Monday, August 17, 2015

பாங்காக்

சென்ற ஆண்டு அலுவல் நிமித்தமாக ஒரு பத்து நாட்கள் பாங்காக் சென்றிருந்தேன். ராஜ்ப்ரசாங் பகுதியில் இருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் நாங்கள் (ஆறு பேர்) தங்கி இருந்தோம். எங்கள் ஹோட்டலின் அடுத்த கட்டிடம் தான் இன்று குண்டு வெடிப்பு நடந்த கோவில். இந்துக் கோவிலாக இது இருந்த போதிலும், தாய் தேசத்தினர் பலரும் இந்த கோவிலுக்கு வருவதை பார்த்திருக்கிறோம். தினமும் காலை அந்த பகுதியில் வேலை செய்யும் தாய் தேசத்தினர் இங்கு வந்து இந்த கோவிலில் வாசனை பொருட்களை ஏற்றி வைப்பார்கள். அதன் பின்னரே அலுவல் செல்வார்கள்.

இந்த கோவிலை நாங்கள் தங்கி இருந்த பத்து நாட்களில் ஒரு நூறு முறை கடந்திருப்போம். ஒரு வேளை இந்த குண்டு அப்போது வெடித்திருந்தால் எங்களில் ஒருவர் கூட இறந்திருக்கலாம்.

இறந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இன்று யாரோ ஒரு மிருகத்தின் சிந்தனையில் உதித்த திட்டத்தினால் ஒரு சில குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்க கூடும், ஒரு சிலர் தங்கள் வாழ்க்கை துணையை இழந்திருக்க கூடும், ஒரு சிலர் தங்கள் உடல் உறுப்புகளை  இழந்திருக்க கூடும்.

இத்தகைய செயலை செய்தவனுக்கு மரண தண்டனை கொடுக்காமல், வேறு என்ன தண்டனை கொடுப்பது? மரண தண்டனையை எதிர்ப்பது ஒரு ஃபேஷனாக இப்போது ஆகி விட்டது. இம்மாதிரியான குற்றங்களுக்கு அவர்கள் ஏதேதோ காரணங்களை கற்பித்து மரண தண்டனைக்கு எதிராக வாதம் செய்கிறார்கள்.

என்ன செய்வது இறைவன் ஒரு சிலருக்கு தலையில் மூளையை வைப்பதற்கு பதிலாக குதத்தில் வைத்து விட்டான். தாய்லாந்தில் அம்மாதிரி குத மூளைக்காரர்கள் குறைவாக இருப்பார்கள் என்று நம்புவோம்.

குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, August 03, 2015

பொடிமாஸ் - 08/03/2015

கடந்த டிசம்பர் அல்லது ஜனவரியில் ஏதோ ஒரு நாள். தொடர்ந்து ஒரே வாரத்தில் இரு பெரும் பனிப் பொழிவுகள். வழக்கம் போல தங்கமணி உள்ளிருந்து உத்தரவு போட எனது drive way யை தனியாக சுத்தம் செய்து கொண்டிருந்தேன். முன்னரே பெய்த பனியினால் drive way இன் இரு ஓரங்களிலும் இடுப்பளவு பனிக்கட்டிகள் குவிந்து விட்டன.

மனதில் பல சிந்தனைக் குவியல்கள். அப்போது தான் ப்ரணவின் ஆசிரியர் அவன் படிப்பில் இன்னும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றும், சரியாக எழுதுவது இல்லை என்றும், வகுப்பில் கவனம் செலுத்துவது இல்லை என்றும், ஏரோப்ளேன் ஓட்ட தெரியவில்லை என்றும், மல்டிபில் ரெக்ரஷன் அனாலிஸிஸ் தெரியவில்லை என்றும், அமிர்த வர்ஷினி க்கும் ஆபேரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றும், இப்படி இன்னும் பல இல்லை என்றும் பெரிய பட்டியல் ஒன்றை அளித்திருந்தார்.

சார் அவனுக்கு வயசு நாலு தான் ஆகுது என்று சொல்ல வந்து, ஆனால் சொற்கள் வெளிவராமல் நாவின் அடியில் அடங்கி, பெரு மூச்சாக வெளிப்பட்டது.

நான் சுத்தம் செய்வதை அறையில் இருந்து ப்ரணவ் பார்த்துக் கொண்டே இருந்தான். முன்பே சொன்னது போல அங்கே இருந்த பனிக்குவியலால் அவனுக்கு நான் சுத்தம் செய்வது சரியாக தெரியவில்லை. நான் எங்கள் வீட்டின் பனிக்கட்டிகளை எடுத்து சாலையில் போடுவது போல அவனுக்கு தெரிந்தது. உடனே தடால் புடால் என்று மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன், "அப்பா! you can't make a mess like this. Others will fall." என்றான். அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்பதை விளங்கி கொள்ளவே எனக்கு சில விநாடிகள் ஆனது.

ஒரு தகப்பனாக மிகவும் பெருமையடைந்த தருணம் அது. வெளியில் கடும் குளிர், இவனோ ஒரு மெல்லிய ஷார்ட்ஸ் மற்றும் சட்டை அணிந்திருக்கிறான். அவனுக்கே குளிர் நடுக்குகிறது. இந்த நிலையிலும், தனது தந்தையால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று நினைக்கும் அந்த சிவிக் சென்ஸ் இருந்தால் போதும். பெரிய படிப்பு படித்து கிழித்தவர்கள் எல்லாம் நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்?


இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க சுதந்திர தினத்தை தொடர்ந்து இங்கிலாந்து சென்றோம். ஒரு வார சுற்றுப் பயணம். மிகவும் நன்றாக இருந்தது. அதுவும் நாங்கள் சென்ற நேரத்தில் மூன்று முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடந்தன, விம்பிள்டன், ஆஷெஸ் கிரிக்கெட், மற்றும் ப்ரிடிஷ் க்ரான்ட் ப்ரி. எங்கு சென்றாலும் நல்ல கூட்டம். முதலில் நுழையும் போதே இமிக்ரேஷன் ஆஃபீசர் மிகுந்த நட்புடன் உரையாடினார். அமெரிக்காவில் செந்திலை பார்க்கும் கவுண்டர் போலவே மூஞ்சியை வைத்துக் கொண்டிருப்பார்கள். உள்ளே நுழையும் போதே எதற்கு இந்த ஊருக்கு வந்தோம் என்று இருக்கும். அடுத்ததாக கட்டிடங்கள் எல்லாம் பெரும்பாலும் கலோனியல் காலத்தின் பதிவுகளாகவே இருக்கின்றன. ஐந்தடுக்கு பாதாள மெட்ரோ ரயில் போக்குவரத்து. சுமார் 12 கிலோ மீட்டர்கள் பாதையை கட்டி முடித்து அது என்னால் முடிந்ததா உன்னால் முடிந்ததா என்று நம்மவர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லண்டன் மெட்ரோ 1863 ஆம் ஆண்டு தொடங்கியது என்பதை அறியும் போது நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. "ஊர கொள்ளையடிச்சு உலையில போட்டா ஏன் செய்ய முடியாது?" என்று எனக்கு நானே அதற்கு சமாதானமும் சொல்லிக் கொண்டேன்.

லண்டன் நகரின் பரப்பளவு சுமார் 600 சதுர மைல்கள் தான். அதனை ஒரு வட்டமாக பாவித்தால் சுமார் 25 மைல்கள் பயணம் செய்தால் அதனை முழுதுமாக கடந்து விடலாம். அப்படிப்பட்ட நகரத்தின் அடியில் சுமார் 260 மைல் நீள ரயில் பாதைகள் போடப்பட்டு இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு காரோ, பஸ்ஸோ, டாக்சியோ தேவையே இல்லை.

பொது வெளியில் மது அருந்துவது சட்டப்படி தவறு என்றாலும் அங்கே பலர் அவ்வாறு செய்வதை பார்க்க முடிந்தது. பக்கிங்காம் மாளிகையின் வெளியே உள்ள ஒரு பகுதியில் பலர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டேன். அது போலவே லண்டனில் இருந்து மில்டன் கெய்னஸ் என்ற பகுதிக்கு வெர்ஜின் விரைவு ரயிலில் பயணம் செய்யும் போது அங்கும் பலர் மது அருந்துவதை கண்டேன்.

அடுத்ததாக என்னை ஆச்சரியப்படுத்தியது அந்நகரின் பசுமை. உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரில் இருந்து சுமார் 20 மைல்கள் பயணத்தில் என்னால் பல ஆடு, மாடு, மற்றும் குதிரை பண்ணைகளை பார்க்க முடிந்தது. நம்மூராக இருந்திருந்தால் லண்டனுக்கு மிக அருகில் என்று அதிகாலை இரண்டு மணிக்கு யாராவது கூவிக் கூவி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

அமெரிக்கர்களை விட பலர் அங்கே கட்டுக் கோப்பாக இருக்கிறார்கள். உணவின் அளவு அமெரிக்க அளவில் பாதி கூட இல்லை. சென்ற முதல் நாள் ஒரு கடையில் எக்ஸ்ட்ரா லார்ஜ் பர்ரீடோ வாங்கினோம். அது அமெரிக்க அளவில் பாதி இருந்தது. மாலை ஐந்து மணிக்கே எல்லா கடைகளையும் மூடி விடுகிறார்கள். இப்படி இருந்தால் எப்படி வியாபாரம் நடக்கும், லாபம் வரும்?

நாங்கள் சென்ற நேரம் கோடை காலம் ஆனதால் இரவு 11 மணி வரை வெளிச்சம் இருந்தது. அதனால் இரவு நேர லண்டனை பெரிதாக மகிழ்ந்து அனுபவிக்க இயலவில்லை. அடுத்த முறை டிசம்பர் மாதம் செல்ல வேண்டும். மொத்தத்தில் லண்டன் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.


சென்ற வாரம் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு முதலாளித்துவமே காரணம் என்று பலர் ஜல்லியடித்துக் கொண்டனர். உண்மையில் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு சோஷியலிசமே காரணம். 54 வயதில் ஓய்வு, அதிக அளவு ஓய்வூதியம், வாரத்துக்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை, என்றெல்லாம் இருந்தால் எப்படி ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும்? இன்னும் 30 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டில் 60 வயதை கடந்தவர்கள் சுமார் 50 சதவிகிதம் இருப்பார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. இப்படி இருக்கும் ஒரு நாட்டில் ஓய்வூதியத்தை அளித்துக் கொண்டே இருந்தால் எப்படி? யாருடைய உழைப்பு அதனை ஈடுகட்டும்?

சோஷியலிசம் ஒரு வித sense of entitlement ஐ மக்கள் மனதில் விதைத்து விடுகிறது. மக்களை பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை தான். நான் மறுக்கவில்லை. ஆனால் அது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பெற்றோர்களின் கடமை போன்றது. ஒரு வயது வரை நாம் பார்த்துக் கொள்ளலாம், அதன் பின்னர் அவர்கள் தான் தங்கள் காலில் நிற்க வேண்டும். அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி. அதன் பின்னர் நீ என்ன ஆனாலும், நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்தாலும் அரசாங்கம் கவலைப்படாது. அதே நேரம் பணக்காரர்களாக பார்த்து அதிக வரி விதித்து அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையையும் அமெரிக்க அரசு செய்யாது. ஒருவன் வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி அமெரிக்க அரசு கண்டு கொள்ளாது. அது தான் சரி என்பது தான் என்னுடைய கருத்தும்.


50 before 50 என்பதை இலக்காக வைத்திருக்கிறேன். இது வரை பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு வாரம் தங்கிய நாடுகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை ஒன்பது. வயதாகிக் கொண்டே போகிறது. குழந்தை, படிப்பு என்றாகிவிட்ட பிறகு முன்பு போல பயணம் செய்ய இயலவில்லை. ஆனாலும் செய்ய வேண்டும் என்ற ஆவல் அப்படியே இருக்கிறது.

சென்ற ஆண்டு தான் ஜே கண்ணையன் பற்றி அறிந்தேன். அமெரிக்காவில் நல்ல வேலை வாய்ப்பு, வசதி என்று இருந்தவர், அவை அனைத்தையும் விட்டு விட்டு தனது மோட்டர் சைக்கிளில் உலகம் முழுதும் பயணம் செய்ய தொடங்கினார். அமெரிக்காவில் தொடங்கி, மெக்சிகோ சென்று, அனைத்து தென் அமெரிக்க நாடுகளையும் கடந்து, தென் கோடிக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பா கப்பலில் சென்று, அங்கிருந்து ஆப்ரிக்கா வந்து, ஆப்ரிக்காவின் தென் கோடி வரை வந்து, அங்கிருந்து இந்திய தென் கோடிக்கு கப்பலில் வந்து, பின்னர் அங்கிருந்து லடாக் சென்று தனது பயணத்தை முடித்திருக்கிறார். இந்த பயணத்தை மேற்கொள்ள அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. இப்போது இந்தியாவில் இருந்து இது போன்ற பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் நான் அறிந்து மிகவும் வியந்த ஒரு நபர்.

அவரை பற்றி அறிந்து கொள்ள http://jamminglobal.com/ தளத்திற்கு செல்லவும்.


Put Chutney தளத்தை முன்பே அறிமுகப்படுத்தி இருக்கிறேனா என்பது தெரியவில்லை. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ. அட்டகாசம். நீங்கள் மார்வெல் காமிக்ஸ் ரசிகராக இருந்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.



Saturday, August 01, 2015

இரு மரணங்களும் கொஞ்சம் வலியும்

சென்ற வாரத்தில் இரண்டு மரணங்கள். இறந்தவர்கள் இருவருமே இஸ்லாமியர்கள். ஆனால் ஒருவர் மரணத்துக்கு இந்த தேசமே அழுதது. மற்றொருவர் மரணத்தை இந்த தேசமே கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் வேதனை என்னவென்றால் பலரும் அந்த மரணத்தையும் எதிர்த்தார்கள் என்பது தான்.

எப்படி அப்துல் கலாம் போன்றவர்களை தமிழர், இஸ்லாமியர் என்ற குறுகிய வட்டத்துக்குள் வைக்க முடியாதோ, அது போலவே யகூப் மேமன் போன்றவர்களையும் அடக்க முடியாது. அப்துல் கலாம் இந்த தேசத்தின் சொத்து. அனைவருக்கும் பொதுவானவர். அது போலவே யகூப் மேமன் இந்த தேசத்தின் எதிரி.

அவன் ISI பணத்தினை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவியவன். 300 அப்பாவிகளை பலி வாங்கிய குண்டு வெடிப்பு சம்பவத்தினை நடத்த உதவியவன். திட்டமிட்டபடி குண்டு வெடிப்பு நடந்த உடன் கராச்சியின் உள்ள ISI உளவாளி ஜாலியாவாலாவின் உதவியுடன் குடும்பத்துடன் தப்பி சென்றவன். பாகிஸ்தானின் ISI ஆல் அவனுக்கு யூஸுஃப் அஹமத் என்ற போலி பெயரில் போலி பாகிஸ்தான் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது, அவன் தாய்லாந்தில் ஒளித்து வைக்கப்பட்டான். இறுதி வரை அவனை பாதுகாக்க ISI முயன்றது.

அவன் தானாகவே முன் வந்து சரணடைந்தான் என்பதெல்லாம் கட்டுக் கதை. அவனை நேபாளத்தில் நேபாள போலீசார் கைது செய்தனர் என்பது தான் உண்மை. உண்மை இப்படி இருக்க, என்னமோ அவன் ஒரு மஹாத்மா போலவும் இந்தியா திட்டமிட்டு இஸ்லாமியர்களை பழிவாங்குகிறது என்பது போலவும் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. முக நூலில் ஒருவர் ஒன்றை பகிர்ந்திருந்தார். சுதந்திர இந்தியாவில் இது வரை 174 பேர் தூக்கில் இடப்பட்டதாகவும், அதில் 15 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும். இதிலிருந்தே தெரியவில்லையா எது உண்மை எது திட்டமிட்டு சொல்லப்பட்ட பொய் என்பது.

அவன் இந்திய உளவுத்துறைக்கு தான் கைதான பிறகு ஒத்துழைப்பு கொடுத்தான் என்பதாலும் தனது குடும்பத்தினர் இந்தியா வர உதவி செய்தான் என்பதாலும் மட்டுமே அவன் செய்த குற்றங்கள் சரியாகி விடுமா? உயிரிழந்த 300 பேருக்கும், உடல் உறுப்புகளை இழந்த 2,000 பேருக்கும் இந்திய அரசும் நீதித்துறையும் நியாயம் அளிக்க வேண்டாமா?

பம்பாய் குண்டு வெடிப்பு என்பது பாகிஸ்தானின் ISI யால் திட்டமிடப்பட்டு இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர். இதில் மாற்றுக் கருத்து இருப்பவர்களுடன் விவாதிப்பதே சுவற்றில் முட்டிக் கொள்வதற்கு நிகர். ஒருவர் என்னடா வென்றால் பம்பாய் குண்டு வெடிப்பு பாஜக மற்றும் சிவசேனையின் மத அரசியலுக்கான பதிலடி என்று சொல்கிறார். பாகிஸ்தானில் எத்தனையோ இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கெல்லாம் அங்குள்ள இந்துக்கள் குண்டு வெடிப்பு நடத்திக் கொண்டா இருக்கிறார்கள்? இதை சொல்வதன் மூலம் மசூதி இடிப்பை நான் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. நான் கூறுவது அப்பாவி மக்களுக்கெதிரான தீவிரவாதம் எதன் காரணமாக வந்தாலும், எதன் பெயரில் வந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டியதே. ஒரு தவறை இன்னொரு தவறால் நியாயப்படுத்தவே முடியாது.

மற்றொருவர் யாரோ ஒரு பாஜக எம்பி இஸ்லாமியர்கள் எல்லோரும் பாகிஸ்தான் போங்கள் என்று உளறினான் என்பதற்காக இந்திய தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சரி என்று எழுதுகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒவைசி, "சட்டம் தனது கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த தேசத்தின் 80 கோடி இந்துக்களையும் 15 நிமிடங்களில் அழித்து விடுவோம்" என்று சொன்னது பாவம் அவருக்கு தெரியவில்லை போலும்.

இஸ்லாமியர்கள் ஹிந்து மத வெறியர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தங்களை ஒவைசி போன்ற மத வெறியர்களிடமிருந்தும், செக்யூலரிசம் பேசும் பன்னாடைகளிடமிருந்தும் காப்பாற்றிக் கொள்வது. இவர்கள் தான் தீவிரவாதிகளுக்கு இஸ்லாமியர்கள் என்ற மத சாயம் பூசுபவர்கள். இவர்கள் தீவிரவாதிகளால் இறந்த இஸ்லாமியர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்க மாட்டார்கள். ஆனால் அஃப்சல் குருவுக்கும், யகூப் மேமனுக்கும் ஆதரவாக வருவார்கள். ஒரு வேளை கசாப் பலரை கொல்லும் காட்சிகள் படமாக்கப் படவில்லை என்றால் அவனுக்கும் ஆதரவாக கிளம்பி இருப்பார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியின் நீட்சியாகவே இவர்கள் இருக்கிறார்கள்.



அது சரி, யகூப் பற்றி நிறைய பேசியாகி விட்டது. கலாம் பற்றி பேச ஒன்றும் இல்லையா? என்று கேட்டால், பேச நிறைய இருக்கிறது. ஆனால் தேவை இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை. யாருமே பேசவில்லை என்றால் தான் நாம் பேச வேண்டும். இங்கு தான் எல்லோருமே கலாம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே. குறிப்பாக ஜெயமோகனின் கலாம் குறித்த கட்டுரை அருமை. கீழே அதிலிருந்து சில பகுதிகள்.

"அவர் தனக்கென வாழவில்லை. இந்த நாட்டை அவர் விரும்பினார். இதன் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமென கனவுகண்டார். அதற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனக்கென எதையும் சேர்க்கவில்லை. அத்தகைய மகத்தான முன்னுதாரணங்கள் நம் முன் இன்று குறைவே.

தனக்கும் தலைமுறைகளுக்கும் சொத்துசேர்ப்பதன்றி பிறிது எதையுமே அறியாதவர்கள் தலைவர்களாகக் கொண்டாடப்படும் இந்நாட்டில் இளைய தலைமுறையினர் அண்ணாந்து நோக்கும் இலட்சிய வடிவங்கள் மிகச்சிலவே. ஆகவேதான் கலாம் கொண்டாடப்படுகிறார். இலட்சியவாதத்திற்கு இன்னும் இங்கே பெருமதிப்பு உள்ளது என்பதையே காட்டுகிறது இது.
"

ஒரு சோறு பதம். அதனால் இதுவே போதும் என்று நினைக்கிறேன். கட்டுரையை முழுதும் படிக்க இங்கே செல்லுங்கள்.

http://www.jeyamohan.in/77432#

சாரு கேட்கிறார், "கலாம் பற்றிப் பேசும் போது அவர் நல்லவர் என்று பாராட்டுகிறார்கள். ஒருவரை நல்லவர் என்று பாராட்டுகின்ற அளவுக்காக நாட்டில் நல்லவர்களின் எண்ணிக்கை அருகி விட்டது? மனிதனாகப் பிறந்த ஒருவரின் அடிப்படைப் பண்பு அல்லவா அது?" என்று. நியாயமான கேள்வி தான். ஆனால் எந்த நிலையில் இருந்து அப்படி வாழ்கிறோம் என்பது தான் ஒருவனது தன்மையை நிர்ணயிக்கிறது. சாதாரண மக்களாகிய நீங்களும் நானும் நல்லவர்களாக வாழ்வது ஒன்றும் பெரிய செயல் அல்ல. ஆனால் அதிகார மையத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு தவறு செய்ய பல வாய்ப்புகள் இருக்கும் பட்சத்திலும் அதனை செய்யாமல் இருக்க அசாத்திய மன திடம் வேண்டும். அதற்காகவே கலாம் போற்றப்படுகிறார்.

ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி விமர்சிக்க கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை, என்றாலும் அவர் செய்த செயல்களை வைத்து தான் அவரை விமர்சிக்கலாமே தவிர அவர் செய்யாததை வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பது சரி என்று எனக்கு படவில்லை. எத்தனையோ பாரதரத்னாக்களை இந்திய மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவர்களுள் முதன்மையானோர்களின் பட்டியல் ஒன்று தயாரித்தால் அதில் கலாம் நிச்சயம் இடம் பெறுவார். RIP Mr. Kalam.

Friday, May 08, 2015

Disgusting - அருவருப்பின் உச்சம்

சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வந்தாலும் வந்தது மும்பையின் திரைத்துறையினருக்கு பித்தம் தலைக்கேறி விட்டது.

அதிலும் குறிப்பாக அபிஜித் பட்டாசார்யா என்ற ஒரு பாடகன் செய்த செயல் அருவருப்பின் உச்சமாக இருக்கிறது. இந்த பரதேசி நாய் தனது ட்விட்டரில் கீழ்கண்டவாறு சொல்லி இருக்கிறான்.

"மும்பையின் சாலைகளும், நடை பாதையும் தூங்கும் இடமா? அப்படி தூங்க வேண்டும் என்றால் எங்காவது கிராமத்திற்கு சென்று எங்கே எந்த வாகனங்களும் உங்களை கொல்ல முடியாதோ அங்கே தூங்க வேண்டியது தானே."

"திரை உலகத்தினருக்கு ஒரு வேண்டுகோள். சல்மானுக்கு ஆதரவு தெரிவியுங்கள். மும்பையின் சாலைகளும், நடை பாதையும் தூங்குவதற்கான இடங்கள் அல்ல. அங்கே தூங்கியது அவர்களின் தவறு. அந்த விபத்து சல்மானின் குற்றமும் அல்ல, மதுவின் குற்றமும் அல்ல."

"சாலைகள் வாகனங்கள் செல்வதற்கும், நாய்களுக்குமானவை. அதில் தூங்கும் மனிதர்களுக்கானவை அல்ல. சல்மான் மீது ஒரு தவறும் இல்லை."


இந்த அறிவு ஜீவியின் கருத்துப்படி அஜ்மல் கசாப் சும்மா சுடத்தான் செய்தான். அது தவறா? அவன் சுடும் போது அவனது குண்டுகளுக்கு முன்னால் மக்களை யார் சென்று நிற்க சொன்னார்கள்? தர்மபுரியில் அதிமுகவினர் சும்மா பேரூந்தைதான் எரித்தார்கள். அது தவறா? அப்படி அவர்கள் எரிக்கும் போது அந்த மாணவிகளை யார் அந்த பேரூந்துக்குள் இருக்க சொன்னார்கள்?

கீழே உள்ளது அந்த நாதாரியின் ட்விட்டர்.


போடாஆஆஆஆஆஆஆஆஆங்ங்ங்ங்ங்ங்க்க்க்க்க்க்க்க்க்................. வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. I think we must really mandate a license to procreate. Genes like Abhijeet’s should not be allowed to thrive or mutate.

நேற்று ஒருவர் ஒரு இணைய தளத்தில் கீழ்கண்ட பின்னூட்டத்தை இட்டிருந்தார். அதனுடன் நான் முழுதும் உடன்படுகிறேன். Those who stand by Salman, must stand in front of his SUV.

Wednesday, May 06, 2015

Avengers: Age of Ultron

கடந்த 2012 ஆம் ஆண்டு பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது The Avengers திரைப்படம். Avengers series என்பது ஆங்கில சூப்பர் ஹீரோ படங்களுக்கெல்லாம் சிகரம் போன்றது. அதை பற்றி தெரியாதவர்களுக்காக சில குறிப்பிட்ட மார்வெல் சூப்பர் ஹீரோக்களை பற்றிய குறிப்புகள் கீழே.

Peter Parker (Spider Man):

நியூயார்க் நகரில் தனது மாமாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பீட்டர் பார்க்கர் தனது பெற்றோர்களை இழந்தவர். அப்பாவியாகவும், நோஞ்சானாகவும் இருக்கும் அவரை ஒரு நாள் ஒரு சிலந்தி கடித்துவிடுகிறது. சிலந்தியின் DNAவும் அவரது DNAவும் ஒன்று சேர்வதால் அவர் ஒரு சூப்பர் ஹுமனாக மாறுகிறார். பல அபூர்வமான சக்திகள் அவருக்கு கிடைக்கின்றன. அப்போது ஒரு திருடனால் அவரது மாமன் இறந்துவிட, நியூயார்க் நகரில் நடக்கும் குற்றங்களை அழித்து குற்றவாளிகளை ஒடுக்க போராட்டத்தில் களம் இறங்குகிறார்.

Tony Stark (Iron Man):

ஸ்டார்க் இன்டஸ்ட்ரீஸ் ஒரு முன்னணி ஆயுத தயாரிப்பு நிறுவனம். அந்நிறுவனத்தின் தலைவர் டோனி ஸ்டார்க். அவர் ஒருமுறை போர்க்களத்தில் தனது நிறுவனம் தயாரித்த தளவாடங்களை ஆய்வு செய்யும் போது ஒரு விபத்தில் சிக்குகிறார். எதிரிகள் அவரை கடத்தி செல்கிறார்கள். அவரையும் இன்னொருவரையும் ஒரு குகையில் அடைத்து வைத்து அவர்களை ஆயுதம் தயாரிக்க சொல்கிறார்கள். ஆனால் இருவரும் ரகசியமாக ஆயுதம் தாங்கிய ஒரு இரும்பு கவசத்தை தயாரிக்கிறார்கள். உண்மையை அறிந்து கொண்ட எதிரிகள் அவர்களை அழிக்க முயல, அந்த போராட்டத்தில் அவருடன் குகையில் இருந்த மற்றொருவர் இறந்துவிட ஆத்திரம் கொண்ட ஸ்டார்க் எதிரிகளை அழித்துவிட்டு நியூயார்க் திரும்புகிறார். அந்த கவசத்தின் உதவி கொண்டு அமெரிக்காவின் எதிரிகளை அழிக்க உறுதி கொள்கிறார்.

Steve Rogers (Captain America):

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவில் மிகவும் நோஞ்சானாக இருக்கும் ஸ்டீவ் ரோஜர்ஸ், அமெரிக்க படையில் சேர்ந்து ஜெர்மானியர்களை எதிர்த்து போர் செய்ய ஆவல் கொள்கிறார். ஆனால் அவர் மிகவும் நோஞ்சானாக இருப்பதால் அவரது விண்ணப்பம் நிராகரிக்க படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ரகசிய மருந்தை கண்டுபிடிக்கிறார்கள். அது ஒருவரது உடலில் செலுத்தப்பட்டால் அவருக்கு என்றும் இளமையும், மித மிஞ்சிய பலமும் கிடைக்கும். அதன் சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்கிறார் ஸ்டீவ் ரோஜர்ஸ்.

அந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெறுகிறது. ஆனாலும் அந்த மருந்தை கண்டு பிடித்த தலைமை விஞ்ஞானி இறந்துவிடுகிறார். அவரது குறிப்புகள் அழிந்து விடுகின்றன. அதனால் அந்த மருந்தை தொடர்ந்து தயாரிக்கவோ, வேறு யாருக்கும் அந்த மருந்தை செலுத்தவோ இயலாத நிலை ஏற்படுகிறது.

கேப்டன் அமெரிக்காவாக மாறும் ஸ்டீவ் ரோஜர்ஸ் ஜெர்மனி வீரர்களை எதிர்த்து போர் செய்து அமெரிக்காவையும் பிரிட்டனையும் காப்பாற்றுகிறார். அதன் பின்னர் உலகையும் அதற்கு வரும் ஆபத்துகளில் இருந்த காப்பாற்ற உறுதியளிக்கிறார்.

Dr. Bruce Banner (Hulk):

டாக்டர் ப்ரூஸ் பேனர் ஒரு அணு ஆராய்ச்சி விஞ்ஞானி. அவர் ஒருமுறை ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது காமா கதிர்களின் முழு வீச்சில் சிக்கிக்கொள்கிறார். அந்த கதிர் வீச்சின் பாதிப்பால் அவருக்கு எப்போதெல்லாம் அதிக கோபம், உயரிய அழுத்தம், ஆத்திரம் எல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மிகப் பெரிய பச்சை நிற ராட்ச்சஸ உருவமாக மாறி விடுவார். அந்த நிலையில் அவரை யாராலும் தடுக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் இவருக்கும் மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம், இவர் ஹல்க் நிலையில் இல்லாத போது மிகவும் வீக்காக இருப்பார். அடிக்கடி தனது நிலையால் மன அழுத்தத்துக்கு ஆளாகி விடுவார்.

Thor:

மற்ற சூப்பர் ஹீரோக்களை போல இவர் ஒரு பூமியை சேர்ந்த மனிதன் கிடையாது. இவர் பூமிக்கு அப்பால் உள்ள அஸ்கார்ட் என்ற கற்பனை நகரத்தின் இளவரசர். பல அபூர்வ சக்திகள் இருந்தாலும், இளவயதில் தனது சக்திகளை மறந்துவிடுகிறார். அதன் பின்னர் அவருக்கு ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த சுத்தி கிடைக்கிறது. அதை ஒரு பாறையில் அடித்தவுடன் அவருக்கு இடி மற்றும் மின்னல் சக்தி கிடைக்கிறது. அவர் மறந்த தனது பழைய சக்திகளும் அவரது நினைவுக்கு வருகின்றன.

இன்னும் Hawk Eye, Black Widow என்று பல Avengers. யோசித்து பாருங்கள். இவர்கள் எல்லாம் தனித் தனியாக பல எதிரிகளை வீழ்த்தியவர்கள். உலகை பல முறை காப்பாற்றியவர்கள். பல அபூர்வ சக்திகளை கொண்டவர்கள். இவர்கள் எல்லோரும் ஒரே திரைப்படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? முதலில் Avengers அறிவிப்பு வந்த உடனே தெரிந்து விட்டது. ஒன்று இப்படம் சூப்பர் ஹிட், இல்லையென்றால் பப்படம். இம்மாதிரி படங்களுக்கெல்லாம் சுமாரான வெற்றி சுமாரான தோல்வி என்பதெல்லாம் கிடையாது.

இப்படத்தின் முதல் பாகத்தில் தோரின் வளர்ப்பு சகோதரன் லோகி, தெசராக்ட் என்ற ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த கல்லை அபகரிப்பதற்காக பூமிக்கு வருகிறான். அந்த கல்லை தனது செங்கோலின் உதவி கொண்டு அபகரித்தும் விடுகிறான். அவனை தடுத்து நிறுத்தும் Avengers இடமிருந்து அவனை காப்பாற்றுகிறான் தோர். லோகியின் மனதை மாற்றிவிட முடியும் என்று அவன் நம்புகிறான். ஆனால் லோகியோ அங்கிருந்து தப்புவது மட்டும் அல்லாமல், ஒரு பெரும் படை கொண்டு உலகை அழிக்க முயல்கிறான். Avengers அனைவரும் ஒன்று கூடி அவனை எப்படி அழித்தார்கள் என்பது தான் இப்படத்தின் முதல் பாகம்.

இப்படத்தின் இரண்டாம் பகுதி முதல் பகுதியின் முடிவில் இருந்து தொடங்குகிறது. லோகியுடன் நடந்த போராட்டத்தின் விளைவாக லோகியின் செங்கோல் பூமியில் விழுகிறது. அந்த செங்கோலை வைத்து சொகோவியா வில் உள்ள ஹைட்ரா தளத்தில் வூல்ஃப் கேங்கை சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சியில் ஒரு ஆண் பெண் இரட்டையர்களுக்கு அபூர்வ சக்தி கிடைக்கிறது. அந்த ஆணுக்கு மின்னல் வேகத்தில் நகரும் சக்தி கிடைகிறது. அதனால் அவன் Quick Silver ஆகிறான். அவனது சகோதரிக்கு தனது மனதின் சக்தியால் மற்றவர்களின் மனதை அறியவும், அதனை மாற்றவும், மற்றவர்களின் செயலை கட்டுப்படுத்தவும் தேவையான சக்தி கிடைக்கிறது. அவள் Scarlet Witch ஆகிறாள். இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோர்களை கொன்று தங்களது நகரத்தை அழித்தது ஸ்டார்க்கின் ஆயுதங்கள் தான் என்றும் அதனால் ஸ்டார்க்கை பழிவாங்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். வூல்ஃப் கேங்கை சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரையும் கொண்டு Avengers ஐ கொல்லவும், உலகை வெல்லவும் முயல்கிறார்கள். இதனை அறிந்து கொண்ட Avengers அங்கு வந்து அந்த தளத்தை அழித்து லோகியின் செங்கோலை கைப்பற்றுகிறார்கள்.

இடையில் ஸ்கார்லெட் விட்ச், தனது சக்தியால் டோனி ஸ்டார்க்கின் எண்ணங்களை மாற்றி விடுகிறாள். அந்த செங்கோலை நியூயார்க் நகருக்கு எடுத்து வரும் ஸ்டார்க் அதில் ஒரு அபூர்வ element இருப்பதை அறிகிறார். அதற்கு artificial intelligence அளிக்கும் முயற்சியில் அவர் இறங்குகிறார். அதற்கு பேனரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். தன்னிடம் முன்னரே உள்ள JARVIS (Just A Rather Very Intelligent System) என்ற ஸிஸ்டத்தின் உதவி கொண்டு அதனை செய்ய முயல்கிறார். அப்போது திடீரென்று சிந்தனை திறன் பெரும் அந்த தனிமம் Ultron ஆக மாறுகிறது. ஜார்விஸை அழிக்கிறது. பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் மனிதர்களை அழித்து இவ்வுலகில் மனித இயந்திரங்களை உலவ விடுவதுதான் என்று நம்புகிறது அல்ட்ரான். செங்கோலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்புகிறது.

மற்ற Avengers ஸ்டார்கின் இந்த செயலை கண்டு கடும் கோபம் கொள்கிறார்கள். மனிதர்களை அழிக்கும் மனித இயந்திரங்களை உருவாக்க அணுகுண்டு வெடித்தாலும் உருகாத வைப்ரேனியம் (கேப்டன் அமெரிக்காவின் கேடயம் இதனால் செய்யப்பட்டது தான்) என்ற உலோகத்தை அடைய ஆப்ரிக்கா செல்கிறது அல்ட்ரான். இதனை அறிந்து கொண்டு அங்கே வரும் Avengers இன் மனதை குழப்புகிறாள் ஸ்கார்லெட் விட்ச். அதன் காரணமாக ஹல்க் சீற்றம் கொண்டு பேரழிவை ஏற்படுத்துகிறது. மற்ற Avengers அனைவரும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். Avengers ஐ கண்டு மக்கள் பயப்பட தொடங்குகிறார்கள். ஹல்க் சம நிலைக்கு திரும்பி பேனராக மாறிய பின்னர், நடந்ததை எண்ணி வருந்துகிறார் பேனர். மேலும் குழப்பத்தை தவிர்க்க வேண்டி அங்கிருந்து சென்றுவிட விரும்புகிறார். அப்போது அங்கு வரும் ஃபூரி அல்ட்ரானை வெல்ல அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

அல்ட்ரான் வைப்ரேனியத்தால் ஆன எலும்புகளாலும், ஸிந்தெடிக் டிஷ்யூ கொண்டும் தனக்கு ஒரு உடம்பை தயாரிக்க முயல்கிறது. உடல் தயாரானதும் அந்த உடலில் அல்ட்ரான் தனது அறிவை புகுத்த முயலும் போது ஸ்கார்லெட் விட்ச் தனது சக்தியால் அல்ட்ரான் உலகை அழிக்க முயல்கிறது என்பதை அறிகிறாள். அவ்வுடலை அங்கிருந்து எடுத்து ஸ்டார்க்கிடம் வந்து ஒப்படைக்கிறாள். ஸ்டார்க் இந்த உடலில் அல்ட்ரானின் தாக்குதலில் இருந்து தப்பிய ஜார்விஸை செலுத்துகிறார். தோர் அதற்கு உயிரளிக்கிறார். விஷன் உறுவாகிறது. இதனால் கடும் கோபம் கொண்ட அல்ட்ரானின் இயந்திரப் படை உலகை தாக்க தொடங்குகிறது. பழைய Avengers உடன் புதிதாக விஷன், க்விக் ஸில்வர், ஸ்கார்லெட் விட்ச் ஆகியோர் ஒன்று சேர்ந்து எப்படி அல்ட்ரானை வீழ்த்துகிறார்கள், முடிவில் என்ன ஆகிறது என்பது தான் இந்த இரண்டாம் பாகம்.

படத்தில் சிறப்பு திரைக்கதை. இவ்வளவு பாத்திரங்கள் இருந்தாலும் ஒரு நேர் கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை. சண்டை காட்சிகளில் அட்டகாசமாக இருக்கிறது ஒளி மற்றும் ஒலிப்பதிவு. குறிப்பாக க்விக் சில்வர் காட்சிகள் அட்டகாசம். சிறிய சிறிய காட்சிகள் அழகாக அமைத்திருக்கிறார்கள். உதாரணமாக படம் நெடுகிலும் வரும் "Watch your language." காமெடி, தோரின் சுத்தியை தூக்க மற்றவர்கள் முயலும் காட்சி, அதையே ஒரு சண்டை காட்சியில் தோர் தூக்கி வீச, அதிலிருந்து தப்பிக்கும் க்விக் ஸில்வர், அதை பிடிக்க முயன்று அதை தூக்க முடியாமல் அதனுடன் சேர்த்து தூக்கி வீசப்படும் காட்சி, க்ளைமாக்ஸில் விஷன் ஒரே கையால் அதனை தூக்கி தோரிடம் கொடுக்கும் காட்சி, ப்ளாக் விடோ "Big guy!" என்று ஹல்கை கூப்பிடும் காட்சிகள், அவர்களுக்கிடையே இருக்கும் மெல்லிய காதல், என்று பல இடங்களில் சுவாரசியதை சேர்த்திருக்கிறார்கள். போரை அடிப்படையாக கொண்ட படம் என்பதாலும், முதலிலேயே நாம் எல்லோரும் திரும்ப மாட்டோம் என்று டோனி ஸ்டார்க் குறிப்பிட்டு விட்டதாலும் அவசியம் யாராவது ஒருவர் இறப்பார் என்று எதிர் பார்த்தேன். ஆனால் யார் அது என்பது தெரியாததால் சுவாரசியமாக இருந்தது. ஒரு நகரமே வானத்தில் மிதப்பது அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.

பெரிய குறை என்று பார்த்தால் சுவாரசியமே இல்லாத கடைசி 30 நிமிடங்கள். விஷனும், ஸ்கார்லெட் விட்சும், க்விக் ஸில்வரும் Avengers டீமில் சேர்ந்த பிறகு ஒரு சுவாரசியமும் இல்லை. சூப்பர் ஸ்டார் படத்தில் பவர் ஸ்டார் வில்லனாக இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது. அல்ட்ரானும் கூட பெரிதாக எதுவும் செய்யவில்லை. உலகில் உள்ள அனைத்து கணினிகளையும் இயக்கும் சக்தி வாய்ந்த ஒன்று இவ்வளவு மொக்கையாக உலகை அழிக்க முயல்வது சிரிப்பாக இருந்தது. மற்றபடி Marvel Comics ரசிகர்களுக்கு இப்படம் சரியான பொழுதுபோக்கு. படத்தின் இறுதியில் ஸ்டார்க் மற்றும் பேனர் இருவருக்கும் விடை கொடுத்து அனுப்பி விட்டார்கள். தோர் மீண்டும் வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் அதனால் பாதகமில்லை. அடுத்த பகுதியில் ஸ்பைடர் மேன் வருகிறார். ஆன்ட் மேன் அதற்கடுத்த பகுதியில் வரக்கூடும் என்று எதிர் பார்க்கிறார்கள். அதனால் ரசிகர்களுக்கு நல்ல வேட்டை இருக்கிறது.