Saturday, December 30, 2006

குழலினிது யாழினிது!!!

சமீபத்தில் திரு.சர்வேசன் அவர்களின் "மாதவன் கலக்கல்ஸ்" என்ற ஒரு பதிவை படிக்க [பார்க்க] நேர்ந்தது. அதில் மழலை மாறாத மாதவன் அமெரிக்க மாகாணங்களின் தலை நகரங்களை சரியாக கூற, அதை அவனது தந்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். பதிவின் முடிவில் "Excellent Madhava!" என்று பாராட்டு வேறு. இவர் என்றில்லை, பொதுவாகவே இன்றைய இந்திய பெற்றோர்களிடையே தத்தம் குழந்தைகளை இது போன்ற செயல்களை செய்ய வைத்து பெருமை அடையும் ஒரு வித மன நோய் இருக்கிறது. ஆம் இதுவும் ஒரு வகை மன நோயே. மூன்று நான்கு வயதிலிருந்தே பாட்டு, நடனம், ஓவியம் இன்னும் பிற கலைகள் பொன்றவற்றை பயின்று வரும் குழந்தைகள் பலர் அதை TVயில் கூற நான் கேட்டிருக்கிறேன். அந்த வயதில் தனக்கு பிடித்த ஒரு துறையை தேர்வு செய்யும் அறிவு குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? ஆக பெற்றோர் தாங்கள் விரும்பும் ஒரு துறையில் தங்களது குழந்தைகளை சாதிக்க வைத்து தாங்கள் பெருமை அடைய தங்களது குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலி கொடுக்கிறார்கள்.

ஐந்து வயது குழந்தை பொருள் தெரியாமல் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதாலும், மாகானங்களின் தலை நகரங்களை கூறுவதாலும் என்ன பலன் ஏற்படப் போகிறது? இந்திய கல்வித்திட்டத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டியது மனப்பாடம் செய்யும் முறை என்று ஆய்வாளர்கள் பல முறை கூறியும் இத்தகைய பெற்றொர்கள் திருந்தவில்லை. இவர்களின் ஊக்குவிப்பாலும், பாராட்டுகளாலும் குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்வதே அறிவை வளர்க்கும் முறை என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடாதா?

ஒரு மனிதனின் தற்போதைய சராசரி வாழ்நாள் 65 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் 15 ஆண்டுகள் மட்டுமே அவனால்/அவளால் உடலளவிலும் மனதளவிலும் குழந்தையாக இருக்க முடியும். ஆனால் இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை மனதளவில் குழந்தைகளாக இருக்க விடுகிறார்களா? அரட்டை அரங்கம் போன்ற TV நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் குழந்தைகள், குழந்தைகள் போலவா பேசுகிறார்கள்?

குழலையும் யாழையும் விட இனிமையானது குழந்தைகளின் மழலை என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய குழந்தைகள் பலருக்கு மழலை பேச்சே வருவதில்லை. நான்கு வயதிலேயே நன்றாக பேச தொடங்கி விடுகிறார்கள். 11 வயதில் பூப்படைந்து விடும் பெண் குழந்தைகள் பலர் இருக்கிறார்கள்.

குழந்தை திருமணத்தை தடை செய்தது போல, பெற்றோர்கள் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பலி இடுவதையும் தடை செய்ய வேண்டும். சட்டத்தின் மூலம் அது முடியாது. தனி மனிதர்கள் திருந்துவதின் மூலம் மட்டுமே அது முடியும். நாம் இனியாவது நமது குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போம். அவர்களின் குழந்தை பருவம் அவர்களுக்கு சொந்தமானது. அதை அவர்களிடமிருந்து பிடுங்குவது, பிறர் சொத்துக்களை கொள்ளையடிப்பதை போன்றது.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

Monday, October 16, 2006

கமல் - ஒரு சகாப்தம்

கமல் - இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை நடிகராகி, கதா நாயகனாக பதவி உயர்வு பெற்று இன்று உலக நாயகனாக இருக்கிறார். அவரின் இத்தகைய படிப்படியான வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பை என்னால் உணர முடிகிறது. இன்றும் அவர் ஒவ்வொரு படம் வெளியிடுவதற்கும் பல தடைகளை கடக்க வேண்டி இருக்கிறது.


தனக்கு தெரியாத அரசியலில் பங்கு கொள்ளாமல் தனக்கு நன்கு தெரிந்த நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்துபவர். தயாரிபாளர்களின் பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் நடிகர்களிடையே தனது சோதனை முயற்சிகளையெல்லாம் தனது சொந்த செலவிலேயே செய்பவர். தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்பவர். இன்றும் வாடகை வீட்டில் குடி இருப்பவர். சினிமாவில் மட்டுமில்லாமல் வெளி உலகிலும் உத்தமர் வேஷம் போடும் நடிகர்களிடையே வெளி வேஷம் போடத் தெரியாத நடிகர். தான் இப்படித்தான் என்று நேர்மையாக உரைக்கும் தீரம் கொண்டவர். இப்படி பல அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.


சிறு வயதிலிருந்து அவரது பல படங்களை பார்த்து ரசித்தவன் நான். அவ்வாறு நான் ரசித்த படங்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளேன்.

1) அபூர்வ ராகங்கள் (1975) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


பெயருக்கேற்ற படி அபூர்வமான கதை. முரண்பாடான உறவுகளையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் பற்றியது. பாலசந்தர் என்றாலே பிறர் தொட அஞ்சும் கதைக் களத்தை தன் கையில் எடுப்பவர் என்பதை மீண்டும் ஒரு முறை உண்மையாக்கிய படம்.

2) மன்மத லீலை (1976) இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


கமல் பெண்ணாசை பிடித்தவனாக நடித்த படம். 'பாலசந்தர் டச்' என்று பரவலாக கூறப்படுவது அதிகம் உள்ள படம். விரஸமான கதையை விரஸமில்லாமல் பாலசந்தரால் மட்டுமே கூற முடியும் என்று எடுத்துக் காட்டிய படம்.


3) 16 வயதினிலே (1977) - இயக்குனர் : திரு. பாரதிராஜா


தமிழ்சினிமா உலகை புரட்டிப்போட்ட ஒரு திரைப்படம். கிராமம் என்றால் பச்சை பசேல் என்று பசுமையாக, பணக்கார நாட்டாமையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்தெறிந்து தமிழ்நாட்டு கிராமங்களின் உண்மை நிலையை மக்களுக்கு காட்டி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய படம். பாரதிராஜா, இளையராஜா, கமல், ரஜினி, ஸ்ரீ தேவி, கவுண்டமணி போன்ற அனைவருக்கும் புகழ் சேர்த்த படம். வில்லன் 'டேய்!' என்று திட்டி விட்டாலே தனது 'இமேஜ்' போய்விடும் என்று பயப்படும் இன்றைய கதாநாயகர்கள் வெட்கி தலைகுனியும் விதம், காதல் இளவரசனாகவும், கல்லூரிப் பெண்களின் ஆதர்ச நாயகனாகவும் இருந்த காலகட்டத்தில் தனது 'இமேஜ்' பற்றிய பயமில்லாமல் கதைக்கு தேவையானதால் ஒரு புதிய இயக்குனரின் (பாரதிராஜா) சொல் கேட்டு கோவணத்துடன் நடிக்க தயங்காத கமலின் செயல் பாராட்டத்தக்கது.





4) நிழல் நிஜமாகிறது (1978) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


ஒரே ஒரு படம் 100 நாள் ஒடிவிட்டாலே அடுத்த ரஜினி நான் தான் என்று நினைத்துக் கொண்டு இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் பீதியில் ஆழ்த்தி அவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் இன்றைய இம்சை அரச நாயகர்களிடையே (வடிவேலுவை சொல்லவில்லை), 16 வயதினிலே என்ற வெள்ளிவிழா படத்தை அடுத்து தனக்கு துளியும் முக்கியத்துவம் இல்லாத கதையில் நடித்ததற்காகவே கமலை பாராட்டலாம். பாலசந்தர் உடைத்தெறிந்த தமிழ் சினிமாவின் எத்தனையோ வரையறைகளில் ஒன்று,


"ஒருவனால் கற்பழிக்கப்பட்ட பெண் ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும், இல்லை அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்."


ஷோபாவை சுற்றியே பின்னப்பட்ட கமலுக்கு சிறிதும் முக்கியத்துவம் இல்லாத அருமையான கதை.



5) மரோசரித்ரா (1978 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


இப்படம் சென்னையில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. காதலுக்கு தடையாக இப்படத்தில் இயக்குனர் கையில் எடுத்திருப்பது மொழியை. தமிழ் பேசும் ஒருவனும், தெலுங்கு பேசும் ஒருத்தியும் காதலிப்பதால் வரும் விளைவுகளே படத்தின் கதை. இப்படம் 'ஏக் தூஜே கேலியே' என்ற பெயரில் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அங்கும் பெரு வெற்றி பெற்றது.


6) சிகப்பு ரோஜாக்கள் (1978) - இயக்குனர் : திரு. பாரதிராஜா


கிராமத்து இயக்குனர் என்று முத்திரை குத்தப்பட்ட பாரதிராஜாவின் பெட்டகத்திலிருந்து வந்த ஒரு 'ஸைக்கோ திரில்லர்'. தான் காதலித்து திருமணம் செய்து கொண்டவன் ஒரு ஸைக்கோ என்பதை அறிந்த உடன் ஸ்ரீ தேவியின் நடிப்பு, உயிர் மேல் உள்ள பயத்தினை அவர் காட்டிய விதம் அனைத்தும் பாராட்டப்பட வேண்டியவை.


7) அவள் அப்படித்தான் (1978) - இயக்குனர் : திரு.C.ருத்ரையா


ஜெயகாந்தனின் கதை. நாவலை இதுவரை படிக்காத காரணத்தினாலோ என்னவோ எனக்கு மிகவும் பிடித்த படம். தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து ஆடும் பெண் கற்பு நிலையை இடது காலால் உடைத்த படம். படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடிகள்.


பெண் விடுதலை பேசிக்கொண்டே பெண்ணுறிமை-பெண் விடுதலை என்றால் என்னவென்றே தெரியாத பெண்ணை திருமணம் செய்யும் நாயகனாக கமல், இருமுறை காதலித்து, கற்பிழந்த நாயகியாக ஸ்ரீ பிரியா. அட்டகாசமான படம்.

8) நினைத்தாலே இனிக்கும் (1979) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


பின்னர் வேறு வேறு பெயர்களில் பல முறை படமாக்க பட்டுவிட்ட கதை. நோயினால் பாதிக்கப்படும் கதா நாயகி. இசைக் கலைஞன் நாயகன். நாயகனின் நன்பன். இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை. படம் பார்த்தவர்களால் மறக்க முடியாதது 'சம்போ சிவ சம்போ' கதா பாத்திரம் தான். ரஜினி, கமல் இருவருக்குமே சம்பளம் குறைவாக கிடைப்பதால், இனி இருவரும் தனித்தனியே நடிப்பது என்று முடிவு செய்தது இப்படத்தில் நடிக்கும் போது தான். சூப்பர் ஸ்டார் உருவாக அடித்தளம் இட்டது இப்படம் தான்.


9) வறுமையின் நிறம் சிகப்பு (1980) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


1980 களில் இந்தியாவில் தலைவிரித்தாடிய தீண்டாமை, பெண்ணடிமை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட திரைக்கதை. வேலையில்லா பட்டதாரிகளான மூன்று இளைஞர்கள். மூவரும் எவ்வாறு அவர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர் கொள்கிறார்கள் என்பது கதை. எக்குலத்தில் பிறப்பதும் உயர்வல்ல, எத்தொழில் செய்வதும் இழிவல்ல என்ற அருமையான கருத்தை கூறும் கதை.




10) மீண்டும் கோகிலா (1981) - இயக்குனர் : திரு. G.N.ரங்கராஜன்


மனைவிக்கு துரோகம் செய்யும் நாயகனின் கதை. அழகான மனைவியை விட்டு நடிகை மீது ஆசைப்படும் நாயகனாக கமல். அவரது மனைவியாக ஸ்ரீ தேவி. நடிகையாக தீபா. அழகான கதை; அருமையான பாத்திரப் படைப்பு.


11) ராஜ பார்வை (1981) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


இது கமலின் 100வது படம். முதல் தயாரிப்பு. பார்வையற்ற ஒரு வயலின் கலைஞனின் கதை. தனது சொந்த தயாரிப்பினாலோ என்னவோ, இதற்கு முன் நாம் பார்த்திராத கமலை இதில் பார்க்கலாம். பார்வையற்ற மனிதராகவே வாழ்ந்து காட்டி இருப்பார். நெஞ்சை தொடும் உருக்கமான கதை.


12) மூன்றாம் பிறை (1982) - இயக்குனர் : திரு. பாலு மகேந்திரா


கமலுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்த படம். படம் முழுதும் ஸ்ரீ தேவியின் தான் நடிப்பில் ராணி என்று நிரூபித்து காட்ட, இறுதியில் ஒரே காட்சியில் கமல், தான் நடிப்பில் ராஜா அல்ல சக்கரவர்த்தி என்று பரைசாற்றிய படம்.


13) ஸிம்லா ஸ்பெஷல் (1982) - இயக்குனர் : திரு. V. ஸ்ரீனிவாசன்

கமல் முதன் முதலில் நடித்த முழு நீள நகைச்சுவை படம். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக சொல்லும் படம். கமல், S. Ve. சேகர், ஸ்ரீ பிரியா மூவரும் நகைச்சுவை நடிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்த படம்.

14) சாகர சங்கமம் (1983 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.விஷ்வநாத்


அருமையான ஒரு இசைக் காவியம். நடனத்தையே தனது உயிர் மூச்சாக கொண்ட ஏழை நாயகனுக்கும் நடனத்தை நேசிக்கும் விதவை நாயகிக்கும் இடையில் பூக்கும் காதலை அழகாக கூறிய படம். படம் பார்க்கும் அனைவரையும் அழ வைக்கும் இறுதிக் காட்சி. (தமிழில் : சலங்கை ஒலி)


15) ஸ்வாதி முத்யம் (1986 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.விஷ்வநாத்


ஒரு வயதான மனிதனின் கடைசி கால கட்டத்தில் அவனால் அசைப்போடப்படும் அவனது இறந்த கால வாழ்க்கை, அவனது காதல். ஸைக்கோவாக சிகப்பு ரோஜாக்களில் நடித்து நம்மை பயமுறுத்திய கமல் இதில் மனநலம் குன்றியவனாக. (தமிழில் : சிப்பிக்குள் முத்து)


16) புன்னகை மன்னன் (1986) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம். இரட்டை வேடமென்றால் இருவரையும் வேறுபடுத்திக் காட்ட ஒருவருக்கு சிகப்பு சட்டையும் மற்றொருவருக்கு கருப்பு சட்டையும் தந்த காலத்தில், காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட நடன ஆசிரியராகவும், சாப்ளின் செல்லப்பாவாகவும் இரு வேறு பாத்திரங்களில் வந்து இரட்டை வேடங்களை இப்படியும் வெளிப்படுத்தலாம் என்று கட்டிய படம். ஈழத் தமிழர்களின் பிரச்சனை, தற்கொலை எதிர்ப்பு போன்றவற்றை மேலோட்டமாக தொட்டு செல்லும் படம்.

17) நாயகன் (1987) - இயக்குனர் : திரு.மணிரத்னம்

உலகின் தலை சிறந்த படங்களுள் ஒன்று. கமலுக்கு இரண்டாம் முறை தேசிய விருது அளித்த படம். அவர் வேலு நாயக்கராக வாழ்ந்து காட்டிய படம். தமிழகத்தின் முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் திரு. M. G. ராமசந்திரன் அவர்கள் தாம் இயற்கை எய்தும் முன்பு பல முறை பார்த்து ரசித்த படம். (ஒருவரை மரணப் படுக்கையில் மகிழ்விப்பதை காட்டிலும் சிறந்த செயல் வேறு உண்டா?)


18) பேசும் படம் (1987) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


கமலின் மற்றுமொரு புதிய முயற்சி. வசனமே இல்லாத படம். கதை ஒன்றும் புதிது இல்லை என்றாலும்; காதல், சோகம், பழி, நகைச்சுவை போன்ற பலவற்றை வசனமே இல்லாமலும் வெளிப்படுத்த முடியும் என்று கமல் நிரூபித்த படம்.


19) சத்யா (1988) - இயக்குனர் : திரு. சுரேஷ் கிருஷ்ணா


பொதுவாகவே சில இயக்குனர்களின் முதல் படத்தை பார்த்தீர்களானால் மற்ற இயக்குனர்களின் படத்திலிருந்து மாறுபட்டு சிறப்பாக இருக்கும். அப்படங்களை பார்த்தால் அது ஒரு புதிய இயக்குனர் இயக்கிய படம் என்று நம்மால் நம்பவே முடியாது. சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் சிறு வயதிலிருந்து அவர்களின் மனதில் பலமுறை அசைபோடப்பட்ட கதையை அவர்கள் படமாக்குவது அதற்கு ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சத்யா.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை அழிக்கும் நாயகன் என்ற அரதப்பழசான கதையை காட்சிக்கு காட்சி புதுமை கலந்து அளித்திருப்பார்கள் கமலும், சுரேஷ் கிருஷ்ணாவும்.


20) அபூர்வ சகோதரர்கள் (1989) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


இதுவும் அப்பாவைக் கொன்ற வில்லன்களை பதிவாங்கும் பழைய கதை. புதுமை என்னவென்றால், இரு கமலுக்கும் உள்ள வித்தியாசமே. தமிழ் சினிமா தொழில்நுட்பம் வளராத அன்றைய கால கட்டங்களில், காலை மடக்கி, குழிக்குள் அமர்ந்து குள்ள அப்புவை உருவாக்கிய கமலை பாராட்ட வேண்டியது அவசியம். படத்தின் திருப்புமுனை காட்சியில் இளையராஜாவின் பின்னனி இசை அவர் ஒரு இசைஞாணி என்று பரைசாற்றியது.

21) மைக்கேல் மதன காமராஜன் (1990) - இயக்குனர் : திரு.சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


கமல் நான்கு வேடங்களில் நடித்த முழு நீள நகைச்சுவை படம். தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை படங்களுள் ஒன்று. கிரேஸி மோகனின் வசனங்கள் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத, குழந்தைகளும் ரசிக்க கூடிய நகைச்சுவை. நட்சத்திரப் பட்டாளமே நமக்கு கிச்சு கிச்சு மூட்டினாலும் நம்மை அதிகம் கவர்வது காமேஷ்வரன், அவிநாசி மற்றும் பீம்பாய் மூவரும் தான்.


22) குணா (1991) - இயக்குனர் : திரு.சந்தானபாரதி


கமல் மனநிலை குன்றியவனாக நடித்த மற்றுமொரு படம். கமல் சமீபத்திய இருவேறு பேட்டிகளில் இப்படத்திற்கு 'மதிகெட்டான் சோலை' என்று பெயர் வைக்க தமிழ் சினிமாவின் சந்தை இடம் கொடுக்கவில்லை என்றும், காதல் கொண்டேன் பார்த்துவிட்டு குணாவிற்கு இப்படி ஒரு climax வைக்காமல் விட்டுவிட்டேனே என்றும் ஆதங்கப் பட்டார்.


படுதோல்வி அடைந்த ஒரு சிறந்த படம் என்பதை தவிர இப்படத்தை பற்றி சொல்ல வேறு ஒன்றும் இல்லை.

23) தேவர் மகன் (1992) - இயக்குனர் : திரு.பரதன்


தமிழ் சினிமாவின் நடிப்புலக சக்கரவர்த்திகள் இருவர் இனைந்து நடித்த படம். இப்படம் பற்றி கமல் கூறுகையில், சிவாஜியைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இப்படம் தேவர் மகன் அல்ல வெறும் மகன் தான் என்று குறிப்பிட்டார். அதை நான் வழி மொழிகிறேன். ஒருபடத்தின் வெற்றியில் கதைக்கு எத்துனை பங்கு உண்டோ அதே சதவிகித பங்கு கதாபாத்திர தேர்வுக்கும் உண்டு.


இப்படத்தின் பெரும் வெற்றியில் பங்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாரு நடிக நடிகையரை தேர்வு செய்த கமலுக்கு உண்டு.



24) மகாநதி (1994) - இயக்குனர் : திரு.சந்தானபாரதி


கமல் நடித்த 200க்கும் மேற்பட்ட படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு நல்ல படத்தை சொல்ல சொல்லி யாராவது கேட்டால் நான் யோசிக்காமல் சொல்வேன் மகாநதி என்று. அப்பாவி கிராமத்து குடும்பஸ்தனாக, சிறைக் கைதியாக, ஏமாற்றப்பட்ட ஒரு தொழிலதிபராக, மனைவியை இழந்த ஒரு கணவனாக, குழந்தைகளை இழந்த ஒரு தந்தையாக, பழிவாங்க துடிக்கும் ஒரு சராசரி மனிதனாக இப்படி பல்வேறு பரிமாணங்களில் வந்து கமல் அசத்திய படம். கொச்சின் ஹனிஃபாவின் வில்லத்தனமும் மிகவும் பாராட்டத்தக்கது.

25) சதி லீலாவதி (1995) - இயக்குனர் : திரு.பாலு மகேந்திரா


கமல் கோவை சக்திவேல் கவுண்டராக நகைச்சுவையில் பின்னியெடுத்த படம். கமல், கோவை சரளா, கல்பனா, ரமேஷ் அரவிந்த், ஹீரா அனைவருமே சிறப்பாக நடித்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.


26) குருதிப் புனல் (1995) - இயக்குனர் : திரு.P.C.ஸ்ரீ ராம்


கமல் போலீஸ் அதிகாரியாக நடித்த படம். வன்முறை சற்று அதிகம் என்றாலும் கதை மற்றும் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமானது. பாடல்களே இல்லாததும் ஒரு புதுமை. கமல் மற்றும் கௌதமி இருவருக்குமிடையே chemistry இப்படத்தில் work out ஆனது போல், வேறு எந்த நாயக நாயகிக்கும் தமிழ் சினிமாவில் work out ஆனது இல்லை.

27) இந்தியன் (1996) - இயக்குனர் : திரு.ஷங்கர்


லஞ்ச ஒழிப்பை மூலமாக கொண்ட படம். லஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இரண்டாம் முறை போராட்டத்தில் குதித்து லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவதே கதை. கமலுக்கு மூன்றாம் முறை தேசிய விருது வாங்கிக் கொடுத்த படம். தமிழ் சினிமாவில் இரட்டை வேடங்களில் பல புதுமைகளை செய்யத் தொடங்கியது இப்படத்திற்கு பிறகு தான்.


28) அவ்வை சண்முகி (1996) - இயக்குனர் : திரு.K.S.ரவிகுமார்


97ல் வெளிவந்திருந்தால் கமலுக்கு நான்காம் முறை தேசிய விருதை வாங்கிக் கொடுத்திருக்கும். 96ல் கமல் இந்தியனுக்கு தேசிய விருது வாங்க கடும் போட்டியாக இருந்தது இப்படம். சட்டபூர்வமாக விவாகரத்து செய்யப்பட்ட கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தை இம்மூவருக்குமிடையே நடக்கும் கதை. நகைச்சுவையாக சொல்ல முற்பட்டாலும் கதையின் கருத்து மிகவும் serious ஆனது.

29) ஹே ராம் (2000) - இயக்குனர் : திரு.கமலஹாசன்


மகாத்மாவின் மீது பலருக்கு பல விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர் தேசப்பிதா என்பது மாற்ற முடியாதது. அவரின் கொலையை மையமாக வைத்து கமல் முதல் முறையாக இயக்கிய படம். சாகேத் ராமின் மனைவி கொடூரமாக கற்பழிக்கப்படும் காட்சியாகட்டும், அவரின் நன்பன் கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சியாகட்டும் நம்மை 50 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு சென்று விடுகின்றன. படத்தை பார்த்து விட்டு மகாத்மாவின் சிலையை பார்க்கும் போது, 'இந்தியா ஒரு அஹிம்சை நாடு' என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டுத்தான் அவர் புன்னகைக்கிறாரோ என்று தோன்றுகிறது.


30) அன்பே சிவம் (2003) - இயக்குனர் : திரு.சுந்தர் C.

மகாநதிக்கு அடுத்து கமல் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அன்பே சிவம். கமல், மாதவன் இருவரின் நடிப்பு, ஒரு காதல் தோற்றதும் மறு காதலை இயல்பாய் தேடும் நாயகி, கம்யூனிஸ சிந்தனைகள் என்று பரவலாக பல நல்ல விஷயங்கள் உள்ள படம். தெருக்கூத்துக் கலையை அழகாக கையான்டிருப்பதும் மற்றுமொரு சிறப்பு.











நான் மேலே குறிப்பிட்டுள்ளது எனக்கு மிகவும் பிடித்த கமல் நடித்த 30 திரைப்படங்களை பற்றிய எனது கருத்தே ஆகும். அப்படங்களின் விமர்சனங்கள் இல்லை. இதை படிக்கும் பொழுது கமலின் பல சிறந்த படங்களை நான் விட்டு விட்டதை நீங்கள் உணரலாம்.


அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, அழியாத கோலங்கள், டிக் டிக் டிக், உல்லாச பறவைகள், உயர்ந்த உள்ளம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி விழா..... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் வேட்டையாடு விளையாடு வரை. ஆனால் என்ன செய்வது? பதிவு எழுதத் தொடங்கும் முன்பு சிறந்த 10 படங்களை மட்டுமே குறிப்பிட முடிவு செய்தேன். அது 30 ஆகி விட்டது.


நான் மேற்கூறிய படங்களை நன்கு கவனித்தீர்களானால் கமலின் திரைத்துரை வாழ்க்கை மூன்றாக பிறிந்து இருப்பதை காணலாம்.


1. ராஜ பார்வைக்கு முன்


இக்கால கட்டத்தில் அவர் நல்ல இயக்குனர்கள் இயக்கிய சில நல்ல படங்களில் நடித்தார். அவ்வளவுதான். இப்படங்களில் வேறு யார் நடித்திருந்தாலும் படங்கள் நன்றாகவே இருந்திருக்கும். அப்படங்களுக்கு கமல் தேவை இல்லை. ஆனாலும் அவ்வியக்குனர்களின் முதல் தேர்வாக கமல் இருந்ததற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும்.


2. ராஜ பார்வைக்கு பின்; நாயகனுக்கு முன்


இக்கால கட்டத்தில் தனக்கு பொருத்தமான படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அவர் சற்று பின்தங்கினார் என்று தான் கூற வேண்டும். 100வது படமான ராஜ பார்வையிலிருந்து 170வது படமான நாயகன் வரை அவர் நடித்த 70 படங்களில் அவரால் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல படங்களையே தர முடிந்தது. இதற்கு கமல் மீது மட்டுமே நாம் குற்றம் சாட்டுவது தவறு. கமலின் இந்த பின்தங்கலுக்கு ராஜ பார்வையை படுதோல்வி அடைய செய்து சகலகலா வல்லவனையும், தூங்காதே தம்பி தூங்காதேவையும் வெள்ளிவிழா காண வைத்த தமிழ் ரசிகமணிகளும் முக்கிய காரணம். 'Survival Fear' என்பது இக்கால கட்டத்தில் கமலுக்கு அதிகம் இருந்திருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.


3. நாயகனுக்கு பின்


இக்கால கட்டத்தில்தான் நாம் கமலின் விஸ்வரூபத்தை கண்டோம். காதல் இளவரசன் கமலஹாசனாக இருந்தவர், பத்மஸ்ரீ, உலக நாயகன், கலைஞாணி, டாக்டர் கமலஹாசனாக மாறியது இக்கால கட்டத்தில்தான். DTS, Digital Film Making, Digital Live Sound Recording, Make-Up ல் புதுமை போன்ற பல புதுமைகளை தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகப்படுத்தியதும் இக்கால கட்டத்தில் தான்.

இதோ அவரின் தசாவதாரத்தை அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். Nov 7 அன்று பிறந்த நாள் காணும் நமது உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர் மேன்மேலும் பல சாதனைகள் புறியவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, September 22, 2006

என்னை அதிகம் பாதித்த நாவல்கள்


"உண்மையில் உங்களை பொன்னியின் செல்வனை விட கவர்ந்த புத்தகம் எது?", என்று வெட்டிப்பயல் அவர்கள் என்னை கேட்டார்கள். அதன் விளைவுதான் இந்த பதிவு.

நான் படித்த வரையில் பொன்னியின் செல்வனை விட எனக்கு அதிகம் பிடித்த நாவல் எதுவும் இல்லை. ஆனால் பொன்னியின் செல்வனை விட என்னை அதிகம் பாதித்த நாவல்கள் சில உண்டு. ஏன் 'சில' என்று குறிப்பிடுகிறேன் என்றால் நான் படித்தவைகள் மிகச் சிலவே.


1. நாவல்: சுழிக்காற்று, ஆசிரியர்: கௌசிகன்

1970 களில் கல்கியில் தொடராக வெளிவந்த இந்த நாவல் நான் படித்த துப்பறியும் நாவல்களுக்கெல்லாம் ஆசான் என்று கூறுவேன். விடுமுறையை தனது காதலியின் கிராமத்தில் கழிக்க சென்னையிலிருந்து அவளது கிராமத்திற்கு வரும் துப்பறியும் நிபுணன் சேகர், அங்கே நடக்கும் தொடர் கொலைகளை கண்டு, அதற்கான காரணங்களையும், அதை செய்தவர்களையும் அனைவருக்கும் அடையாளம் காட்டுவதே கதை. கதை ஒன்றும் புதிது இல்லை என்றாலும், கதைக்களமும், சம்பவங்களும், அதை ஆசிரியர் கூறும் விதமும் என்னை வெகுவாக கவர்ந்தன. முடிவில் எல்லா முடிச்சுக்களும் அவிழும் பொழுது நமக்கு அளவில்லா ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. குற்றவாளிகள் மட்டும் நமது ஆச்சரியத்தை கூட்டவில்லை, குற்றத்திற்கான காரணங்களும் நமக்கு வியப்பளிக்கிறது. கால் நூற்றாண்டுக்கு பிறகு இப்பொழுது படித்தாலும் சுவை குன்றாமல் இருப்பதே இதன் சிறப்பாகும்.

2. நாவல்: போராட்டங்கள், ஆசிரியர்: ர. சு. நல்லபெருமாள்

இதுவும் கல்கியில் தொடராக வந்த நாவலே. இக்கதையின் சம்பவங்கள் 1960 களில் நடக்கின்றன. கதையின் நாயகன் முரளி ஒரு பத்திரிக்கை ஆசிரியர். நேர்மையாக, தரம் வாய்ந்த பாரதமணி என்ற ஒரு பத்திரிக்கை நடத்த அவர் சந்திக்கும் போராட்டங்களே கதை. இந்தோ சீன போர் நடந்த கால கட்டங்களில் சம்பவங்கள் நடப்பதாலோ என்னவோ கம்யூனிஸ, சீன, ரஷ்ய எதிர்ப்புகள் கதை முழுவதும் இருக்கின்றன.

முடிவில் தனது சொத்துக்கள் அனைத்தையும் அவர் இழந்து வெளிநாட்டுக்கு செல்லும் பொழுது நமக்கு நெஞ்சு கனக்கிறது.

3. நாவல்: அந்தக் கணல் வீசும் நேரம், ஆசிரியர்: சுதாங்கன்

"The only story that can be claimed as the best and probably the worst" என்று இந்த நாவலை எனக்கு பரிசளித்த எனது சகோதரர் குறிப்பிட்டார். அதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். 1990 களில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்த நாவல், அப்பொழுது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆறு ஆண்டுகளாக இனை பிறியாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில் புயலாக ஒரு கடிதம் வருகிறது. அது மனைவி கௌசல்யாவிற்கு அவளது கல்லூரித் தோழன் தீபக்கிடமிருந்து வருகிறது. அதில் அவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் தவறாக நடந்து கொண்டதற்கான குற்ற உணர்ச்சியை தீபக் வெளியிட அவர்கள் குடும்பத்தில் புயல் வீசுகிறது.

கதையின் கரு, 'மிகவும் தூய்மையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் அறியாமல் எப்பொழுதோ செய்த தவருக்காக வாழ் நாளெல்லாம் குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டாம்', என்பது தான்.

ஆனால் இக்கதை ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகவே நான் கருதுகிறேன்.

4. நாவல்: உண்மையே உன் விலை என்ன?, ஆசிரியர்: சோ

இது உன்மையில் ஒரு நாவல் கிடையாது. சோ அவர்களின் நாடகம் பின்னாளில் புத்தக வடிவில் எனக்கு கிடைத்தது.

கொலை குற்றம் சாட்டப்பட்ட தாமஸ் தியாகராஜன் உண்மையில் ஒரு நிரபராதி என்பதை அவனது confession இல் அறிந்து கொள்ளும் பாதிரியார் அருமை நாயகம் உண்மையை நிலை நாட்ட மேற் கொள்ளும் போராட்டங்களே கதை.

முடிவில் அவர் தனது உயிரை இழந்து உண்மையை நிலை நாட்டுகிறார். 'உண்மையின் விலை ஒரு நேர்மையான பாதிரியாரின் உயிர்' என்று தாமஸ் குறிப்பிடும் பொழுது நமக்கும் இச்சமூகத்தின் மீது வெறுப்பு வருகிறது.

5.நாவல்: கனவுத் தொழிற்சாலை, ஆசிரியர்: சுஜாதா


உங்களில் பலரும் படித்திருப்பீர்கள். புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஒரு தமிழ் திரைப்பட கதாநாயகனின் (அருண்) கதை. அருண் திரைத்துரையில் இருப்பதாலேயே அவனுக்கு பெண் கொடுக்க அவனது காதலியின் பெற்றோர்கள் மறுப்பதும், அதனால் ஆத்திரம் கொண்ட அவன் வேறொரு கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதும், தனது காதலியை திருமணம் செய்து கொண்டவன் அவளையும், அருணையும் சேர்த்து வைத்து சந்தேகப் படுவதையும் சுஜாதா தன் பாணியில் அழகாக குறிப்பிடுகிறார்.

அருணின் வாழ்க்கையை மட்டுமே பிரதானமாக கூறினாலும், என்னை அதிகம் கவர்ந்தது அவனது காதலியின் கதை மட்டுமே.

எவ்வளவு தான் அவள் மீது சந்தேகப்பட்டாலும், அடித்தாலும் இரவு புணர்வதை நாள் தவறாமல் செய்யும் கணவன். கர்ப காலத்தின் பொழுது கூட புணர்வதை நிறுத்தாத மிருகம். பிரசவம் முடிந்து இரண்டே மாதத்தில் அவள் மீது மிகுந்த அக்கரை கொண்டவன் போல் நடித்து அவளை மீண்டும் தனது வீட்டிற்கே அவன் அழைத்து செல்லும் பொழுது, அழும் அவளது தாயாரிடம் அவளது சகோதரன் கூறுகிறான், 'கவலைப் படாதே அம்மா. அவள் கூடிய சீக்கிரமே அடுத்த பிரசவத்திற்கு வந்து விடுவாள்'.

மனைவியை Sexual Machine ஆக கருதும் ஆண்களுக்கு இந்நாவல் ஒரு செருப்படி.

6. நாவல்: கோணல் பக்கங்கள், ஆசிரியர்: சாரு நிவேதிதா

சாருவின் பெரும்பாலான எழுத்தின் மீது எவ்வளவு தான் எனக்கு நல்ல கருத்து இல்லாமல் இருந்தாலும், அவரின் ஒரு சில படைப்புகள் மிக சிறந்தவை. அவரின் எழுத்தில் உள்ள சுய புராணத்தையும், மற்றவர்களை எள்ளி நகையாடுவதையும் ஒதுக்கி விட்டு பார்த்தோமானால் அவரின் பல எழுத்துக்கள் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கவே செய்தன.

சமூகம் தம் மீது போர்த்திய பல கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தவர் சாரு நிவேதிதா.

7. நாவல்: The Count Of Monte Cristo, ஆசிரியர்: Alexandre Dumas

நான் பொதுவாகவே ஆங்கில நாவல்கள் அதிகம் படிப்பது இல்லை. 1800 களில் ஐரோப்பாவில் நடக்கும் இக்கதை நான் படித்த வெகு சில ஆங்கில நாவல்களில் என்னை அதிகம் கவர்ந்தது.

நண்பர்கள் போல் நடித்த நான்கு துரோகிகளின் சதியால் வாழ்நாளெல்லாம் சிறையில் அடைபட்டு கிடக்கிறான் நாயகன். சிறையில் அவனுக்கு வேறொருவனது நட்பு கிடைக்க, அவன் சாகும் தருவாயில், அவனிடமிருந்து ஒரு புதையல் ரகசியத்தை அறிந்து கொண்டு, அவனது பிணம் போல் நடித்து சிறையிலிருந்து தப்பி செல்கிறான்.

14 ஆண்டுகள் கழித்து அவன் வெளிவரும் பொழுது, அவனுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவனது தந்தை பசியால் இறந்ததையும், தனக்கு துரோகம் செய்த நால்வரில் ஒருவனை தனது காதலி திருமணம் செய்து கொண்டதையும் அறிந்து கொதித்து போகிறான்.

அவன் எவ்வாறு அவர்களை பழி வாங்குகிறான், தனது காதலியை என்ன செய்தான் என்பது தான் கதை.

நெப்போலியன் காலத்திய ஐரோப்பிய கலாச்சாரத்தை அழகாக வெளிக் காட்டுகிறது இக்கதை.

நான் மேற்கூறியவை அனைத்தும் எந்த வித வரிசைப் படுத்துதலும் இன்றி எனது நியாபகத்தில் வந்தவாறு குறிப்பிட்டவையே ஆகும்.

Monday, August 21, 2006

பொறியியல் கல்லூரிகளின் பரிதாபமான நிலை

இந்த ஆண்டும் தமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் நடை பெறுகிறது. ஆகஸ்டு 15, 2006 தேதி வரை 22000 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மாணவர் சேர்க்கை முடியும் போது இது 17000 என்ற அளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


மேலும் மொத்தம் உள்ள 250 கல்லூரிகளில் 12 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பி இருக்கின்றன.


தமிழ் நாடு என்று இல்லை. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற பல மாநிலங்களிலும் இந்த நிலை தான்.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டி பொட்டுக் கொண்டு இருந்தனர். இன்று மட்டும் ஏன் இந்த நிலை?


இதோ எனக்கு தெரிந்த சில காரனங்கள்
  • புற்றீசல் போல கிளம்பிய சுய நிதிக் கல்லூரிகள்
  • அவற்றின் கல்வித் தரம் பற்றி மாணவர்களிடையே இருக்கும் சந்தேகம்
  • வருவாய்க்காக எந்த விதமான பரிசோதனைகளும் செய்யாமல் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கும் அரசு
  • ஆங்கில இலக்கியம், Visual Communication போன்ற துறைகளுக்கு மாணவர்களிடையே அன்மை காலமாக வளர்ந்து வரும் வரவேற்பு
  • Call Centre, BPO போன்ற நிருவனங்களில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள்

இந்நிலையில் சற்றும் மாறாத ஒன்று, தங்களின் பிள்ளைகள் பொறியியல் கல்லூரிகளிலோ அல்லது மருத்துவ கல்லூரிகளிலோ படிப்பதே தங்களுக்கு பெருமை என்று பல பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருப்பது. அவ்வாறு படிப்பதே அவர்களது வாழ்க்கையை நன்கு அமைக்கும் என்று நினைக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சில மாணவ மாணவியரும் அவ்வாறு படிப்பதே பெருமை என்றெண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளிலோ வருடாந்திர கட்டணங்கள் ஆயிரங்களை தாண்டி லட்சங்களில் வந்து நிற்கிறது. பணம் படைத்த பெற்றோர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டில்லை. ஆனால் ஏழை/நடுத்தர குடும்பத்தை சேர்ந்தோருக்கு?

VRS வாங்கிக் கொண்டு, வீட்டை விற்று, நகைகளை விற்று அவர்கள் தங்களது பிள்ளைகளை பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள். அவ்வாறு சேர்த்த கல்லூரி நன்றாக அமைந்தால் கவலையில்லை. ஆனால் 80% மேற்பட்ட கல்லூரிகள் அடிப்படை வசதி கூட இல்லாமலே இருக்கின்றன.

இதன் உச்ச கட்டமாக பல கல்லூரிகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதே கல்லூரியில் படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத முன்னாள் மாணவர்களை கொண்டே பாடம் நடத்துகின்றனர். நல்ல ஆசிரியர்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாத காரனத்தினால் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்களை படிப்பதற்கோ, தேர்வுகளில் அகிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெருவதற்கோ மாணவர்களால் இயலவில்லை.

உலகிலேயே அதிகமான பொறியியல் பட்டதாரிகளை தேர்விக்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தரும் முன் இனியாவது இதை கவனிப்பார்களாக. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் பொறியியல் மீதான மோகம் நீங்கி பல புதிய துறைகளில் நுழைந்து படித்து சாதனை புரிவார்களாக.

Tuesday, August 15, 2006

பிரதாப முதலியார் சரித்திரம் - ஒரு பார்வை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது (நன்றி : http://www.tamil.net/projectmadurai/) தமிழின் முதல் நவீனம் அல்லவா அது. எந்த விஷயத்திலுமே முதல் முயற்சி என்பது பாராட்டப் படவேண்டியதே ஆகும். அந்த வகையில் இதை படித்த உடன் இதை பற்றிய எனது கருத்துக்களை எழுத முடிவு செய்தேன்.

இந்த நவீனத்தில் முதலில் என்னை கவர்ந்தது இதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளே. இதில் உள்ள பல துணுக்குகள் தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக இடம் பெற்றிருக்கின்றன. கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரின் பல சிறந்த நகைச்சுவைகள் இந்த நவீனத்திலிருந்தே சுடப்பட்டிருக்கின்றன (வாழைப்பழ காமெடி இதில் இல்லை:-)). முன்னரே பல முறை பார்த்து, கேட்டு ரசித்து விட்ட காரனத்தினாலோ என்னவோ இப்பொழுது இதை படிக்கும் போது சிரிப்புணர்ச்சி அதிகம் வரவில்லை. ஆனாலும் அக்காலத்தில் இதை அனைவரும் வியந்து ரசித்திருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

உதாரணத்திற்கு, கண்களை மூடிக்கொண்டு மணலை கண்களில் போட்டுக்கொள்வது, போர்க்களத்தில் எதிரியின் தலையை கொய்யாமல் காலை கொய்ததற்கான காரனமாக அவன் முன்னரே இறந்து விட்ட செய்தியை கூறுவது போன்றவற்றை குறிப்பிடலாம்.

திரைப்படத்தில் இடம் பெறாத நல்ல நகைச்சுவைகளும் பல இதில் உள்ளன. குறிப்பாக, கனகசபை உட்பட நால்வரின் திருமணத்தின் போது ஒருவருக்கு தாலி எடுத்துக் கொடுக்க மறந்து விட்ட புரோகிதர், பின்னர் அதை தெரிந்து கொண்டு இரவு மணப்பெண்கள் தூங்கும் அரைக்கு வந்து தாலி இல்லாத ஒரு பெண்ணிற்கு தாலி கட்டி விட முயற்சிக்கும் செயல் நல்ல தமாஷ்.


இதில் அடுத்ததாக என்னை கவர்ந்தது, பல இடங்களில் மிக நல்ல கருத்துக்களை ஆங்காங்கே கதைகள் மற்றும் பல கதா பாத்திரங்களின் வாயிலாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது.


உதாரணத்திற்கு, கல்வி செல்வம் படைத்தவருக்கு தேவை இல்லை என்று பிரதாப முதலியார் குறிப்பிடும் பொழுது, அவரது அண்ணை, கல்வியின் சிறப்பை அழகாக விளக்குகிறார். பிரதாப முதலியார் கல்வி கற்று முடித்த உடன், அவரது ஆசிரியர், "ஏட்டுக்கல்வி தான் முடிந்ததே அன்றி கல்வி முடியவில்லை. பள்ளியில் கற்பது வெறும் அஸ்திவாரமே. அனுபவக்கல்வியாகிய கட்டடத்தை இதன் மீது நீ கட்டவில்லை என்றால் அஸ்திவாரத்திற்கு பலனே இல்லை." என்று அழகாக கூறுகிறார்.


மேலும் பெண்களை உயர் பண்புள்ள கதாபாத்திரங்களாக உலவ விட்டிருக்கிறார். பிரதாப முதலியாரின் தாயார் மற்றும், அவரது மனைவி ஞானாம்பாள் இருவரின் உயர் பண்புகளும் பல இடங்களில் தெரிகின்றன.


உதாரணத்திற்கு வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்யலாம் என்ற பிரதாப முதலியாரின் யோசனையை நிராகரித்து, ஞானாம்பாள் சொல்லும் பதில். அழகாக இருக்கிறது.

மற்றொரு பொழுதில் தங்களது கணவன்மார்கள் அனைவருக்கும் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டு அவர்களின் மனைவியர் அழுது புலம்ப, பிரதாப முதலியாரின் தாயார் மட்டும் சிந்தித்து செயல் பட்டு அவர்களை அந்த இக்கட்டிலிருந்து மீட்டெடுக்கிறார்.

தையற்காரனிடன் ஒரு ரூபாய் திருடி அகப்பட்டு கொண்ட திருடன் தனது பக்க நியாயத்தை தேவராஜ பிள்ளையிடம் அழகாக விளக்குகிறான். தான் ஒரு ரூபாய் திருடியதற்கு தண்டனை என்றால், அரசர்கள் பலரும் பல நாடுகளுக்கு படை எடுத்து சென்று அங்கே கொள்ளையடிக்கின்றனரே அதற்கு என்ன தண்டனை என்று கேட்கிறான்.

மேலும் தான் கடன் வாங்கிய சொற்ப பணத்தை திருப்பி தர இயலாத நிலையில் வழக்கை சந்திக்கும் ஒரு கடனாளி, "வறுமையின் காரனமாக சொற்ப பணத்தை திருப்பி தராத எனக்கு கடும் தண்டனை என்றால், வங்கிகளில் பல ஆயிரம் கடன் வாங்கி திருப்பி தராதவர்களுக்கு என்ன தண்டனை?", என்று வினவுகிறான்.

இதை படிக்கும் பொழுது ஆச்சரியமாக இருந்த மற்றொரு விஷயம்,


1. லஞ்ச ஊழல்

2. பொய் சாட்சியம் உரைத்தல்

3. பொய் சான்றிதழ் அளித்தல்

4. பிறர் மனைவியை பெண்டாடுதல்

5. அரசாங்க சொத்தை அபகரித்தல்


போன்ற பல குற்றங்களை அக்காலத்திலும் அரசு பதவியில் இருந்தோர் செய்து வந்தனர் என்று ஒருவர் குறிப்பிடுகிறார்.


நம்மில் பலர் ஏதோ சுதந்திரம் கிடைத்த பின்னர் தான் இதெல்லாம் தலை தூக்க ஆரம்பித்தது என்றும், பிரிட்டிஷார் ஆண்டிருந்தால் இந்த தேசம் நன்றாக இருந்திருக்கும் என்றும் நினைத்துக் கொண்டிருக்க, அவர்கள் ஆட்சியிலும் அரசியல் மற்றும் சமூக சீர்கேடுகள் பல இருந்தன என்பது தெளிவாகிறது.

வேட்டைக்கு சென்ற கணவனை தேடிச் சென்ற ஞானாம்பாள் தற்செயலாக ஒரு நாட்டின் அரசியாகி விட, அதை அவள் மறுத்தளிக்கும் காரனம் அழகாக சொல்லப்பட்டிருக்கின்றது.

இராஜ்ய பாரம் எத்தகையது என்றும், அரசனானவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் அழகாக அவள் குறிப்பிடுகிறாள். பிற ஸ்த்ரிகள் காணாத மார்புடையவனாகவும், எதிரிகள் காணாத முதுகுடையவனாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

அதே போன்று, வக்கீல்கள் தமக்கு வரும் வழக்குகளை எவ்வாறு ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் தமிழிலேயே வழக்கு விசாரனையின் போது பேச வேண்டிய அவசியத்தையும் அழகாக விளக்குகிறார்.

இவ்வாறு பாராட்டத்தக்க விஷயங்கள் பல இருக்கும் இந்த நவீனத்தில் என்னை முகம் சுளிக்க வைத்த சிலவற்றை பார்ப்போம்.


இந்த நவீனத்தில் அக்காலத்து வாழ்க்கை முறை தெளிவாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அக்காலத்தில் இருந்த குல ஏற்றத்தாழ்வுகள்.


உதாரணத்திற்கு, பிரதாப முதலியார் நகைச்சுவையாக இவ்வாறு குறிப்பிடுகிறார். "எல்லோருக்கும் மரியாதை தர வேண்டும் என்று என் தாயார் குறிப்பிட்டதால் நான் என் வீட்டிற்கு வரும் வண்ணானுக்கும் தோட்டிக்கும் கூட மரியாதை குடுத்தேன்". மேலும் பிரதாப முதலியாரின் தந்தையும், சம்பந்தி முதலியாரும் சண்டை போடும் பொழுது, "நீ வண்ணான் பரம்பரை அல்லவா?" என்றும், "நீ அம்பட்டன் பரம்பரை அல்லவா?" என்றும் திட்டிக் கொள்கிறார்கள்.


அதாவது முடிதிருத்தும் தொழிலோ அல்லது துணி துவைக்கும் தொழிலோ செய்வதே பாவம் என்றும், அவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் நகைப்புக் குறிய செயலென்றும் குறிப்பிடுகிறார்.


மேலும் ஆங்காங்கே அக்காலத்தில் இருந்த பெண்ணடிமைத்தனம் நன்றாகவே தெரிகிறது. உதாரணத்திற்கு, பிரதாப முதலியார், தனது மனைவியான ஞானாம்பாளிடம் பெண்களை உயர்த்தி பேசும் பொழுது, "இந்நாட்டில் தனது கணவர் இறந்த உடன் தானும் உடன்கட்டை ஏறிய பதிவிரதைகள் பலர் உள்ளனர்." என்கிறார். மேலும் பொல்லாத கணவன் , மனைவி பற்றி அவர்கள் பேசும் பொழுது, பொல்லாத கணவனை (விபச்சாரிகளிடன் சென்ற கணவனை) பொருமை காட்டி மனைவி திருத்தினாள் என்றும், பொல்லாத மனைவியை (பிடிவாத குணம் உள்ள மனைவியை) பிறம்பால் அடித்து கணவன் திருத்தினான் என்றும் கூறுகிறார்.


இதில், ஒழுக்கம் இல்லாத கணவனை திருத்த மனைவிக்கு வழியாக கூறியது பொருமை, ஆனால் பிடிவாத குணம் கொண்ட மனைவியை திருத்த கணவனுக்கு வழியாக கூறியது தண்ட உபாயம். மேலும் உடன்கட்டை ஏறியவர்களே பதிவிரதைகள் என்ற சான்றிதழ் வேறு.

அதே போன்று, புலி துரத்திக் கொண்டு வரும் பொழுது தங்களுடைய மனைவிகளை விட்டு விட்டு ஓடி ஒளிந்த கணவர்களை பார்த்து அவர்களது மனைவியர் ஓடிய பொழுது அவர்களது கால்களில் முட்கள் குத்தி இருக்குமே என்று கவலை கொள்கிறார்கள்.

பிரதாப முதலியாரின் தாயார் அவரது கணவரையும், பிரதாப முதலியாரையும் மற்றும் பலரையும் ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றிய உடன் அவரை பாராட்ட பலர் வருகிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் அநேகம் பேர் பிற புருஷர்கள் ஆகையால் அவர்களை பிரதாப முதலியாரின் தாயாரை பார்க்க அனுமதிக்கவில்லை.


அதாவது உறவினர்கள் அல்லாத வேற்று ஆண்கள் தம் வீட்டு பெண்களை பார்க்க கூட அனுமதி இல்லை என்ற நிலைதான் அக்காலத்தில் இருந்தது.


இதன் உச்ச கட்டமாக கலாச்சார சீரழிவு என்று ஒரு உதாரணம் குறிப்பிடுகிறார். அது என்னவென்றால், ஒரு ஆண் பிற புருஷர்கள் பங்கு கொள்ளும் பல விசேஷங்களுக்கு தன்னுடைய மனைவியை கூட்டி செல்கிறான். இதனால் அவன் கெட்டு சீரழிந்தான் என்று கூறுகிறார்.


இதை எல்லாம் பார்க்கும் பொழுது தீண்டாமையும், பெண்ணடிமையும் அக்காலத்தில் (1850 களில்) படித்த மக்களிடையே கூட தலை விரித்து ஆடியது என்பது தெளிவாகிறது.

ஆனாலும் இத்தகைய முகம் சுளிக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் கருத்தாக கொள்ளாமல் அக்காலத்து வாழ்க்கை முறை இவ்வாறு தான் இருந்தது என்பதை உணர்ந்து பார்க்கும் பொழுது இது ஒரு நல்ல நவீனம் என்று கூறலாம். தமிழ் இலக்கிய உலகில் இது முதல் நவீனம் என்ற ஒரு உண்மையை சேர்த்து பார்த்தோமானால், இது ஒரு சிறந்த படைப்பு, அனைவரும் அவசியம் படித்து மகிழ வேண்டிய ஒரு படைப்பு.

Thursday, August 10, 2006

தீங்கு விளைவித்தால்!!

மகாபாரதத்தில் உள்ள எத்தனையோ கிளைக் கதைகளில் இதுவும் ஒன்று.


பாரதப் போரின் 17ஆம் நாள். கர்ணன் இறந்து விட்டான். அன்று இரவு பாண்டவர்களின் கூடாரமே மகிழ்ச்சியின் எல்லைக்கு செல்வதற்கு பதிலாக சோகமாகவே இருந்தது. அதற்கு காரனம் குந்தி. அவள் கர்ணனின் பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறாள். உண்மையை அறிந்த பாண்டவர்களோ சோகத்தின் எல்லையில் இருக்கிறார்கள்.


அர்ஜுணனோ இன்னும் ஒரு படி மேலே போய் கிருஷ்ணனிடம், "உண்மை அனைத்தும் அறிந்தும் என்னை இப்படி சகோதரனை கொன்ற பாவத்திற்கு ஆளாக்கி விட்டீர்களே. இது நியாயமா? என் வாயாலேயே பல முறை எனது மூத்த சகோதரனை தேரோட்டி மகன் என்று குறிப்பிடுள்ளேனே, இந்த பாவம் என்னை விட்டு நீங்குமா? ஒவ்வொரு முறையும் பலர் அவரை தேரோட்டி மகன் என்று குறிப்பிட்ட போதும் அவரது மனம் என்ன பாடு பட்டிருக்கும்?" என்றெல்லாம் பலவாறு புலம்பினான். அதற்கு கிருஷ்ணனோ எதுவும் சொல்லாமல் புன்னகை பூத்த முகத்துடன் இருந்தான்.


இதைக் கண்ட தருமன் கிருஷ்ணனிடம், "அய்யா! எனது சகோதரன் இவ்வாறு புலம்புவதை கண்டும் புன்னகை சிந்தும் உமக்கு கல் நெஞ்சோ?" என்றான்.


உடனே கிருஷ்ணன், "தருமா! சற்று பொரு. அர்ஜுணன் தனது சகோதரனை கேவலப்படுத்தி விடோமே என்று கவலைப் படுகிறான். ஆனால் தனது சகோதரனை வேறொருவர் மகன் என்று கூறி உண்மையில் அவன் கேவலப்படுத்தியது அவனது தாயாரைத்தான்." என்றான்.


இக்கதை உண்மையோ பொய்யோ. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது நல்ல நீதி. நாம் பல நேரங்களில் அடுத்தவருக்கென்று செய்யும் தீங்குகள் நமக்கே தீங்காக முடியும்.


இதை வள்ளுவப் பெருந்தகை,


"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்"


என்கிறார்.


இளங்கோவடிகள்,


"ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்"


என்கிறார்.


நாமும் நம்மால் முடிந்த வரையில் மனதாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவருக்கு நன்மையே செய்வோமாக.

Wednesday, August 02, 2006

இப்படியும் நடக்கலாம் ஜாக்கிரதை!

அலுவலகத்தில் வேலை செய்கிறேனோ இல்லையோ, காலை முதல் வேலையாக அங்கே சென்று விடுவேன். அப்பொழுது தான் ஒரு நிம்மதி. எனது அலுவலகத்தில் உள்ள கழிவறையை தான் சொல்கிறேன். இன்றும் அவ்வாறே நான் சென்று அமர்ந்து இருந்த போது, பக்கத்து அரையிலிருந்து ஒரு குரல் வந்தது.

குரல்:Hello! எப்படி இருக்கே?

பொதுவாகவே கழிவரைகளில் எல்லாம் நான் பேசுவதில்லை. அதுவும் இது தெரியாத குரல். ஆனாலும் அந்த குரலை என்னால் ஒதுக்க முடியவில்லை. அதனால் சிறிது தயக்கத்துடனேயே பதில் கூறினேன்.

நான்:ம்.... நல்லா இருக்கேன்.

உடனே அதற்கு அடுத்த கேள்வி வந்தது.

குரல்:வாழ்க்கை எப்படி போகுது?
நான்:பரவாயில்லை. ஏதோ போய்கிட்டு இருக்கு.
குரல்:அப்புறம், அங்கே என்ன செஞ்சுகிட்டு இருக்கே?

என்னடா கேள்வி இது? இங்கே என்ன புதையலா எடுப்பாங்க? நீ செஞ்சுகிட்டு இருக்கறத தான்டா நானும் செய்யறேன், பரதேசி!

நான்:ஹி ஹி...... சும்மா ஒக்காந்துகிட்டு இருக்கேன்.
குரல்:சரி, நான் அங்கே இப்போ வரட்டுமா?

இதற்கு மேலும் என்னால் அவனுக்கு இடம் கொடுக்க முடியவில்லை. இத்துடன் பேச்சை முடித்து கொள்ளலாம் என்றெண்ணி, பின் வருமாறு கூறினேன்.

நான்:இல்லை. எனக்கு வேறு முக்கியமான வேலை இருக்கு.
குரல் (சற்றே பதற்றமாக):ஹேய்! நான் சொல்றத கேளு. நான் உனக்கு மறுபடியும் கால் செய்யறேன். இங்கே ஒரு முட்டாள் நான் உன் கூட பேசரதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கான்.

[நன்றி : எனக்கு இதை அனுப்பிய என் நண்பன் ராஜேஷ்]

Friday, July 28, 2006

பார்பன வந்தேறிகளும்; இஸ்லாமிய தீவிரவாதமும்



விடாது கருப்பு அவர்களின் "இஸ்லாமும் தீவிரவாதமும்" என்ற பதிவிற்கு வந்த பாராட்டு பின்னூட்டங்களை பார்த்தே, இந்த பதிவை நான் எழுதுகிறேன். கருப்பு அவர்கள் நடு நிலையாளர் என்றும், துணிச்சல் மிக்கவர் என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர். பாராட்டியவர்களில் ஒரு சிலர் பிராமணர்கள். அதுதான் என்னை இது எழுத தூண்டியது. அதாவது இவர்களின் கூற்றுப்படி பிராமணனை பாப்பான் என்று சொல்பவர், இஸ்லாமியனை துலுக்கன் என்று சொன்னால் அவர் நடு நிலையாளர். என்னய்யா நியாயம் இது?

பிராமணர்களை பாப்பான் என்றும், வந்தேறிகள் என்றும் குறிப்பிட்டது அவர்களுக்கு எத்துனை வேதனை அளித்திருக்குமோ அதே போன்ற வேதனை தானே இதை படிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் ஏற்படும்?உலக மக்கள் தொகையில் இருபத்தி மூன்றரை சதவிகிதம்** இருக்கும் இஸ்லாமியர்களில் ஒரு சிலர் தீவிரவாதத்திற்கு துணை சென்றதால் அனைவரையும் தீவிரவாதி என்று பட்டம் கட்டுவது எந்த வகையில் நியாயம்?

பிராமணர்களை ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்கள் என்றும், தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும், தமிழை வெறுப்பவர்கள் என்றும் கருப்பு கூறுவதற்கு மாற்றாக பாரதி முதல் வாஞ்சிநாதன் வரை ("ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று கூறியவனை ஒரு பிராமணனாக அடையாளம் காட்ட எனக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆனாலும் வேறு வழி இல்லை ஆதலால் குறிப்பிடுகிறேன்!) எத்தனை பிராமணர்களை அடையாளம் காட்ட முடியுமோ, அதே போன்று இஸ்லாமியர்களை தீவிரவாதத்திற்கு துணை போகிறவர்கள் என்ற அவரது கருத்திற்கும் மாற்றாக காயிதே மில்லத் முதல் அப்துல் கலாம் வரை நம் நாட்டுக்காகவும் நம் நாட்டு மக்களுக்காகவும் பாடுபட்ட எத்தனையோ இஸ்லாமியர்களையும் அடையாளம் காட்ட முடியும்.


பிராமணர்களையாவது அவர் வந்தேறிகள் என்று தான் குறிப்பிட்டார். ஆனால் இஸ்லாமியர்களையோ, தீவிரவாதத்திற்கு துணை போகிறவர்கள் என்றார். அதுவும் எத்தகைய சூழ்நிலையில்? உலகமே தீவிரவாத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில். இது எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டு! இவரைப் போன்றவர்களின் கருத்துக்களால், இன்று உலகமே இஸ்லாத்தை ஏதோ அறுவருக்கத்தக்க ஒரு சித்தாந்தமாக நோக்குகின்றது.

மேலும் கருப்பு அவர்கள் தொடர்வது என்னவென்றால், "இஸ்லாமின் மீதுள்ள தீவிரவாதம் என்ற சொல் அழிக்கப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் ஐந்துவேளைக் கடமையுடன் ஆறாவதாக தங்களையும், இஸ்லாமையும் அசிங்கப்படுத்தும் தீவிரவாதிகளை பிடித்துக் கொடுப்பதை ஆறாவது கடமையாக செய்யவேண்டும்." இது மிகவும் சரி. ஆனாலும் இந்த கடமை இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த கடமை உண்டு.

"இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்." என்று திரு.ப.ஜீவானந்தம் அவர்கள் குறிப்பிட்டதையே இப்பொழுது நானும் குறிப்பிடுகிறேன் [நன்றி : தங்களது ஒரு பழைய பதிவில் பின்னூட்டம் இட்ட ஒரு அனானி]. இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்கள் அல்ல என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒரு சமுதாயத்தையே குற்றம் சாட்டுவது பல ஆண்டுகளாகவே நடந்து வரும் ஒரு விஷயம் தான். அதற்கு சரித்திரத்தின் உதவி கொண்டு நாம் சிறிது பின்னோக்கி சென்றோமானால்,


1. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமது வாழ்க்கை முறையாக மனு தர்மத்தை ஏற்றுக்கொண்ட பிராமணர்கள் இன்றும் ஜாதி வெறியர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள்.


2. ஹிட்லர் என்ற ஒரு ஃபாஸிஸ வெறியன் அரை நூற்றாண்டுக்கு முன்னர் செய்த செயலுக்காக இன்றும் ஜெர்மானியர் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.


3. ஜீவகாருண்யத்தை தங்களது வாழ்வியல் முறையாக கொண்ட புத்த பிக்குகள் கால் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் செய்த தவறுகளால் இன்றும் தவறாக பார்க்கப் படுகிறார்கள்.


இத்தகைய நிலை இஸ்லாமியர்களுக்கு அதி விரைவில் வரக்கூடும். நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் வரும் தலைமுறைகள் அவர்களை ஒரு கொடுங்கோளர்களாக பார்க்கக் கூடும். நாம் தூவிய இந்த விதை வளர்ந்து ஒரு விழ விருட்சமாக மாறப்போவதை அறியாமல் நாம் தொடர்ந்து விதைகளை தூவிக் கொண்டே இருக்கிறோம்.

** 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 6313.78 மில்லியன். அதில் இஸ்லாமியர்கள் 1565.28 மில்லியன்.

Tuesday, July 25, 2006

அழகு


பால காண்டம் --> மிதிலைக் காட்சிப் படலம் --> கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்

பாடல் 23

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள்.

பொருள்:
பொன்னின் ஒளியும், மலர்களின் நறுமனமும் சேர்ந்து பொலிவதை போன்றும்; தேனீக்கள் விரும்பி உண்ணும் தேன் போன்றும்; அழகான சொற்களால் ஆன கவிதையின் இனிமை போன்றும்; களிப்பு மிகுந்த பெண் அன்னங்களுடன் அரச அன்னம் அமர்ந்து இருப்பதை போன்றும்; கன்னி மாடத்தின் மீது சீதை தன் தோழியருடன் அமர்ந்திருந்தாள்.

பாடல் 28

அனையாள் மேனி கண்டபின், அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேற் கண்
இனையோர், உள்ளத்து இன்னலினோர்; தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே?

பொருள்:
சீதையின் திருமேனி கண்டபின் தேவலோகத்தில் அரசு புரியும் தேவர்கள் வியந்து போற்றும் மேனகையின் வேல் போன்ற விழிகள் இவளின் அழகுக்கு நாம் ஈடாக மாட்டோம் என்ற வருத்தத்தை காட்டும். அவளது முகமோ பகற்பொழுதில் மங்கி காணப்படும் நிலவைப் போன்று ஒளிகுன்றி காணப்படும்.

ஆரணிய காண்டம் --> சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் --> சீதையின் அழகை சூர்ப்பணகை விரித்துரைத்தல்

பாடல் 74

வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!



பொருள்:
சீதை, வில் போன்ற வளைந்த நெற்றியை உடையவள் என்றாலும்; வேல் போன்ற விழிகளை உடையவள் என்றாலும்; முத்துக்களை போன்ற வெண்மையான பற்களை உடையவள் என்றாலும்; பவழத்தை போன்ற சிவந்த இதழ்களை உடையவள் என்றாலும்; சொல் அழகாக இருக்குமே அல்லாது அதில் பொருள் இல்லை. "நெற்கதிரானது புற்களை போன்று இருக்கும்", என்று சொல்வதற்கு ஒப்பானதாகும் அத்தகைய உவமை.

பாடல் 75

இந்திரன் சசியைப் பெற்றான்; இரு-மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும்
செந் திருமகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும்;
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே; ஐயா!

பொருள்:
இந்திரன் சசியையும்; ஆறுமுகன் தந்தையாகிய சிவன் உமையையும்; தாமரை மேல் வீற்றிருக்கும் பெருமாள் பாற்கடல் தந்த திருமகளையும் பெற்றது போல் நீயும் சீதையை உன் துனைவியாக பெற்றால் பெருமை அவளுகல்ல ஐயா! உனக்கே தான்.

மேற் கூறிய செய்யுட்களில் தெரிவது சீதையின் அழகா?,

இல்லை தான் பார்த்தே இராத சீதையின் அழகை தனது புலமையால் வெளிக்கொணர்ந்த கம்பனின் புலமையின் அழகா?,

இல்லை கம்பன் விளையாட களம் கொடுத்த தமிழின் அழகா?

............ தெரியவில்லை.

Wednesday, July 12, 2006

ஒரு மகன், ஒரு கணவன், ஒரு சகோதரன் - ஒரு மரணப்போராட்டம்


நாள்:புதன்கிழமை, ஜூலை 12, 2006
நேரம்:மாலை 5:51
இடம்:அவசர சிகிச்சை பிரிவு, கருணா மருத்துவமனை, மும்பை

காட்சி 1 :

தேற்றவே முடியாத சோகத்தில் இருக்கும் ஒரு தாய் கைகளில் மலர்கொத்துடன் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார். விக்ராந்த் கன்வில்க்கர் அவர்களது ஒரே மகன். 18 வயதே ஆன, மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் மைக்ரோ பையாலஜி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவன். மும்பையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பினால் படுகாயமுற்று அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கிறான். அதிகாலை இரண்டு மணியிலிருந்து தனது கணவர் சதீஷுடன் அங்கேயே அமர்ந்து கொண்டு தியானம் செய்து வருகிறார். அவரது கணவர் சதீஷ் ஒரு மராத்தி பத்திரிக்கையில் ஆசிரியராக வேலை பார்ப்பவர். குண்டு வெடிப்பை பற்றிய செய்தி கேட்டவுடன் தனது மகனை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஏனெனில் விக்ராந்த் மாலை அவ்வேளையில் தான் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் விக்ராந்தை கண்டு பிடிக்க முடியவில்லை ஆகையால் அவர்களது கவலை அதிகமாயிற்று. இரவு அவர்களுக்கு வந்த இரண்டு செய்திகள் அவர்களை பீதி கொள்ள செய்தன.

1. அவர்களது இல்ல வளாகத்தில் யாரோ ஒருவர் மரணமடைந்து விட்டார். யாரென்று அடையாளம் தெரியவில்லை.

2. விக்ராந்தை குண்டு வெடித்த வண்டிகளில் ஒன்றில் பார்த்ததாக அவனது நண்பன் கூறிய செய்தி.

பீதியுடனும், கவலையுடனும் மேலும் அவர்கள் விக்ராந்தை தேடி, கடைசியில் பாக்வதி மருத்துவமனையில் அவனை கண்டு கொண்டனர். பலமான காயத்துடன், உருத்தெரியாமல் மாறி இருந்த அவனை கருணா மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளித்துக் கொண்டிருகின்றனர். அவன் முகம் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், அவனது தாயாரை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. மகனின் முகத்தை பார்த்த அவனது தந்தையோ, பித்து பிடித்த நிலையில் யாருடனும் ஒன்றுமே பேசாமல் இருக்கிறார்.

காட்சி 2 :

அவசர சிகிச்சைப் பிரிவின் வெளியே தனது கணவனின் நிலைமையை நினைத்து அழுகையுடன் அமர்ந்து இருக்கிறார் திருமதி. இந்திரா தாக்ரே. மாலை 5 மணிக்கு வண்டி ஏறுவதற்கு முன் கணவருடன் பேசியவர் இனிமேல் அவருடன் பேசவே முடியாமல் போய் விடுமோ? என்ற அச்சத்துடன் காணப்படுகிறார். அவரது கணவர் மும்பை போலீஸ் இலாகாவில் பணிபுரிபவர்.


காட்சி 3 :

கைத்தொலைப்பேசியில் பதற்றத்துடன் யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் ரமேஷின் சகோதரர் தினேஷ், குண்டு வெடிப்பில் ஒரு கையை இழந்து அவசர சிகிச்சைப் பிறிவில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். வெளியூருக்கு சென்றிருந்த தினேஷ் அதற்கு முன்தினம் தான் மும்பைக்கு வந்திருக்கிறார். தினமும் வீட்டிற்கு இரவு நேரம் கழித்து வருபவர், அன்று சீக்கிரமாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு விட்டார். கிளம்பியவர் வீட்டை சென்றடைவதற்கு முன்னரே விதியானது மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பி விட்டது.

மும்பையில் நேற்று நடந்த விதியின் கோர தாண்டவத்தில் மாட்டி சீறழிந்தவர்களில், மூன்றே மூன்று குடும்பங்களின் நிலை தான் மேலே நான் குறிப்பிட்டுள்ளது. [நன்றி : Rediff.com]

இதைப்போல் ஆயிரக்கணக்கானோர் உடல் ஊனமடைந்து, உயிரிழந்து, சொந்த, பந்தங்களை இழந்து தவிக்கிறார்கள். இதற்கு காரணம் உலகெங்கிலும் ஊடுறுவி உள்ள தீவிரவாதமே. மொழி, இனம், மதம், நாடு என்ற எதன் அடிப்படையில் தீவிரவாதம் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. ஆனால் தீவிரவாதிகளை கண்டிக்கும் நிலையில் இப்பொழுது நான் இல்லை. "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் நியாபகத்திற்கு வருவதால், அவர்களிடம் நான் வேண்டிக்கொள்வது,

"எங்களை விட்டு விடுங்கள். உங்களது கோபத்திற்கு நாங்கள் அருகதை அற்றவர்கள். உங்களது கோபத்தை சந்திக்கும் வளு எங்களது மனதிலும், உடலிலும் இல்லை."

Friday, June 30, 2006

85 என்ற தேன் கூடு

மிக்க மன பாரத்துடனேதான் இந்த பதிவை எழுதுகிறேன். சற்றே நீளமான பதிவு என்ற போதும், எழுதிய உடன் பாரம் குறைந்தது போன்ற ஒரு உணர்வு.


September 23, 2002 என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். சண்முகா பொறியியல் கல்லூரியில் B.E. (EEE) படித்து முடித்து விட்டு, Siemens நிறுவனத்தில் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த நான் Infosys நிறுவனத்தில் சேர்ந்த நாள். என்னை போன்ற மாப்பிள்ளை bench காரர்களுக்கு இது மிகை என்பதால், பெருமையும் , சந்தோஷமும் பீறிட்டுக்கொண்டு வந்தது. Infosys நிறுவனத்தில் Freshers என்று அழைக்கப்படும் புதிய கல்லூரி மாணவர்களையும், கணிணித்துறைக்கு புதியவர்களையும் சேர்த்துக்கொள்ளும் பொழுது, அவர்களுக்கு 4 மாதங்கள் பயிற்சி தருவார்கள். அத்தகைய பயிற்சி எனக்கு புவனேஷ்வரில் நடந்தது. பிறந்து 22 ஆண்டுகள் திருச்சியையும், சென்னையையும் தாண்டி அறியாதவனாகிய நான், முதல் முறையாக புவனேஷ்வருக்கு புறப்பட்டேன். ஆனால் எனக்கு அதை பற்றிய பயமோ கவலையோ ஒன்றும் இல்லை. போய் சேர்ந்த உடன் தான், "நான் வந்திருப்பது தென் இந்தியாவிற்கா?", என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால், அங்கு இருந்த 72 பேரில், 25 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், 20 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள், 5 பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள்.

புவனேஷ்வருக்கு நான் செல்வதற்கு முன்னரே எனக்கு அறிமுகமானவன் ஜெய் என்றழைக்கப்படும் ஜெயராம் மோகன்ராம். இவன் எனது கல்லூரித்தோழன். ஒரே கல்லூரி என்றாலும் இவனது பெயர் மற்றும் department தவிர எனக்கு இவனை பற்றி எதுவும் தெரியாது. ஜெய்யைப்பற்றி கூற வேண்டும் என்றால், 'The most mis-understood' என்று கூறலாம். எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைப்பவன். அதனாலேயே தவறாக புரிந்து கொள்ளப்பட்டவன். மிகவும் நல்லவன்.

புவனேஷ்வரில் இறங்கிய உடன் எனக்கு அறிமுகமானவன் ஜினி என்ற ஜினேஷ் ஆப்ரகாம் குரியன். இவன் தான் நாங்கள் தங்கி இருந்த 'The Garden Inn' என்ற hotel அறையில் எனது room mate. கேரளாவை சேர்ந்த இவன் பேசும் மழலை தமிழுக்காகவே இவனை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். முகத்தை மிகவும் serious ஆக வைத்துக்கொண்டு நக்கல் அடிப்பதில் இவன் கில்லாடி. இவனது நக்கல்களை ஒரு தொகுப்பாக தனி வலைப்பூவே போடலாம்.

அடுத்து ஜெய் மூலமாக அறிமுகமானவன் TANK என்ற திருமலை ஈச்சம்பாடி அனந்த கிருஷ்னன். இவனுக்கும் எனக்கும் ஆழ்ந்த நட்பு ஏற்பட காரணம் என்ன என்பது எங்களுக்கும் எங்கள் நட்பு வட்டாரத்திற்குமே தெரிந்த ஒரு ரகசியம். அது ரகசியமாகவே இருந்து விட்டு போகட்டுமே. இவனை பற்றி T.R. பானியில் கூறுவதானால் "டேய்! பார்த்தா இவன் ஒரு சொம்பு; ஆனா உண்மையிலே இவன் ஒரு பிம்பு (Pimp)". என்ன மோசமாக அறிமுகப்படுத்தி விட்டேனா? ஆனால் உண்மையைத்தானே கூற முடியும். BITS, Pilani யில் படிப்பை முடித்த இவன் மூலமாக நான் அறிந்து கொண்ட BITSian களை பட்டியலிட்டால் ஒரு வலைப்பூ பத்தாது. இவனிடம் எனக்கு பிடித்ததே இவன் அடுத்தவர்களிடம் எடுத்துக்கொள்ளாத அதிகபட்ச உரிமை. எவ்வளவு எடுத்துக்கொள்ளலாமோ அவ்வளவு தான் எடுத்துக்கொள்வான். உதாரணத்திற்கு ஒரு சம்பவம். இது அவனுக்கே நினைவில் இருக்குமோ தெரியாது. ஒருமுறை நான், TANK மற்றும் பின்னால் நான் அறிமுகப்படுத்தப்போகும் TRIPLE என்ற சேரன்மாதேவி சங்கரன் சுந்தர் (ஆங்கிலத்தில் மூன்று 'S' இவனது பெயர் சுருக்கம் என்பதால் இவனுக்கு 'TRIPLE S' என்று பெயர்) மூவரும் 7 டிக்ரீ குளிரில் (அது 7 டிக்ரீ என்பது அடுத்த நாள் தான் தெரியும். பிறந்தது முதல் 30 - 40 டிக்ரீ வெய்யிலில் திருச்சியிலும், சென்னையிலும் இருந்த எனக்கு அது ஒரு உறைநிலை வெட்பமாக இருந்தது) நடந்து வந்து கொண்டிருந்தோம். TRIPLE வழக்கம் போல் யாருடனோ (யாருடன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்) தொலைப்பேசியில் பேச சென்று விட்டான். கைத்தொலைப்பேசி வேகமாக பரவாத காலம் அது. ஆகையால் அவன் STD பூத்திற்கே சென்று பேச வேண்டிய கட்டாயம். அவ்வாறு அவன் போய் பேசத்தொடங்கிய உடன் தான் நினைவிற்கு வந்தது அவன் வீட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு போய் விட்டான் என்று. உடனே நான் TANKஇடம் 'டேய்! அவன்ட சாவி இருக்குடா.' என்று கூறி பூத்தை நோக்கி செல்ல தயாரானேன். அப்பொழுது TANK, 'பரவா இல்லடா wait பன்னலாம்.' என்று கூறி என்னை தடுத்து விட்டான். நானும் போக வில்லை. அவன் பேசி முடித்து விட்டு வருவதற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆனது. அவ்வளவு நேரம் அந்த உறைநிலை வெட்பத்தில் இருந்தோம். அதுதான் TANK. Decency என்றால் என்ன என்று அவனிடம் தான் நான் கற்றுக்கொண்டேன்.


அடுத்ததாக TRIPLE. இவன் TANK இன் கல்லூரித்தோழன். இவன் தன்னை பற்றியும், தன் தேவைகளை பற்றியும், அத்தேவைகளை பூர்த்தி செய்யும் வழி முறைகளையும் நன்கு அறிந்த சிலர்களுள் ஒருவன். இவன் செய்யும் ஒவ்வொறு செயலும் முழுமையாக இருக்கும். பாதி கிணறு தாண்டும் பழக்கம் துளியும் இல்லாதவன். இவனது பேசும் திறன், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றிர்காகவே பெண்களிடம் பிரபலமானவன். இவன் ஒரு 'Perfect Son' என்று கூறலாம். 24 வயதில் இவன் வாங்கிய ஒரு இரு சக்கர வாகனத்திற்கு, இந்த நிறம் தான் இருக்க வேண்டும், இந்த எண் தான் இருக்க வேண்டும், இந்த நாளில் தான் வாங்க வேண்டும் என்று அவன் பெற்றோர் கூற இவனும் அவ்வாறே வாங்கினான். ஜாதகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். தனது வாழ்க்கை வெற்றிகளுக்கெல்லாம் தனது ஜாதகப்பலன்களே காரணம் என்று நினைப்பவன். இது குறித்து எங்களுக்குள் பல சமயம் விவாதங்கள் எழுந்துள்ளன.

அடுத்து, மலை என்ற விமல் கிருஷ்ணமூர்த்தி. இவனை என்னால் வேறொரு மனிதனாக பார்க்கவே முடிய வில்லை. கண்ணாடியில் தெரியும் எனது பிம்பமாகவே இவன் எனக்கு தெரிவான். இவனுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல. இவன் திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தவன். இவன் படித்தது திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. நான் படித்தது திருச்சி இ. ரே. மேல்நிலைப்பள்ளி. இவன் மண்டல பொறியியல் கல்லூரியில் படித்தான், நான் சண்முகா பொறியியல் கல்லூரியில் படித்தேன். 'இதில் என்ன ஒற்றுமை?', என்கிறீர்களா. நாங்கள் இருவருமே வாழ்வின் பெரும் பகுதியை திருச்சியில் கழித்தவர்கள். நாங்கள் இருவருமே தமிழ் சினிமா வெறியர்கள். வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் பார்த்து விடுவோம். அதே போல் இருவருக்குமே 'Patriotic Sense' என்பது அதிகம். இந்தியா மீதான பற்றுதலை நான் கூறவில்லை. பிறந்து வளர்ந்த ஊர், படித்த பள்ளி, படித்த கல்லூரி, வேலை பார்க்கும் அலுவலகம் போன்ற எதையும் நாங்கள் இருவருமே விட்டுக்கொடுக்க மாட்டோம். இவனிடம் பல சமயம் நான் கேட்பதுண்டு, 'மலை! life லெ எதையாவது நீ பரபரப்பா செஞ்சு இருக்கியாடா?' என்று. ஏனென்றால், அவன் அப்படி ஒரு slow coach. எல்லாவற்றையும் நிதானமாகத்தான் செய்வான். 9 மணி வண்டிக்கு 8:30க்கு வீட்டிலிருந்து கிளம்புவான். வீட்டிற்கும் ரயில் நிலையத்திற்கும் உள்ள தொலைவு 12 Km. இவனது இந்த போக்கால் நாங்கள் வண்டியை miss செய்த சம்பவங்களும் நடந்தேறி உள்ளன.

கடைசியாக கபூர். இவன் பெயரை வைத்து வட இந்தியாவை சேர்ந்தவன் என்று கருதாதீர்கள். கன்னியாகுமரியை சேர்ந்தவன். பார்ப்பதற்கு தாவூத் இப்ராஹிம் போல் இருந்தாலும், உண்மையில் ஒரு வெகுளி. இவன் ஒரு complete box. நமது எந்த பிரச்சனைகளையும் இவனிடம் கொண்டு போகலாம். ஒரு அனுபவசாலி நமது இடத்திலிருந்து பார்த்து அந்த பிரச்சனைகளை ஆராய்ந்து பார்ப்பதை போன்று ஆராய்வான். உறுதியாக ஒரு நல்ல தீர்வை தருவான். மேலும் ஏன் அந்த தீர்வு என்றும் உங்களுக்கு விளக்கம் கொடுப்பான். இவனை முழுவதுமாக நம்பலாம். இவனிடம் உள்ள ஒரே தீய வழக்கம், அடுத்தவர்கள் பர்ஸை காலி ஆக்குவது. அதாவது இவனுடன் வெளியே சென்றீர்களென்றால், உங்களுக்கு சம்பந்தமே இல்லாத பொருளை மிகவும் அதிக விலை கொடுத்து வாங்க செய்து விடுவான். நான் அவ்வாறு முதலில் வாங்கியது 2500 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜாக்கெட். இரண்டாவது முறை வாங்கியது 5000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கைத்தொலைப்பேசி. அடுத்த முறை நான் விழிப்புடன் இருந்து கொண்டு விட்டேன். இவனுடன் வெளியே செல்லும் பொழுது பர்ஸை மறந்து(?) வீட்டிலேயே வைத்து விடுவேன். மற்றவர்கள் என் மூலம் பாடம் கற்றார்கள்.

இவ்வாறாக, நான், ஜினி, TANK, TRIPLE, மலை, கபூர் அறுவறும் ஒரு வீட்டில் தங்கினோம். தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்த 15 ஆண்களில், மற்ற 9 பேர் வேறு ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். ஜெய்யும் அதில் அடக்கம்.

'Training period is the honey moon period in Infosys' என்று பலர் என்னிடம் கூறினார்கள். அதிலும் கல்லூரியிலிருந்து பிரிந்து மீண்டும் அந்த வாழ்கைக்காக ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு, அது ஒரு வரமாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால், கல்லூரியை விடவும் நன்றாகவே இருந்தது. காரணம் அது ஒரு paid vacation அல்லவா? Training உம் கொடுத்து சம்பளமும் கொடுக்கிறார்களே. நாங்கள் அங்கே அடித்த கூத்து பல. கொல்கட்டா சென்றது, பூரி மற்றும் கொனார்க் சென்றது, சுந்தர்பன்ஸ் சென்றது என்று பட்டியலிடலாம். ஆனால் நான் கூறவந்தது அது அல்ல ஆகையால் அதை பின்னர் பார்ப்போம்.

ஒரு வழியாக training முடித்த எங்களுக்கு, posting வந்தது. நாங்கள் அறுவரில், ஜினி, கபூர் நீங்களாக மற்ற அனைவரும் பெங்களூருக்கே post ஆகி இருந்தோம். அவர்கள் இருவரும் சென்னைக்கு post ஆகி இருந்தனர். மற்றொரு வீட்டில் இருந்த அந்த 9 பேரில் ஜெய் உட்பட நால்வருக்கு பெங்களூர் மற்ற அனைவருக்கும் சென்னை என்று posting வந்தது. அந்த நால்வரில் குறிப்பிடத்தக்கவன் நெமி என்ற நெமிப்பிரபு நபிராஜ். அனைத்து நட்பு வட்டத்திலும் உள்ள ஒரு இளிச்சவாயனை போல் எங்களது வட்டத்தில் நெமி. எவ்வளவு நக்கல் அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பான். கொஞ்சம் கூட கோபப்பட மாட்டான். "எப்படி ஒருவனால் இவ்வளவு sportive ஆக இருக்க முடிகிறது? இவன் உண்மையாகவே இளிச்சவாயனா?", என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு. பெங்களூர் posting வாங்கிய நாங்கள் அனைவரும் ஒரு சுபயோக சுபதினத்தில் பெங்களூர் வந்து சேர்ந்தோம்.

பெங்களூர் வந்த உடன், நெமியின் அண்ணன் திருமணம் நடந்தது. அதற்கு பிறகு அவன் தன் அண்ணன் மற்றும் அண்ணியுடன் தங்கி இருந்தான். நான், மலை, ஜெய், TRIPLE, TANK ஐவரும் ஒரு வீட்டில் தங்கி இருந்தோம். அந்த வீட்டு எண் தான் 85. 85 என்பது எங்களுக்கு வெறும் முகவரியாக மட்டும் இல்லாமல் ஒரு அடையாளமாகவே ஆகி விட்டது. நெமி தங்கி இருந்த வீட்டிற்கும் எங்களது 85 வீட்டிற்கும் இரண்டு தெரு தான் தொலைவு. அதனால் அவனும் தனியாக இருப்பதாக எங்களுக்கு தோன்றவே இல்லை. ஏனென்றால் அடிக்கடி அவனது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் சென்னைக்கு சென்று விட (பாவம்!, புதுசா கல்யாணம் ஆன அவங்க வீட்டுலே போய் இவன் தங்கி இம்சை பண்ணினா), இவன் தனியாக இருக்கும் நேரங்களில் 85 யில் தான் இருப்பான்.

இப்படியாக நான், TANK, TRIPLE, ஜெய், மலை ஐவரும் பெங்களூரில் 85 வீட்டில் தங்கியிருந்த போது, ஆறாவதாக வந்து சேர்ந்து கொண்டவன் சிக்கு என்ற ராம கிருஷ்ணன். இவன் TANK கின் கல்லூரித்தோழன். இவன் எங்களுடனேயே Infosys நிறுவனத்தில் சேர்ந்து, Pune யில் training முடித்து விட்டு பெங்களூர் வந்தவன். இவனைப்பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் இவன் ஒரு அறிவு ஜீவி. எனக்கு பொதுவாக அறிவு ஜீவிகளை கண்டாலே அலர்ஜி. அதுவும் இவன் தான் அறிவு ஜீவி என்பதை உணர்ந்தவன். மேலும் intellectual plane இல் நானும் இவனும் எதிர் எதிர் துருவங்கள். இதனாலோ என்னவொ இவன் மீது எனக்கு எந்த விதமான உள்ளன்புமிக்க நட்பு எற்ப்பட்டதில்லை. இத்தனைக்கும் இவனுடன் சேர்ந்து நான் ஒரே வீட்டில் வசித்தது 1 ஆண்டு.

பெங்களூரில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வசிக்க தொடங்கி ஒரே மாதம் தான் சென்று இருக்கும், TANK கின் பெற்றோர்கள், சென்னையில் தனியாக வசிக்கும் காரணத்தினால், அவர்களையும் பெங்களூருக்கு கூட்டிக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தான். அவர்களும் பெங்களூர் வருவதற்கு ஆயத்தமானார்கள். ஆதலால், TANK கிற்கு பதிலாக வேறொருவனை தேடத்தொடங்கினோம். அப்பொழுது வந்து சேர்ந்தவன் தான் கொட்டை என்ற சத்ய நாராயணன். இவனும் ஒரு BITSian தான். கொட்டை எனக்கு நேர் எதிர். பல விஷயங்களில்.

1. நான் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை திருச்சி போவதையே பெரிய சுமையாக கருதுபவன். (பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை. சோம்பேறித்தனம் தான். அதற்கு சரியான தண்டனை நான் இப்போது அனுபவிக்கிறேன். பணி வசத்தால் அமெரிக்காவில் இருப்பதால், நினைத்தால் கூட என்னால் இப்போது அடிக்கடி திருச்சி செல்ல முடியாது.) அவனோ எல்லா வாரமும் சென்னை போய் வருபவன். கேட்டால் அக்கா, அம்மா, பாட்டி என்று ஏதாவது கதை சொல்லுவான். "பாட்டியை பார்க்க எவனாவது வாரா வாரம் சென்னை போவானா?", என்று உங்களது குறுக்கு புத்தி யோசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

2. நான் தினமும் மாலை 5 மணிக்கு முதலில் செல்லும் கம்பெனி பஸ்ஸில் முதல் ஆளாக ஒட்டுனருக்கு முன்னரே சென்று இடத்தை பிடித்துக்கொண்டு வருபவன். அவனோ இரவு 1 மணிக்கு முன்னர் வந்ததாக நினைவே இல்லை.


3. மூளை உள்ளவன். அதனாலேயே மூன்றே மாதத்தில் சென்னை Verizon னுக்கு வேலை மாற்றி சென்று விட்டான். எனக்கு......... ஹி ஹி ஹி.

அவன் வீட்டிற்கு வரும் போது கொண்டு வந்தது ஒரே ஒரு suit case. அதில் என்ன இருக்கும் என்று சத்தியமாக எனக்கு தெரியாது. அதையும் போகும் பொழுது அவன் கொண்டு சென்று விட்ட காரணத்தினால், அவனது நினைவாக வீட்டில் எதுவுமே இல்லை. அவனது ஜோக்குகளைத்தவிற. உதாரணத்திற்கு,
நான்:டேய் கொட்டை நாயே! எதுக்குடா காலங்கார்த்தால இம்சை பன்ட்ர?
அவன்:இதுக்கு தான்........

அதற்கு பிறகு ஒரு சிரிப்பு சிரிப்பானே பார்க்கனும். அது கூட பரவாயில்லை. அவனது ஜோக்கை அவனே பாராட்டி சிரித்து கொள்கிறான். ஆனால் அருகே இருக்கும் சக BITSian களும் சேர்ந்து கொண்டு சிரிப்பதை பார்க்க வேண்டுமே. சத்தியமாக அவர்களை கொன்று விடலாம் என்று தோன்றும்.
நான்:டேய் மனசுல கை வச்சு சொல்லுங்கடா, எப்படி டா உங்களாலே இந்த ஜோகுக்கெல்லாம் சிரிக்க முடியுது?
அவர்கள்:(கோரஸாக) இப்படித் தான்..........

(பிறகு முன்னதை விட பலமடங்கு பலமான ஒரு சிரிப்பு)

கொட்டை சென்னை சென்ற பல ஆண்டுகளுக்கு பிறகும் இத்தகைய உரையாடல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

கொட்டை எங்களுடன் இருக்கும் போதே, எனக்கு அறிமுகமானவன், முத்து என்ற முத்துகிருஷ்ணன் ராஜாராம். உங்கள் ஊகம் சரி. இவனும் BITSian யே. இவன் கூட ஒரு அறிவு ஜீவி என்றாலும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாகி விட்டவன். அதற்கு காரணம் தான் அறிவு ஜீவி என்பதை ஒரு நாளும் அவன் பரைசாற்றிக் கொண்டதில்லை. என்னிடம் பேசும் பொழுது, எனக்கு என்ன தெரியுமோ, என்ன விஷயம் பிடிக்குமோ அதை பற்றி மட்டுமே பேசுவான். இவன் எஙகள் வீட்டிற்கு அருகே குடி வந்தானாயினும், அதிக நேரம் 85 யிலேயே இருப்பான்.

கொட்டை சென்னை போவதற்கும், கபூர் சென்னையிலிருந்து மாற்றலாகி பெங்களூர் வருவதற்கும் சரியாக இருந்தது. பெங்களூர் வந்த கபூர் மறுபடியும் எனது house mate ஆனான். இம்முறை அவன் என்னை shares சில் invest செய்ய வைக்க பிரம்மப்பிரயர்த்தனம் செய்தான். ஆனால் என்னிடமா? நான் தான் சுதாசரித்துக்கொண்டு விட்டேனே. அதனால் என்னிடம் அவனது முயற்சி படுதோல்வி அடைந்தது.

அந்நாட்களில் கபூர் முலமாக அறிமுகமானவன் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி. இவனை போன்ற ஒரு குடிகாரனை நான் பார்த்ததே இல்லை. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் tea break எடுப்பதை பார்த்து இருப்பீர்கள். மணிக்கு ஒரு முறை சென்று cutting போட்டு விட்டு வருபவனை பற்றி தெரியுமா?. அது இவன் தான். அப்படிப்பட்ட இவனும் சபரி மலைக்கு மாலை போட்டுக்கொண்டு தண்ணி அடிக்காமல் இருந்த நாட்கள் உண்டு. எங்களுக்கே ஆச்சரியமாக இருந்த விஷயம் அது. அதை பற்றி பின்னர். கிச்சா பெங்களூர், அல்சூரில் தங்கி இருந்த போதும், அவனது அலுவலகம் எங்களது வீட்டிற்கு பக்கத்தில் இருந்த காரணத்தினால் தினமும் காலையும், மாலையும் attendence குடுத்து விடுவான். சனி மற்றும் ஞாயிற்றிக்கிழமைகளிலோ அவனும் இங்கேயே தங்கி விடுவான். 6 பேர் வாடகைக்கு இருக்கும் வீட்டில் சில சமயம் 15 பேர் கூட தங்கி இருக்கிறோம். அத்தகைய தினங்கள் எங்களுக்கு கொண்டாட்டம் , பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு திண்டாட்டம்.

அப்பொழுது எங்களுக்கெல்லாம் திடீரென்று சமைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. யோசித்து பார்க்கும் பொழுது, எனக்கு அந்த ஆசை வரக் காரணம் hygiene, hygiene என்று சதா உயிரெடுத்துக் கொண்டு இருக்கும் மலை தான் என்று இப்பொழுது தெரிகிறது. மலையின் இம்சையால் சமைக்க ஆரம்பித்தோம் நாங்கள். (சமையல் என்றால் ஒன்றும் பெரிதாக இல்லை. வீட்டிலிருந்து பருப்பு, கொத்தமல்லி போன்ற பொடிகளையும், ready made புளியோதரை பொடி போன்றவற்றையும் வைத்துக் கொண்டு, தயிர் வெளியே வாங்கி விட வேண்டியது. பிறகு சாதம் மட்டும் வைத்து விட்டு பிசைந்து சாப்பிட வேண்டியது. கூடவே முட்டை வேக வைப்பது, omelette போடுவதும் உண்டு.) இந்த பிரமாதமான சமையலுக்கு நாங்கள் செய்யும் ஆர்பாட்டம் இருக்கிறதே அதற்கு ஒரு அளவே இல்லை. சில சமயம் திருச்சியில் இருக்கும் எனது பாட்டியை நினைத்துக் கொள்வேன். 100 பேர் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு அலட்டிக்கொள்ளாமல் சமைக்கும் அவரிடம் ஒரு முறை ஊருக்கு சென்ற பொழுது எனது சமையல் சாகஸங்களை கூறினேன். உடனே அவர் "பாவம் குழந்தை (???) சமைத்து கஷ்டப்படுகிறான். உடனே அவனுக்கு கல்யாணம் செய்து விடலாம்", என்ற அருமையான யோசனையை எனது தாயாரிடம் கூறினார். அவருக்கு தெரிந்து என்ன பயன். எனது பெற்றோர்களுகல்லவா தெரிய வேண்டும்.

இவ்வாறு வாழ்க்கை போய்க்கொண்டு இருந்த போது இரண்டு விஷயங்கள் நடந்தன.

1. எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது (சத்தியமா என் பாட்டி காரணம் இல்லீங்கோ.),

2. கபூருக்கு மீண்டும் சென்னைக்கே மாற்றல் ஆனது.

எனக்கு பதிலாக கிச்சா வீட்டிற்கு வர ஏற்ப்பாடானது. கபூருக்கு பதில் நெமியின் நண்பன் கர்த்திக்கும், பிறகு அவன் கொரியா சென்றதால் , ஜெய்யின் நண்பன் முகுந்தும் பிறகு அவனும் சென்னை சென்றதால், TANK கின் நண்பனான வேறொரு கார்த்திக்கும் வந்தார்கள். நெமியின் நண்பன் கார்த்திக் மற்றும் ஜெய்யின் நண்பன் முகுந்த் இவர்களை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாததால் அவர்களை விட்டு விடுவோம். நடுவே நெமியும் வேறு வேலை கிடைத்ததால் சென்னைக்கு சென்று விட்டான். இந்நிலையில் ஜெய் US சென்றதால், மலையின் cousin தீபு என்கிற தீபக்கும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

கார்த்திக் 6 அடிக்கு சற்றே அதிகமான உயரம். எங்கள் செட்டிலேயே அவன் தான் மிகவும் உயரமானவன். சென்னையில் MCA முடித்து விட்டு, பெங்களூர் Sapient டில் வேலை செய்து கொண்டிருப்பவன். இவனது சாகஸங்கள் பல. ஆனால் உதாரணம் கூற முடியாத வகையில் அனைத்துமே censor செய்யப்பட்டு விட்டது. ஆகையால் மன்னிக்கவும்.

தீபு விவேகின் popular dialogue ஆன "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!" என்பதற்கு சரியான உதாரணம். டில்லியில் பள்ளிப்படிப்பையும், பெங்களூரில் கல்லூரிப்படிப்பையும் முடித்த ஒரு "Yo! bugger". நாங்களோ டூரிங் டாக்கீஸில் மணலை குமித்து வைத்துக் கொண்டு படம் பார்க்கும் லோக்கல் பார்டிகள். 85க்கு வருவதற்கு முன்பு தீபு, தமிழ் படங்களே அவ்வளவாக பார்த்ததில்லை. தமிழ் படப்பாடல்களை அவ்வளவாக கேட்டதில்லை. Guitar வாசிப்பவன், மேல் நாட்டு இசைக்கலைஞர்களின் பாடல்களை கேட்பவன். வந்த ஆறே மாதங்களில் Sun Music ஹேமாவின் ரசிகனாகி, Sun Music கிற்கு phone செய்து பாடல் கேட்கும் அளவிற்கு மாறி விட்டான். எங்களுக்கே கூட கொஞ்சம் வருத்தம் தான். ஒரு நல்லவனை சீரழித்து விட்டொமே என்று. ஆனால் என்ன செய்ய முடியும்? நாங்களெல்லாம் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் ரசிகர்கள். கடமையை செய்யும் பொழுது sentiments க்கு இடம் கொடுக்க மாட்டோம்.

நான் என் மனைவியுடன் வசித்த வாடகை வீடும் இவர்களது வீட்டிற்கு அருகில் என்பதாலும், நானும் மலையும் ஒரே office, ஒரே department, அருகருகே உட்கார்ந்து கொண்டு இருப்பதாலும், 85யில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு தெரிந்து கொண்டிருந்தன. நானும் அடிக்கடி அங்கே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். "கொஞ்சம் time கிடச்சா போதுமே, எப்போ பாத்தாலும் friends வீடு தான்", இது என் மனைவி அடிக்கடி சொல்லும் வாக்கியம்.

இவ்வாறாக தீபு சீரழிந்து கொண்டிருந்த வேளையில், எனது மனைவி US செல்ல ஒரு வாய்ப்பு வந்தது. அவள் சென்ற பிறகு நானும் தனியாக இருப்பது இம்சையாக இருந்ததால், எனது ஜாகையை, 85க்கு மாற்றிக்கொண்டேன். அதாவது, காலை எழுந்து குளித்து முடித்து விட்டு, அலுவலகம் கிளம்பும் போது எனது வண்டியை அவர்களது வீட்டில் வைத்து விட வேண்டியது, மாலை நேராக அவர்கள் வீட்டிற்கு வந்து, இரவு 12 மணிக்கு மேல் கிளம்பி தூங்க செல்ல வேண்டியது. சனி மற்றும் ஞாயிறுகளில் அவர்களது வீட்டிலேயே குடி இருக்க வேண்டியது. திருமணத்திற்கு பிறகு வந்த இந்த இரண்டாம் bachelor life முன்னதை விட நன்றாக இருந்தது. சுமார் 7 மாதங்கள் அவ்வாறு சென்ற போது நடந்த நிகழ்வுகள் பல. கிச்சா மாலை போட்ட சம்பவமும் இப்பொழுது தான் நடந்தது.

பொதுவாகவே சனி மற்றும் ஞாயிறுகளில் 85 இல்லம் ஒரு மாநாட்டுத்திடல் போல் இருக்கும். காரணம், எங்களுடைய அலுவலக நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், cousins என்று யாராவது வீட்டிற்கு வந்து விடுவார்கள். நங்களே பெரிய கும்பல். இதில் அவர்களும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்? நாங்கள் திரைப்படத்திற்கு போகாத வெள்ளி மற்றும் சனி இரவுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். திரைப்படத்திற்கு போகாத வேளையில், Brigade Road, M.G. Road, Forum Mall, Bangalore Central Mall, NASA/TGIF/Purple Haze/Legends Of Rock போன்ற pub கள் என்று எங்காவது சுற்றித்திரிந்து கொண்டிருப்போம். அலுவலக நாட்களிலோ வீட்டிலேயே கணிணியில் படம் பார்ப்பது, விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது, cards விளையாடுவது என்று ஏதாவது நடந்து கொண்டே இருக்கும். மாலை நேரங்களில் அலுவலகத்திலிருந்து அரைமணி நேர இடை வெளியில் ஒவ்வொருவராக வர ஆரம்பிப்பார்கள். முதலில், 5:45 மணிக்கு நான் வருவேன். வரும் போதே வீட்டிற்கு அருகே உள்ள tea கடையில் tea குடித்து விட்டு கிளம்புவேன் (tea என்றால் tea யுடன் தம்மும் என்று பொருள் கொள்க). அதற்கு பிறகு ஒவ்வொருவர் வரும் போதும் அவர்கள் tea குடிப்பதற்காக நானும் போய் tea குடிப்பேன். இவ்வாறு ஒரு 5 அல்லது 6 tea குடித்த பிறகு இரவு உணவை முடித்து விட்டு சீட்டு கச்சேரிக்கு உட்காருவோம். இரவு 12 மணி வரை நடக்கும் இந்த கச்சேரி முடிந்து நான் இரவு வீட்டிற்கு சென்று , வீட்டிலிருந்த படி எனது மனைவியுடன் சிறிது நேரம் உரையாடி விட்டு 1:30 மணிக்கு மேல் தான் படுக்க செல்வேன். சில வெள்ளி மற்றும் சனி இரவுகளில், முழு இரவும் வெட்டிக்கதை பேசிக்கொண்டு இருக்கும் சம்பவமும் நடக்கும். Sun Music ல் அட்டு figure ஹேமாவா இல்லை சந்தியாவா? போன்ற அதி முக்கியமான விஷயங்களை விவாதிக்கும் நாங்கள் சமயத்தில் சில நல்ல கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வோம். அவற்றுள் TRIPLE சொல்லும் mythological கதைகள், TANK மூன்று முறை ஜெர்மனி சென்றவன் ஆகையால், அவன் கூறும் ஜெர்மனியின் வாழ்க்கை முறை. குறிப்பாக நானும் முத்துவும் தனியே இருக்கும் பொழுது (என் மனைவி ஊருக்கு சென்ற தினத்திலிருந்து இவன் எனது வீட்டிலேயே தங்கி இருந்தான்) எங்களுக்குள் நடக்கும் உரையாடல் பொருளுடையதாகவே இருக்கும்.

இடையே கிச்சாவின் அலுவலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு அம்மாவை 85க்கும் சமைக்க ஏற்பாடு செய்தார்கள். அவர்களை பற்றி கூறியே ஆக வேண்டும். அவர்களுக்கு 3 பெண்கள். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதை வைத்துக் கொண்டு அவர்களது வயதை நீங்கள் ஊகித்து கொள்ளலாம். நாங்களோ அவர்களது வயதில் பாதி கூட நிறம்பாதவர்கள். ஆனால் கிச்சா அவர்களது அலுவலகத்தில் வேலை செய்யும் பாவத்திற்காக எங்கள் எல்லோரையும் அவர்கள், "வாங்க sir, போங்க sir" என்றே அழைப்பார்கள். அவர்கள் எங்களிடம் மாட்டிக் கொண்டு பட்ட பாடு இருக்கிறதே..... நாங்கள் ஒரு மாதத்திற்கு என்று வாங்கி வைத்த அரிசி, பருப்பு மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் ஒரே வாரத்தில் தீர்ந்து விடும். இதற்கு எங்களது பகாசுர பசி மட்டுமே காரணம் அல்ல. நான் முன்னரே கூறியது போல, 6 பேருக்கு வாங்கிய பொருளைக் கொண்டு 10 பேருக்கு சமைத்தால்?. அவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே வாங்கி வைக்கும் படி சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நாங்கள் வழக்கம் போல் மறந்து விடுவோம். அவர்களும் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் போட்டு (செருப்பு, துணி மணி நீங்கலாக) எப்படியோ சமாளித்து ஒரு வாரத்தை ஓட்டி விடுவார்கள். கடைசியில் பொறுமை இழந்து அவர்களே போய் வாங்கி வந்து விடுவார்கள். இதில் என்ன அதிசயம் என்றால், 3 ஆண்டுகளாக அங்கே வசிக்கும் எங்களுக்கு 5 ரூபாய் கூட கடனாக கொடுக்காத பக்கத்து கடைக்காரர், அவர்களுக்கு காசே வாங்காமல் நூறு, இருநூறு என்று கடனாக பொருட்கள் கொடுப்பார். பல சமயம் எங்கள் வீட்டில், அறுவருக்கு சமைத்த உணவை, 10 பேர் சாப்பிடுவதால், எதுவுமே மீந்து போகாது. ஆனால் 10 பேர் சாப்பிடுகிறார்கள் என்று அந்த அம்மாவிற்கு தெரியாது. இதனால் எங்களது சாப்பிடும் திரணை தவறாக புரிந்து கொண்டவர், நிறைய உணவு தயாரிக்க ஆரம்பித்தர். அப்பொழுது சில சமயம் சாப்பாடு மீந்து விடும். அந்நாட்களில் சீக்கிரம் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருபவர்கள் (நான் மட்டுமே வேறு யார்?) தொலைந்தார்கள்.


அவர்கள்:ஏன் sir சாப்பாடு அப்படியே இருக்கு? நல்லா இல்லையா?
நான்:அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. ரொம்ப நல்லா இருந்துது. எங்களுக்கு தான் வயிரு fullஆ இருந்துது. அதான் சாப்பிடலே.
அவர்கள்:நல்லா இல்லேன்னா சொல்லுங்க sir, right பன்னிக்கலாம். ஒங்களுக்கு புடிச்ச மாதிரி சமைக்கலாம். சொல்லுங்க sir
நான்:ஐயோ, அதெல்லாம் சத்தியமா நல்லா இருக்குங்க. நேத்திக்கு நிறைய பேர் வெளில சாப்பிட்டாங்க அதான் சாப்பிடலே. எங்க வீட்டு சமையல் மாதிரி இருக்குங்க. (அம்மா என்னை மன்னித்து விடு.)
அவர்கள்:என்ன sir, விலை வாசி விக்கர விலையில, நீங்க இப்படி சப்பாட waste செய்றீங்க. waste செய்யாதீங்க sir.

இது தினமும் நடக்கும் ஒரு உரையாடல். யாராவது லேசாக அவர் முன் இருமினாலே போதும், MBBS டாக்டர் போல் வரிசையாக வைத்தியம் செய்ய தொடங்கி விடுவார். அன்று அனைவருக்கும் சுக்கு கஷாயமும், வேப்பிலை ரசமும் தான். இருமியவன் வெளியே சாப்பிட போய் விட, இரவு 11 மணிக்கு எல்லா கடைகளும் மூடிய உடன் (பெங்களூரில் இது ஒரு இம்சை. இரவு 11 மணிக்கு மேல் கொலை நடந்தாலும் ஏன் என்று கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்) அலுவலகத்திலிருந்து களைப்புடன் வருபவர்கள், சுக்கு கஷாயத்தையும், வேப்பிலை ரசத்தையும் பார்த்தால் எப்படி இருக்கும் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

இவ்வாறு எங்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருந்த போது புதிதாக 85 வீட்டிற்கு குடி வந்தவன் விஸ்வநாதன். மலையின் நண்பன். எல்லா அயோகியத் தனங்களையும் செய்து விட்டு, சாமியார் வேடம் போட்டு ஊரை ஏமாற்றுபவன். தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சனைகளிடையே, தானே சம்பாதித்து MBA படித்தவன். இப்பொழுது CA படித்துக் கொண்டு இருப்பவன். இவனது துர்போதனையால் தான் கிச்சா மாலை போட்டுக் கொண்டு உத்தமனாக மாறினான். அந்த 45 நாட்களில், wine கடைக்காரன் நஷ்டம் தாங்காமல் தூக்கு போட்டுக் கொண்டு விட்டதாக செய்தி வருகிறதா என்று நான் தினமும் நாளிதழில் பார்த்துக் கொண்டிருப்பேன்.

யாரைப் பற்றி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் எங்கள் house owner ஐ பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர் பெயர் திரு.பிரஹல்லாதன். தஞ்சையை சேர்ந்த அவர் பெங்களூரில் settle ஆகி பல ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு இரண்டு புதல்வர்கள். ஒரு முறை கூட அவர் எங்களை அதிர்ந்து பேசியதே இல்லை. எங்கள் வீட்டு மின்சார மற்றும் குடிநீர் பில்லை அவரே கட்டி விடுவார். வீட்டில் எந்த பிரச்சனை என்றாலும் உடனே வந்து கவனித்து விடுவார். எங்கள் சத்தங்கள், இம்சைகள் எதையும் அவர் பொருட்படுத்தியதே இல்லை (அல்லது பொருட்படுத்தாதது போல் இருந்தாரோ. எனக்கு தெரியாது.). நாங்கள் அங்கே நால்வர் two wheeler வைத்திருந்தோம். எங்களது வண்டிகளை வைக்கவே அங்கே இடம் சரியாக இருக்கும். அதனால் அவர்களது வண்டிகளை road டிலேயே வைத்து விடுவார்கள். வீட்டை நாங்கள் குப்பை மேடாக வைத்திருப்போம். ஆனாலும் அவர் ஒன்றும் சொல்ல மாட்டார். இதை எல்லாவற்றையும் விடக்கொடுமை என்னவென்றால் முதன் முதலில் வந்த அந்த அறுவரே இன்னமும் அந்த வீட்டில் இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டு இருப்பது தான்.

இந்நிலையில், நானும் வேறு வேலை கிடைத்து அமெரிக்கா வர வேண்டியதாகி விட்டது. கல்லூரியை விட்டு பிரியும் போது இருந்த அதே மன நிலையுடன் தான் 85யை விட்டு நான் பிரிந்தேன். நான் சென்ற 3 மாதங்களுக்குள், மலை சென்னைக்கு MBA படிக்க சென்று விட்டான். இதோ TRIPLE லுக்கு இன்று திருமணம். அவனும் வேறு வீட்டிற்கு சென்று விடுவான். கார்த்தி அடுத்த மாதம் சென்னையில் வேறொரு அலுவலகத்தில் சேர இருக்கிறான். தீபுவும் சென்னையில் வேறொரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறான். கிச்சா பதிவு செய்திருந்த சொந்த வீட்டை இந்த ஆண்டு இறுதியில் கட்டி முடித்து விடுவார்கள் ஆகையால், அவனும் சென்று விடுவான்.

பெண்கள் திருமணத்திற்கு பிறகு பெற்றோர்கள், நண்பர்கள் , சொந்த பந்தங்கள் அனைவரையும் இழக்கிறார்கள், ஆனால் ஆண்கள் வாழ்க்கையில் ஒன்றுமே இழப்பதில்லை என்று பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளே!, யார் சொன்னார்கள் ஆண்கள் ஒன்றையும் இழப்பதில்லை என்று? காவிரிக்கரை, கொள்ளிட நீச்சல், பின் மாலை நேர மலைக்கோட்டை, இரவு நேர காவிரிப்பாலம், காயத்ரீ's (சத்தியமா இது பொண்ணு இல்லீங்க. திருச்சிலெ இருக்கும் ஒரு tea கடை.), சிதம்பர விலாஸ் பேரூந்துப் பயனம், 85 வீட்டு வாழ்க்கை, நண்பர்களுடன் PVR சினிமா ........ வாழ்க்கை போராட்டத்தில் நான் இழந்த பலவற்றுள் சில. இவற்றில் எதெல்லாம் எனக்கு திரும்பக்கிடைக்கும், எதெல்லாம் கிடைக்காது என்பதை காலம் தான் கூற வேண்டும். வாழ்க்கை அதற்கே உரிய சுவாரசியங்களுடன் போய்க்கொண்டு இருக்கின்றது. ஆனால் ஒன்று. இனி நான் இந்தியா திரும்பும் பொழுது 85 வீட்டிற்கு செல்ல முடியாது. 85யில் தங்கி பழைய நினைவுகளை அசை போடலாம் என்ற எனது எண்ணம் நிறைவேறப் போவதும் இல்லை. 85 என்ற தேன் கூடு என் கண் முன் கலைவதை கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

பின்குறிப்பு : இந்த பதிவில், என்னுடன் 85 இல்லத்தில் வசித்தவர்கள் அல்லது 85 இல்லத்திற்கு ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்கள், இவர்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அது சரி, 85க்கு துளியும் சம்பந்தமே இல்லாத ஜினியை பற்றி ஏன் குறிப்பிட்டேன்? ஜினியைத் தவிர்த்து புவனேஷ்வர் வாழ்க்கையை நினைக்க முடியாத எனது இயல்பும் ஒரு காரணமோ என்னவோ!!!

Saturday, June 24, 2006

தாதாக்கள் பிடியில் தமிழ் சினிமா

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்று கூறுவார்கள். அதில் ஒன்றான நாடகக்கலையின் பரிணாம வளர்ச்சியான சினிமாவிற்கு ஒரு தனி இடம் உண்டு. சிற்பம், சித்திரம், நடனம், இசை, கவிதை, நாடகம் போன்ற பல கலைகள் ஒன்று சேர்ந்த பெட்டகமே சினிமா எனலாம். அதிலும் குறிப்பாக இந்தியாவில், சினிமா என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி என்றே குறிப்பிடலாம். நான் பல சமயம் யோசிப்பதுண்டு, "ஏன் இந்தியாவில் மட்டும் இப்படி சினிமா நடிகர்கள் மீது ஒரு மோகம்?" என்று. பிறகு தான் அதன் காரணம் புரிந்தது. நமது சமுதாயத்தில், சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். இந்த பிரச்சனைகளில் இருந்து 3 மணி நேரம் தங்களை மறக்க செய்யும் சாதனமாகவே சினிமாவை மக்கள் பார்க்கிறார்கள். அதனால் தான் இதன் மேல் இப்படி ஒரு மோகம். அதில் தவறும் ஒன்றும் இல்லை.

இந்திய சினிமாவின் வளர்ச்சியை பார்த்தோமானால், அது பல்வேறு காலகட்டங்களை கடந்து இன்று ஒரு மிகப்பெரிய தொழிற்துறையாக உள்ளது.

இந்திய சினிமாவை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. வங்காள, மலையாள, மராத்தி திரைப்படங்கள்
2. இந்தி திரைப்படங்கள்
3. தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்கள்

இவற்றில், முதலாவதானது ஒன்றுக்கும் உதவாத கலைப்படைப்புக்களை தருவது. ஜெர்மணியிலும், உகாண்டாவிலும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பப்படுவதற்காகவே தயாராகும் படைப்புகள். மற்ற இரண்டும் தான் பொன் முட்டையிடும் வாத்துக்கள். இதில் இரண்டாவதான இந்தி திரைப்பட உலகம் தாதாக்களின் இரும்பு பிடியில் சிக்கி பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரு படத்திற்கு தேவையான பணம் தருவதில் இருந்து, நடிகர், நடிகையரை மிரட்டி கால்ஷீட் வாங்குவது, அவர்களை குறைந்த சம்பளத்தில் நடிக்க வைப்பது, படத்தை இந்த விலைக்கு தான் வாங்க வேண்டும் என்று வினியோகஸ்தர்களை மிரட்டுவது, பிறகு திரையரங்குகள் வரை இவர்களது இரும்பு பிடி நீண்டு கொண்டே போகிறது. அதனால் தான் ரஜினிக்கு 20 கோடி ரூபாயும், சிரஞ்சீவிக்கு 10 கோடி ரூபாயும், கமலஹாசனுக்கு 6 கோடி ரூபாயும், விஜய்க்கு 4 கோடி ரூபாயும் சம்பளம் தர தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள், இவர்களை விட பல மடங்கு அதிகம் வியாபாரம் செய்ய முடிந்த (தகுதியின் அடிப்படையில் நான் கூறவில்லை. நாடு முழுவதும் அவர்களது திரைப்படத்தை பார்க்கும் மக்கள் உள்ளதால் அவர்களது சந்தை பெரிது) அமீர்கானுக்கு 6 கோடியும் , ஷாருக்கானுக்கு 4 கோடியும், அமிதாப்பச்சனுக்கு 3 கோடியும் கொடுக்கிறார்கள். இங்கே இவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்வது இவர்களது ரசிகர்களோ, தயாரிப்பாளர்களோ, இவர்கள் பெற்றுத்தரும் வெற்றியோ இல்லை. மாறாக நிழல் உலக தாதாக்களே இவர்களது சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள். இந்த வாத்து இடும் பொன் முட்டைகளை எல்லாம் எடுத்து அனுபவிப்பவர்கள் அடி உலக தாதாக்கள். அதற்கு பிரதிபலனாக நடிகர் நடிகையருக்கு தாதாக்கள் சில உதவிகள் செய்வதும் உண்டு. உதாரணத்திற்கு ஒன்று இதோ. 2003ம் ஆண்டு நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை மீது குற்ற புலனாய்வு போலீசார் ஒரு குற்றச்சாட்டினை பதிவு செய்தனர். நடிகை ஷில்பா ஷெட்டி ப்ரஃபுல் என்ற சேலை நிறுவனத்திற்கு விளம்பர மாடலிங் செய்வதற்கு அந்நிறுவனத்தார் ரூபாய் 80 லகரம் தருவதாக வாக்களித்ததாகவும், ஆனால் அவ்வாறு பணம் தராமல் மோசம் செய்ததாகவும், அதனால் அவரின் தந்தை தாதாக்களை வைத்து மிரட்டி அந்த பணத்தை வசூலித்ததாகவும் அக்குற்றச்சாட்டின் முதல் தகவல் அறிக்கை கூறுகின்றது. இந்நேரம் அது, நம் நாட்டில் நீதிமன்றங்களில் கிடப்பில் போடப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளில் ஒன்றாகி இருக்கும். இவ்வாறு ஒரு சில உதவிகள் செய்வது சின்ன மீனை போட்டு பெரிய மீனை எடுக்கும் உத்தி என்பதை அனைவரும் அறிவார்கள். ஹிந்தித்திரைப்பட உலகை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு இவர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். இவர்கள் கையில் உள்ள பணம் கண்டிப்பாக தீவிரவாத / தேச விரோத செயல்களில் ஈடுபட உதவும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.

இந்த வகையில் பார்த்தோமானால் தமிழ் சினிமாவின் நிலைமை சற்றே ஆரோக்கியமானதாகவே இருக்கிறது. 90களின் இறுதி வரை இங்கே தாதாக்களின் ஆதிக்கம் இல்லை என்றே கூறலாம். ஆனால் சமீப காலமாக தமிழ் திரை உலகிலும் தாதாக்களின் பிடி வந்து விட்டது என தோன்றுகிறது. ஜெமினி பிலிம்ஸ், வாசன் க்ரூப், மாடெர்ன் தியேடர்ஸ், விஜய வாகினி போன்ற பல நிறுவனங்களும் வேறு தொழிலுக்கு சென்று விட, இப்பொழுது உள்ள தயாரிப்பாளர்கள் குறைந்த பணத்தை வைத்துக்கொண்டு படத்தை ஆரம்பித்து விட்டு பின்னர் அதை முடிக்க முடியாமல், இத்தகைய தாதாக்களிடம் பணம் பெற்று முடிக்கிறார்கள். அதற்கு இவர்களுக்கு தறப்படுவதோ பல மடங்கு வட்டி. வட்டி கட்ட தவறினாலோ சொத்து அனைத்தும் போய், உயிரே போய் விடும் நிலை. இத்தகைய தாதாக்களின் ஆட்சி பெருகியதை தொடர்ந்து தான், தயாரிப்பாளர் G.V. அவர்களின் தற்கொலை, தயாரிப்பாளர் காஜா மொஹிதீன் அவர்களின் தற்கொலை முயற்சி, நடிகர் அஜித் மிரட்டப்பட்ட விவகாரம்.

ஏதோ ஒரு மூலையில் ஒரு நடிகர் மிரட்டபட்டார் என்பதற்காக இதை நான் எழுதவில்லை. கோடிக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் கலைத்துறையில் உள்ளவர்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் தங்களது படைப்பை உருவாக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்தும், ரௌடீயிஸமும் இதில் குறுக்கிட கூடாது.

இந்த நிலையை சற்றே 'Extrapolate' செய்து பார்போம். இன்று கோடிகணக்கான ரூபாய் புழங்கும் சினிமா துறையை தங்கள் கையில் வைத்து ஆட்டிப்படைபவர்கள் நாளைக்கு வேறொரு துறைக்கு வர மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? உதாரணத்திற்கு, வங்கிகள் தனியார் மய மானதால், இவர்கள் வங்கிகளின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வங்கி இன்னாருக்கு தான் கடன் கொடுக்க வேண்டும் என்றும், இன்னாருக்கு இத்தனை வட்டி வீதம் டெபாசிட் தொகையில் பணம் தர வேண்டும் என்றும், வங்கி ஊழியர்களுக்கு இவ்வளவுதான் மாதம் சம்பளம் என்றெல்லாம் இவர்கள் நிர்ணயித்தால் எப்படி இருக்கும்? இன்று அந்த துறையை சேர்ந்தவர்கள் மட்டும் பாதிக்க படுவதால், பக்கத்து வீட்டுக்காரன் தானே கஷ்டப்படுகிறான் என்று நாம் பேசாமல் இருந்தால், நாளைக்கு நமக்கும் பாதிப்பு வரும். அப்பொழுது உதவிக்கு எவரும் வர மாட்டார்கள்.

அரசு இதை பல்வேறு சட்டங்களின் மூலம் நிறைவேற்றலாம். குறிப்பாக, ஒரு திரைப்படம் தயாராகும் போதே, தயாரிப்பாளர், படத்தின் பட்ஜெட், தனது சொத்து விவகாரம், படம் எடுக்க பணம் தந்தவர்கள் பட்டியல், வட்டி விகிதம் போன்றவற்றை அரசிடம் ஒப்படைக்க செய்யலாம். எந்த ஒரு தனி மனிதரும், இவ்வளவு தொகைக்கு மேல் பணம் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்ற சட்டம் ஏற்ப்படுத்தலாம். கந்து வட்டி தடையை முழுவதுமாக அமுலுக்கு கொண்டு வரலாம். இவற்றை எல்லாம் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இல்லாமலில்லை. ஆனால் அரசு தொலை நோக்கு பார்வையுடன் பார்த்து இவற்றை முழுவதுமாக ஒழிக்க ஆவன செய்ய வேண்டும்.

பின்குறிப்பு : சினிமா என்ற ஆங்கில சொல்லின் பொருள் திரையரங்கம் என்பதே ஆகும். ஆனாலும் சினிமா என்பது திரைப்படங்களின் மாற்றுப் பெயராக வழக்கில் வந்துவிட்டதால் அதையே நான் கையாண்டிருக்கிறேன்.

Thursday, June 22, 2006

பெரியாரை பற்றி ஜீவா


1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியாரை பற்றி தலைவர் ப.ஜீவானந்தம் அவர்கள் பேசியது:

தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன்.

பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர் ' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன.

இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.

ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.ஜாதியமுறையை விரும்பாத, ஜாதியமுறையை எதிர்க்கிற, தம்மைப் பொறுத்த முறையில் ஜாதியமுறையை ஒழித்துவிட்ட எல்லாப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்தப் பெரும்பணியை ஆற்றுவதற்கு ஜனநாயக ரீதியான சமாதானமான மனமாற்றும் முறைகள் மிகச்சிறந்த முறை என்பதையும் பலாத்காரமுறை தகுந்தமுறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதிய தீய பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக்கட்டி விடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி இந்தச் சிலரின் பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.

இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா 'காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'இந்துமதம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும் ' என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.

(சிரிப்பு)

நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.

(சிரிப்பு)

இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்.கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.

அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.

காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது. சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா?

(ஒரே சிரிப்பு)

காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா?

(சிரிப்பு)

நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம்?

(சிரிப்பு)

குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா?

(சிரிப்பு)

ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா?

(சிரிப்பு)

பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா?

எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக் கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்தப் பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரிகச் செயல்கள் அல்ல, அநாகரிகச் செயல்கள் என்கிறோம். நிதானமான செயல்கள் அல்ல, வெறித்தனமான செயல்கள் என்கிறோம்.

எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம். இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால் .. என்று வைத்துக் கொள்வோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும்.

(சிரிப்பு)

இதிலிருந்து வெட்டுப்பழி, குத்துப்பழிக்கு வழிபிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு - இந்த அநாகரிகப் போக்கு அனுமதிக்கப்படத் தக்கதுதானா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

குறிப்பிட்ட ஒரு ஜாதியை தனிமைப்படுத்தி, அநாகரிகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.

ஆகவே ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் - இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரங்கெட்ட செயலாகும்.

(நூல்: மேடையில் ஜீவா)