை ரசிகர்கள் தான். அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் சமூக, பொருளாதார பிரச்சனைகள் ஏராளம் ஏராளம். அவர்களை தங்கள் பிரச்சனைகளை எல்லாம் ஒரு மூன்று மணி நேரம் மறக்க செய்து மகிழ்விக்கும் ஒரு கலைஞனை நீங்கள் மழுங்கல் மூளை உள்ளவர்களுடன் தயங்காமல் நாள் தவறாமல் ஒப்பிட்டுக் கொண்டே இருங்கள். தயவு செய்து அதை நிறுத்தி விடாதீர்கள். ஏனென்றால், முன் வரிசை ரசிகர்களான எங்களுக்கும் தராதரத்தில் ஒரு படி நிலை தேவைப்படுகிறது.

Thursday, February 21, 2013

வந்தே மாதரம்!!!


இன்றைய குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும், இனி வரப்போகும் குண்டு வெடிப்புகளில் இறக்கப் போகிறவர்களுக்கும் எனது அஞ்சலிகள்.

2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து நான் எழுதிய பதிவின் சுட்டி இதோ. http://sathyapriyan.blogspot.com/2011/07/blog-post.html அதையே மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும் போதும் வெட்கமே இல்லாமல் பிரதமரும், உள்துறை அமைச்சரும் 'தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்று மீண்டும் மீண்டும் கூறும் போது ஒரே பதிவை மீண்டும் மீண்டும் பதிய நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்.

மீண்டும் ஒரு முறை இது போன்ற பதிவை யாரும் பதியவே கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

Friday, February 15, 2013

குமுதம் ரிப்போர்ட்டருக்கு எனது பாராட்டுகள்

தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவதில் புதிய சாதனை செய்து இருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரையும் அதன் ஆசிரியரையும் மனம் நெகிழ பாராட்டுகிறேன். செய்தியை படித்த திமுக மற்றும் திக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தில் ஈடு பட்டு அதில் தர்மபுரியை போல, மதுரையை போல அப்பாவி பொது மக்கள் சிலர் இறந்து போனால் நமக்கென்ன. நமக்கு எதற்கு சமூக பொறுப்பு? நமக்கு தேவை பரபரப்பு தலையங்கம் தானே.

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.


Wednesday, February 13, 2013

காதலர் தின நல்வாழ்த்துகள்





இது எனது முதல் முயற்சி. துப்புபவர்கள் பின்னூட்டத்தில் துப்பவும். வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது காதலர் தின நல்வாழ்த்துகள்.

Sunday, February 10, 2013

பொடிமாஸ் - 02/10/2013

டோண்டு சாரின் மரணம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ் வலையுலகமே அதை கண்டு அதிர்ந்து கொண்டிருக்கிறது. கடைசியாக எனக்கு தெரிந்து தேன் கூடு சாகரன் அவர்களின் மறைவுக்கு தான் வலையுலகம் இப்படி அதிர்ந்தது. டோண்டு - போலி டோண்டு - இரவுக் கழுகார் - ஸ்பெஷல் ஆப்பு - விடாது கருப்பு - ஸல்மா அயூப் - முரளி மனோஹர் - எல்லாவற்றுக்கும் மேலாக "தலித் கம்னாட்டி" இதையெல்லாம் நீங்கள் கடந்து வந்திருந்தால் டோண்டு கடந்து வந்த பாதையின் வீரியம் உங்களுக்கு விளங்கும்.

ஆனால் ஒன்று, இந்த போலி விவகாரத்தை பெரிதாக வளர்த்து விட்டதும் அவரே, அதனால் அதிகம் பாதிக்கப்பட்டதும் அவரே என்று மட்டும் நான் நிச்சயம் நம்புகிறேன். இந்த விவகாரத்தை அவர் சிறிது நாசூக்காகவும், டிப்ளமடிக்காகவும் கையாண்டிருக்க வேண்டும், ஆனால் செய்ய தவறி விட்டார். அவரும் பல பதிவர்களும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சந்தித்த மன உளைச்சலுக்கு போலி டோண்டு எவ்வளவு காரணமோ, அதே அளவு அவரும் காரணம்.

Sir, You should have been remembered for your prodigious command over English, alluring memory power, abundant experience you carry, art of ruthlessly combining confrontation with negotiation, stubborn nature and many more.

Alas, it’s preposterous that you have been remembered for your jingoistic arguments with “Poli” Dondu and blatant display of abysmal craving for the lime light aka hits to your blog. The rationales behind which though are still unknown, I believe it is a sheer victory for “Poli” Dondu.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச:

பொருள்: எல்லா பற்றுகளையும் விட்டு விட்டு என்னை தஞ்சம் அடை. உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் நான் காத்து உனக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன்.

டோண்டு சார், உங்கள் பெருமாள் பாபம் செய்தவர்களுக்கு கூட வைகுண்ட பதவி அளிக்கிறார். உங்களுக்கா அளிக்க மாட்டார். அங்கும் யாராவது பாப்பானை திட்டினால் அவனுடன் சண்டைக்கு போகாமல் அங்காவது நிம்மதியாக இருங்கள். RIP, good Sir.


இந்த வாரம் Parker மற்றும் Bullet to the head இரண்டு படங்களும் பார்த்தேன். இரண்டுமே ஒரு முறை பார்க்கலாம். வழக்கமான ஆக்க்ஷன் படங்கள். அடுத்த வாரம் Die Hard வெளியாகிறது. Skyfall DVD யும் வெளியாகிறது. இரண்டையும் பார்த்துவிட வேண்டும். இன்னும் ஒரு வார காலம் எவ்வளவு அராஜகம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து விட வேண்டும். ஆறு வார விடுப்புக்கு பின் தங்கமணி அடுத்த வாரம் வருகிறார். அதன் பிறகு கப் சிப் காரா பூந்தி தான்.


கடந்த வாரம் அலுவல் நண்பர் ஒருவருடன் (ஆந்திராவை சேர்ந்தவர்) பேசிக் கொண்டிருந்த போது அவர் "விஷ்வரூபம் தெலுங்கில் பார்க்க வேண்டும், படம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். நான் "நன்றாக இருக்கிறது, ஒரு முறை பார்க்கலாம்" என்று சொன்னேன். அவர் "குழந்தைகளை அழைத்து செல்லலாமா?" என்று கேட்டார். அதற்கு நான், "படத்தில் கையை வெட்டுவது, கழுத்தை அறுப்பது, நெஞ்சில் குத்தி கொல்வது போன்ற காட்சிகள் இருக்கின்றன, நீங்களே முடிவு செய்யுங்கள்" என்று சொன்னேன். உடனே அவர், "அதெல்லாம் பாதகம் இல்லை, செக்ஸ் காட்சிகள் இல்லையே?" என்றார்.

எனக்கு சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. வன்முறையையை விடவா, சக மனிதனை வெட்டிக்கொல்வதை விடவா செக்ஸ் ஆபத்தானது? செக்ஸ் என்றாலே கெட்ட வார்த்தை என்று கூறியே குழந்தைகளை வளர்ப்போம், பின்னர் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கும் போது அதனை கண்டித்து பதிவெழுதுவோம்.


அஜ்மல் கசாபை தொடர்ந்து அஃப்சல் குருவையும் போட்டாகி விட்டது. நமது அரசாங்கத்துக்கு இப்போது தான் முதுகெலும்பு இருக்கிறது என்பது கொஞ்சமாவது தெரிகிறது. இதை செயல்படுத்திய அரசாங்கத்துக்கு எனது நன்றிகள். பாராளுமன்ற தாக்குதலில் இறந்த ஏழு அப்பாவிகளின் குடும்பத்தினரும் இனி துளியாவது மகிழ்ச்சி அடைவார்கள். வழக்கம் போலவே ஒரு கூட்டம் இந்த தூக்கிற்கும் எதிராக கூச்சல் போட தொடங்கி இருக்கிறது. இந்த தூக்கு தண்டனை எதிர்ப்பாளர்கள் எல்லோரும் மேனகா காந்தி வகை பார்ட்டிகள். தெரு நாயினால் கடித்து குதறப்படும் சிறுமியின் பாதுகாப்புக்கு வராமல், நாயின் பாதுகாப்புக்கு வரும் கூட்டம் அது.


Dell நிறுவனம் தனது வீழ்ச்சியை சமாளிக்க இயலாத காரணத்தால் பங்கு வர்த்தகத்திலிருந்து வெளியேறி முழூ தனியார் நிறுவனமாக மாற இருக்கிறது. இதற்காக ஒரு தனியார் எக்விட்டியிடம் சுமார் 24 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வாங்கி இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு Steve Jobs Apple நிறுவனத்தில் சேர்ந்த போது பத்திரிக்கையாளர்கள் "நீங்கள் Steve Jobs இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்ட கேள்விக்கு Michael Dell பின்வருமாறு கூறினார்.

What would I do? I'd shut it down and give the money back to the shareholders.

அப்போது Apple நிறுவனம் வீழ்ச்சியின் உச்சியிலும், Dell நிறுவனம் வெற்றியின் உச்சியிலும் இருந்தன. ஆனால் இப்போது நிலைமை தலை கீழ்.

06-Aug-1997Today
Apple (price per share)$25.25$474.98
Dell (price per share)$81.62$13.63
Apple (market cap)$2.58B$446.03B
Dell (market cap)$27.3B$23.68B

"யாகாவாராயினும் நா காக்க" என்று அய்யன் வள்ளுவன் சொன்னது எவ்வளவு உண்மை.


சென்ற வாரம் முழுதும் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் படங்களாக ஒளிபரப்பி தள்ளினார்கள். ஒரு நாள் நினைத்ததை முடிப்பவன், மறு நாள் குடியிருந்த கோவில், அதற்கு மறு நாள் பெரிய இடத்து பெண் என்று ஒரே ரகளையாக இருந்தது. அடிமை பெண் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும்.

இதை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, MGR படங்கள் எல்லாமா பார்ப்பீர்கள்? என்று வியப்புடன் கேட்டார். அவர் தலைவர் படங்களை பார்த்ததே இல்லையாம். அவரிடம் தலைவர் பற்றி என்ன கூறுவது. சிரித்துக் கொண்டேன். ஒரு சில அனுபவங்களை எல்லாம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அனுபவிக்க வேண்டும்.

அதிலும் பெரிய இடத்து பெண் படத்தில் "கட்டோடு குழலாட ஆட" பாட்டில் இரண்டு மாமன் பெண்களுடன் விரசமே இல்லாமல் கெட்ட ஆட்டம் போடுகிறார் தலைவர். என்ன ஆர்கெஸ்ட்ரேஷன், என்ன கொரியோக்ராஃபி, அடடா அருமையிலும் அருமை. P. சுசீலாவும் L. R. ஈஸ்வரியும் சேர்ந்து பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான். புரட்சி தலைவரின் படங்களே பார்க்காத எனது நண்பரை போன்றவர்களுக்கு ஸ்டார்டராக "அன்பே வா" படத்தை பரிந்துரைக்கிறேன். நடிகர் திலகம் படங்களில் பரிந்துரைப்பது "ராஜபார்ட் ரெங்கதுரை".

Monday, February 04, 2013

நேற்று ஏற்பட்ட ஒரு அதிபயங்கர அனுபவம்

தங்கமணி ஊரில் இல்லாததால் வாரா வாரம் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் வேலை இல்லை. எப்போதாவது தேவைக்கு தகுந்தது போல் பால், முட்டை, பிரட் போன்றவற்றை மட்டும் வாங்கி வருவேன். நேற்று அப்படித்தான் பால் வாங்க எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு கடைக்கு சென்று இருந்தேன்.

உள்ளே நுழையும் போதே வாசலில் இருக்கும் ரெட்பாக்ஸ் கியாஸ்கில் ஒரு நாலைந்து டீனேஜ் பெண்கள் DVD வாடகைக்கு எடுத்துக் கொண்டு இருந்தார்கள். நான் அவர்களை கடக்கையில் ஒருத்தி எனது பெர்ஃபூம் வாசனையை முகர்ந்து விட்டு "Nice smell" என்றாள். நான் நன்றி கூறி, அதன் பிராண்டை சொல்லி விட்டு அவர்களை கடந்து சென்றேன்.

உள்ளே சென்று நான் பால் எடுத்துக் கொண்டு இருக்கும் போது அவர்கள் உள்ளே வந்து விட்டார்கள். அவர்களும் எதையோ தேடிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை நான் அப்போது கவனிக்க வில்லை. பால் எடுத்துவிட்டு ஃப்ரோஸன் சிக்கன் விங்ஸ் ஏதாவது எடுக்கலாம் என்று அந்த பகுதிக்கு செல்ல தொடங்கினேன். அப்போது தான் அவர்களை கவனித்தேன். முதலில் என்னிடம் பேசியவள் எனது அருகில் வந்து "You look cool" என்றாள். நான் வழிந்தபடி மீண்டும் நன்றி கூறிவிட்டு விலக முயன்றேன்.

அந்த நேரத்தில் நான் சற்றும் எதிர் பார்க்காத வரையில் எனது அருகே மிகவும் நெருங்கி வந்து, என்னை உரசியபடி நின்று, தனது மூச்சை நன்றாக உள் இழுத்து "It's kinda seducing. Is this a body spray or a cologne?" என்று கேட்டாள். அதுவரை எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த 'அது' சட்டென்று கட்டுக்கடங்காமல் விழித்துக் கொண்டது. நீங்கள் கண்டபடி யோசிக்கும் முன் நானே சொல்லிவிடுகிறேன். அந்த 'அது' தயிர் சாதம் தான்.

நான் அதன் பின் என்ன செய்தேன் என்பதை சொல்லும் முன்பு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இங்கே அமெரிக்காவில் டீனேஜ் பெண்கள் ஆறடி உயரத்தில் கட்டுடல் கொண்ட அமெரிக்க ஆண்களை விடுத்து தொப்பையும் தொந்தியுமாக உள்ள நம்மை போன்றவர்கள் மீது விழுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் நம் புஜ பல பராக்கிரமத்தின் மீது கொண்ட மோகம் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் உண்மையிலேயே ஒரு அப்பாவி. அவர்கள் அவ்வாறு செய்வதற்கு எனக்கு தெரிந்த ஒரு சில காரணங்கள் கீழே.


1.அவர்களுக்கு தம்மோ, இல்லை பியரோ தேவை. அதை யாராவது 21 வயது ஆனவர்கள் (தம் என்றால் 18) வாங்கிக் கொடுக்க வேண்டும்.
2.யாரோ ஒரு கேசு கிடைக்காத போலீஸ் கார நாதாரி இவர்களுக்கு காசு கொடுத்து பலி ஆடுகளை பிடிக்க அனுப்பி இருக்க வேண்டும்.
3.தனக்கு கோபமூட்டிய தனது பாய் ஃபிரண்டுக்கு எரிச்சலூட்ட அவனுக்கு முன்னால் வேறொரு ஆணிடம் அவள் ஃப்ளர்ட் செய்ய வேண்டும்.

அவர்கள் பலி ஆட்டை பிடிக்க சுற்றும் முற்றும் பார்க்கும் போது "நம்ம க்ரூப்லயே பலசாலி, புத்திசாலி, தைரியசாலி யாரு? நம்ம மன்னாரு..." என்ற ரீதியில் பேக்கு மாதிரி நம்மாட்கள் போய் சிக்கிக் கொள்வார்கள்.

சரி இப்போது நமது கதைக்கு வருவோம். எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த தயிர் சாதம் கண்டபடி விழித்துக் கொண்டதால், சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்காவது கேமராவில் எசகு பிசகாக ஏதாவது பதிவாகி போலீஸ் டீனேஜ் பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி நம்மை தூக்கிக் கொண்டு போய் ஜெட்டியோடு உட்கார வைத்து கொட்டையடித்து விடுவார்களோ என்ற பயம் தான் முதலில் வந்தது.

பின்னர் சுதாசரித்துக் கொண்டு அவளிடமிருந்து சற்று விலகி "I'm more than twice your age kid" என்று கூறினேன். சொன்ன அடுத்த விநாடி அவள் என்னை ஒரு முறை வைத்த கண் வாங்காமல் பார்த்துவிட்டு விலகி சென்றாள். நானும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். நான் நடந்து வரும் போது அவர்கள் குசு குசு வென்று பேசி சிரித்துக் கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது. இரவு தங்கமணியிடம் நடந்ததை கூறினால் அவர் நம்பவே இல்லை. இவர்களும் நமது ஆணழகை புகழ மாட்டார்கள், மற்றவர்களையும் புகழ விட மாட்டார்கள். இந்த பொம்பளைங்களே இப்படித்தான், குத்துங்க எசமான் குத்துங்க........... நீங்களாவது நம்புங்க பாஸு. நான் சொன்னதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.

Monday, January 28, 2013

பொடிமாஸ் - 01/28/2013

இந்த வாரம் படம் பார்க்கும் வாரம் என்று எனக்கு ஆகிவிட்டது. விஷ்வரூபம் இரண்டு முறையும், Race 2 ஒரு முறையும் பார்த்து விட்டேன். Race 2 வழக்கமான அப்பாஸ் மஸ்தான் படம். யார் யாருக்கு ஆப்பு வைப்பார்கள் என்று பார்க்கும் போதே நமக்கு தலை சுற்றுகிறது. நல்ல திரைக்கதை. மேக்கிங் கூட நன்றாக இருந்தது. ஒரு முறை பார்க்கலாம். சுமார் 200 பேர் அமரக்கூடிய அரங்கில் நாங்கள் மூன்று பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்த்தோம். அமெரிக்கா அளிக்கும் ஒரு சில வித்தியாசமான அனுபவங்களில் இதுவும் ஒன்று. இது கூட ஒன்றும் இல்லை, 'சில்லென்று ஒரு காதல்' படம் நான் மட்டுமே தனியாக அமர்ந்து பார்த்தேன். காலியான அரங்கின் புகைப்படம் கீழே உங்கள் பார்வைக்கு.



விஷ்வரூபம் குறித்த எனது விமர்சனத்துக்கு நண்பர்கள் பலர் கோபித்துக் கொண்டார்கள். படத்தை இரண்டு முறை காசு கொடுத்து அரங்கில் பார்த்தவன் என்ற முறையிலும், கமலின் தீவிர ரசிகன் என்ற முறையிலும் எனக்கு இப்படத்தை விமர்சிக்க முழூ உரிமை உள்ளது. நான் முன்னரே சொன்னது போல மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் கமல். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் மேக்கிங் மட்டும் போதுமா?

2000 ஆண்டுக்கு பின்னர் வெளி வந்த தமிழ் படங்களில் மேக்கிங்கில் மிரட்டிய தமிழ் படங்கள் எனது நினைவில் இருந்து ஆளவந்தான், ஹே ராம்!, விருமாண்டி, ராவணன், எந்திரன், நான் ஈ போன்றவை. இதில் விருமாண்டி, எந்திரன், நான் ஈ மூன்றும் வெற்றி. மற்ற படங்கள் தோல்வி. இதுவே மேக்கிங் மட்டுமே ஒரு படத்தை வெற்றியடைய செய்யாது என்பதற்கு சாட்சி.

ஒரு நண்பர் எழுதிய விஷ்வரூப விமர்சனத்தில் படத்தில் எங்கெல்லாம் கமலின் ஜீனியஸ் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் திரைக்கதை தோய்வடைகிறது என்று சொன்னார். அதையே தான் நானும் சொல்கிறேன். கமலின் ட்ரான்ஸ்ஃபார்மெஷனுக்கு பிறகு கமலின் ஜீனியஸ் தலை தூக்க ஆரம்பித்ததில் திரைக்கதை அதல பாதாளத்தில் விழுந்து விட்டது. இதை ஒரு காம்ப்லிமென்டாகவும் எடுத்துக் கொள்ளலாம், விமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது எடுத்துக் கொள்பவரின் மனநிலையை பொருத்தது.

திரைக்கதையில் எனக்கு எழுந்த சில கேள்விகள் கீழே.

1.கமல் ஏன் ஆப்கான் போகிறார்?
2.அமெரிக்க கைதிகளை விடுவிப்பது தான் அவரது நோக்கம் என்றால் அவர்கள் நேட்டோ படையினரால் விடுவிக்கப்பட்ட பிறகும் கூட அவர் அங்கு இருக்கிறாரே?
3.ஒசாமாவை பிடிப்பது தான் அவரது நோக்கம் என்றால் அவர் ஆப்கானை விட்டு வெளிவந்து அமெரிக்காவில் இருக்கும் போது தானே ஒசாமா கொல்லப்படுகிறான்.
4.கமல் ஏன் அமெரிக்க படையினருக்கு ஆப்கானில் இருந்து தகவல்களை அனுப்புகிறார்?
5.ஆப்கானில் எதிரிகளின் நடுவில் இருக்கும் போது அமெரிக்கர்களுக்கு தகவலகளை அளித்த கமல், நியூயார்க்கில் இருக்கும் போது ஏன் அளிக்காமல் தானே ஆபத்தை தடுக்க முயல்கிறார்?
6.நியூயார்க் போன்ற நகரத்தில் நியூக்ளியர் வெப்பன் டெட்டொனேட் செய்யப் படும் நேரத்தில் இப்படித்தான் மொக்கை தனமாக FBI நடந்து கொள்ளுமா?
7.தனது விமானம் டேக் ஆஃப் ஆகும் நேரத்தில் எந்த மாக்கானாவது அதே நகரில் நியூக்ளியர் வெப்பனை டெட்டொனேட் செய்வானா?
8.நூற்றுக்கணக்கான ஜிஹாதிகள் நியூயார்க் நகரத்தில் ஊடுருவியது கமலுக்கு தெரிந்திருக்கும் போது அது FBI க்கு தெரியாமல் போனது எப்படி?
9.ஆண்ட்ரியா படத்தில் என்ன செய்கிறார், கமல் புகழ் பாடுவதை தவிர?

இந்த கேள்விகளை எல்லாம் கூட விட்டு விடலாம். ஆனால் முக்கியமான கேள்வி, கமல் உளவாளி என்பது ஓமருக்கு எப்படி தெரிந்தது? படத்தின் முக்கிய ப்ரொடகானிஸ்ட் மற்றும் ஆன்டகானிஸ்ட் இருவருக்கும் ஏற்படும் உறவு சிக்கலை விளக்கும் பகுதி இது தான். அதையே திரைக்கதையில் அவர் கூறவில்லை. படத்தின் முக்கியமான முடிச்சுகளை கூட பார்வையாளர்களின் கற்பனைக்கு விடுவது த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு உதவாது.

ஒருவேளை இவை எல்லாவற்றுக்கும் விடை படத்தின் இரண்டாம் பகுதியில் தான் கிடைக்கும் என்றால், இந்த படம் விஷ்வரூபத்தின் இரண்டாம் பகுதிக்கு 95 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட டிரைலர் அவ்வளவு தான்.

எது எப்படியோ, திரைக்கதையில் கோட்டை விட்டாலும் கமல் தான் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களுள் ஒருவர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாத உண்மை.


தீவிரவாதம் செய்பவர்கள் இஸ்லாமியர்களே அல்ல என்றும் அவர்கள் மார்கத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் என்றும் சொல்பவர்கள் தீவிரவாதம் செய்பவர்களை பற்றி படமெடுத்தால் அது இஸ்லாமியர்களை குறி வைத்து எடுக்கப்படும் படம் என்று கூறுவது சரியான நகைமுரண். இந்த சண்டையில் யார் ஜெயித்தாலும், யார் தோற்றாலும் உண்மையில் தோற்றது இஸ்லாமே. படத்தின் தடையை வெறுக்கும், கலாச்சார தீவிரவாதத்தை வெறுக்கும், மத நல்லிணக்கத்தை போற்றும் பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்களுக்காக உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்.


மனைவி குழந்தை இல்லாமல் தனியாக இருப்பதால் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து நேரத்திற்கு சாப்பிடுகிறேனா என்று விசாரிக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு சாப்பிட அழைக்கிறார்கள். நான் போகவில்லை என்றால் உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்கள். வீட்டிற்கே வந்து உணவை தர தயாராக இருக்கிறார்கள். அதிலும் அழைத்த ஒரு நண்பருக்கு ப்ரணவ் வயதில் ஒரு மகனும், பிறந்து இரண்டு மாதங்களே ஆன மகளும் இருக்கிறார்கள். பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பத்திரமாக கார் ஓட்டும் படி அறிவுருத்துகிறார்கள். நாடு விட்டு நாடு வந்தால் பாசத்துக்காக ஏங்க வேண்டும் என்று யார் சொன்னார்கள்? இங்கே அன்புக்கு ஒரு குறைச்சலும் இல்லை.


இந்த வார நீயா நானா ஒரு சரியான ஐ ஓப்பனர். எவ்வளவு பேர் ஏமாந்திருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், கிராமத்தினர், நகரத்தினர், இளம் வயதினர், வயசானவர்கள் என்று சகலரும் ஏமாந்திருக்கிறார்கள். There is nothing called free lunch. "நமது பணம் எவ்வளவு வேண்டுமானாலும் அடுத்தவரிடம் இருக்கலாம். ஆனால் அடுத்தவர் பணம் ஒரு ரூபாய் கூட நம்மிடம் இருக்க கூடாது." என்பார் எனது தந்தை. அடுத்தவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை திருடி விட்டு எப்படி இவர்களால் சாப்பிட முடிகிறது?


இது என்னுடைய 200 வது பதிவு. 2006 ஆம் ஆண்டில் பதிவெழுத தொடங்கிய போது இருந்த உற்சாகம் இப்போதும் சற்றும் குறையவில்லை. ஏழு ஆண்டுகளாக பதிவுலகில் இருக்கிறேன் என்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பதிவுலகில் பெற்ற நட்புகள் பல. நான் பதிவெழுத தொடங்கிய போது எனது நட்பு வட்டத்தில் இருந்த பலர் இப்போது பதிவுலகில் இல்லை என்றாலும், அதனால் அவர்கள் இப்போது எனது தொடர்பில் இல்லாமல் போனாலும் அவர்கள் என் மீது ஆரம்பத்தில் காட்டிய நம்பிக்கையையும், அளித்த உற்சாகத்தையும் என்றும் என்னால் மறக்க முடியாது. பள்ளி முடிந்த உடன் அற்று விட்ட தாய் மொழியில் எழுதும் அனுபவத்தை மீண்டும் எனக்கு புதுப்பித்து கொடுத்த பதிவுலகுக்கு எனது நன்றிகள் கோடி.