Thursday, December 29, 2011

ச்சும்மா விளையாட்டுக்கு

படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.








Photos © Getty Images

Tuesday, December 27, 2011

2011 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்



எப்பொழுதும் ஆண்டின் கடைசி நாளில் தான் பின்னோட்டங்களை போடுவது என் வழக்கம். இம்முறை சிறிது முன்னதாகவே.

முந்தைய பின்னோட்டங்களை காண கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்லவும்.

2010 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்

2009 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்

டாப் ஐந்து கமர்ஷியல் படங்கள்:

1. மங்காத்தா
2. வேலாயுதம்
3. கோ
4. ஏழாம் அறிவு
5. காஞ்சனா

டாப் ஐந்து வித்தியாசமான படங்கள்:

1. ஆடுகளம்
2. எங்கேயும் எப்போதும்
3. ஆரண்ய காண்டம்
4. தெய்வத் திருமகள்
5. மயக்கம் என்ன?

டாப் ஐந்து தழுவிய படங்கள்:

1. காவலன்
2. சிறுத்தை
3. ஒஸ்தி
4. முரண்
5. வானம்

டாப் ஐந்து எனக்குப் பிடித்த ஆனால் ஊத்திக் கொண்ட படங்கள்:

1. ரௌத்திரம்
2. யுத்தம் செய்
3. தூங்கா நகரம்
4. 180
5. சதுரங்கம்

டாப் ஐந்து ஏமாற்றங்கள்:

1. அவன் இவன்
2. நடுநிசி நாய்கள்
3. வெடி
4. வேங்கை
5. பயணம்

டாப் ஐந்து மொக்கை படங்கள்:

1. மாப்பிள்ளை
2. எங்கேயும் காதல்
3. யுவன் யுவதி
4. ராஜ பாட்டை
5. வந்தான் வென்றான்

இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட்கள்:

1. குள்ள நரி கூட்டம்
2. மௌனகுரு

இந்த ஆண்டின் வருத்தமளிக்கும் தோல்வி:

அழகர் சாமியின் குதிரை

எனது மனம் கவர்ந்த படம்:

எங்கேயும் எப்போதும்

Sunday, December 25, 2011

பொடிமாஸ் - 12/25/2011

இன்று சென்னை அருகில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஒரு படகு கவிழ்ந்ததில் சுமார் 22 பேர் இறந்து விட்டனர். அது ஒரு மீனவப் படகு என்றும், அதிகரப் பூர்வமான உரிமம் எதுவும் இல்லாமல் விடப்பட்டதாகவும் தெரிகிறது. லைப் வெஸ்ட் போன்ற பாதுகாப்புகள் இல்லாமல், தேவையான உரிமங்கள் இல்லாமல் விடப்படும் படகுகளில் உல்லாசத்திற்காக பயணித்தால் இப்படித்தான் நடக்கும். இறந்தவர்கள் மீது அனுதாபத்திற்கு பதிலாக கோபமே வருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு தான் உண்மையில் அனுதாபம் தேவை. இதை பார்த்தாவது சிலராவது திருந்தினால் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். பொதுவாக வெளி நாட்டிலிருந்து இந்தியா வரும் இந்தியர்கள் இது போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி கருத்து தெரிவித்தால் சீன் போடுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கு எது தெரியுமோ தெரியாதோ, மனித உயிரின் மதிப்பு அவசியம் தெரியும்.



விளையாட்டு வீரர்களுக்கும் பாரத ரத்ணா விருது வழங்க இயலும் விதமாக ஒரு சிறு விதியை மாற்றி அமைத்திருக்கிறது அரசு. பலர் இது சச்சினுக்காக செய்தது என்று கருதுகிறார்கள். எனக்கும் அப்படியே தோன்றுகிறது. ஆனால் அதில் தவறொன்றும் இல்லை. இலக்கியத்திற்காகவும், இசைக்காகவும் விருது கொடுக்கலாம் என்றால் விளையாட்டிற்காகவும் கொடுக்கலாம். என்ன?, கிரிக்கெட் அல்லது சச்சின் என்றாலே பலருக்கும் வயிற்றெரிச்சல் வந்து விடும்.



இன்று படித்த மற்றுமொரு செய்தி. இந்திய முஜாஹிதீனின் தலைவனை ஒரு கள்ள நோட்டு வழக்கில் கைது செய்து டில்லி போலீஸார் மூன்று மாதங்கள் சிறையில் வைத்திருக்கிறார்கள். பின்னர் அவன் யாரென்று தெரியாமல் அவனை விடுதலை செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவன் திட்டமிட்டு செயல்படுத்தியது தான் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு. வாழ்க நமது புலனாய்வு.



Don 2 - The King is Back அட்டகாசமாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களை விட நன்றாக இருந்தது. இம்மாதிரியான ஆங்கிலப் படங்கள் பொதுவாக ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் இரண்டரை மணி நேரத்திற்கு திரைக்கதை அமைப்பது எளிதல்ல. "The King is Back" என்பது பொதுவாக ஷாருக்கை குறித்து கூறப்பட்டாலும், எனக்கு என்னவோ ஃபர்ஹான் அக்தரை குறிப்பதாகவே தோன்றியது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படம் இயக்கி சிக்ஸர் அடித்திருக்கிறார். Welcome back Farhan.



நண்பன் டிரைலர் அட்டகாசமாக இருக்கிறது. ஓமி வைத்யா கேரக்டருக்கு சத்யன் சரியான தேர்வு. நமது எஸ். ஜே. சூர்யா எந்த பாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியவில்லை. கிளைமேக்ஸ் மாற்றி இருக்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று. நிச்சயம் விஜய் காவலன், வேலாயுதத்தை தொடர்ந்து நண்பனிலும் ஹாட்ரிக் அடிப்பார் என்றே நினைக்கிறேன்.



ராஜ பாட்டை ராஜ விட்டையாக போய்விட்டது. பீமா, கந்தசாமி என்று மரண மொக்கைகளுக்கு பிறகும் இயக்குனர் சுசீந்திரனின் முந்தைய படைப்புகளின் மீதுள்ள மரியாதையினால் நம்பி போய் இம்மாதிரி ஆப்புகள் வாங்க வேண்டி இருக்கிறது. விக்ரம் நாங்க பாவம் இல்லையா? எவ்வளவு நாள் தான் நாங்க வலிக்காத மாதிரியே நடிக்கறது?



குளிர் காலம் தொடங்கி விட்டது. குளிர் உறைநிலை வெட்பத்தில் இருக்கிறது. மாண்டியை வாக்கிங் அழைத்து செல்வது கடினமாக இருக்கிறது. இரண்டு நாட்களாக ஒரே ஜலதோழம் வேறு. கிரிஸ்துமஸ் காரணமாக நாளையும் இங்கு அலுவலகம் விடுமுறை. நாளைக்குள் குணமாகி விட்டால் நல்லது. இல்லையென்றால் கஷ்டம்.



வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wednesday, December 21, 2011

ஹிந்தி திணிப்பு பற்றி அறிஞர் அண்ணா


தேசிய மொழியாக ஹிந்தியை அங்கீகரிப்பதை பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ராஜ்ய சபையில் ஆற்றிய உரையின் சிறு பகுதி.

தமிழில்:

"இந்தியாவில் பெரும்பான்மையாக பேசப்படுவதால் ஹிந்தியை பொதுவான தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அது சரியான வாதமாகும் பட்சத்தில் நாம் ஏன் புலியை நமது தேசிய விலங்காக கருதுகிறோம்? எலி தானே தேசிய விலங்காக இருக்க வேண்டும். அது தானே எண்ணிக்கையில் அதிகம் உள்ளது. மயிலை ஏன் தேசிய பறவையாக கருதுகிறோம்? காகம் தானே எண்ணிக்கையில் அதிகம் உள்ளது."

"இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆங்கிலத்தை கற்பிப்பதால் அதையே நாம் ஏன் பொதுவான தேசிய மொழியாக கருதக் கூடாது? அதன் மூலமே ஏன் நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள கூடாது? தமிழர்கள் ஏன் வெளி நாட்டினருடன் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தையும், மற்ற மாநிலத்தினருடன் தொடர்பு கொள்ள ஹிந்தியையும் கற்க வேண்டும்? பெரிய நாய்க்கு பெரிய கதவும், சிறிய நாய்க்கு சிறிய கதவும் அவசியமா? சிறிய நாய் ஏன் பெரிய கதவினை உபயோகிக்க கூடாது?"

ஆங்கிலத்தில்:

"It is claimed that Hindi should be common language because it is spoken by the majority. Why should we then claim the tiger as our national animal instead of the rat which is so much more numerous? Or the peacock as our national bird when the crow is ubiquitous?"

"Since every school in India teaches English, why can't it be our link language? Why do Tamils have to study English for communication with the world and Hindi for communications within India? Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!"

Monday, December 19, 2011

பொடிமாஸ் - 12/19/2011

சசிகலா கோஷ்டியினர் ஒட்டு மொத்தமாக அதிமுகவிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளனர். அம்மா எந்த சூழ்நிலையில் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. பலரும் பலவற்றை யூகிக்கிறார்கள். இனி சசிகலா கோஷ்டியினர் மீது நில அபகரிப்பு புகார்கள் எழும். கைதும் நடக்கலாம். இதிலெல்லாம் நேரத்தை செலவிடாமல் இனியாவது மக்களுக்கு நல்லது செய்வதில் முதல்வர் நேரத்தை செலவிட்டால் அவருக்கும் நல்லது, அவரது கட்சிக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது. செய்வாரா?



ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகளை செய்யும் டார்ச்சர் தாங்க முடியவில்லை. பேசவே முடியாத குழந்தைகளிடம் மைக்கை கொடுத்து பாடு பாடு என்று இம்சை செய்வதுடன் இதில் ராகம் நொள்ளை, தாலம் நொட்டை என்று டவுசரை கழட்டுகிறார்கள், பார்ப்பவர்களுக்கும் சேர்த்து. இதனிடையில் யாரேனும் வெளியேற்றப்பட்டால் ஒப்பாரி வேறு. குழந்தைகள் மனதில் சுய பச்சாதாபத்தை விதைக்கிறார்கள். இவர்கள் மீதெல்லாம் குழந்தைகள் வன்முறை சட்டம் பாய்ந்து கடித்து துப்ப வேண்டும். அப்பொழுது தான் புத்தி வரும்.



அஜித் - விஜய் யார் படம் பெஸ்ட்? என்றொரு தொடர் விளையாட்டு தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. நம்மையெல்லாம் யார் ஆட்டைக்கு அழைக்கப் போகிறார்கள். பந்தக் கால பார்த்தாலே பந்திக்கு போகும் ஆள் நான். கூப்பிட்டால் தான் ஆட்டையில் சேரனுமா என்ன? இதோ அஜித் மற்றும் விஜய் படங்களில் எனது தேர்வு.

அஜித்: முகவரி, இதன் ஒரிஜினல் கிளைமேக்ஸுடன். அம்சமான படம். அருமையான கதை களம். நல்ல நடிகர்கள் தேர்வு. வாழ்க்கையில் எப்பொழுது எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை அருமையாக சொல்லி இருப்பார் இயக்குனர்.

விஜய்: லவ் டுடே. இதன் முடிவிலும் ஒரு சோகம் இருந்தாலும், படத்தினை பார்த்த அனைத்து இளைஞர்களையும் தனக்கும் இப்படி ஒரு அப்பா, இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் கிடைக்காதா என்று ஏங்க வைத்த படம். "புக்க டிக்கில வச்சா டிகிரி எங்கடி வாங்கறது?", "பொண்ணுங்க படிப்ப ஃபாலோ பன்றாங்க; நம்ம பசங்க அவங்க இடுப்பு மடிப்ப ஃபாலோ பன்றாங்க", "வாந்தியோட சேர்ந்து வசந்தியும் வெளிய வந்துட்டா" போன்ற வசனங்கள் எவர்கிரீன்.



இந்த மாதம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கும் இசைஞானியின் கான்சர்ட் டீசர்கள் ஜெயா டிவியில் வந்து கொண்டிருக்கின்றன. ஆவலை தூண்டுகிறது. நேரலை ஒளிபரப்பு செய்வார்களா என்று தெரியவில்லை. அதன் பேரில் "இசைஞானியின் இனிய பத்து" என்ற தலைப்பில் அவரின் பத்து பாடல்களை பட்டியலிட்டு அனுப்பி வைக்கும்படி கேட்டிருக்கிறார்கள். ராஜாவின் பாடல்களில் பத்தே பத்து பாடல்களை தேர்வு செய்வது நடக்கும் காரியமா? வைரத்தில் எந்த வைரம் உயர்ந்தது? எந்த வைரம் தாழ்ந்தது? எல்லாமே வைரங்கள் தான். எல்லாமே பொக்கிஷங்கள் தான். இருந்தாலும் எனது பத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

1. இளைய நிலா
2. பனிவிழும் மலர்வனம்
3. அந்தி மழை பொழிகிறது
4. என்ன சத்தம் இந்த நேரம்
5. இது ஒரு பொன்மாலை பொழுது
6. ராக்கம்மா கைய தட்டு
7. தூங்காத விழிகள் ரெண்டு
8. ஓ வஸந்த ராஜா
9. ராஜ ராஜ சோழன் நான்
10. பூ மாலையே தோள் சேர வா



சரி ராஜாவின் பாடல் நினைவுகள் தந்த போதையில் ரெஹ்மானையும் கொஞ்சம் கவனித்து பதிவினை முடிப்போம். கீழே உள்ள பாடலின் ஆர்கெஸ்ட்ரேஷனை கொஞ்சம் கேளுங்கள். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த படத்தில் செய்தது என்றால் நம்ப முடிகிறதா? சென்ற வாரம் வெளிவந்த பாடல் போல அவ்வளவு ஃபிரெஷ் ஆக இருக்கிறது. எனது வருத்தமே இது போன்ற முயற்சிக்கு கொடுக்காமல் ஜெய் ஹோ போன்ற மொக்கைக்கு ஆஸ்கார் கொடுத்தது தான்.


Friday, December 16, 2011

ஜீமெயில் சொதப்புகிறது ஜாக்கிரதை



பதிவினை படிப்பவர்கள் அவசியம் பின்னூட்டங்களையும் படியுங்கள். அதில் பந்து, மதுவதணன் மற்றும் டாக்டர் புரூணோ மூவரும் இச்செயல்பாட்டை விளக்கி இருக்கிறார்கள். இது ஜீமெயிலின் குறைபாடு அல்ல என்றும் அது ஒரு வசதி என்றும் தெரிகிறது.

நண்பர்களே,

நீங்கள் ஜீமெயில் உபயோகிக்கிறீர்களா? உங்களது முகவரியில் புள்ளி (Dot) இருக்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஜீமெயில் முகவரியில் உள்ள புள்ளியை அங்கீகரிப்பதில்லை.

உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், எனது மின்னஞ்சல் முகவரி sathya.priyan@gmail.com என்று வைத்துக் கொள்வோம். வேறு யாரோ ஒருவரின் முகவரி sathyapriyan@gmail.com என்று வைத்துக் கொள்வோம், எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களும் sathyapriyan@gmail.com முகவரிக்கும் அனுப்பப்படும். புள்ளி மின்னஞ்சலில் எங்கு எவ்வளவு இருந்தாலும் இதே செயல்பாடுதான். sath.ya.pri.yan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களும் sathyapriyan@gmail.com முகவரிக்கும் அனுப்பப்படும்.

ஆனால் இதை கூகுள் அதிகாரப் பூர்வமாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதனை கூகுள் அங்கீகரித்து சரி செய்யும் வரை உங்கள் மின்னஞ்சலில் உள்ள புள்ளியை நீக்கி விடுங்கள். அது இயலாதென்றால் முக்கியமான வங்கி கோப்புகள், டீமேட் வர்த்தகங்கள் போன்றவற்றை யாஹூ, லைவ், ஹாட்மெயில் போன்ற வேறு வழங்கிகளுக்கு மாற்றி விடுங்கள்.

கூகுளை போன்ற நிறுவனம் இது போன்றதொரு அடிப்படை விஷயத்தில் சொதப்புவது கேவலமாக இருக்கிறது.

இவன்,
சத்யப்ரியன்

Friday, December 09, 2011

இதெல்லாம் ஒரு பிழைப்பு, த்தூ!



நேற்று கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று திடீரென்று தீப்பிடித்தது. (தீ என்ன தபால் முலம் சொல்லி விட்டா வரும்?). தீ பிடித்த உடன் நோயாளிகளை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற மருத்துவமனை ஊழியர்களும் நோயாளிகளை பற்றிய கவலை இல்லாமல் வெளியே ஓடி இருக்கிறார்கள். நோயாளிகளில் நடக்க முடியாதவர்கள் பலர் புகையினால் சூழப்பட்டு சுவாசிக்க முடியாமல் இறந்து விட்டார்கள். பொதுமக்களும், தீயணைப்பு படை வீரர்களும் சேர்ந்து தான் பல நோயாளிகளை மீட்டிருக்கிறார்கள். தற்பொழுது கிடைத்த செய்தியின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 89.

மருத்துவமனையின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்ப்பற்றக்கூடிய பொருட்களால் இது நடந்திருக்கலாம் அன்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். வழக்கம் போலவே எல்லா தனியார் மற்றும் அரசு வளாகங்கள் போலவும் இதிலும் போதுமான அவசர கால வசதிகள் இல்லை. அரசு இயந்திரம் வழக்கம் போலவே எல்லாம் நடந்து முடிந்த உடன் மருத்துவமனை நிர்வாகிகளை கைது செய்திருக்கிறது. மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறது.

மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற மருத்துவமனை ஊழியர்களும் செய்ததை பார்க்கும் பொழுது "மனிதம் செத்துவிட்ட ஒரு சமூகத்தில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?" என்று கேட்க விழைந்தாலும் பொதுமக்களின் சேவையை பார்க்கும் பொழுது மனிதம் இன்னும் பல இடங்களில் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது, செத்து விடவில்லை என்று தெரிகிறது. அதை தட்டி எழுப்ப இம்மாதிரி விபத்துக்கள் தேவை இல்லாமல் அதாகவே எழுந்து நின்று சோம்பல் முறித்தால் சமூகத்திற்கு நல்லது.

இறந்த ஆத்மாக்களுக்கு எனது அஞ்சலிகள்.

Thursday, December 08, 2011

மீண்டும் ஒரு 200!

வாழ்த்துக்கள் சேவாக் ஜீ.



Photos © Associated Press


முந்தைய இருநூறை காண இங்கு செல்லவும்.

Monday, December 05, 2011

பொடிமாஸ் - 12/05/2011

சென்ற வாரம் ஜெர்மனியில் சுமார் 1.8 டன் எடையுள்ள ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது மண்ணில் புதைந்து இருந்தது. இரண்டாம் உலகப் போரின் எச்சங்களில் இதுவும் ஒன்று. ஒரு நகரத்தையே அழிக்கும் சக்தி வாய்ந்தது அது என்று கூறுகிறார்கள். ப்ரிட்டிஷ் காரர்கள் விமானத்தில் இருந்து வீசி இருக்கலாம் என்று கருதுகிறார்கள். நல்ல வேளையாக அது செயலிழக்க செய்யப்பட்டது. உயிர் சேதம் ஒன்றும் இல்லை. வரலாறு ஹிட்லரையும் முஸோலினியையும் மட்டுமே கொடுங்கோலர்களாக காட்டுகிறது. சர்ச்சிலும், ருஸ்வோல்ட்டும், ஸ்டாலினும் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதையே இம்மாதிரி குண்டுகள் எடுத்துக் காட்டுகின்றன.



இரண்டாம் உலகப் போர் என்றதும் நினைவிற்கு வருகிறது, இரண்டாம் உலகப் போரினை பற்றிய ஒரு தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்று நெடு நாட்களாக ஆசை. நேரம் கிடைக்க வில்லை. விரைவில் எழுத வேண்டும்.



சென்ற வார இறுதியில் ஒஸ்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பார்த்தேன். ரெக்கார்டட் பாடல்களுக்கு லிப் சிங்க் செய்கிறார்கள். அதையே ஒழுங்காக செய்து தொலைத்தால் என்ன? ஏதோ டப்பிங் படம் பார்ப்பது போல இருந்தது. பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கிறது. இதனிடையே டி.ஆர். அவர்களின் அலம்பல் வேறு. தாங்க முடியவில்லை. இதுவரை சிம்பு நடித்துள்ள படங்களில் கோவில், தொட்டி ஜெயா, மன்மதன், VTV தவிர்த்து வேறு எந்த படத்தையும் பார்க்க சகிக்காது. இதற்கே இந்த அலம்பல் என்றால் இவர் பெரிய வெற்றியெல்லாம் அடைந்து விட்டால் நம்மவர்களின் கதி?



"வாங்க சினிமாவை பத்தி பேசலாம்" நிகழ்ச்சி முதல் வாரத்தில் சுவாரஸ்யமாகவே தொடங்கியது. பிரபு சாலமன், சத்யா (எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர்) மற்றும் ராதா மோகன் மூவரும் பாக்யராஜுடன் உரையாடினார்கள். இரண்டாம் வாரம் நடந்த வித்தகன் படத்தின் விமர்சனத்தை பற்றிய விமர்சனம் எதுவும் எனக்கு இல்லை. ஏனென்றால் நான் படத்தை பார்க்க வில்லை. ஆனால் மயக்கம் என்ன விமர்சனம் படு சொதப்பலாக இருந்தது. படத்தினை "காமெடி" என்ற ஒரே அளவு கோலை கொண்டு அளந்தார் பாக்யராஜ். அவரே நிகழ்ச்சி முழுதும் பேசிக் கொண்டு இருந்தார். செல்வராகவனையும், தனுஷையும் பேசவே விடவில்லை. சுவாரஸ்யமே இல்லாமல் இருந்தது. மனித உணர்வுகளின் பிறழ்வுகளை காட்சிப்படுத்திய இப்படத்திற்கு இம்மாதிரியான மொக்கை விமர்சனங்கள் உச்ச கட்ட அவமானம்.



அதே நேரத்தில் சன் டிவியின் "குழந்தை பராமரிப்பு" நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு. அதில் கலந்துரையாட ஒரு குழந்தை மருத்துவர் மற்றும் ஒரு செலிப்ரிட்டி கப்பிள். நன்றாக நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். குறிப்பாக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.



சமீப காலமாக ஏதோ கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் எல்லாம் மடையர்கள் போலவும் அது இல்லாதவர்கள் எல்லாம் அதி புத்திசாலிகள் போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப் படுகிறது. ஏதேனும் விவாதம் என்று வந்தால் உடனே விஞ்ஞானம் அனைத்தையும் சந்தேகத்தின் அடிப்படையில் அனுகி நிரூபிக்க வேண்டுகிறது, ஆனால் ஆன்மீகம் அனைத்தையும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறது என்று உளறுகிறார்கள். ஐன்ஸ்டீனின் தியரி ஆஃப் ரிலேடிவிடிக்கு நிரூபணம் கிடையாது. பிதகோரஸ் தியரத்திற்கு நிரூபணம் கிடையாது. அவ்வளவு ஏன்? நம்மவர் ஆர்யபட்டா கண்டு பிடித்த வட்டத்தின் சுற்றளவிற்கு நிரூபணம் கிடையாது. விஞ்ஞானமும் அறிவியலும் பல நேரங்களில் நம்பிக்கையின் அடிப்படையில் பல விஷயங்களை ஏற்றுக் கொள்கின்றன. அய்யா அதி புத்திசாலிகளே! ஆன்மீகம் என்பது கலவியை போன்றது. அதில் ஈடு படாதவர்களால் அதன் இன்பத்தை உணர முடியாது. அதில் ஈடு பட்டவர்களால் அதன் இன்பத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.



சரி, பதிவை எதற்காக ஸீரியஸாக முடிக்க வேண்டும்? மகிழ்ச்சியாக முடிக்கலாம். மகிழ்ச்சி என்றால் சந்தோஷம். சந்தோஷம் என்றால் ஜாலி. ஜாலி என்றால் காமெடி. காமெடி என்றால் வேறு யார்? தலைவர் கவுண்டர் தான். கவுண்டரின் பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா.......... எஞ்ஜாய்



Saturday, December 03, 2011

அஞ்சலி!!!


Friday, December 02, 2011

PIT புகைப்பட போட்டி - டிசம்பர் 2011

பல நாட்களுக்கு பின்னர் மீண்டும் PIT புகைப்பட போட்டிக்காக புகைப்படங்களை நேற்று எடுத்தேன். சரியாக சொன்னால் சுமார் மூன்றாண்டுகளுக்கு பின். அப்பொழுது நான் எடுத்த படம் டாப் 10 ல் தேர்வானது. ஆனால் பரிசு கிடைக்கவில்லை.

இப்பொழுது ஒரு படம் தான் அனுப்ப முடியும். எந்த படத்தை அனுப்புவது என்று தெரியவில்லை.

ஒரு வேளை அனுப்பாமலே கூட இருக்கலாம். படம் எடுப்பது தான் முக்கியம், போட்டியில் பங்கேற்பதோ இல்லை ஜெயிப்பதோ அல்ல.

படங்களை பற்றிய விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்.

படம் 1:

Pairs

படம் 2:

Pairs

படம் 3:

Pairs

Thursday, December 01, 2011

அமெரிக்காவில் ஆந்திர கம்யூனிஸ்டுகள்

சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அது ஒரு பூஜை. நண்பர் ஆந்திராவை சேர்ந்தவர். இங்கு அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் நம்மவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. விழா தட புடலாக நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது திடீர் என்று ஒரு பரபரப்பு. ஒரு நபர் விழாவிற்கு வந்தார். அவருக்கு ஒரு ஐம்பது அல்லது அறுபது வயது இருக்கும். உடனே பலரும் ஓடி சென்று அவரை அழைத்து வந்து அமர வைத்தார்கள். அதன் பிறகு விழா முடியும் வரை அவரை சுற்றி ஒரு பத்து பேர் இருந்து கொண்டே இருந்தார்கள். எனக்கு அவர் யாரோ பெரிய மனிதர் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை.

எனதருகில் இருந்த வேறு ஒரு நண்பரிடம் அவர் யார் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆந்திராவின் கம்யூனிஸ்டு கட்சியின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்று அவரது பெயரை குறிப்பிட்டார். அவரது மகன் மற்றும் மகள் இருவரும் இங்கே அமெரிக்காவில் வசிப்பதாகவும், அவர்களை பார்க்க வருடத்திற்கு ஒரு முறை இங்கே அவர் வருவதாகவும், விழாவை நடத்தும் நண்பர் அவருக்கு உறவு என்றும் குறிப்பிட்டார்.

எனக்கு முதலில் வியப்பாக இருந்தது. அவர் மீது மரியாதை அதிகம் வந்தது. தனக்கு இருக்கும் கம்யூனிஸ்டு கொள்கையை தனது பிள்ளைகளிடம் திணிக்காமல் இருக்கிறாரே என்று. எனது வியப்பையும் மரியாதையையும் அந்த நண்பரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் லேசாக சிரித்தார். அதில் ஒரு நக்கல் தெரிந்தது. அதற்கான காரணம் என்ன என்று வினவினேன். அவர் அங்கு அப்பொழுது பலரும் இருப்பதால் அடுத்த நாள் அலுவலகத்தில் சொல்வதாக சொன்னார்.

அடுத்த நாள் அவர் அலுவலகத்தில் சொன்ன செய்திகள் எனக்கு பெரும் வியப்பளித்தது. அதன் சுருக்கம் கீழே.

ஆந்திராவில் உள்ள கம்யூனிஸ்டுகள் பெரும்பாலானோர் தங்கள் மக்கள் அமெரிக்காவில் இருப்பதையே விரும்புகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் பல ஆண்டுகள் இருந்தாலும், அவர்கள் பச்சை அட்டை தான் வாங்குகிறார்களே தவிர அமெரிக்க குடியுறிமை வாங்குவது இல்லை. ஏனென்றால் அவர்களில் பலருக்கும் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்களை விட விவசாய நிலங்கள் அதிகம். வெளிநாட்டு குடியுறிமை பெற்றவர்கள் விவசாய நிலங்களை வைத்துக் கொள்ள பல சட்ட சிக்கல்கள் இருப்பதாலும், பின் காலத்தில் இந்தியாவிற்கு வந்து கட்சியிலும், அரசியலிலும் பங்கு வகிக்க சிக்கல்கள் வந்து விடக் கூடாதென்றும் அவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். இதற்கே வாய் பிளந்த நான் கடைசியாக அவர் சொன்னதை கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். முந்தைய நாள் விழாவிற்கு வந்த நமது கம்யூனிஸ்ட் தலைவர் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஒரு காரை ஜெர்மனியிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்திருக்கிறார் என்பது தான் அது.

இவர்களுடன் நான் தமிழகத்தின் கம்யூனிஸ்ட் தலைவர்களான நல்லகண்ணு, சங்கரையா, தா. பாண்டியன், ராமகிருஷ்ணன் போன்றவர்களை ஒப்பிட்டேன். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நல்லகண்ணு அவர்கள் கட்சி தொண்டர்கள் பல நாட்கள் தொடர்ந்து திரட்டி அளித்த சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்க மறுத்து அதை கட்சிக்கே திருப்பி அளித்தார்.

நல்லா இருங்கடே! என்று தான் சொல்ல தோன்றியது.

Tuesday, November 29, 2011

பொடிமாஸ் - 11/29/2011

கொலவெறி பாடல் ஹிட்டானதில் யாருக்கு நன்மையோ இல்லையோ மருந்து விற்பனையாளர்களுக்கு நன்மையே. பலருக்கு ஜெலூஸில் தேவை படுகிறது. சமீபத்திய சேர்க்கை எழுத்தாளர் ஞாநி. பாடல் வெளியான 15 நாட்களுக்குள் ஒரு கோடி முறைக்கும் மேல் இணையத்தில் பார்க்கப்பட்டு இருக்கிறது. போகிற போக்கில் அதெல்லாம் பொய், இவர்களே செட் அப் செய்தது என்று சேற்றை வாரி இறைத்து விட்டு போயிருக்கிறார். மக்களை கவரும் கலை படைப்பே உன்னதமான படைப்பு. இக்கால ரசிகர்களுக்கு இது தான் பிடித்திருக்கிறது. இதை கூட புரிந்து கொள்ளாமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். ஒப்பாரி வைப்பவர்கள் வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள், ஈற்றடி முச்சீர் ஏனையடிகள் நாற்சீர் கொண்டு ஒரு வெண்பா எழுதி, இசையமைத்து இணையத்தில் வெளியிடுங்களேன், இதற்கு போட்டியாக. யார் வேண்டாம் என்று உங்களை தடுத்தது? நன்றாக இருந்தால் அதையும் கொண்டாடிவிட்டு போகிறோம்.



சச்சினின் நூறாவது நூறு கடைசியில் இந்த தொடரில் நடக்கவில்லை. எனக்கு அதை பற்றிய பெரிய எதிர் பார்ப்புகள் ஒன்றும் இல்லை. நடக்கும் பொழுது அது நடக்கும். ஆனால் ரோஜர் ஃபெடரர் அமைதியாக தனது நூறை செயல்படுத்தி முடித்து விட்டார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தனது நூறாவது இறுதி ஆட்டத்தை ஆடி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். வாழ்த்துக்கள் ஃபெடரர்.



சென்ற வாரம் தேங்க்ஸ் கிவிங் நல்ல படியாக சென்றது. நெடு நாட்களுக்கு பின்னர் நான்கு நாட்கள் விடுமுறை. நல்ல ஓய்வு. வியாழக் கிழமை அன்று முழு வான் கோழியை சுட்டு வயிறு புடைக்க சாப்பிட்டேன். சமைத்தது எனது மனைவியின் சகோதரியின் கணவர். நாவில் சுவை இன்னும் அப்படியே இருக்கிறது. முழு வான் கோழியை வெட்டுவதற்கு முன்பு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. அதனால் என்ன? அடுத்த முறை எடுத்து விட்டால் போகிறது.



அடுத்தது விக்ரமின் ராஜபாட்டைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். சரியான மசாலா வேட்டையாக இருக்கும் என்று நம்புகிறேன். பீமாவை இப்படி நம்பி சென்று தான் ஆப்பு வாங்கினேன். சுசீந்திரன் மீது நம்பிக்கை இருக்கிறது. அவரின் நான் மஹான் அல்ல எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒஸ்தி, வேட்டை யெல்லாம் எனது லிஸ்டிலேயே இல்லை. பார்ப்பேனா என்று தெரியவில்லை. விமர்சனங்களை படித்துவிட்டு முடிவெடுக்கலாம் என்று இருக்கிறேன்.



225,000. நம்பரை பார்த்துவிட்டு ஏதோ ஒரு புதிய ஊழல் என்று நினைத்து விடாதீர்கள். நாங்கள் அமெரிக்கா வந்த இந்த ஆறு வருடங்களில் எங்களின் கார்களில் பயணம் செய்த தொலைவின் கிலோமீட்டர் எண்ணிக்கை தான் இது. எவ்வளவு லிட்டர் பெட்ரோலை குடித்திருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது பெருமூச்சு வருகிறது. நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து அமெரிக்க தலை நகரான வாஷிங்டன் டிசி 36 மைல் தொலைவு. மெட்ரோ ரயில் தடம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு போக்குவரத்து தொடங்கும் என்று தெரிகிறது. அதன் பின்னராவது காரை வீட்டிலேயே வைத்து விட்டு இளைய நிலா கேட்டுக்கொண்டோ, ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் படித்துக்கொண்டோ, இல்லை தூங்கிக்கொண்டோ பயணம் செய்யலாம்.



சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்றிருந்த பொழுது ஒரு ஸ்லோகத்தை கண்டேன். மனதில் சட்டென்று வந்து பதிந்து விட்டது.

சத்யம் ப்ருயாத்; ப்ரியம் ப்ருயாத்;
மத் ப்ருயாத் சத்யம் அப்ரியம்;
ப்ரியம்ச நா அன்ருதம் ப்ருயாத்;
ஈஷா தர்ம சனாதனா

உண்மையை பேசுங்கள்; இனிமையாக பேசுங்கள்;
உண்மையாக இருந்தாலும் கடுமையான சொற்களை பேசாதீர்கள்;
இனிமையாக இருந்தாலும் பொய் பேசாதீர்கள்;
இதுவே இறைவனடியை அடையும் வழி



தமிழ் சினிமாவின் இரு சகாப்தங்கள் நடித்த காட்சி. கூர்மையான வசனங்கள். ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ், வசன உச்சரிப்பு, ஸ்டைல் மற்றும் ஆளுமை அபாரம். கமல் சிறிது அன்டர் ப்ளே செய்திருப்பார். காட்சியை பார்த்துவிட்டு கமல் நாயகன்; ரஜினி வில்லன் என்று நினைத்து விடாதீர்கள். படத்திலேயே அருவருப்பான பாத்திரம் கமலுடையது. நான் கமலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது இம்மாதிரி பாத்திரங்களில் விசனமில்லாமல் நடித்ததற்காகத்தான்.

Monday, November 28, 2011

மயக்கம் என்ன?


படம் கார்த்திக் சுவாமினாதனின் (தனுஷ்) வாய் மொழியிலேயே தொடங்குகிறது. கார்த்திக் ஒரு புகைப்பட கலைஞன். வன விலங்கியல் புகைப்பட கலையில் பெரிய நிபுணனாக வர வேண்டும் என்பது அவனது லட்சியம். அதற்காக அத்துறையில் வல்லுனராக உள்ள மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் உதவியாளராக சேர முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் இயலவில்லை. வாழ்வாதாரத்திற்காக வீட்டு விசேஷங்களையும், இரண்டாம் நிலை நடிகர்/நடிகைகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நான்கு நண்பர்கள். ஒரு தங்கை. அவர்கள் தான் இவனுக்கு எல்லாம். தனது பெற்றோர்களின் இறப்பிற்கு பின்னர் அவனையும் அவனது தங்கையையும் வளர்த்தவர்கள் அவனது நண்பர்கள் தான். குடியும் கும்மாளமுமாக அவரகள் பொழுதை கழிக்கிறார்கள்.

அப்பொழுது அந்த நண்பர்களுள் ஒருவனின் காதலியாக அறிமுகமாகிறாள் யாமினி (ரிச்சா). முதல் சந்திப்பிலேயே இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு. அதை ஊதி பெரிதாக விடாமல் இருவரும் அடக்கப் பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் இருவருக்குள்ளும் காதல் வந்து விடுகிறது. நண்பர்களுக்கும் அது தெரிய வர சில பல க்ளீஷேக்களுக்கு பின்னர் அவனது நண்பன் விட்டுக் கொடுக்க திருமணத்தில் முடிகிறது.

இதனிடையே தான் உயிரை கொடுத்து, ஒரு நாள் முழுதும் வனத்தில் இருந்து, எடுத்த ஒரு பறவையின் புகைப்படத்தை "ஆய்" என்று சொல்லி தூக்கி வீசிய மாதேஷ் கிருஷ்ணசாமி அதையே தான் எடுத்ததாக கூறி நேஷனல் ஜியோகிரஃபி இதழுக்கு அனுப்பி பாராட்டும் பின்னர் அதற்கு தேசிய விருதும் பெற்று விடுகிறார். இதனால் மனமுடைந்த கார்த்திக் மாடியில் இருந்து விழுந்து விடுகிறான். விழுந்த அதிர்ச்சியினாலும், ஏமாற்றத்தினாலும் அவனுக்கு மனச்சிதைவு நோய் வருகிறது.

அது வேர்விட்டு வளர்ந்து விருட்சமாகி அவனை குடிகாரனாகவும், முரடனாகவும், தனது மனைவியிடம் தனது வக்கிரத்தை காட்டுபவனாகவும் மாற்றி விடுகிறது. யாமினி அதை பல வருடங்கள் பொறுத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் உடைகிறாள். கார்த்திக் அதிலிருந்து எப்படி வெளிவந்தான்? யாமினியின் காதலை புரிந்து கொண்டானா? மாதேஷின் நிலை என்னவானது? என்பதை வெள்ளித் திரையில் கண்டு மகிழுங்கள்.

முதலில் படத்தில் பாராட்டப் பட வேண்டியவர் ராம்ஜி. என்ன கேமெரா? படம் முழுதும் பிக்சர் பெர்ஃபெக்ட் ஷாட்கள். வன விலங்கு காட்சிகள் அட்டகாசம். அதிலும் இடைவேளைக்கு முந்தைய காட்சியினை அவர் படமாகிய விதம் அருமையிலும் அருமை. சமீபத்தில் இவ்வளவு க்ளோஸ் அப் ஷாட்களை கொண்ட படத்தினை நான் பார்த்ததாக நினைவு இல்லை.

அடுத்தது தனுஷ். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை படமெங்கிலும் தனுஷ், தனுஷ், தனுஷ் மட்டுமே. கார்த்திக்காகவே வாழ்ந்திருக்கிறார். அவரது டயலாக் மாடுலேஷனும், பார்வையும், உடலசைவும் சென்ற ஆண்டின் தேசிய விருதிற்கு சரியான தேர்வு அவர் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது. நடிகர் தனுஷ் மட்டும் இல்லை, பாடலாசிரியர், பாடகர் தனுஷும் அட்டகாசம். "ஓட ஓட" மற்றும் "காதல் என் காதல்" பாடல்களை நன்றாக பாடியுள்ளார். அதிலும் "கனவிருக்கு கலரே இல்ல, படம் பாக்கறேன் கதையே இல்ல, உடம்பிருக்கு உயிரே இல்ல, உறவிருக்கு பெயரே இல்ல" வரிகள் அம்சம்.

அடுத்தது ரிச்சா. முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. பின்னர் தான் தெரிந்தது அவர் தெலுங்கில் இரண்டு படங்கள் செய்திருக்கிறார் என்று. செல்வராகவனின் முந்தைய நாயகிகள் போலவே மெல்லிய சோகம் ததும்பும் கண்கள். இடைவேளைக்கு முந்தைய காட்சியாகட்டும், கருச்சிதைவு ஏற்பட்ட உடன் அதன் வலியை வெளிப்படுத்தும் காட்சியாகட்டும், தன்னிடம் தவறாக நடந்து கொள்ளும் நண்பனிடம் பேசும் காட்சியாகட்டும் அருமையாக நடித்துள்ளார். செல்வாவின் டச் தெரிகிறது. அவருக்கு தீபா வெங்கட்டின் குரல் அபார பொருத்தம். ஆனாலும் எனக்கு ஏனோ படத்தில் அவரை பார்க்கும் பொழுது சொனியா அகர்வால் நினைவிற்கு வந்து தொலைக்கிறார்.

அடுத்தது G. V. ப்ரகாஷ். படத்தில் வசனத்திற்கு ஈடு கொடுத்து பேசுகிறது இவரது பின்னணி இசை. நிச்சயம் மயக்கம் என்ன? G. V. ப்ரகாஷின் உச்சம். இது வரை அவர் அப்படி ஒரு இசையை கொடுத்தது இல்லை. குறிப்பாக கார்த்திக், சுந்தர் மற்றும் யாமினி மூவரும் நடனம் ஆடும் காட்சியில் இவரது இசை அபாரம். அதுவும் பின்பாதியில் பல இடங்களில் காட்சிகளை தூக்கி நிறுத்துவது இவரது இசை தான்.

இறுதியாக செல்வா. செல்வாவை பற்றி புதிதாக சொல்ல எதுவும் இல்லை. இது வரை அவர் அளித்த படங்களில் அவரது மாஸ்டர் பீஸ் 7G. படத்தின் முதல் பாதியில் அதை சற்று தாண்ட முயற்சி செய்திருக்கிறார். படத்தின் மிகப் பெரிய பலம் அவரது வசனங்கள். கூர்மையாகவும் அழுத்தமாகவும் மனதில் பதிகிறது. "மனசுக்கு பிடிச்ச வேலை செய்யனும். இல்லேன்னா செத்துடனும்.", "உன் முன்னாடி அழுதுருக்க கூடாது. ஆம்பிள்ள இல்லையா?", "உன் பொண்டாட்டிய அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட தேடாத" போன்ற வசனங்களுக்கு இடையே "முண்டக்களப்ப" போன்ற இளைஞர்களுக்கான ஆஸ்தான வசங்களும் உள்ளன.

சரி படத்தில் குறைகள் என்ன என்று பார்த்தால் முதல் மட்டும் ஒரே குட்டு செல்வாவிற்கு தான். பெரிதாக அழுத்தம் இல்லாத கதை. காதலும், காதல் சார்ந்த உறவுகளும் தான் செல்வாவின் ஃபோர்டே. படத்தின் முதல் பாதியில் அதை களமாக எடுத்துக் கொண்டவர் பின் பாதியில் அதை களமாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டார். காதலையே களமாக எடுத்துக் கொண்டு தனுஷின் கேரியரை படத்தின் பின் புலத்தில் மெல்லிய இழையாக சொல்லி இருந்தால் படம் டாப் க்ளாஸ் ஆகி இருக்கும். தவற விட்டு விட்டார். முதல் பாதியில் ராக்கெட் போல சீறிக் கொண்டு கிளம்பும் திரைக்கதை இரண்டாம் பாதி தொடங்கி முதல் 15 நிமிடங்களுக்குள் புஸ்வானமாகி விடுகிறது. சில காட்சிகள் மிகவும் நீளம். கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் நமக்கும் "ஓட ஓட ஓட படம் முடியல" என்று பாட தோன்றுகிறது.

அதே போல கார்த்திக் தனது மனச்சிதைவிலிருந்து மீண்டு வருவதற்கான காரணங்களும் வலுவாக இல்லை. தனது மனைவியின் கர்பத்தையே அறியாதவன், கருச்சிதைவினால் மீண்டு வருகிறான் என்பது நம்ப முடியாமல் இருக்கிறது.

கிளைமேக்ஸ் காட்சிகளும் படு சொதப்பல். கார்த்திக் தன் முயற்சியால் வெற்றி பெற்றதாக காமிக்காமல், அதிர்ஷ்டத்தினால் வெற்றி பெற்றது போல காமிக்கிறார்கள். இம்மாதிரி துறைகளில் வெற்றி பெற அதிர்ஷ்டம் ஓரளவிற்கு முக்கியம் என்றாலும் அதை செல்வா தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து.

அறை எண் 302 ல் கடவுள் படத்தில் கடவுள் பேசுவதாக ஒரு வசனம் வரும். "ஒரு படகில் அமர்ந்து நடுக்கடலுக்கு சென்றிருக்கிறீர்களா?, ஆளே இல்லாத மலை உச்சிக்கு சென்றிருக்கிறீர்களா?, அடர்ந்த வனத்தில் கால் கடுக்க நடந்திருக்கிறீர்களா?" என்றெல்லாம் கேட்பார். நிச்சயமாக அந்த வரிசையில் "'மயக்கம் என்ன?' படம் பார்த்திருக்கிறீர்களா?" என்றும் கேட்டிருக்கலாம் ஒரு வேளை செல்வா படத்தின் முன்பாதியை போலவே பின் பாதியையும் எடுத்திருந்தால்.

Wednesday, November 23, 2011

Why this கொலவெறிடி?

அது 2003 ஆம் ஆண்டு. காதல் கொண்டேன் பார்த்து விட்டு இருபது வயதே ஆன தனுஷின் நடிப்பை பார்த்து வியந்தேன். தனுஷ் யாரென்று சட்டென்று தெரியாத நிலையில், துள்ளுவதோ இளமையின் மஹேஷ் தான் இவர் என்று புரிந்தது. அடுத்து வந்தது திருடா திருடி. திருச்சியில் எடுத்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே ஏழு முறை ஒரே வார இடைவெளியில் பார்த்தேன்.

அடுத்தடுத்து அவர் கொடுத்த மொக்கைகளால் இவர் ஒரு டம்மி பீஸ் என்று கருதிய பொழுது அவரது திருமண அறிவிப்பு வந்தது. அடடா! சூப்பர் ஸ்டார் மாப்பிள்ளை ஒரு சப்பை ஸ்டாரா? என்று நினைத்தேன். அதன் பிறகு கூட தொடர்ந்து மொக்கை படங்களையே கொடுத்து வந்தார். பாலு மஹேந்திராவின் "அது ஒரு கணா காலம்" மற்றும் செல்வராகவனின் "புதுப்பேட்டை" ஆகிய படங்கள் கூட இவருக்கு கமர்ஷியலாக கை கொடுக்க வில்லை. ஆனால் இவரின் நடிப்பு திறமை மட்டும் தெளிவாக தெரிந்தது.

பின்னர் வந்தது திருவிளையாடல் ஆரம்பம். கமர்ஷியல் சரவெடி. பின்னர் பொல்லாதவன். அட்டகாசமான படம். குறிப்பாக திரைக்கதை அட்டகாசம். அதன் பின்னர் இவருக்கு ஏறுமுகம் தான். சென்ற ஆண்டு ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்று விட்டார். மிகக் குறைந்த வயதில் இதை பெற்ற நடிகர் இவரே.

இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது இவர் ஒரு இயக்குனரின் நாயகன் என்பதே. இவரை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் மறுமுறை இவரையே வைத்து இயக்க யோசித்தது இல்லை. அது செல்வராகவனாக இருக்கட்டும், மித்ரன் ஜவஹராக இருக்கட்டும், சுப்ரமணியம் சிவாவாக இருக்கட்டும், பூபதி பாண்டியனாக இருக்கட்டும், வெற்றி மாறனாக இருக்கட்டும் அனைவரும் இவரை வைத்து இரு படங்களாவது இயக்கி இருக்கிறார்கள்.

இப்பொழுது மயக்கம் என்ன படத்தில் பாடல்கள் எழுதுவதுடன், பாடவும் செய்கிறார். இந்த நேரத்தில் இவர் முதலில் பாடிய "நாட்டு சரக்கு" பாடல் படு திராபை என்பதை பதிவு செய்கிறேன்.



இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தை மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒரு புயல் தாக்கிக் கொண்டிருக்கிறது. அது "Why this கொலவெறிடி?" புயல். பாடல் அட்டகாசமாக இருக்கிறது. பாடல் வரிகளை பற்றிய விமர்சனமெல்லாம் எனக்கு இல்லை. இவர்கள் என்ன தொல்காப்பியமா படைக்கிறார்கள்? பாடல் கேட்டால் பிடிக்க வேண்டும். மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்க வேண்டும். சில நேரங்களில் போதை ஏற்ற வேண்டும். மார்கழி குளிரில், பின்னிரவில், பகார்டியை லெமன் ஜூஸ் கலந்து நாலு ரவுண்டு அடித்து விட்டு, வென்னிலா ஃப்ளேவர்டு சுருட்டை பற்ற வைத்து இழுத்தால் ஒரு போதை வருமே, அப்படி ஒரு போதை இதில் வருகிறது.

நன்றி தனுஷ். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

Friday, November 18, 2011

பொடிமாஸ் - 11/19/2011

பெட்ரோல் விலை ஏறியது ஏறியது என்று கூவி ஒரு வழியாக நேற்று தான் இறங்கியது. இப்பொழுது பேரூந்து கட்டணமும், பால் விலையும் ஏறி விட்டது. மின்சாரமும் உயரும் என்று சொல்கிறார்கள். விலைவாசி உயர்வை ஒரு நிலைக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அரசு தேவை இல்லாமல் அளிக்கும் மானியங்களை தவிர்த்தாலே போதுமானது. சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சமையல் எரிவாயு நானூறு ரூபாய்க்கு அளிக்கப் படுகிறது. மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவனுக்கு எதற்கு இந்த மானியம்? ஒரு லேத்து பட்டறை வைத்திருபவனுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தின் தொடக்க விலை ஐந்து ரூபாய். மூன்று கோடி ரூபாய் அபார்ட்மென்டில் பத்து டன் ஏசியை நாள் முழுதும் ஓடவிடும் ஒருவனுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தின் தொடக்க விலை ஒரு ரூபாய் பத்து காசுகள். இந்த முட்டாள் தனத்தை நிறுத்துவதை விட்டு விட்டு ஏழைகள் உபயோகிக்கும் பாலிலும், பேரூந்திலும் கை வைக்கிறார்கள். கேட்க நாதி இல்லை.



நவம்பர் 22 ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இந்தியா - மேற்கு இந்திய அணிகளுக்கிடையே நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் தனது நூறாவது சதத்தை அடித்தால் அவருக்கு நூறு தங்க காசுகள் அளிப்பதாக மும்பை கிரிக்கெட் வாரிய தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் அறிவித்துள்ளார். முன்னரே வங்காள கிரிக்கெட் வாரியமும் கொல்கத்தாவில் கடந்த வாரம் நடந்த போட்டியில் சச்சின் தனது நூறாவது சதத்தை அடித்தால் அவருக்கு நூறு தங்க காசுகள் அளிப்பதாக அறிவித்திருந்தது. மாநில கிரிக்கெட் வாரியம் தனியார் வாரியமா இல்லை அரசு வாரியமா என்று தெரியவில்லை. தனியார் வாரியமாக இருந்தால் இதில் தவறொன்றுமிலை. அரசு வாரியமாக இருந்தால் நமது மக்களை உம்மாச்சி தான் காப்பாற்ற வேண்டும்.



சமீப காலமாக விஜய் டிவியில் வரும் கணா காணும் காலங்கள் - கல்லூரியின் கதை தொடரை விரும்பி பார்த்து வருகிறேன். கல்லூரி நாட்களுக்கு மீண்டும் சென்றது போலவே இருக்கிறது. பாத்திரங்களுக்கு பொருந்துவது போல சரியான நடிகர்/நடிகை களை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் என்ன வழக்கம் போல திடீர் திடீர் என்று சிலர் காணாமல் போய் விடுகிறார்கள். தொடர் தொடங்கும் முன்னரே நடிப்பவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறது இந்தியாவில்.



இந்த வோல்க்ஸ்வேகன் கார்களில் அப்படி என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அமெரிக்க பெண்கள் அனைவரும் ஒன்று வோல்க்ஸ்வேகன் ஜெட்டா வைத்திருக்கிறார்கள் இல்லை வோல்க்ஸ்வேகன் பீட்டில் வைத்திருக்கிறார்கள். எனக்கென்னவோ அது சரியான மொக்கை காராகவே தோன்றுகிறது. ஜெர்மன் கார்களில் படு மொக்கையானது வோல்க்ஸ்வேகன் தான். உரிமையாளர்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள். இது எனது கருத்து.



வெர்ஸடாலிட்டி என்றால் கவிஞர் வாலி தான். "நான் ஆணை இட்டால்", "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்" எழுதிய கைகள் தான் "முக்காலா முக்காபுலா", "ஓ மாரியா", "காதல் வெப்சைட் ஒன்று" போன்ற பாடல்களை எழுதின என்றால் நம்ப முடிகிறதா? இதனை போன்ற பாடல்களுக்கு நடுவே "வைகாசி நிலவே" போன்ற பாடல்களை அவரால் மட்டுமே கொடுக்க முடியும். பொதுவாக ஒரு கால கட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்த தலைமுறையினரால் ரசிக்கப்படுவது கடினம். பாலசந்தர், பாரதி ராஜா போன்றவர்கள் அதற்கு சிறந்த உதாரணம். அவ்வளவு ஏன்? நமது ராஜாவை எடுத்துக் கொள்ளுங்கள். நான் கரடியாக கத்தினாலும் எனக்கு தெரிந்த இன்றைய கல்லூரி மாணவர்கள் ரெஹ்மான் ரெஹ்மான் என்று தான் கூவுகிறார்கள். ராஜாவின் இசை கேட்டால் தூக்கம் தான் வருகிறது என்கிறார்கள். ஆனால் வாலி அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.



ஹம் ஆப்கே ஹைன் கௌன் படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. படம் பார்த்து விட்டு எனது அண்ணிக்கு ஒரு தங்கை இல்லையே என்று வருந்தி இருக்கிறேன். பல முறை பார்த்து இருக்கிறேன். எவ்வளவு முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவது மாதுரியின் அழகா? படத்தின் கதையா?, திரைக்கதையா?, வசனங்களா?, SPB குரலில் ஒலிக்கும் அருமையான பாடல்களா? தெரியவில்லை. கீழே உள்ள காட்சியை பாருங்கள். சல்மான் மாதுரியிடம் தன் காதலை சொல்லாமல் சொல்லும் காட்சி. உங்களுக்கும் பிடிக்கும்.


Wednesday, November 16, 2011

புழுவும், சிரங்கும், இலக்கியவாதியும் பின்னே நானும்

சமீபத்தில் விமலாதித்த மாமல்லன் அவர்கள் எழுதிய இந்த நக்கல் பதிவை படிக்க நேர்ந்தது. இந்த எழுத்தாளர்களுக்கே இதுதான் பிரச்சனை. தங்கள் தலையில் தாங்களே கிரீடத்தை வைத்துக் கொள்கிறார்கள். கிரீடத்தினால் தலையில் புண், சொறி, சிரங்கு எது வந்தாலும் கவலை படுவதில்லை. அந்த சிரங்குகளை சொறிந்து விடுபவர்களுக்கு தான் அவர்கள் தங்களது நட்புவட்டம், வாசகர் சதுரம் என்று எல்லாவற்றிலும் இடம் கொடுக்கிறார்கள். முகம் சுளிப்பவர்களுக்கு இருக்கவே இருக்கின்றன இம்மாதிரி நக்கல் பதிவுகள்.

ஒரு டம்மி பீஸ் என்னிடம் வந்து தான் கணிப்பொறியில் பெரிய தில்லாலங்கடியாக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் எனக்கு இம்மியும் கோபம் வரப்போவதில்லை. உண்மையாக சொன்னால் எனக்கு அதனால் மகிழ்ச்சியே அதிகம் ஏற்படும். என்னையும் மதித்து கேள்வி கேட்கிறானே என்று. இவர்களுக்கு மட்டும் ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? "அனைவரும் இணையத்திலேயே ஓசியில் படித்துவிட்டால் தொழில் முறை எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்கிறார். நியாயம் தான். சுமார் நூறு திரை விமர்சனப் பதிவுகள் வந்தால் ஒரு புத்தக விமர்சனப் பதிவு வருகிறது. இது தான் இவர்களது உண்மையான கவலையா? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று தெரியவில்லை.

இல்லை இலக்கியம் படைப்பதும் பொட்டி தட்டுவதும் ஒன்றில்லை என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் உங்களுக்கு வருணாஸ்ரமத்தின் மூலத்தினை நினைவுபடுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. வசதியாக பார்பனர்களையும், வருணாஸ்ரமத்தினையும் திட்டிக் கொண்டே இலக்கியம் படைப்பது உயர்ந்தது பொட்டி தட்டுவது தாழ்ந்தது என்று கூறிக் கொண்டிருக்கலாம். அதனை பொட்டி தட்டுபவர்கள் உருவாக்கிய இணையத்தில் வெட்கமே இல்லாமல் எழுதவும் செய்யலாம்.

"எழுத முயற்சிக்கையில், புதியவர்களில் நன்றாக எழுதுபவர்களைவிட மொக்கையாய் எழுதுபவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு நாம் அவ்வளவு மோசமில்லை என்று தேற்றிக்கொள்வது, உற்சாகம் அளிக்கவல்ல நல்ல உத்தி." இது பகடியே அல்ல. பகடி என்று நினைத்துக் கொண்டு ஒரு நல்ல கருத்தையே உளறி இருக்கிறார். எனக்கு மேலே உள்ள ஆயிரம் பேரை கண்டு பெருமூச்சு விடுவதையோ அல்லது பொறாமை படுவதையோ விட எனக்கு கீழே உள்ள நூறு பேரை நினைத்து மகிழ்வது சிறந்ததே. இல்லை, இது பகடி தான் என்று நினைப்பவர்கள் கீழே Alan Kay சொல்லி இருப்பதை படியுங்கள்.

Anybody in his right mind should have an inferiority complex every time he looks at a flower. - Alan Kay

அடுத்தது அதை விட மொக்கை. "தேடித்திரிந்துத் தெருவில நிற்பதுதான் தீவிர எழுத்து. தெருவில் நின்றதை உண்மையாக எழுதினால் இலக்கியமாகலாம்." எதற்கு தெருவில் நிற்க வேண்டும்? நின்றபின், எதற்கு இலக்கியம் படைக்க வேண்டும்? ஒரு பள்ளி ஆசிரியர் மாதம் 50 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில் மாதம் 1500 ரூபாய் சம்பளம் தந்த கல்கத்தா கார்பரேஷன் தலைவர் பதவியை தூக்கி வீசி விட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று, வெள்ளையனால் நாடு கடத்தப் பட்டு, பிறந்து இரண்டு வயதே ஆன தனது மகளை நாட்டின் சுதந்திரத்திற்காக வெளிநாட்டில் விட்டு விட்டு மீண்டும் இங்கு வந்து போராடி உயிர் விட்ட நேதாஜி அவர்களுக்கு இந்தியா அளித்த பரிசு 1992 ஆம் ஆண்டு அளித்த பாரதரத்ணா விருது. MGR அவர்களுக்கு பாரதரத்ணா அளிக்கப்பட்டது 1988 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி அவர்களுக்கு பாரதரத்ணா அளிக்கப்பட்டது 1991 ஆம் ஆண்டு, நேதாஜிக்கு பாரதரத்ணா அளிக்கப்பட்டது 1992 ஆம் ஆண்டு. இதுதான் இன்றைய இந்தியாவின் யதார்த்த நிலை. இங்கே வாழும் பொழுதே வாழ்ந்து விட வேண்டும் இறந்தபின் புதைக்க நிலம் கூட கிடைக்காது. இப்படி இருக்கும் ஊரில் தெருவில் நிற்க வேண்டுமாம், இலக்கியம் படைக்க வேண்டுமாம்.

இவரை போன்ற இலக்கியவாதிகள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சிரங்குகளின் வாழும் புழுக்கள் தான் சிரங்குகளை பார்த்து அருவருப்பு கொள்வதில்லை. ஏனென்றால் சிரங்குகள் தான் அவைகள் வாழும் இல்லம். அவைகள் பிறப்பதும், உண்பதும், உறங்குவதும், புணர்வதும், இறப்பதும் அந்த சிரங்குகளில் தான். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சிரங்குகள் அருவருப்பாகத்தான் இருக்கும்.

Tuesday, November 15, 2011

பொடிமாஸ் - 11/15/2011

சச்சின் இந்திய கிரிக்கெட் டீமில் சேர்ந்து விளையாட தொடங்கி நேற்றுடன் இருபத்தி இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. அவர் முதலில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட தொடங்கிய பொழுது தற்பொழுது அவருடன் விளையாடும் சுரேஷ் ரெய்னாவிற்கு மூன்று வயது, விராத் கோலிக்கு ஒரு வயது, நம்ம ஊர் அஷ்வினுக்கு மூன்று வயது. அவர்களுடன் இன்றும் விளையாடுகிறார் என்றால் அதற்கு அவரது திறமையும், விடா முயற்சியுமே காரணம். அவர் மீது பல விமர்சனங்கள் கூறப்பட்டாலும் எனக்கு அவர் என்றுமே மாஸ்டர் தான். "Take a bow master!"



டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. PF ஊழல் தொடர்பாக வெளிவந்த ஒரு செய்தியில் தவறுதலாக நீதிபதி P.B.சவந்த் அவர்களை சுமார் பதினைந்து நொடிகள் காட்டியது டைம்ஸ் தொலைக்காட்சி. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி மன்னிப்பு கேட்க கோரி ஒரு கடிதத்தை அனுப்பினார். அதனை உதாசீனப்படுத்திய தொலைக்காட்சி மன்னிப்பு கேட்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் பூனா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அந்த தொலைக்காட்சிக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. அதனையே இப்பொழுது உச்ச நீதி மன்றமும் அளித்துள்ளது. இது பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்தால் மகிழ்ச்சி.



கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸின் நிலைமை கவலை அளிக்கிறது. சென்ற முறை இந்தியா சென்ற பொழுது சென்னையிலிருந்து மும்பை மற்றும் சென்னையிலிருந்து பெங்களூர் மற்றும் சென்னையிலிருந்து திருச்சி என்று ஐந்து முறை இதில் பயணம் செய்தோம். ஜெட் ஏர்வேஸ் அளவிற்கு இல்லாவிட்டாலும் உபசரிப்பு மற்றும் பராமரிப்பு இரண்டுமே நன்றாக இருந்தன. விரைவில் கடனிலிருந்து மீண்டு வர வாழ்த்துக்கள்.



வர வர இந்த நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளில் பேசுபவர்களின் அலம்பல் தாங்க முடியவில்லை. ஒரு பெண் மறுக்கிறேன் என்பதற்கு ஆமோதிக்கிறேன் என்கிறார். ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஒரு வானொலி அறிவிப்பாளர் ஒருவருக்கு "துடுப்பு" என்ற வார்த்தைக்கு பொருள் தெரியவில்லை. சரி தமிழுக்கு தான் இந்த கதி என்றால் ஆங்கிலம் பேசுபவர்களும் ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக பேசுகிறார்கள். ஒருவர் பயங்கர ஸ்டைலாக அமெரிக்க உச்சரிப்பில் "between three of us" என்கிறார். மற்றொருவர் "My wife and me went there" என்கிறார். காது கொடுத்து கேட்க முடியவில்லை. தமிழும் தெரியாத, ஆங்கிலமும் தெரியாத ஒரு சமூகத்தை தான் இந்த நூற்றாண்டில் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இதில் கொடுமை ஆங்கிலம் தவறாக பேசும் பொழுது வருவது வெட்கம். தமிழை தவறாக பேசும் பொழுது வருவது பெருமை.



உங்களில் பலர் ஸ்டீஃபென் கோவே எழுதிய சக்தி வாய்ந்தவர்களின் ஏழு பழக்கங்கள் (7 Habits of Highly Effective People) என்ற நூலை படித்திருப்பீர்கள். அவர் அந்த புத்தகம் படிக்கும் அனைவரையும் ஒரு கேள்வி கேட்கிறார். உங்கள் மரணத்திற்கு பின்னர் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அதனை யோசித்து அப்படி ஒரு வாழ்க்கை வாழ சொல்கிறார். சில நாட்களாகவே நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். வாழ முடியுமா என்று பார்க்க வேண்டும்.



நடிகர் விஜயின் படங்கள் முன் பின் இருந்தாலும் அவரது பட பாடல்களுக்கு நான் பெரிய விசிறி. இப்பொழுதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் யூத், ஷாஜஹான் போன்ற மொக்கை படங்களை கூட பாடல்களுக்காகவே பார்ப்பேன். எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல் தவிர்த்து வேறு யாரும் விஜய் அளவிற்கு ஹிட் பாடல்கள் கொடுத்ததில்லை என்றே நினைக்கிறேன். யூத் படத்தில் "சகியே! சகியே!" பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் இது தான் எனது ஃபேவரைட். பார்த்து கேட்டு மகிழுங்கள்.



Friday, November 11, 2011

Monty

வாழ்வில் சில நேரங்களில் நாம் சிறிதும் விரும்பாமல் நம்மிடம் வரும் சில உறவுகள் நம்மை அப்படியே ஆட்கொண்டு விடுகின்றன. நான் கடந்த இரு ஆண்டுகளாக அதனை உணர்ந்து வருகிறேன். திருமணம் முடிந்து சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக என் மனைவி என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு நாய் குட்டி.

சிறு வயதில் இருந்தே எனது மனைவிக்கு நாய் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் எனக்கோ நாய் என்றாலே அலர்ஜி. சிறு வயதில் என் வீட்டின் எதிர் வீட்டில் இருந்தவர்கள் ரெக்ஸி என்றொரு நாய் வளர்த்தார்கள். கன்று உயரத்தில் இருக்கும் அதனை பார்த்தாலே எனக்கு சிறுநீர் வந்து விடும்.

ஒரு கட்டத்தில் இனி இதனை தள்ளி போடுவது இயலாத செயலாக தோன்றவே, தங்கமணி திருமண சட்டத்தின் படி நாய் வாங்க ஒப்புக் கொண்டேன். அதன் பிறகே என்ன நாய் என்ற கேள்வி வந்தது. எனது மனைவிக்கு ஜெர்மன் ஷெப்பர்டு அல்லது லாப்ரடார் வகை நாய்களே அதிகம் பிடித்தது. எனக்கோ அவைகளை கண்டால் ஜன்னி வந்து விடுகிறது. சரி மீண்டும் தொலைகிறது என்று நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சுமார் 100 மைல் தொலைவில் ரிச்மண்ட் என்ற ஒரு இடத்தில் இருந்த ஒரு ப்ரீடரிடம் சென்று ஒரு லாப்ரடார் குட்டியை பார்த்தோம். கருப்பு நிறத்தில் இரண்டு மாதங்களே ஆன அழகான ஒரு குட்டி. அதனை பார்த்ததும் எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன், சிறிது நடுக்கத்துடன். சிறிது நேரம் கழித்து அந்த குட்டியின் தந்தையை பார்க்கும் ஆசையை எனது மனைவி வெளியிட வந்தான் Goose.

கருப்பு சிங்கம் போல் இருந்தான். அவனின் வயது ஒன்று. சரி நமது குட்டி இவன் உயரம் வளர எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்க அவர்கள் இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் அவன் வளர்ந்து விடுவான் என்று கூற எடுத்தேன் ஓட்டம். வீட்டிற்கு வந்து தான் நின்றேன்.

அதன் பிறகு எனது மனைவியுடன் பேசி குட்டியாகவே இருக்கும் நாய்கள் என்றால் எனக்கு பயமில்லை என்று உதார் விட்டேன். சத்தியமாக எனக்கு அப்பொழுது தெரியாது, பிறந்தது முதல் இறக்கும் வரை குட்டியாகவே இருக்கும் நாய்கள் பல உண்டு என்று.

உடனே என் மனைவி பல வகை நாய்களை பார்த்து கடைசியில் மால்டீஸ் வகை நாய் ஒன்றை வாங்கலாம் என்று முடிவு செய்தார். இம்முறை செல்ல வேண்டிய இடம் இன்னும் சற்று தொலைவு. டெலவேர் என்ற ஒரு இடம். பரீட்சைக்கு செல்லும் ஒரு விதமான மன நிலையுடனேயே நாய் வாங்க சென்றேன். மனதில் சொல்ல முடியாத ஒரு பயம் இருந்தது. வாங்கப் போவது ஒரு உயிர். பிடிக்கவில்லை என்றால் தூக்கி வீச முடியாது. காலையும், மாலையும், இரவிலும் மூன்று வேளையும் வெளியில் அழைத்து செல்ல வேண்டும். குளிர், மழை பார்க்க முடியாது. குடும்பத்துடன் நினைத்த நேரத்தில் வெளியூர் செல்ல முடியாது. அலுவல் முடிந்ததும் நேராக வீட்டிற்கு வர வேண்டும். அங்கே இங்கே சுற்ற முடியாது. இப்படி முடியாதுகள் பல. இதெல்லாம் என்னால் முடியுமா என்ற கேள்வியே மனதில் தொக்கி நின்றது.

ஆனாலும் மனதில் லேசாக ஒரு நப்பாசை. அந்த லாப்ரடார் குட்டியை வேண்டாம் என்று சொன்னது போலவே இதனையும் வேண்டாம் என்று கூற ஒரு காரணம் கிடைக்காதா என்பது தான் அது.

ஒரு வழியாக டெலவேர் சென்று அந்த குட்டியை பார்த்தோம். மூன்று மாதங்கள் ஆன குட்டி. உள்ளங்கை அளவே இருந்தான். பார்த்த உடன் பிடித்து எனது மனைவி வாங்கி விட்டார். காற்று போன பலூன் போல் ஆகி விட்டேன். வீட்டிற்கு திரும்பும் வழியில் எனக்கு அழுகையே வந்து விட்டது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் அந்த நாளை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.

அவனுக்கு Monty என்று பெயர் வைத்தோம். முதல் இரு வாரங்களுக்கு எனக்கும் சரி, அவனுக்கும் சரி புதிய இடம்/உறவு என்பதால் சிறிது பயமும் படபடப்பும் இருந்தன. எனது மனைவிதான் அலுவலகத்திற்கு இரு வாரங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவனை பார்த்துக் கொண்டார். பின்னர் அவனை மெதுவாக தடவுதலில் தொடங்கி, வெளியில் அழைத்து செல்லுதல், குளிப்பாட்டுதல், பல் துலக்கி விடுதல், விளையாடுதல், கொஞ்சுதல் என்று படிப் படியாக உயர்ந்து இன்று என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டான் Monty.

இன்று Monty யையும் எனது மகனையும் என்னால் வேறுபடுத்தி பார்க்கவே இயலவில்லை. எனது மகனை எனக்கு அளித்ததற்காக எனது மனைவிக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறேனோ அதே அளவிற்கு Monty யை வீட்டிற்கு அழைத்து வந்ததற்காகவும் கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன். Monty - ஒரு அருமையான அனுபவம்.

வீட்டிற்கு வந்த முதல் வாரத்தில்:



இப்பொழுது:



Monday, October 31, 2011

ஏழாம் அறிவு

இது வரை இப்படி நடந்ததே இல்லை. அமெரிக்கா வந்ததிலிருந்து இங்கே திரையரங்கில் வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்களை நான் பார்க்காமல் இருந்ததே கிடையாது. இம்முறை வேலாயுதம், ஏழாம் அறிவு இரண்டுமே வெளியிடப்பட கை குழந்தையை வைத்துக் கொண்டு இருவரும் இரண்டு படங்களையும் மாற்றி மாற்றி பார்ப்பது இயலாதென்பதால் விஜய் ரசிகையான எனது மனைவி வேலாயுதமும், நான் ஏழாம் அறிவும் பார்க்க முடிவு செய்தோம்.


அட்டகாசமான படத்தை கடைசி 20 நிமிடங்களில் நல்ல படமாக மாற்ற முடியுமா? முடியும் என்பதை தமிழ் கஜினி மூலம் நிரூபித்தார் முருகதாஸ். ஏழாம் அறிவிலும் அதே தவறை செய்திருக்கிறார். அருமையான கரு. சிறிது எடிட்டிங்கிலும் திரைக்கதையிலும் மெனக்கெட்டிருந்தால் அருமையான படமாக வந்திருக்க வேண்டியது, சறுக்கி விட்டது.

படம் தொடங்கிய உடன் முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு ஆவணப்படம் போல ஏதோ ஒன்று ஓடுகிறது. அதில் பல்லவ இளவரசனான போதி தர்மன் பற்றி சொல்லுகிறார்கள். பல்லவ இளவரசன் போதி தர்மன் தனது குருவின் கட்டளையின் பேரில் மூன்று ஆண்டுகள் பயணம் செய்து சீனா சென்று அங்கு உள்ள மக்களை நோயிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றுகிறான். பின்னர் அவர்களுக்கு மருத்துவ மற்றும் தற்காப்பு கலைகளை பற்றி பாடம் நடத்துகிறான். பின்னர் ஒரு நாள் தான் இந்தியா திரும்ப விருப்பத்தை தெரிவிக்க, சீன மக்கள் அவனை விஷம் கொடுத்து கொன்று புதைக்கிறார்கள்.

பின்னர் கதை நிகழ் காலத்திற்கு வருகிறது. ஜெனிடிக்ஸ் இஞ்சினியரிங் மாணவியான ஷ்ருதி ஹாசன் போதி தர்மனின் DNA ஆராய்ச்சி செய்கிறார். போதி தர்மனின் பதப் படுத்திய உடலை ஆய்வாளர்கள் தோண்டி எடுத்து அவரது DNA சாம்பிளை வெளியிட, போதி தர்மனின் பரம்பரையில் வந்த சூர்யாவின் DNA போதி தர்மனின் DNA உடன் என்பது சதவிகிதம் பொருந்த, சூர்யாவின் DNA வை தூண்டி விடுவதன் மூலம் போதி தர்மனின் திறமைகளை வெளிக் கொண்டு வர முடியும் என்று ஷ்ருதி நம்புகிறார்.

அவரது ஆராய்ச்சியை அவர் சீனாவிற்கு அனுப்ப, அவர்கள் போதி தர்மனின் திறமைகள் மீண்டும் ஒருவருக்கும் வரக் கூடாது என்பதால் ஆபரேஷன் ரெட் என்ற ஒன்றை செயல்படுத்த ஒரு சீனாக்காரனை அனுப்புகிறார்கள். அவன் ஷ்ருதியையும், சூர்யாவையும் கொல்லப் பார்க்கிறான். பின்னர் சூர்யா, ஷ்ருதி மற்றும் அந்த சீனாக்காரன் மூவருக்கும் இடையே நடக்கும் கேட் அன்ட் மவுஸ் கேம் தான் படத்தின் பின் பாதி. நிச்சயம் பின் பாதி படு சுறுசுறுப்பு.

படத்தின் முதல் பாராட்டு கேமராவிற்கு தான். போதி தர்மனின் சீன பயணத்தை இதை விட அழகாக யாராலும் காட்ட முடியாது. அட்டகாசம். பாடல்கள் நன்றாகவே இருந்தன. சண்டை காட்சியும் அட்டகாசம். படத்தின் கருவும், கதையும் அருமை. அதற்கு முருகதாஸை பாராட்டியே ஆக வேண்டும். மொத்தத்தில் இது நிச்சயம் ஒரு நல்ல படம்.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. எடிட்டிங்கும் திரைக்கதையும் மோசம். முதல் 15 நிமிடங்களும், போதி தர்மன் பற்றிய குறிப்பும் தான் கதையின் மூலக் கரு என்றால் அதனை சிறிது சஸ்பென்ஸாக வைத்து பின்னர் கூறி இருக்க வேண்டாமா? ஸ்ருதி ஹாசன் வாயிலாக அதனை கூறி இருக்கலாம்.

அதே போல முன் அந்தி பாடல் முடிந்த பின்னர் வரும் கட் ஷாட்டில் சூர்யா ஏலேலம்மா படலை முனுமுனுக்கிறார்.

தமிழ் நடிகைகள் தமிழை ஒழுங்காக பேச வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, நானும் த்ரிஷாவின் தமிழை இதற்கு முன்னர் விமர்சித்ததில்லை. அதனால் நடிகை ஷ்ருதி ஹாசனின் தமிழை பற்றி விமர்சிக்க ஒன்றும் இல்லை.

ஆனால் கமலின் மகள் ஷ்ருதி ஹாசனின் தமிழை இங்கே விமர்சிக்க வேண்டியிருக்கிறது. பார்ப்பன பெண்களுக்கு "ச" வராது. அவர்கள் "ஷாப்டேளா?" என்று தான் கேட்பார்கள் என்று தமிழுணர்வுடன் முன்பு கூறியவர் தனது மகளின் லகர, ளகர, ழகரங்களை சிறிது கவனித்திருக்கலாம். தமிலை பற்றியும் தமில் உணர்வை பற்றியும் அழகாக பேசுகிறார். "சொல்லாமலே உல்லம் துல்லுமா?" என்று இனிமையாக பாடுகிறார். கமல் சுயவிமர்சனம் என்று தமிழில் ஒரு சொல் இருக்கிறது.

மற்றபடி அனைவரும் கூறுவதை போல தமிழ், தமிழுணர்வு என்று தூண்டி விடுகிறார் என்ற குற்றச்சாட்டு எனக்கு இல்லை. ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்ட வேண்டும். தமிழ் ஜெயிக்கும் என்பதால் அதில் கட்டி இருக்கிறார்கள். தமிழர்களுக்காக படம் எடுக்கும் பொழுது பிரெஞ்சு வாழ்க என்றா கூற முடியும்?

மொத்தத்தில் கஜினியை போலவே ஒரு அட்டகாசமான படத்தை கடுமையாக உழைத்து நல்ல படமாக மாற்றி இருக்கிறார் முருகதாஸ்.

Sunday, October 23, 2011

பொடிமாஸ் - 10/23/2011


போன வாரம் ஒஹையோவில் உள்ள ஒரு தனியார் வனவிலங்கு பூங்காவிலிருந்து சுமார் 54 வனவிலங்குகள் தப்பித்துவிட அதில் 49 விலங்குகள் கொல்லப்பட்டன. 20 சிங்கங்கள், 18 புலிகள், 6 கரடிகள் அவற்றுள் அடங்கும். அந்த வனவிலங்கு பூங்காவின் உரிமையாளர் டெர்ரி தாம்ஸன் 54 விலங்குகளையும் திறந்துவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸார் 49 விலங்குகளையும் உயிருடன் பிடிக்க முயற்சி செய்யாமல் கொன்றதை சிலர் கண்டித்தாலும் ஒஹையோ போலீஸ் தலைவர் அதனை நியாயப்படித்தியுள்ளார். மனித உயிருடன் ஒப்பிடுகையில் வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்றும், அதனால் அவைகளை கொன்றது தவறு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் எனக்கு அந்த விலங்குகளின் பிணங்கள் குவிக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கும் பொழுது கண் கலங்கிவிட்டது. ஒன்றா? இரண்டா? 49. யாரோ செய்த தவறுக்கு அவைகள் தண்டிக்கப்பட்டன.

ஒஹையோ மாநிலத்தில் வன விலங்குகளை வளர்க்க போதுமான சட்ட திட்டங்கள் இல்லை. யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஒரு வேளை சரியான சட்ட திட்டங்கள் இருந்திருந்தால் 49 வன விலங்குகளை காப்பாற்றி இருக்கலாம்.

நம் ஊரில் மட்டும் அல்ல, அமெரிக்காவிலும் பல நேரங்களில் கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் செய்யப்படுகிறது.



சன் டிவிக்கு என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை. கடந்த இரு வாரங்களில் சன் டிவி மற்றும் கே டிவியில் 7 முறை முத்து திரைப்படம் ஒளிபரப்பிவிட்டார்கள். வேறு படங்கள் இல்லையா? இல்லை வேறு எதாவது காரணம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. நல்ல வேளை தீபாவளிக்கும் முத்துவை ஒளிபரப்பாமல் வேட்டைக்காரனையும், சிங்கத்தையும் ஒளிபரப்புகிறார்கள். இம்முறை சரியான மசாலா வேட்டைதான். ஆனாலும் நான் இப்பொழுதெல்லாம் விஜய் டிவி தவிர்த்து வேறு எதுவும் அதிகம் பார்ப்பது இல்லை.



தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தேமுதிகவின் உண்மை பலத்தை அனைவரும் அறிந்து கொண்டார்கள். தமிழக அரசியலை பொருத்தவரை ஒன்று திமுக அல்லது அதிமுக. மற்றதெல்லாம் 2016 ஆட்சி, 2021 ஆட்சி என்று கூவிக்கொண்டிருக்க வேண்டியது தான்.



சென்ற வாரம் எனது மனைவியின் பெரியம்மாவிடம் மடிப்பாக்கத்தில் ஐந்து சவரன் சங்கிலி களவாடப்பட்டுவிட்டது. யாரோ ஒருவன் தான் காவல் துறையை சேர்ந்தவன் என்றும், எனது மனைவியின் பெரியம்மாவை இரு திருடர்கள் தொடர்வதாகவும் கூறியிருக்கிறான். பின்னர் என்ன நடந்தது என்றே அவர்களுக்கு தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து பார்த்த பொழுது அவர்களின் நகை களவாடப்பட்டதை அறிந்திருக்கிறார்கள். நல்ல வேளை நகையுடன் போனது. வேறு எதுவும் விபரீதமாக நடக்கவில்லை.



வடிவேலுவை திரைத்துறை ஓரங்கட்டியது நிச்சயம் வருந்த தக்கது. கடந்த ஆறு மாதங்களாக அவரின் ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை. மிக சிறந்த நகைச்சுவை நடிகர் அவர். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டது போல அவர் தனக்கு தானே குழி தோண்டி விட்டார்.


Sunday, October 16, 2011

பொடிமாஸ் - 10/16/2011


நேற்று முன் தினம் உத்திரபிரதேசத்தின் முதலமைச்சரான மாயாவதி சுமார் 685 கோடிகளில் உருவான ஒரு நினைவுச்சின்னத்தை நொய்டாவில் திறந்து வைத்திருக்கிறார். இதற்காக சுமார் 6000 மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கின்றன. மாயாவதி இந்தியாவின் முதலமைச்சர்களிலேயே பணக்கார முதலமைச்சர் என்று கூறுகிறார்கள். இது வரை சுமார் 2500 கோடிகளுக்கு மேல் நினைவுச்சின்னங்களுக்காக செலவு செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அவர் அமைத்திருக்கும் நினைவுசின்னங்களில் அவரின் முழு உருவ சிலைகள் பல வைக்கப்பட்டிருக்கின்றன. வாழ்க ஜனநாயகம்.



பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்பவர்கள் அவர்களின் திறமை மாயக்கண்ணாடியில் தெரிவது போல தனக்கு முன்பே தெரிந்தது என்று பீலா விடுவார்கள். ஆனால் நேற்று "கமல் 50 - உலகநாயகன் பார்வையில்" என்ற நிகழ்ச்சியில், கமலை பற்றிய கேள்விக்கு ஏவிஎம் சரவணன் அவர்கள் பதிலளித்தது எனக்கு வியப்பளித்தது. களத்தூர் கண்ணம்மா படத்தின் போஸ்டரில் குழந்தை கமலை பெரிதாகவும் ஜெமினி மற்றும் சாவித்திரியை சிறியதாகவும் போட்டு வடிவமைத்ததற்கு கமலின் பிற்கால வளர்ச்சி பற்றிய நுண்ணறிவு காரணமா? என்ற கேள்விக்கு, படம் வெளியான பிறகு மக்களுக்கு கமலின் நடிப்பு மிகவும் பிடித்து விட, அவரின் புகழை பயன்படுத்தி படத்தின் வசூலை அதிகரிக்கவே அதனை செய்தோம் என்று நேர்மையாக அவர் குறிப்பிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.



சென்ற மாதம் இந்தியாவில் இருந்த எனது நண்பர்கள் ஐவர் ஏற்காடு சென்று வந்தார்கள். மனைவி, குழந்தைகள் யாரும் இல்லாமல் அவர்கள் மட்டும் சென்று வந்தார்கள். ஆண்கள் மட்டும் சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தப் பயணம். புகைப்படங்களை பார்க்கும் பொழுது எனக்கு பெருமூச்சு மட்டுமே வந்தது. அமெரிக்க வாசத்தில் நான் பெரிதும் இழந்தது இது போன்ற பல அனுபவங்கள். காலம் எனக்கு என்ன விட்டு வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



சமீபத்தில் நான் படித்து வியந்த ஒரு சிந்தனை.

தலாய் லாமாவிடம் மனித குலத்தின் வியப்பூட்டும் அம்சமாக அவர் கருதுவது என்ன என்ற கேள்வி கேட்கப்பட்ட போது அவர் அளித்த விடை, "மனிதன். ஏனென்றால், அவன் தனது ஆரோக்கியத்தை தொலைத்து பணத்தை சேகரிக்கிறான். பின்னர் தான் சேகரித்த பணத்தினை செலவு செய்து தொலைத்த ஆரோக்கியத்தை மீண்டும் அடைய முயல்கிறான். தனது எதிர்காலத்தை பற்றிய கவலையினால் பீடிக்கப்பட்டு நிகழ்காலத்தினை மகிழ்ந்தனுபவிக்க மறுக்கிறான். அதன் விளைவாக அவன் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை, எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. தனக்கு வாய்த்தது இறப்பே இல்லாத வாழ்வென்று நினைக்கிறான், முடிவில் வாழ்க்கை முழுதும் வாழாமலே இறக்கிறான்.

ஆங்கிலத்தில்:

The Dalai Lama, when asked what surprised him most about humanity, answered “Man. Because he sacrifices his health in order to make money. Then he sacrifices money to recuperate his health. And then he is so anxious about the future that he does not enjoy the present; the result being that he does not live in the present or the future; he lives as if he is never going to die, and then dies having never really lived.”



எனக்கு புரட்சி தலைவரின் திரைக்கதை அமைப்பும், அவரின் இயக்கமும் மிகவும் பிடிக்கும். தனக்கு எது வருமோ, தனது ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதனை தெளிவாக புறிந்து கொண்டு அதனை அளிப்பவர். உங்களுக்கு அமிதாப் பச்சன் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த ஸண்ஸீர் (Zanjeer) திரைப்படத்தை பற்றி தெரிந்திருக்கலாம். அவர் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக வித்திட்டது இப்படம் தான். அதனை தான் புரட்சி தலைவர் தமிழில் சிரித்து வாழ வேண்டும் படமாக எடுத்துள்ளார். இந்த தகவல் எனக்கு சமீபத்தில் தான் கிடைத்தது. முன்னரே ஸ்ண்ஸீர் திரைப்படத்தை பார்த்திருந்தாலும், சிரித்து வாழ வேண்டும் படத்தை நான் பார்த்தது இல்லை. அங்கே இங்கே என்று அலைந்து வட்டதகடு வாங்கி ஒரு வழியாக சமீபத்தில் தான் பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது அசத்தி விட்டார் தலைவர். திரைக்கதை மற்றும் இயக்கம் திரு. எஸ். எஸ். பாலன் அவர்களாக இருந்தாலும், சர்வ நிச்சயமாக புரட்சி தலைவரின் தலையீடு பல மடங்கு இருந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

ஸண்ஸீர் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு நிகரான ஒருவராக வருபவர் ஷேர் கான் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் ப்ரான். அதிலும் ஒரு முக்கியமான காட்சியில் அமிதாபை எதிரிகளின் பிடியில் இருந்து அவர் காப்பாற்றுவார். ஆனால் இங்கே புரட்சி தலைவருக்கு நிகர் வேறு யார்? மேலும் அவரையாவது வேறொருவர் காப்பாற்றுவதாவது. அதனால் அந்த பாத்திரத்திலும் புரட்சி தலைவரே தமிழில் நடித்து விட்டார்.

மேலும் ஸண்ஸீர் திரைப்படத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது கடமையா? இல்லை குடும்பமா? என்று காவல் துறை ஆய்வாளரான அமிதாப் தவிப்பார். மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் கடமையை தேர்ந்தெடுப்பார். ஆனால் இங்கே, மூச். புரட்சி தலைவருக்கு கடமைக்கு முன் குடும்பமா முக்கியம்? சடார் என்று முடிவெடுத்து எதிரிகளை பந்தடுவார்.

ஆனால் எப்படி பார்த்தாலும், நிச்சயம் புரட்சி தலைவரின் screen presence மற்றும் charisma இரண்டும் அட்டகாசம். மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவமாக சிரித்து வாழ வேண்டும் அமைந்தது.

Wednesday, October 05, 2011

Steve Jobs




"Apple has lost a visionary and creative genius, and the world has lost an amazing human being. Those of us who have been fortunate enough to know and work with Steve have lost a dear friend and an inspiring mentor. Steve leaves behind a company that only he could have built, and his spirit will forever be the foundation of Apple."


-Apple's board of directors


1976 ஆம் ஆண்டு Steve Jobs தனது நண்பர்களான Steve Wozniak, Mike Markkula இருவருடனும் சேர்ந்து தொடங்கியது தான் Apple, Inc. உலகின் முதல் Personal Computer இவர்கள் கண்ட கனவினால் நிஜமானது. தனது 26 ஆம் வயதில் Time இதழின் அட்டையை அலங்கரித்தார் அவர். அதன் பின்னர் இவரின் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள். 1984 ஆம் ஆண்டு Apple நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் NeXT Computers நிறுவனத்தை தொடங்கினார். Pixar Animation Studios நிறுவனத்தையும் அவர் தொடங்கினார். பின்னர் அதனை Walt Disney நிறுவனம் வாங்கியதை தொடர்ந்து Disney நிறுவனத்தின் Board of Director களுள் ஒருவரானார்.

1996 ஆம் ஆண்டு Apple நிறுவனம் NeXT Computers நிறுவனத்தை சுமார் 429 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியதை தொடர்ந்து மீண்டும் Apple நிறுவனத்தில் சேர்ந்தார் Steve Jobs. 1997 ஆம் ஆண்டு அதன் CEO ஆனார். அதன் பின்னர் Apple நிறுவனத்திற்கு ஏறுமுகம் தான்.

2001 ஆம் ஆண்டு iPod ஐ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக இசையுலகில் நுழைந்தது Apple நிறுவனம். iTunes Music Library தொடங்கி மக்கள் குறைந்த செலவில் பாடல்கள் வாங்க வித்திட்டார். மக்கள் CDs, Walkman, Discman போன்றவற்றை வாங்குவதை தவிர்த்தனர். Walking, Jogging, Working Out, Travelling என்று மக்கள் எந்த வேலையை செய்யும் பொழுதும் அவர்களுடன் iPod ஒரு அங்கமானது. It became a sensation overnight.

அதனுடன் நின்று விடாது 2007 ஆம் ஆண்டு iPhone ஐ வெளியிட்டு அதிகாரப் பூர்வமாக கைத்தொலைப்பேசி வர்த்தகத்தில் ஈடுபட்டது Apple. iPhone ஐ முதலில் வெளியிட்டவுடன் அதனை பற்றி அவர் சொன்னது கீழே.

Every once in a while a revolutionary product comes along that changes everything. It's very fortunate if you can work on just one of these in your career. ... Apple's been very fortunate in that it's introduced a few of these.

அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு iPad ஐ வெளியிட்டது Apple நிறுவனம். சுமார் 500 டாலர்களுக்கு அதனை எப்படி தருவது என்ற குழப்பத்தில் HP உள்ளிட்ட பல நிறுவனங்கள் சந்தையிலிருந்து வெளியேறிவிட முடி சூடா மன்னனாக விலங்குகிறது iPad.

2011 ஆம் ஆண்டு Apple நிறுவனம் Microsoft நிறுவனத்தை முந்தி உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் ஆனது. இவை அனைவற்றுக்கும் காரணம் Steve Jobs, Steve Jobs, Steve Jobs மட்டுமே.

iPhone, iPad, iPod, iMac மற்றும் iTunes போன்றவற்றின் பின்னால் இருந்த மூளை இன்று இல்லை என்பது பெரிதும் வருத்தம் கொள்ள வைக்கிறது. 56 வயது சாகும் வயதா? Pancreatic Cancer என்கிறார்கள். இயற்கை சில நேரங்களில் காட்டும் கொடூர முகங்களில் இதுவும் ஒன்று. மரணம் பலரை உலகில் இருந்து வெளியேற்றினாலும் சிலர் மரணத்தை தங்கள் வாழ்விலிருந்து வெளியேற்றுகிறார்கள். Steve Jobs நிச்சயம் அவர்களுள் ஒருவர்.

RIP Steve Jobs. உங்களுக்கு மரணம் என்றுமே கிடையாது.

Wednesday, September 28, 2011

பொடிமாஸ் - 09/29/2011


பேய்க்கு பயந்து பிசாசிற்கு வாழ்க்கை பட்ட கதையாகிவிட்டது தமிழக மக்களின் கதை. அம்மையார் ஆட்சிக்கு வந்தால் ஏதாவது மக்களுக்கு நல்லது செய்வார் என்று எதிர் பார்த்து காத்திருந்தால் அவரோ திமுகவினர் மீது வழக்கு தொடுப்பதிலேயே குறியாக உள்ளார். சுமார் 2500 வழக்குகளுக்கு மேல் பதிவாகி உள்ளன. பதவிக்கு வந்த உடன் அவர் அளித்த பேட்டியில் இருந்த தன்னடக்கம் தற்பொழுது இல்லை. ஊராட்சி தேர்தலில் கூட்டணி முறிந்து விட்டது. இதனை சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னரே செய்திருந்தால், தேமுதிக, மதிமுக, இரு கம்யூனிஸ்டுகள் மூன்றாவது அணி கண்டிருந்தால், திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து நிச்சயம் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார். ஒருவேளை ஊராட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வி அடைந்தால் அவரது நிலை மாறினாலும் மாறலாம். ஆனால் நான்கு முனை போட்டி என்பதால் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் ஒன்று, நிச்சயம் இந்த ஆட்சி கடந்த ஆட்சியைவிட நல்ல ஆட்சியாக அமையும் என்ற நம்பிக்கை இதுவரை எனக்கு இருக்கிறது. என்ன செய்வது?, கலைஞரின் கடந்த ஆட்சி அப்படி.



ஏழாம் அறிவு டிரைலர் பார்த்தாலே அசத்தலாக இருக்கிறது. பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தை தூண்டுகிறது. இம்மாதிரி டிரைலர்கள் அமைப்பதில் ஷங்கர் தான் கிங். முருகதாஸும் அதில் சேர்ந்ததில் மகிழ்ச்சி. சூர்யா மற்றும் முருகதாஸ் பற்றி சொல்ல ஒன்றும் புதிதாக இல்லை. ஷ்ருதிஹாசன் நடித்த லக் திரைப்படத்தை பார்த்திருக்கிறேன். படு திராபையான நடிப்பு. இதில் எப்படி நடித்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். முருகதாஸ் மீது நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.



சமீபத்தில் நான் பல முறை கேட்பது எங்கேயும் எப்போதும் படத்தின் "சொட்ட சொட்ட" பாடல் தான். சின்மயீ குரலில் மனதை பிசைக்கிறது அந்த பாடல். தொடக்கதில் வரும் புல்லாங்குழல் அட்டகாசம். அதனை ரிங்டோனாக வைக்க வேண்டும். இந்த வார இறுதியில் நேரம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். நான் விரும்பும் மற்றொரு பாடல் மங்காத்தாவில் "நீ! நான்!". அட்டகாசமான மெலடி. SPB சரன் மற்றும் பவதாரிணியின் குரலில் காதில் தேனாக பாய்கிறது.



இந்த மாத தொடக்கத்தில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் AVP-HR ஆக இருந்த ஈஷான் ஜோஷி பதவி விலக்கப்பட்டு விப்ரோவின் வாசுதேவ் நாயக் அந்த பொறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளார். சமீப காலமாக இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் பல வீசா முறைகேடுகள் மீது குற்றங்கள் சாட்டப்பட்டதாலும், சில வழக்குகள் போடப்பட்டதாலும் இந்த முடிவை நிறுவனம் எடுத்திருக்கின்றது. சுமார் 13 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் உழைத்தவர், அப்பொழுது HR - Head ஆக இருந்த ஹேமா ரவிசந்தர் அவர்கள் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தை விட்டு விலகிய பின்னர் unanimous choice ஆக அந்த பொறுப்பிற்கு வந்தவர், HR பாலிஸிகளில் பல மாற்றங்களை செய்தவர், அவருக்கு இந்த நிலை என்றால் சிறிது கஷ்டமாக இருக்கிறது. அதற்கும் மேலாக தனிப்பட்ட முறையில் எனது ஆஃபர் லெட்டரில் கையெழுத்து போட்டவர் என்பதால் அந்த கஷ்டம் சிறிது அதிகரிக்கிறது.



"ஹாரிஸ் ஆன் தி எட்ஜ்" concert ற்காக காத்திருக்கிறேன். ARR, ராஜா, யுவன் அனைவருடையதும் பார்த்திருக்கிறேன் என்றாலும், ஹாரிஸின் soft romantic numbers are mind blowing. All the best Harris. Blow our heads off.



இந்த சனிக்கிழமை விஜய் டிவியில் இனிது இனிது திரைப்படம் ஒளிபரப்பினார்கள். முதல் முறை பார்க்கிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கல்லூரி நினைவுகளில் முழுகி விட்டேன். It was nostalgic. படம் ஏன் தோல்வி அடைந்தது என்று தெரியவில்லை.

Tuesday, September 27, 2011

Top 10 reasons why small businesses fail in India

Not long ago my brother-in-law started looking at various avenues to start a business in India. I started seeing in him, what I had seen in a few people before. Once the entrepreneurship bug bites you, you become less and less resilient towards your job. While it is overwhelming to see one of your closest acquaintances trying to come out of the nut shell and venturing into something new, the conservative and non-assertive person within me is keeping his fingers crossed to see this leap into a successful landing.

To give him some ideas, I have been researching the problems start-ups face in India for the past couple of weeks. Here is what I have compiled so far.


    1. NEGLECTING INFLATION: Countries like India, which do not have a controlled inflation, are not start-up friendly. Loss occurring due to the rise in inflation in one month can eat up the profit attained in four months. To cater the same, start-ups should be prepared to pump in money continuously until they are stabilized. 
    2. ALTERNATE SOURCE OF INCOME: Generally people who start businesses in India tend to keep the profit out of their businesses as their primary income even during the earlier stages. This theory has been widely questioned. Small business owners should keep an alternate source of income to keep their families running without disturbing the cash outflow from the business. Start-ups should sit on the cash pile until they are stabilized. Alternate source of income can be anything from taking up an employment until business gets stabilized, or in case of a partnership firm a couple of partners working while another one of them taking care of business or bringing in a new managing partner who would manage the business without investing any capital. 
    3. FAILURE TO UNDERSTAND STABILITY: This is again another mistake done religiously by the small business owners. Often times, they think break even as synonymous to stability. But a start-up can attain a break even during its earlier stages long before it attains stability. Stability for a business means instituting itself as a brand among consumers, competitors, vendors and employees. 
    4. EMERGENCY SOURCE OF FUND: This is again a crucial entity for start-ups and varies from business to business. Emergency source of fund is a pile of cash sitting underneath the business without yielding any returns. The threshold could be demonstrated by the span of time the cash pile can run the business if the business runs at a loss. Standard time is four months for many start-ups. Any profit the businesses make until they get stabilized should be accumulated into the emergency source of fund. 
    5. INCORRECT BUSINESS PLAN: This encapsulates everything, including vision, goals, budgeting, operations planning, revenue growth etc. Small businesses should always focus on their short term goals and take one leap at a time. If a business wants to increase its customer base, revenue or office locations it has to be done in baby steps. Over expansion will kill the business. 
    6. DISTINGUISHING BUSINESS EXPENSES & PERSONAL EXPENSES: Not only for big business players who fall under the tax department’s or share holders’ radar, but also for small businesses the expense heads are often forged or manipulated, sometimes willingly and many other times unknowingly. An evening get together among partners in a public house can very well be a business expense or a personal expense depending on how it is accounted. But it is imperative for start-ups to not get carried away by tax relaxation and to account expenses with the best of their ability and honesty. It not only keeps the balance sheet clean but also gives the business owners a clear idea on their own revenue, expense, operating margin and profit. 
    7. LACK OF BRAND BUILDING ACTIVITIES: Brand building is not something which is limited to an established business. In fact it is even more important for a start-up than for an established business. Not all brand building activities are expensive and unlike other business establishment activities, brand building can be coupled with a cause. Sponsoring a sports event for under privileged children or sponsoring a race to cure event for breast cancer can be a great brand building activity. 
    8. CUSTOMER SERVICE: Small business owners should understand that imbibing the necessity for coming to them on the minds of the customers is the key to success. Many a times customers do not wish to give a second chance to businesses if they fail in the first chance. It is imperative to try to keep them satisfied during their first visit. This could be as simple as giving them a 10% discount during their first visit or giving a discount coupon for their next visit. 
    9. DATA, DATA, DATA: Like they say “LOCATION, LOCATION, LOCATION” in the real estate world, it is “DATA, DATA, DATA” here. Collect as much data as possible. For example, if you have set up a Greeting Card & Bouquet shop, everybody knows that most business activities happen during the Valentine’s Day. However, there could be a particular period of the year in which the birth day cards sell the most, which can be found only if you have the data. 
    10. SEEK PROFESSIONAL HELP: Like you do not rely on the internet or friends to do an open heart surgery, or on your expertise in mechanics to fix a leaking gas line in your house, you should not rely on any non-professional guidance for starting a new business. Setting up a new business is no joke and it requires a professional guidance and supervision. There are many organizations which do everything right from analyzing the business worthiness of your idea, to setting up the business, speculating the risks, gaining loans, etc. It is money well spent in seeking their guidance and help.

Good luck.

எங்கேயும் எப்போதும்



நான் படம் பார்த்து விட்டு மனம் கனத்து அழுத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சலங்கை ஒலி இறுதிக் காட்சியில் பாலு இறந்த உடன் ஏற்பட்ட வலி, அன்பே சிவம் இறுதிக் காட்சியில் நல்ல சிவம் நடக்கும் பொழுது ஒலிக்கப்படும் யார் யார் சிவம் பாடல் கேட்ட பொழுது ஏற்பட்ட வலி நிச்சயம் எனக்கு எங்கேயும் எப்போதும் பார்த்த உடன் ஏற்பட்டது.

விபத்து என்பது ஒரு செய்தி என்பதையும் கடந்து அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் விபத்திற்கு முன்னரான கலர்ஃபுல் வாழ்க்கையை இவ்வளவு அழகாக யாரும் சொன்னதில்லை என்றே நினைக்கிறேன்.

இரண்டு காதல்கள். இரண்டு பேரூந்துகள். ஒரு விபத்து. ஊடே வாழை பழத்தில் ஊசி ஏற்றியதை போல பல நல்ல கருத்துக்கள். இது தான் எங்கேயும் எப்போதும்.

கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் நிகழ்வுகளின் கோர்வை நம்மை கட்டிப் போடுகிறது.

சென்னைக்கு புதிதாக ஒரு நேர்முகத் தேர்விற்காக வரும் அனன்யாவிற்கு சந்தர்ப்ப வசத்தால் ஒரு நாள் முழுதும் உதவிடுகிறார் ஷர்வானந்த். முதலில் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்துடனேயே அணுகும் அனன்யாவிற்கு போகப் போக அவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் வந்து விடுகிறது.

திருச்சியில் ஆறு மாத காலமாக அஞ்சலியை தூரத்தில் இருந்தே கை ஆட்டி காதலிக்கிறார் ஜெய். அவரது காதலை புறிந்து கொண்டு அவரை பல சோதனைகளுக்குள்ளாக்கி முடிவில் அவரை காதலிக்கிறார் அஞ்சலி. அஞ்சலியை விழுப்புரம் அருகில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு அழைத்து சென்று தனது பெற்றோர்களிடம் அறிமுகம் செய்ய சென்னை செல்லும் பேரூந்தில் பயணிக்கிறார்கள் ஜெய்யும் அஞ்சலியும்.

இதனிடையே தேர்வு முடிந்து திருச்சி வரும் அனன்யா, மெதுவாக ஷர்வானந்த் மீது காதல் கொள்கிறார். ஷர்வானந்திற்கும் அனன்யா மீது காதல் வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தேடி ஒரே நேரத்தில் முறையே சென்னைக்கும் திருச்சிக்கும் வருகிறார்கள். தேடி அலைந்து கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் அவர்கள் ஊர் திரும்புகிறார்கள். ஷர்வானந்த், ஜெய் மற்றும் அஞ்சலி பயணிக்கும் பேரூந்தில் சென்னை செல்ல, அனன்யா அதே நேரத்தில் சென்னையிலிருந்து கிளம்பும் ஒரு தனியார் பேரூந்தில் திருச்சி வருகிறார்.

இரண்டு பேரூந்துகளும் விழுப்புரம் அருகே விபத்துக்குள்ளாக முடிவு என்ன? என்பதை வெள்ளித்திரையில் காண்க.

படத்தின் வெற்றியே பாத்திரங்கள் தான். அருமையான காஸ்டிங். ஜெய், அஞ்சலி, அனன்யா, ஷர்வானந்த் மட்டும் இல்லாது அனன்யாவின் அக்கா, அஞ்சலியின் பெற்றோர், ஊர் பெரியவர், துபாயில் இருந்து திரும்பும் அந்த நபர், நடத்துனர்கள் என்று ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

நடிப்பில் அனைவரும் அசத்தி இருந்தாலும், என்னை மிகவும் கவர்ந்தவர் அஞ்சலி. கடைசி காட்சியில் அவரது நடிப்பு அட்டகாசம். இவரை போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவில் அபூர்வம்.

அடுத்து பாடல்கள். படல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன. குறிப்பாக சொட்ட சொட்ட பாடல் சின்மயீ குரலில் காதில் தேனாக ஒலிக்கிறது. மாசமா, கோவிந்தா படல்கள் படமாக்கிய விதம் அருமை.

விபத்து நடக்கும் வேளையில் வெளியில் இருந்து லேசாக காட்டிவிட்டு உள்ளிருந்து பயணிகளின் பார்வையில் அதனை படமாகிய விதம் அருமை.

வசனங்கள் மிகவும் கூர்மை. குறிப்பாக அஞ்சலியின் வசனங்கள்.

"யார்டா நீ? மாமனா? மச்சானா? 50 வருஷம் குடும்பம் நடத்தனும் இல்லை?" என்று கூறி HIV டெஸ்ட் எடுப்பது, "மண்ணு திங்கற உடம்பை கொடுத்து தான் தொலைங்களேன்டா" என்று கூறி உடல் தானத்திற்கு சம்மதம் வாங்குவது, "என்னை காதலிச்சா என்ன பிரச்சனைகள் வரும்னு உனக்கு தெரியனும்" என்று கூறி தனது காவல் துறை அப்பாவிடமும், தன்னை ஒரு தலையாக காதலிப்பவனிடமும் ஜெய்யை அனுப்புவது என்று அவர் அமர்க்களப்படுத்துகிறார். அதில் ஒரு சண்டை காட்சியை காட்சியாக சொல்லாமல் வசனத்தின் வாயிலாக சொன்ன விதம் அருமை.

அடுத்ததாக விபத்து நேர்ந்த உடன் நடக்கும் காட்சிகள் பாராட்டப் பட வேண்டியவை. காவல் துறைக்கு தகவல் சொல்லுவதாகட்டும், 108 ஆம்புலன்ஸ் கூப்பிடுவதாகட்டும், பத்திரிக்கைக்கு தகவல் சொல்லுவதாகட்டும், விபத்தில் அதிகம் காயமடையாதவர்கள், ஓடிசென்று மற்றவர்களுக்கு உதவுவதாகட்டும் மனித நேயத்துடன் கொரியோகிராஃப் செய்யப்பட்ட காட்சிகள் அவை.

கடைசியில் மிகவும் பாராட்ட வேண்டியது படம் சொல்லும் செய்திகள்.
  • 1. ஒருவர் மீதும் தேவை இல்லாமல் சந்தேகம் கொள்ள தேவை இல்லை.

  • 2. குடும்பத்தை புறக்கனித்து விட்டு வேலை வேலை என்று இருந்தால் குடும்பத்தை பார்க்கவே முடியாத நிலை ஏற்படக் கூடும்.

  • 3. வண்டிகளில் பறந்து விழும் பொருட்களை ஏற்றும் பொழுது கூடுதல் பாதுகாப்பு அவசியம்.

  • 4. வேகமாக வண்டி ஓட்டுதல் கூடாது.

  • 5. திருமணத்திற்கு முன்னர் HIV டெஸ்ட் எடுத்தல் அவசியம்.

  • 6. உடல் தானம் செய்வது பலருக்கு வாழ்வளிக்கும்.

  • 7. ஒரு விபத்து நேரும் பொழுது முதலில் அடிபட்டவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்றவர்களை ஏற்றி விட்டு கடைசியில் நலமாக உள்ளவர்கள் செல்ல வேண்டும். குறிப்பாக நம்முடன் இருப்பவர்களுக்கு அடிபட்டு விட்டதே என்று நாமும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
இவை அனைத்தையும் ஏதோ பிரசாரம் போல சொல்லாமல் கவித்துவத்துடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

அட்டகாசம் சரவணன். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

Tuesday, August 23, 2011

நான் சந்தித்த நில நடுக்கம்




இன்று மதியம் இரண்டு மணி இருக்கும். அலுவலகத்தில் ஒரு அவசர தேவைக்காக ஒரு மூட்டை ஆணிகளை புடுங்கிக் கொண்டிருந்தேன். இரு வாரங்களாகவே அலுவலகத்தில் பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்பொழுது திடீரென்று கட்டிடமே ஆடியது. ஒரே குலுக்கல். முதலில் நான் ஏதோ பெரிய பொருளை நகர்த்துகிறார்கள் என்று நினைத்தேன். எழுந்து பார்த்த பொழுது தான் தெரிந்தது அலுவலகமே எழுந்து நின்று கொண்டிருந்தது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். உடனே அனைவருக்கும் தெரிந்து விட்டது இது நில நடுக்கம் என்று.

வாழ்வில் இது வரை நான் நில நடுக்கத்தை அனுபவித்ததே இல்லை. உடனே அனைவரும் ஆறாவது மாடியில் இருந்து படி வழியே கீழே இறங்கி வெளியில் வந்தோம்.

அன்று என் மனைவி அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தார். அதனால் அவரும், எனது ஒரு வயது மகனும், எனது மாமியாரும் மற்றும் மாமனாரும், எங்களது செல்ல நாய் மாண்டியும் வீட்டில் இருந்தனர். அவர்களது நிலையை அறிந்து கொள்ள அவர்களுக்கு தொலை பேச முயன்றேன். ஆனால் முடியவில்லை. நெட்வொர்க் ஜாம் ஆகி விட்டிருந்தது.

சுமார் 15 நிமிடங்களில் அவசர உதவி வந்து அலுவலகம் முழுவதையும் சரி பார்த்து ஒன்றும் சேதம் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் எங்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

உள்ளே சென்று அவர்களது நலத்தை மின்னஞ்சல் செய்து உறுதி செய்து கொண்ட பின்னர் தான் நிம்மதியாக இருந்தது. மொத்தத்தில் இது ஒரு புது அனுபவம்.

Saturday, August 06, 2011

An Appeal

நண்பர்களே! எனக்கு உதவும் கரங்கள் திரு. வித்யாகர் அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உதவ விருப்பம் உள்ளவர்கள் தயவுசெய்து உதவுங்கள்.

Dear Sathya,

Anaga is all of sixteen with dreams of becoming a nurse and would like to discover a painless way of giving injections. Each time she goes for blood transfusion, she cringes when she sees the needle. Her mind keeps repeating will the smile of the nurse, reduce her pain, will the size of the needle reduce her pain, the pain is unbearable but she knows that her life depends on these transfusions. After all she has undergone Blood transfusion 278 times.

Anaga is suffering from Thalassemia. She has been undergoing blood transfusion regularly every 21 days. At present she is suffering from Hepatitis C and it may potentially damage the liver. The treatment will cost Rs.2, 00,000/. Little drops of water make the mighty ocean. Please help Anga what ever way you can. She has never let Thalassemia affect her zeal for life. She enjoys talking to her friends, playing shuttle with them. She likes to watch her favorite heroine, Tamannah on screen. She dreams of going to a nursing college. She wants to be the best and kindest nurse. She knows that a kind heart and a smiling face can lessen every pain. We want you to lend a helping hand in achieving her dreams.

You can contribute online thru our website http://www.udavumkarangal.org, which gives all details about our activities.

For contributing by Credit card or Net transfer click on the button “DONATE TO OUR INDIA OFFICE” under the menu “DONATE” and its link address is https://www.myhelpinghands.org/Donate_india.aspx

New users have to click on “New Sign-up” button on this page and register for the first time and then login using your email id as the login name and the password is what you have given while registering.

Also you can visit this page for answers to basic questions. http://www.udavumkarangal.org/faq.htm. If you have any specific questions kindly mail us.

Wishing you and your family a healthy and peaceful life.

Thanks & Regards
Vidyaakar

Thursday, July 14, 2011

வந்தே மாதரம்!!!


நேற்றைய குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும், இனி வரப்போகும் குண்டு வெடிப்புகளில் இறக்கப் போகிறவர்களுக்கும் எனது அஞ்சலிகள்.

Monday, June 27, 2011

180 ரூல்ஸ் கிடையாது.....


சில படங்களின் டிரைலர் பார்த்தாலே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும். சில படங்களின் டிரைலர் படத்தை தொலைக்காட்சியில் கூட பார்க்க கூடாது என்ற எண்ணத்தை தரும். நிச்சயமாக 180 முதல் வகை. சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் சித்தார்த் தமிழில். பாய்ஸ், ஆயுத எழுத்து, ரங் தே பஸந்தி என்று என்னை பெரிதும் கவர்ந்த இளம் நடிகர் சித்தார்த். ஆரண்ய காண்டம் இங்கே வெளியிடப்படாததால் எங்கே இந்த படத்தையும் DVDயில் மட்டுமே பார்க்க நேரிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த வேளையில் என் வயிற்றில் பீர் வார்த்தது போல இங்கே வெளிவந்தது 180 ரூல்ஸ் கிடையாது.

முதல் காட்சியில் காசியில் சித்தார்த் தனது அப்பாவிற்கு திதி கொடுக்க வரும் சிறுவனிடம் நானும் மனோவாக இருக்க ஆசைப் படுகிறேன் என்று சொன்னதும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது திரைக்கதை. அடுத்த காட்சியில் சென்னையில் ஆட்டோ ஓட்டுனரிடம் இரு விரலை நீட்டி அதில் ஒன்றை தொடச் சொல்லி டி. நகர் என்று கூறும் போது டாப் கியரில் செல்கிறது.

நன்கு படித்து, பட்டம் பெற்று, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சென்னையின் மேல் நடுத்தர இளைஞனை கதையின் நாயகனாக ஒரு தமிழ் படத்தில் பார்த்தே நீண்ட நாட்கள் ஆகின்றன. அதற்கே இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

பீச்சில் சுண்டல் விற்று, இஸ்திரி போட்டு, வீடு வீடாக சென்று பேப்பர் போட்டு, தெருவில் இருக்கும் சிறுவர்களுடன் விளையாடி, வீட்டு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி என்று முதல் பாதி முழுதும் தனக்கென்று ஒரு இலக்கே இல்லாத மனிதனாக வாழ்த்து கொண்டிருக்கும் மனோவிற்கு மனதில் நெருடும் முள்ளாக ஒரு ஃபிளாஷ் பேக். அதனை தனியாக சொல்லாமல், நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் ஊடே எண்ண ஓட்டங்களாக சொன்ன விதம் அருமை.

இம்மாதிரி முயற்சியை தமிழில் முதலில் தொடங்கியவர் மணிரத்னம். ஆனாலும் அலைபாயுதேவில் கூட ஒரு வித ஜெர்க் இருக்கும். இதில் அது கூட இல்லை. இதனை போன்ற திரைக்கதைகள் இரண்டு புரவிகள் பூட்டிய வண்டியை போன்றது. ஒரு புரவி ஒரு வழியில் பயணிக்க, மற்றொரு புரவி வேறு வழியில் பயணிக்கும். பயணம் செய்யும் நமக்கு ஆயாசம் வராமலும், சுவாரசியமாகவும் இருக்க திரைக்கதையமைப்பும், எடிட்டிங்கும் மிகவும் முக்கியம். இதில் இது இரண்டுமே அருமை.

Casting மிகவும் அருமை. மௌலி, கீதா, லக்ஷ்மி, வித்யா மேனன், ப்ரியா ஆனந்த், சித்தார்த்தின் அமெரிக்க நண்பர் என்று ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை உணர்த்து நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக சித்தார்த். தனது தாயின் மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு தயாராகும் அவர், தனது மரணத்தை கண்டு நடுங்கும் இடத்தில் பிரமிப்பூட்டுகிறார். இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவர்.

வாழ்வை அணு அணு வாக ரசிக்கும் ஒருவனுக்கு மரண பயம் இப்படிதான் இருக்கும் என்பதை இதை விட அழகாக வெளிப்படுத்தி விட முடியாது.

அடுத்தது கேமரா. யாரோ பால சுப்ரமணியன் என்றொருவர். யார் சார் நீங்கள்? இதற்கு முன்னர் எங்கிருந்தீர்கள்? கை கொடுங்கள் சார். இது போன்ற கேமரா கோணங்களை தமிழில் நான் பார்த்ததே இல்லை. அருமையான locales, lighting மற்றும் picturization.

இசைதான் எனக்கு பிடிக்கவில்லை. பாடல்கள் நன்றாகவே இருந்தன. ஆனால் பின்னணி இசை சற்று இரைச்சல்.

மற்றபடி இயக்குனர் சிறிது சறுக்கி இருப்பது இரண்டாம் பகுதியில் மற்றும் கதையில். கதை பலமுறை பலர் மென்று துப்பிய பழைய புளித்த பழம் தான் என்றாலும், என்னை பொருத்த வரை திரைப்படம் என்பது ஒரு visual medium. கதையே இல்லாவிட்டாலும், நிகழ்வுகளின் காட்சிக் கோர்வை நம்மை பிணைத்து வைத்தால் அதுவே திரைப்படத்தின் வெற்றி.

எனக்கு ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு பயண அனுபவம். நம்முடனே படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் பயணிக்கிறார்கள். அவர்களில் யாருடனாவது நம்மால் பொருந்த முடிந்தால் அந்த பயணம் இனிமையானதாகவே அமையும். அதில் ஒரு சிலர் நாமாகவே இருந்தால் அந்த பயணத்தை மறக்கவே முடியாது.

இந்த படத்தை பொருத்த வரை, நான் தான் AJ. AJ தான் நான். AJ விற்கு ஏற்பட்டதை போன்றே ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டால் நான் நிச்சயம் மனோவாக இருக்கவே விரும்புகிறேன்.

நிச்சயமாக 180 ரூல்ஸ் கிடையாது is a stylish visual treat to watch. Go without any expectations.