Wednesday, December 30, 2009

2009 தமிழ் படங்கள் ஒரு பின்னோட்டம்



டாப் ஐந்து கமர்ஷியல் படங்கள்:

1. நாடோடிகள்
2. அயன்
3. பேராண்மை
4. வேட்டைக்காரன்
5. ஆதவன்

டாப் ஐந்து வித்தியாசமான படங்கள்:

1. பசங்க
2. அச்சமுண்டு அச்சமுண்டு
3. யாவரும் நலம்
4. ஈரம்
5. வெண்ணிலா கபடி குழு

டாப் ஐந்து தழுவிய படங்கள்:

1. உன்னை போல் ஒருவன்
2. யோகி
3. வாமணன்
4. கண்டேன் காதலை
5. நினைத்தாலே இனிக்கும்

டாப் ஐந்து மொக்கை படங்கள்:

1. கந்தசாமி
2. குரு என் ஆளு
3. தோரணை
4. வில்லு
5. படிக்காதவன்

எனது மனம் கவர்ந்த படம்:

சிவா மனசுல சக்தி

Thursday, October 22, 2009

எனக்கு மட்டும் ஏன்?

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

திவ்யாவை மீண்டும் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை. எட்டு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். எனது அலுவலகத்தில் எனது குழுவில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாள் திவ்யா. அவளை அழைத்து வந்த எனது டேமேஜர் அவளது பெயரை மட்டும் கூறி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். முதலில் பார்த்த பொழுது அவளது கண்களில் ஒரு வித மிரட்சி தெரிவதை போல இருந்தது எனக்கு. சிறிது அலட்சியத்துடனேயே என்னை நான் அறிமுகம் செய்து கொண்டேன். அப்பொழுது நான் டீம் லீட் என்பதால் அவளிடம் சிறிது பந்தாவும் செய்து கொண்டேன்.

அடுத்த நாள் ஒரு கலந்தாய்வு இருந்தது. எனது டேமேஜர் திவ்யாவையும் அழைத்து செல்லும் படி கூறினார். அவளது இருப்பிடத்தை தேடும் பொழுது தான் தெரிந்தது அவள் பொட்டி தட்டுபவள் இல்லை. எங்கள் எல்லாருக்கும் பெரியாத்தாவாக சேர்ந்திருக்கிறாள் என்று. உடனே எனது அலட்சியம் மிரட்சியாக மாறிப் போனது. அவளை பற்றி சிறிது விசாரித்த பொழுது அவள் CA, MBA என்று தெரிந்தது. CA வில் இந்திய அளவில் மூன்றாவது ரேங்க். MBA படித்தது IIM B. மேலும் அவள் கண்களில் முன்னர் தெரிந்தது மிரட்சி அல்ல, அவளது முழியே அப்படி தான் என்பதும் விசாரித்ததில் தெரிந்தது. நாங்கள் சுமார் 200 பேர் அவளது கீழ் வேலை செய்யப் போகிறோம்.

பெண் டேமேஜர்கள் என்றாலே எனக்கு கிலி. முன்னரே மாண்டவி சிங் என்று ஒரு டேமேஜரிடம் செருப்படி வங்காத குறையாக ஓராண்டு காலம் தள்ளோ தள்ளென்று தள்ளினேன். இப்பொழுது தான் ஒருவழியாக ஒரு ஆண் டேமேஜர் கிடைத்தார். கிடைத்த ஒரு மாதத்தில் இப்படி ஒரு இடி. சனி பகவான் எனக்காக ஒவர் டைம் செய்கிறார் என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு என்ன?,

செல்லாத்தா! செல்ல மாரியாத்தா!
எங்கள் சிந்தையில் வந்து அரை விநாடி நில்லடி நீ ஆத்தா.

கண்ணாத்தா! உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லடி நீ ஆத்தா.

போன்ற சில பல பாடல்களை பாடி அவளது நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற பாடுபட்டேன். மம்மியை பார்த்த மாண்புமிகுவை போல பம்மினேன். பைக்கில் எட்டெல்லாம் போட்டு காண்பித்தேன். ம்ஹூம்........... ஒன்றும் உதவவில்லை.



"ஒரு டீம் லீட்னா ரெஸ்பான்ஸிபிலிட்டி வேணாம்? இப்படியா பொறுப்பில்லாம இருக்கிறது?"

"மீட்டிங்க்கு நோட் பேட், பேணா எடுத்துட்டு வரனும்னு தெரியாதா?"

"நாளைக்கு டெப்லாய்மென்ட். இன்னிக்கு வந்து இந்த கேள்விய கேக்கறீங்க. முன்னாடியே கேட்டு தொலைக்க வேண்டியது தானே?"

"கிளையன்ட் கிட்ட என்ன சொல்லனும்னு ஒரு விவஸ்தையே கிடையாதா?"

இப்படி அவள் என்னை கேவலமாக திட்ட. நான் அவளிடம் திட்டு வாங்க. மீண்டும் அவள் என்னை மிகவும் கேவலமாக திட்ட. நான் மீண்டும் அவளிடம் திட்டு வாங்க. நான் ஸ்டாப் கொண்டாட்டம் தான். நானும் எனது குருநாதர் திரு. டெலெக்ஸ் பாண்டியனை மனதில் நினைத்துக் கொண்டு இதையெல்லாம் ஒரு ஜாலியாகவே எடுத்துக் கொண்டு போய்க்கொண்டே இருப்பேன்.

அந்த ஆண்டு அப்ரைசலில் ஒரு பதினோரு பேர் மூத்திர சந்திற்கு என்னை அழைத்து சென்று ஒரு மூனு மணி நேரம் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடி பின்னி மூனே முக்கால் ரூபாய் இன்க்ரிமென்ட் கொடுத்தனுப்பினார்கள். டாக்ஸ் போக மாதம் இரண்டே கால் ரூபாய் அதிகம் வரும் என்ற கூடுதல் தகவல் இங்கே தரப்படுகிறது.

அப்பொழுது என் வயிற்றில் பீர் வார்த்தது போல ஒரு செய்தி வந்தது. எங்கள் குழுவில் மூவரை தேர்ந்தெடுத்து வேறு ஒரு குழுவிற்கு மாற்றல் செய்கிறார்கள் என்று. நான் உடனே சென்று எனது டேமேஜரிடம் என்னையும் மாற்றல் செய்யுமாறு கோரிக்கை விடுத்தேன். புதிய டெக்னாலஜி, டொமைன் என்று பீலா விட்டு அவரை ஏமாற்றினேன். அவரும் அதற்கு பரிந்துரை செய்து எனக்கு மாற்றலும் வந்தது.

மாற்றல் வந்த உடன் முதல் வேலையாக நமது பெரியாத்தாவிடம் சென்று எனது மாற்றலை பற்றி கூறி விடலாம் என்று சென்றேன். அங்கு போனால், எனது டேமேஜரும் அங்கிருந்தார். அங்கு போன பிறகு தான் எனக்கு தெரிந்தது மாற்றலாகி போகும் மூவரில் பெரியாத்தாவும் ஒருவர் என்று. கடவுளே!....... நமக்கு யாரும் வெளியிலிருந்து ஆப்பு வைக்க வேண்டாம். நாமாக ஆப்பு இருக்கும் இடங்களை தேடி சென்று உட்கார்ந்து கொள்கிறோம்.

அப்படி இப்படி என்று ஒரு வழியாக இரண்டாண்டுகள் ஓட்டி விட்டேன். ஒரு நாள் பெரியாத்தா எங்களிடம் வந்து தனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதாகவும் தான் அமெரிக்கா போகப் போவதாகவும் குறிப்பிட்டார். அவர் கிளம்பிய நாளில் நான் குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யுமாறு என் தந்தையிடம் கூறினேன். தோஷம் நீங்கி விட்டதல்லவா.

நானும் அடுத்த இரண்டாண்டுகளில் கேக்ரான் மேக்ரான் கம்பெனியின் கிளை ஒன்று அமெரிக்காவில் இருப்பதாக கேள்விப்பட்டு கண்டவன் காலில் எல்லாம் விழுந்து ஒரு வழியாக அமெரிக்கா வந்து சேர்ந்தேன். முதல் நாள் வேலைக்கு சென்று, புதிய டேமேஜரை பார்த்து "மேய்ன் கஜாகா தோஸ்த் ஹூன்." என்றேன். அதற்கு அவர் "மீரு எவரு? நாக்கு தெல்லிதே" என்று மஹா ப்ரஸாதத்தை கையில் கொடுத்தார். பின்னர் தான் தெரிந்தது இனி நானே வேலை தேடி, வேலைக்கு சேர்ந்து, மாதம் பணத்தை வாங்கி அதை கேக்ரான் மேக்ரான் கம்பெனியின் முதலாளியிடம் கொடுத்து பின்னர் அவர் அதிலிருந்து பிட்டு தரும் பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று. திரும்பி இந்தியா செல்லலாம் என்றால் தங்கமணியின் பூரிக் கட்டையை தாங்கும் சக்தி என்னுடம்பில் இல்லாததால் ஒப்புக் கொண்டேன்.

பின்னர் ஒரு வழியாக ஒரு ஏமாந்த சோனகிரியை பிடித்து நான் வானத்தை வில்லை வளைப்பேன் என்றும், மணலை கயிறாய் திரிப்பேன் என்றும் கூறி ஒரு வேலையை வாங்கி இன்று தான் எனது முதல் நாள். வென்டார் மேனேஜ்மென்ட் ரெப் என்னை அழைத்து சென்று ஒவ்வொருவராய் அறிமுகம் செய்து கடைசியில் எனது கிளையன்ட் டேமேஜரை அறிமுகம் செய்து வைத்தார்.

"This is Divya Reddy. You will report to her and she will be taking care of you while you are here."

எனக்கு அவள் சொன்னது எதுவுமே காதில் விழ வில்லை. காலையில் தொலைப்பேசியில் அம்மா சொன்னது மட்டுமே மனதிற்குள் அசிரீரியாக ஒலித்தது. "இன்னிக்கு சனி பெயர்ச்சி. அதான் திரு நள்ளாறு கோவிலுக்கு போய்ட்டு வந்தோம்."

சொல்லுங்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

Monday, September 21, 2009

New York, Munich, UPO

சமீபத்தில் நான் பார்த்த மூன்று படங்கள் தான் இவை. இம்மூன்று படங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. மூன்றுமே திவிரவாதத்தினால் பாதிக்கபட்ட கதாபாத்திரங்களினால் உருவாக்கப் பட்டவை.

நியூயார்க் :

தனது டாக்ஸியில் தனக்கே தெரியாமல் வைக்கப்பட்ட உயிர் கொல்லி ஆயுதங்களுடன் ஓமர் (Neil) FBI யால் கைது செய்யப்படுவதுடன் தொடங்குகிறது படம். FBI அதிகாரியான ரோஷன் (Irfan Khan) தனது விசாரணையில் இது வேண்டுமென்றே தங்களால் புனையப்பட்ட நாடகம் என்றும் ஓமரின் நண்பனான சமீர் ஷேக் (John Abraham) என்ற தீவிரவாதியை ஓமரை கொண்டு வேவு பார்க்கவே இந்த நாடகத்தை நடத்தியதாக கூற தனது நண்பனை இந்த அவப் பெயரிலிருந்து மீட்க ஓமர் FBI யின் under-cover agent ஆக செயல்பட ஒப்புக்கொள்கிறான்.

பின்னர் படம் பின்னோக்கி ஒமர், சமீர் மற்றும் மாயா (Katrina Kaif) ஆகியோரின் கல்லூரி காலத்திற்கு பயணிக்கிறது. அழகான கல்லூரி, அதனை விட அழகான பெண், அதனினும் அழகான ஒரு காதல், பின்னர் காதல் தோல்வி, பின்னர் பிரிவு என்ற வழக்கமான கதையினை அரை மணி நேரத்தில் அருமையாக சொல்லி இருக்கிறார்கள். தனது காதல் தோல்வியில் மனமுடைந்து அமெரிக்காவை விட்டு இந்தியா திரும்பும் ஓமர், பின்னர் மீண்டும் அமெரிக்கா வந்து டாக்ஸி ஓட்டுகிறான். 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு அவன் சமீரையும் மாயாவையும் பார்க்கவே இல்லை.

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு விருப்பமே இல்லாமல் மீண்டும் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு வருகிறது. அவனுக்கு ஒரு பொய்யான புதிய அலுவலகமும், பொய்யான புதிய வேலையும், பொய்யான ஒரு கதையும் FBI அதிகாரிகளால் அளிக்கப்படுகின்றன.

பின்னர் அவனுக்கு சமீர் உண்மையாகவே ஒரு தீவிரவாதி என்று தெரிய வரும் பொழுது அதிர்ச்சி அடைகிறான். 2001 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் சமீர் FBI அதிகாரிகளால் தவறாக கைது செய்யப் படுகிறான். சுமார் 10 மாதங்கள் சிறையில் சொல்ல முடியாத அளவுக்கு துண்பத்தை அனுபவிக்கும் அவனுக்கு வெளி வந்த பின்னர் FBI அதிகாரிகளை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது. அதன் முடிவு அவனது தீவிரவாத பாதை.

முடிவில் ஓமரின் துணை கொண்டு சமீர் மீண்டும் ஒரு பேரழிவை செய்யாமல் காக்கிறது FBI. சமீரும் மாயாவும் கொல்லப் படுகின்றனர். அவர்களது மகனை ஓமர் தத்தெடுத்து வளர்க்கிறான்.

முதல் படமான நியூயார்கை பொருத்தவரை அதன் செய்தி "Crisp & Clear". தீவிரவாதத்திற்கு எதிரான செயல் பாடு என்று வரும் பொழுது ஒரு சில அப்பாவிகள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். அதனை எல்லாம் Collateral Damage என்று எடுத்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான். அப்படி செய்யாமல் அப்பாவிகள் பாதிக்கப் படுகின்றார்களே என்று "குய்யோ முறையோ" என்று கத்தினால் ஆப்பு நமக்கு தான். இந்த விஷயத்தில் உலக நாடுகள் அனைத்துமே அமெரிக்காவை பின்பற்ற வேண்டும் என்று தான் சொல்வேன்.

Munich :

நீண்ட நாட்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த படம். பாலஸ்தீன தீவிரவாதிகளால் 1972 ம்யூனிக் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளின் போது கொல்லப்பட்ட 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்காக இஸ்ரேலின் பழிவாங்கும் பதில் நடவடிக்கை தான் படம். ம்யூனிக் மஸ்ஸகர், ஆபரேஷன் ஸ்ப்ரிங் ஆப் யூத், ஆபரேஷன் வ்ராத் ஆப் காட் இவற்றை கருவாக கொண்டு அட்டகாசமாக எடுக்கப்பட்ட படம்.

பதில் நடவடிக்கை மொசாத் ஏஜன்டான ஆவ்னரிடம் (Eric Bana) ஒப்படைக்கப் படுகிறது. அவனுக்கு நான்கு பேர் கொண்ட ஒரு டீமும் தரப்படுகிறது. ஒவ்வொரு தீவிரவாதியாக கண்டு பிடித்து எப்படி அவர்கள் கோல்லுகிறார்கள் என்பது தான் கதை. படம் அருமையாக எடுக்கப்பட்டு இருந்தது.

உன்னை போல் ஒருவன் :

நேற்று முன் தினம் தான் இந்த படம் பார்த்தேன்.

"Black, Cheeni Kum, Chak De India, Swades, Tare Zameen Par போன்ற படங்களை பார்க்கும் போது இதை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்குள் எழுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனை போன்ற திரைப் படங்களை தான் நான் தங்களிடம் எதிர் பார்க்கிறேன்."

இது எனது தசாவதார விமர்சனத்தில் நான் எழுதியது. எனது ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக உன்னை போல் ஒருவன் அறிவிப்பு வந்த உடனே மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். படத்தினை ஆவலுடன் எதிர் பார்த்தேன். படம் அந்த ஆவலை ஓரளவிற்கு நன்றாகவே பூர்த்தி செய்திருக்கிறது.

படத்தின் தொடக்கத்தில் அனுபம் கேரால் "Bastard" என்று அறிமுகப்படுத்தப்படும் நஸ்ருதீன் ஷாவை, மோஹன் லாலால் "Tsunami" என்று அறிமுகப்படுத்தப்படும் கமலாக மாற்றியதிலேயே எவ்வளவு அழகாக தமிழ் படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. மற்றபடி படம் 99 சதவிகிதம் காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம் ஒரிஜினல் படத்தின் கார்பன் காப்பி. மீதம் உள்ள ஒரு சதவிகிதம் கமலின் அரசியல் :-) மற்றும் இறுதிக் காட்சி வசனங்கள்.

எனக்கு இரண்டுமே பிடிக்கவில்லை. "இடம் வலம் பேதம் இல்லை", "ராம, கிருஷ்ண, லால் கிருஷ்ண" போன்ற ஒரு சிலவற்றை ரசித்தாலும், கமல் முடிவில் தீவிரவாதிகளை கொன்றாலும், தீவிரவாதத்திற்கு பதில் தீவிரவாதமே என்று உரைத்தாலும், ஏனோ படத்தில் கமல் தீவிரவாதம் பிறப்பதற்கு காரணம் மதக் கலவரங்களே என்று கூறுவது போலவே எனக்கு தோன்றுகிறது. அது உண்மை என்றால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு என்ன காரணம்?

உண்மையில் தீவிரவாதம் பிறப்பதற்கு நாம் காரணம் தேடுவதில் பொருளே இல்லை. மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பெற்ற கூலி சுமார் 2000 அமெரிக்க டாலர்கள். அவ்வளவுதான் தீவிரவாதத்தின் விலை.

இறுதிக் காட்சி வசனங்களை பொருத்த வரை நிச்சயமாக ஒரிஜினல் இன்னும் அருமையாக இருக்கும். அது தீவிர வாதத்திற்கு ஒரு புண்ணாக்கு காரணமும் கற்பிக்காது. மேலும் நஸ்ருதீன் ஷாவின் கதாபாத்திரம் ஒரு விதமான சர்காசத்துடனேயே படம் முழுதும் வெளிப்படும். அதுவும் இதில் இல்லை. ஒரு பக்கா வில்லன் செய்திருக்க வேண்டிய பாத்திரம் இது. கமல் செய்ய வேண்டிய பாத்திரமே இது அல்ல.

மற்றபடி படத்தின் நிறை என்று பார்த்தால் மோஹன் லால், அனுஜா ஐயர், லக்ஷ்மி, மற்ற இரு போலீஸ் கதா பாத்திரங்கள் அன்று அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். எடிட்டிங், இசை மற்றும் ஒளிப்பதிவு அருமை. மொத்தத்தில் நீங்கள் ஒரிஜினல் பார்க்கவில்லை என்றால் இது ஒரு அருமையான அனுபவம் தரும் படமாக அமையும்.

மேலே குறிப்பிட்ட மூன்று திரைப்படங்களுக்கும் சற்றும் தொடர்பில்லாத ஒரு செய்தி.

அறிஞர் அண்ணாவின் 101ஆவது பிறந்த நாள் மற்றும் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா இவற்றை ஒட்டி கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஒன்பது அல் உம்மா தீவிரவாதிகள் தங்களது தண்டனை காலம் முடியும் முன்னரே சிறையிலிருந்து விடுதலை.

Monday, September 07, 2009

வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்!

நேற்று இரவு வெளியிடப்பட்ட தேசிய விருது பட்டியலில் காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக மூன்றாவது முறையாக தேசிய விருதை பெற்றிருக்கிறார் திரு. பிரகாஷ்ராஜ். இதற்கு முன்னரே இருவர், அந்தப்புரம் ஆகிய படங்களுக்காக இரு முறை இந்த விருதை இவர் பெற்றிருக்கிறார். மூன்றாவது முறையாக இதனை பெற்றதன் மூலம் மூன்று முறை தேசிய விருது வாங்கிய மம்முட்டி, மோஹன்லால், நஸ்ருதீன் ஷா போன்றவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இவர் கூடிய விரைவில் நான்காம் முறையாக விருதினை வாங்கி நம்மவர் கமலஹாசனுக்கு பிறகு அதனை நான்காம் முறை பெற்ற ஒரே நடிகர் என்ற பட்டியலிலும் சேர வாழ்த்துகிறேன்.

Friday, September 04, 2009

Status Update

இந்த மே மாதம் கடைசி வாரத்தில் திருச்சியிலிருந்து அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அக்டோபர் கடைசியில் திரும்பி செல்கிறார்கள். அவர்களுக்கு இதுவே முதல் அமெரிக்க பயணமானதால் பல இடங்களையும் சுற்றி காமித்து வருகிறோம். நியூயார்க், அட்லாண்டிக் சிடி, வாஷிங்டன் டிசி, நயாகரா, பிட்ஸ்பர்க் என்று வார இறுதிகளில் ஊர் பயணங்களாகவே இருக்கின்றது.

சென்ற ஆண்டு மாமனாரும் மாமியாரும் வந்திருந்தார்கள். அப்பொழுதும் இது போலவே ஊர் பயணமாகவே இருந்தது. வார நாட்களில் அலுவலகத்தில் ஓய்வு, வார இறுதியில் கார் ஓட்டும் வேலை என்று நானும் தங்கமணியும் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். வார இறுதியில் கார் ஓட்ட வேண்டும் என்று நினைத்தாலே கடுப்பாக இருந்தாலும் பெற்றோர் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சிக்காகவே அதனை பொருட்படுத்த முடியவில்லை. அதிலும் குறிப்பாக நயாகரா சென்ற பொழுது அங்கு எனது அப்பா அம்மாவிடம், "இதை எல்லாம் நான் பள்ளியில் பாடத்தில் படித்தது. இங்கு வருவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை." என்று கூறிய பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சென்று வரும் ஒவ்வொரு இடத்தினை பற்றியும் அவர் குறிப்பெடுத்துக் கொள்கிறார். தேதி வாரியாக ஊரின் பெயர், போகும் வழி, அந்த ஊரின் பெருமை என்று அந்த பட்டியல் பெரிதாக இருக்கிறது.

பெற்றோர்கள் வந்திருக்கும் செய்தி கேட்ட உடனே அனைவரும் கேட்பது ஏதேனும் விசேஷமா? என்பது தான். "ஏன் ஐயா! பெற்றோர்களை அழைத்தாலே அது ஆயா வேலை செய்வதற்காகத் தான் இருக்க வேண்டுமா? ஊர் சுற்றி பார்க்க, நம்முடன் சில நாட்கள் தங்க அவர்களை அழைக்க கூடாதா?" என்று கேட்க தோன்றுகிறது. என்ன செய்வது அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்களை போலவே மற்றவர்களையும் நினைக்கிறார்கள்.

அவர்கள் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கின்றது. நல்லபடியாக நோய் நொடி இல்லாமல் பத்திரமாக அவர்கள் இந்தியா சென்று சேரும் வரை எனக்கு மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போலவே இருக்கும்.

Monday, August 10, 2009

Quick Gun Murugan

மக்களே பதிவுலகில் வலம் வந்து நெடு நாட்கள் ஆகிவிட்டபடியால் இதனை பற்றி யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் என் பங்கிற்கு இவரை பற்றி சொல்லி விடுகிறேன். இவர் தான் "Quick Gun முருகன்".





Image Copyright © 2009 Fox Star Studios India Pvt. Ltd. All rights reserved.



தென் இந்திய கௌ பாயான குவிக் கன் முருகனுக்கும், ரைஸ் ப்ளேட் ரெட்டியான நாசருக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை. குவிக் கன் முருகனாக நடித்துருப்பது டாக்டர் ராஜெந்திர பிரஸாத் என்று IMDB கூறுகிறது. இவரை பார்த்தால் பழைய கமல், ரஜினி படங்களில் வில்லனாக நடித்தவர் போல தோன்றுகிறது. இதில் மேங்கோ டோலியாக நம் தொடையழகி ரம்பாவும் இருக்கிறார்.

Fox Studios தயாரிப்பில் இது ஹிந்தியில் வெளியிடப்படும் என்று நினைக்கிறேன். Youtube இல் தேடிப் பார்த்ததில் ஒரு சில தமிழ் வசனங்களையும் கேட்க முடிகிறது. Youtube இல் இருக்கும் பல படக் காட்சிகள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படம் அட்டகாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வெளியீடு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Promo க்கள் எல்லாம் நகைச்சுவையுடன் இருந்தாலும் படம் ஏதேனும் ஒரு ஸீரியஸான விஷயத்தை பற்றி கூறும் என்றே நினைக்கிறேன். தென் இந்திய கௌ பாய் என்பது ஒன்றும் நமக்கு புதிது இல்லை. தலைவரின் தாய் மீது சத்தியம் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். இருந்தாலும் இந்தப் படம் ஒரு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

முன்னரே லவ் ஆஜ் கல், நியூ யார்க், உன்னை போல் ஒருவன், கந்த சாமி, ஆயிரத்தில் ஒருவன் என்று நீண்டு கொண்டிருக்கும் பட்டியலில் இதுவும் சேர்க்கப்படுகிறது. நான் இருக்கும் இடத்தில் படம் வெளி வருமா என்பது தெரியவில்லை. வெளியிடப்படாவிட்டால் DVD யில் மட்டுமே பார்க்க முடியும்.

படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, July 29, 2009

வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன்.

வணக்கம் நண்பர்களே!,

நலமா? உங்களை எல்லாம் சந்தித்து பல மாதங்களாகிறது. பெரிதாக ஒன்றும் காரணம் இல்லை. ஒரு விதமான சோம்பல். அதனால் ஒரு சிறிய இடைவெளி. அவ்வளவே.

இந்த இடைவெளியில் வாழ்க்கையில் ஒன்றும் பெரிதாக மாறுதல் ஏற்படவில்லை. முன்போலவே சுவையானதாக இருக்கின்றது. சில புதிய நண்பர்களை பெற்றேன். ஆன்மீகத்தில் சிறிது நம்பிக்கை கூடியது. வியாழன் தோறும் ஷீரடி சாயி பாபா கோவிலுக்கு சென்று பஜனையில் கலந்து கொள்கிறேன்.

நீண்ட நாள் இடைவெளி விட்டு சந்திக்கும் பொழுது வெறும் கையுடன் சந்திக்க வேண்டாம் என்பதற்காக நான் சென்ற ஆண்டு நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்த பொழுது எடுத்த சில படங்களை இணையத்தில் சேர்த்துள்ளேன்.

கிழே உள்ள சுட்டியில் அவற்றினை நீங்கள் பார்க்கலாம்.

நியூசிலாந்து படங்கள்

இன்னும் ஓரிரு வாரங்களில் எனது நியூசிலாந்து பயணத்தினை பற்றிய ஒரு சிறு பதிவினை எழுதுகிறேன்.

இவன்,
சத்யப்ரியன்

Monday, February 23, 2009

ஆஸ்கார் மேடையில் முழங்கிய இந்திய மொழிகள்

நேற்று அனைவரும் 2008 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை பார்த்திருப்பீர்கள். ரசுல் பூக்குட்டி "ஓம்" அன்று முழங்கியதும், நம்மவர் ரெஹ்மான் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தன்னடக்கத்துடன் கூறியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.





பின் சேர்த்தது: பதிவை முதலில் எழுதிய பொழுது வேறு புகைப்படங்களை சேர்த்திருந்தேன். இப்பொழுது இவ்விரு ஓவியங்களையும் பார்த்த பொழுது பதிவிற்கு பொருத்தமாக இருக்கவே மாற்றி விட்டேன்.

Saturday, January 31, 2009

அஞ்சலி!!!

Thursday, January 01, 2009

Happy New Year!!



நண்பர்களே! நலமா? உங்களை எல்லாம் சந்தித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. சமீபத்தில் தான் நியூசிலாந்திற்கு குடும்பத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். அதனை பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

இப்பொழுது அனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.