Monday, September 07, 2009

வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்!

நேற்று இரவு வெளியிடப்பட்ட தேசிய விருது பட்டியலில் காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக மூன்றாவது முறையாக தேசிய விருதை பெற்றிருக்கிறார் திரு. பிரகாஷ்ராஜ். இதற்கு முன்னரே இருவர், அந்தப்புரம் ஆகிய படங்களுக்காக இரு முறை இந்த விருதை இவர் பெற்றிருக்கிறார். மூன்றாவது முறையாக இதனை பெற்றதன் மூலம் மூன்று முறை தேசிய விருது வாங்கிய மம்முட்டி, மோஹன்லால், நஸ்ருதீன் ஷா போன்றவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இவர் கூடிய விரைவில் நான்காம் முறையாக விருதினை வாங்கி நம்மவர் கமலஹாசனுக்கு பிறகு அதனை நான்காம் முறை பெற்ற ஒரே நடிகர் என்ற பட்டியலிலும் சேர வாழ்த்துகிறேன்.

Friday, September 04, 2009

Status Update

இந்த மே மாதம் கடைசி வாரத்தில் திருச்சியிலிருந்து அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அக்டோபர் கடைசியில் திரும்பி செல்கிறார்கள். அவர்களுக்கு இதுவே முதல் அமெரிக்க பயணமானதால் பல இடங்களையும் சுற்றி காமித்து வருகிறோம். நியூயார்க், அட்லாண்டிக் சிடி, வாஷிங்டன் டிசி, நயாகரா, பிட்ஸ்பர்க் என்று வார இறுதிகளில் ஊர் பயணங்களாகவே இருக்கின்றது.

சென்ற ஆண்டு மாமனாரும் மாமியாரும் வந்திருந்தார்கள். அப்பொழுதும் இது போலவே ஊர் பயணமாகவே இருந்தது. வார நாட்களில் அலுவலகத்தில் ஓய்வு, வார இறுதியில் கார் ஓட்டும் வேலை என்று நானும் தங்கமணியும் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். வார இறுதியில் கார் ஓட்ட வேண்டும் என்று நினைத்தாலே கடுப்பாக இருந்தாலும் பெற்றோர் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சிக்காகவே அதனை பொருட்படுத்த முடியவில்லை. அதிலும் குறிப்பாக நயாகரா சென்ற பொழுது அங்கு எனது அப்பா அம்மாவிடம், "இதை எல்லாம் நான் பள்ளியில் பாடத்தில் படித்தது. இங்கு வருவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை." என்று கூறிய பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சென்று வரும் ஒவ்வொரு இடத்தினை பற்றியும் அவர் குறிப்பெடுத்துக் கொள்கிறார். தேதி வாரியாக ஊரின் பெயர், போகும் வழி, அந்த ஊரின் பெருமை என்று அந்த பட்டியல் பெரிதாக இருக்கிறது.

பெற்றோர்கள் வந்திருக்கும் செய்தி கேட்ட உடனே அனைவரும் கேட்பது ஏதேனும் விசேஷமா? என்பது தான். "ஏன் ஐயா! பெற்றோர்களை அழைத்தாலே அது ஆயா வேலை செய்வதற்காகத் தான் இருக்க வேண்டுமா? ஊர் சுற்றி பார்க்க, நம்முடன் சில நாட்கள் தங்க அவர்களை அழைக்க கூடாதா?" என்று கேட்க தோன்றுகிறது. என்ன செய்வது அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்களை போலவே மற்றவர்களையும் நினைக்கிறார்கள்.

அவர்கள் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கின்றது. நல்லபடியாக நோய் நொடி இல்லாமல் பத்திரமாக அவர்கள் இந்தியா சென்று சேரும் வரை எனக்கு மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போலவே இருக்கும்.

Monday, August 10, 2009

Quick Gun Murugan

மக்களே பதிவுலகில் வலம் வந்து நெடு நாட்கள் ஆகிவிட்டபடியால் இதனை பற்றி யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் என் பங்கிற்கு இவரை பற்றி சொல்லி விடுகிறேன். இவர் தான் "Quick Gun முருகன்".





Image Copyright © 2009 Fox Star Studios India Pvt. Ltd. All rights reserved.



தென் இந்திய கௌ பாயான குவிக் கன் முருகனுக்கும், ரைஸ் ப்ளேட் ரெட்டியான நாசருக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை. குவிக் கன் முருகனாக நடித்துருப்பது டாக்டர் ராஜெந்திர பிரஸாத் என்று IMDB கூறுகிறது. இவரை பார்த்தால் பழைய கமல், ரஜினி படங்களில் வில்லனாக நடித்தவர் போல தோன்றுகிறது. இதில் மேங்கோ டோலியாக நம் தொடையழகி ரம்பாவும் இருக்கிறார்.

Fox Studios தயாரிப்பில் இது ஹிந்தியில் வெளியிடப்படும் என்று நினைக்கிறேன். Youtube இல் தேடிப் பார்த்ததில் ஒரு சில தமிழ் வசனங்களையும் கேட்க முடிகிறது. Youtube இல் இருக்கும் பல படக் காட்சிகள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படம் அட்டகாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வெளியீடு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Promo க்கள் எல்லாம் நகைச்சுவையுடன் இருந்தாலும் படம் ஏதேனும் ஒரு ஸீரியஸான விஷயத்தை பற்றி கூறும் என்றே நினைக்கிறேன். தென் இந்திய கௌ பாய் என்பது ஒன்றும் நமக்கு புதிது இல்லை. தலைவரின் தாய் மீது சத்தியம் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். இருந்தாலும் இந்தப் படம் ஒரு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

முன்னரே லவ் ஆஜ் கல், நியூ யார்க், உன்னை போல் ஒருவன், கந்த சாமி, ஆயிரத்தில் ஒருவன் என்று நீண்டு கொண்டிருக்கும் பட்டியலில் இதுவும் சேர்க்கப்படுகிறது. நான் இருக்கும் இடத்தில் படம் வெளி வருமா என்பது தெரியவில்லை. வெளியிடப்படாவிட்டால் DVD யில் மட்டுமே பார்க்க முடியும்.

படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, July 29, 2009

வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன்.

வணக்கம் நண்பர்களே!,

நலமா? உங்களை எல்லாம் சந்தித்து பல மாதங்களாகிறது. பெரிதாக ஒன்றும் காரணம் இல்லை. ஒரு விதமான சோம்பல். அதனால் ஒரு சிறிய இடைவெளி. அவ்வளவே.

இந்த இடைவெளியில் வாழ்க்கையில் ஒன்றும் பெரிதாக மாறுதல் ஏற்படவில்லை. முன்போலவே சுவையானதாக இருக்கின்றது. சில புதிய நண்பர்களை பெற்றேன். ஆன்மீகத்தில் சிறிது நம்பிக்கை கூடியது. வியாழன் தோறும் ஷீரடி சாயி பாபா கோவிலுக்கு சென்று பஜனையில் கலந்து கொள்கிறேன்.

நீண்ட நாள் இடைவெளி விட்டு சந்திக்கும் பொழுது வெறும் கையுடன் சந்திக்க வேண்டாம் என்பதற்காக நான் சென்ற ஆண்டு நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்த பொழுது எடுத்த சில படங்களை இணையத்தில் சேர்த்துள்ளேன்.

கிழே உள்ள சுட்டிகளில் ஏதேனும் ஒன்றில் அதனை நீங்கள் அவற்றினை பார்க்கலாம்.


இன்னும் ஓரிரு வாரங்களில் எனது நியூசிலாந்து பயணத்தினை பற்றிய ஒரு சிறு பதிவினை எழுதுகிறேன்

இவன்,
சத்யப்ரியன்

Wednesday, October 29, 2008

அன்பே சிவம் தோல்விப் படமா?

இப்பொழுது தமிழ் பதிவுலகில் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்விளையாட்டு "சினிமா கேள்வி பதில்கள்". இதில் பல பதிவர்கள் கலந்து கொண்டு தங்கள் பதில்களை பதிந்துள்ளனர். அதில் நானும் ஒருவன்.

அதிலும் குறிப்பாக "மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?" என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் "அன்பே சிவம்" என்று பதில் அளித்துள்ளனர்.



"மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? அன்பே சிவம்" என்று கூகுளிட்டேன். அது சுமார் 108 என்று விடையளிக்கிறது.

டாக்டர் புருனோ அவர்களோ அன்பே சிவத்தை பற்றி தனிப் பதிவே இட்டுவிட்டார். அப்படத்தினை பற்றிய எனது கருத்துக்களை பிரதிபலிப்பது போலவே அவரது பதிவு இருந்தது.

அன்பே சிவம் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு கசப்பான அனுபவமாக இருக்கலாம், வனிக ரீதியாக பெரும் தோல்வி கண்ட படமாக இருக்கலாம், ஆனால் மனிதநேயத்தை அன்பே சிவத்தினை காட்டிலும் அழகாக வெளிப்படுத்திய தமிழ் படங்கள் குறைவே.

கமலிடமிருந்து அதன் பிறகு அப்படி ஒரு படம் கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் பதிவெழுதிய சுமார் 100 பதிவர்களை தாக்கிய படம் அது என்பதை எண்ணி பார்க்கும் பொழுது ஒன்று தெளிவாக தெரிகிறது. ஒரு படத்தின் உச்ச கட்ட வெற்றி இது தான்.

அந்த வெற்றியை தந்த கமல், மாதவன், சுந்தர்.சி மற்றும் வித்யாசகர் கூட்டணிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.