Tuesday, November 15, 2011


பொடிமாஸ் - 11/15/2011

சச்சின் இந்திய கிரிக்கெட் டீமில் சேர்ந்து விளையாட தொடங்கி நேற்றுடன் இருபத்தி இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. அவர் முதலில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட தொடங்கிய பொழுது தற்பொழுது அவருடன் விளையாடும் சுரேஷ் ரெய்னாவிற்கு மூன்று வயது, விராத் கோலிக்கு ஒரு வயது, நம்ம ஊர் அஷ்வினுக்கு மூன்று வயது. அவர்களுடன் இன்றும் விளையாடுகிறார் என்றால் அதற்கு அவரது திறமையும், விடா முயற்சியுமே காரணம். அவர் மீது பல விமர்சனங்கள் கூறப்பட்டாலும் எனக்கு அவர் என்றுமே மாஸ்டர் தான். "Take a bow master!"



டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. PF ஊழல் தொடர்பாக வெளிவந்த ஒரு செய்தியில் தவறுதலாக நீதிபதி P.B.சவந்த் அவர்களை சுமார் பதினைந்து நொடிகள் காட்டியது டைம்ஸ் தொலைக்காட்சி. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி மன்னிப்பு கேட்க கோரி ஒரு கடிதத்தை அனுப்பினார். அதனை உதாசீனப்படுத்திய தொலைக்காட்சி மன்னிப்பு கேட்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் பூனா நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அந்த தொலைக்காட்சிக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. அதனையே இப்பொழுது உச்ச நீதி மன்றமும் அளித்துள்ளது. இது பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்தால் மகிழ்ச்சி.



கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸின் நிலைமை கவலை அளிக்கிறது. சென்ற முறை இந்தியா சென்ற பொழுது சென்னையிலிருந்து மும்பை மற்றும் சென்னையிலிருந்து பெங்களூர் மற்றும் சென்னையிலிருந்து திருச்சி என்று ஐந்து முறை இதில் பயணம் செய்தோம். ஜெட் ஏர்வேஸ் அளவிற்கு இல்லாவிட்டாலும் உபசரிப்பு மற்றும் பராமரிப்பு இரண்டுமே நன்றாக இருந்தன. விரைவில் கடனிலிருந்து மீண்டு வர வாழ்த்துக்கள்.



வர வர இந்த நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளில் பேசுபவர்களின் அலம்பல் தாங்க முடியவில்லை. ஒரு பெண் மறுக்கிறேன் என்பதற்கு ஆமோதிக்கிறேன் என்கிறார். ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஒரு வானொலி அறிவிப்பாளர் ஒருவருக்கு "துடுப்பு" என்ற வார்த்தைக்கு பொருள் தெரியவில்லை. சரி தமிழுக்கு தான் இந்த கதி என்றால் ஆங்கிலம் பேசுபவர்களும் ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக பேசுகிறார்கள். ஒருவர் பயங்கர ஸ்டைலாக அமெரிக்க உச்சரிப்பில் "between three of us" என்கிறார். மற்றொருவர் "My wife and me went there" என்கிறார். காது கொடுத்து கேட்க முடியவில்லை. தமிழும் தெரியாத, ஆங்கிலமும் தெரியாத ஒரு சமூகத்தை தான் இந்த நூற்றாண்டில் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இதில் கொடுமை ஆங்கிலம் தவறாக பேசும் பொழுது வருவது வெட்கம். தமிழை தவறாக பேசும் பொழுது வருவது பெருமை.



உங்களில் பலர் ஸ்டீஃபென் கோவே எழுதிய சக்தி வாய்ந்தவர்களின் ஏழு பழக்கங்கள் (7 Habits of Highly Effective People) என்ற நூலை படித்திருப்பீர்கள். அவர் அந்த புத்தகம் படிக்கும் அனைவரையும் ஒரு கேள்வி கேட்கிறார். உங்கள் மரணத்திற்கு பின்னர் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அதனை யோசித்து அப்படி ஒரு வாழ்க்கை வாழ சொல்கிறார். சில நாட்களாகவே நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். வாழ முடியுமா என்று பார்க்க வேண்டும்.



நடிகர் விஜயின் படங்கள் முன் பின் இருந்தாலும் அவரது பட பாடல்களுக்கு நான் பெரிய விசிறி. இப்பொழுதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் யூத், ஷாஜஹான் போன்ற மொக்கை படங்களை கூட பாடல்களுக்காகவே பார்ப்பேன். எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல் தவிர்த்து வேறு யாரும் விஜய் அளவிற்கு ஹிட் பாடல்கள் கொடுத்ததில்லை என்றே நினைக்கிறேன். யூத் படத்தில் "சகியே! சகியே!" பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் இது தான் எனது ஃபேவரைட். பார்த்து கேட்டு மகிழுங்கள்.



2 Comments:

shortfilmindia.com said...

இண்ட்ரஸ்டிங்.. உங்கள் பதிவுகளில் யுடான்ஸ் ஓட்டுப்பட்டையை நிறுவி உங்கள் ஆதரவை அளியுங்கள்.

கேபிள் சங்கர்

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கேபிள் சங்கர். இந்த வார இறுதியில் உடான்ஸ் பட்டையை வைக்க முயற்சி செய்கிறேன்.