Friday, December 28, 2007

பேரூந்துப் பயணங்களின் சில நினைவுகள்


பேரூந்து எனக்கு அறிமுகமானது சிறிய வயதிலேயே என்றாலும் அது எனது வாழ்வில் ஒரு அங்கமானது நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த உடன் தான். திருச்சியில் உடையாண்பட்டி என்ற கிராமத்தில் தான் நான் வசித்து வந்தேன். அது K.K. நகரிலிருந்து ஓலையூர் செல்லும் வழியில் இருக்கிறது. அங்கிருந்து நான் படித்த E. R. பள்ளி சுமார் 22 கிலோ மீட்டர்கள் தொலைவு. பேரூந்தில் தான் செல்ல வேண்டும். சுமார் ஒரு மணி நேர பயணம். அத்தகைய பயணங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் ஒரு பதிவில் அடக்கி விட முடியாது.


நான் தினமும் செல்லும் 117 எண் தனியார் பேரூந்து பல பள்ளிகளின் வழி செல்லும் என்பதால் எங்கள் கிராமத்தில் இருந்து எனது நண்பர்கள் பலரும் அந்த பேரூந்தில் தான் வருவார்கள். நாங்களும் முன் தின இரவின் கிரிக்கெட் விளையாட்டை பற்றி பேசிக்கொண்டு போவோம். பல நேரங்களில் சினிமா பற்றியும் பேசுவோம். சில நேரங்களில் எங்களுடன் வரும் 11 ஆவது, 12 ஆவது படிக்கும் அண்ணன்களின் காதலுக்கு பேரூந்தின் முன்னால் நின்றுகொண்டிருக்கும் அக்காக்களிடம் தூது செல்வதும் உண்டு. தூது என்றால் பெரிதாக வேறு ஒன்றும் இல்லை. "அக்கா! அந்த அண்ணன் கூப்பிடறாரு.", என்பதுடன் சரி. இன்னும் சில நேரங்களில் கடிதப் பரிமாற்றங்களும் நடக்கும். இதை எல்லாம் அன்று மாலை விளையாடும் பொழுது 'கிசுகிசு' வாக தூது சென்றவன் கூற மற்ற அனைவரும் தெரிந்து கொள்வோம்.


பேரூந்தில் தினமும் பயணம் செய்யத் தொடங்கிய அந்நாட்களில் எங்களுக்கெல்லாம் ஹீரோ என்றால் அது பேரூந்து ஓட்டுனர்கள் தான். அவர்களுடன் பேசுவதும், எவ்வளவு இடம் காலியாக இருந்தாலும் பேனட்டில் அமர்ந்து பயணம் செய்வதும், ஹாரன் அடிப்பதும் மிகப் பெரிய சாகச செயல்கள். ஒரு நேரத்தில் ஒரு பேரூந்திற்கு மேல் செல்ல முடியாத அன்றைய பாலக்கரை, உறையூர் சாலைகளில் வேறு ஒரு பேரூந்தை எங்கள் வண்டி முந்திவிட்டால் போதும் உலகையே வெற்றி கொண்ட மகிழ்ச்சி எங்களுக்கு வந்து விடும். அதே நேரத்தில் எங்கள் வண்டியை வேறு பேரூந்துகள் முந்தி விட்டால் அவ்வளவு தான். ஓட்டுனரை அந்த பேரூந்தை மீண்டும் முந்தும் வரை நாங்கள் விட மாட்டோம். அவ்வாறு முந்தும் வரை எந்த நிறுத்தங்களிலும் நிற்காமல் செல்ல சொல்லுவோம். ஆனாலும் அவர் அவ்வாறு செய்யாமல் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்துவது எங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.



ஆனால் உண்மையில் அந்த பேரூந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் மனிதநேயம் மிக்கவர்கள்.


பாய்! இது செட்டியாரோட மூத்த பொண்ணுக்கு ஆறாவது மாசம். பெரிய ஆஸ்பத்திரிக்கு போகனும்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அதுனாலே வண்டிய அவங்க வீட்டு பக்கமா விடுங்க. திரும்பி வரும் போது ஒரு மணி டிரிப்லே வருவாங்க. கதிர் கிட்டயும் சொல்லிடுங்க.



வாத்தியார் ஐயா! நேத்திக்கு நீங்க உங்க பைய மறந்து விட்டுட்டு போய்ட்டீங்க போல. அதுலே டியூஷன் பணம் இருந்துதாமே. அதான் ராத்திரியே கோபால் கிட்ட குடுத்து வுட்டேன்.


அண்ணே! நம்ம தலையாரி ரெண்டு மூட்ட உமி எடுத்து வந்திருக்காரு. கொஞ்சம் மில்லோரமா வண்டிய நிப்பாட்டுங்க. பாவம் அவராலே இவ்வளோ தூரம் எடுத்துகிட்டு வர முடியாது.


மேலே குறிப்பிட்டுள்ள உரையாடல்கள் எல்லாம் 50 - 60 ஆண்டுகளுக்கு முன்னர் கேட்கப்பட்டவை அல்ல. மனிதம் செத்து விட்டாத ஒரு கிராமத்தில் 15 - 20 ஆண்டுகளுக்கு முன்னர் என்னால் கேட்கப்பட்டவை.



ஒரு விடுமுறை நாளில் அந்த பேரூந்து எங்கள் வீட்டின் அருகில் பழுதாகிவிட, பழுது பார்க்கும் ஓட்டுனருக்கும் நடத்துனர்கள் இருவருக்கும் எனது நண்பன் ஒருவன் அவனது வீட்டிலிருந்து இளநீர், மோர் அளித்து உதவி செய்தான். அதற்கு பிரதியுதவியாக அவர்கள் அவனை மட்டும் பேரூந்தில் ஏற்றி ஒரு 10 நிமிடங்கள் சுற்றி வரலாம் என்று அழைத்தார்கள். ஆனால் அவனோ அதை வேண்டாம் என்று சொல்லி, ஒரு கட்டு பயணச்சீட்டை காட்டி அதை தருமாறு வேண்டினான். ஆனால் அவர்கள் சிரித்துக் கொண்டே அதை தர மறுத்து விட்டார்கள். அது ஏன் என்பது எனது அறிவிற்கு எட்ட சில ஆண்டுகள் ஆனது. ஆனாலும் அன்று அவர்கள் அதை கொடுக்க மறுத்ததற்காக மிகவும் கோபம் கொண்டான். அவனது கோபத்தை போக்க இஸ்மாயில் அண்ணன் அவனை சமாதானம் செய்தது இன்றும் நினைவில் இருக்கிறது.



ஆண்டிற்கு ஒருமுறை பேரூந்து FC க்கு சென்று விட்டு வரும் பொழுது புத்தம் புதிதாக இருக்கும். ஆயுத பூஜை அன்றும் பேரூந்து சந்தனம் எல்லாம் பூசப்பட்டு அலங்கரிக்கப் பட்டு இருக்கும். அந்த இருநாட்களிலும் எங்களுக்கு சாக்லேட் தருவார்கள்.



அப்பொழுது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேரூந்தில் பயணம் செய்ய இலவச கடவுச்சீட்டு அளித்தது. அதனை பெறுவதற்கு நான் விண்ணப்பத்தில் எனது தந்தையின் கையொப்பத்தை பெற முயன்றேன். அதற்கு எனது தந்தை "அது ஏழை மாணவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகை. பேரூந்து பயணத்திற்கு பணம் செலவு செய்ய முடியாத நிலையில் நாம் இல்லை. நமக்கு அது வேண்டாம்." என்று கூறி விட்டார். அதனால் தொடர்ந்து தனியார் பேரூந்திலேயே பயணிக்க தொடங்கினேன்.



ஆனாலும் சில நேரங்களில் நண்பர்கள் பயணம் செய்வதால் நானும் அரசுப் பேரூந்தில் பயணம் செய்ய நேரிடும் பொழுது, இலவச பயண கடவுச்சீட்டை பயன் படுத்தும் எனது நண்பர்களை அரசு பேரூந்து நடத்துனர்கள் சிலர் மிகவும் கேவலமாக நடத்துவதை கண்டிருக்கிறேன். பேரூந்தில் இடம் இருந்தாலும் அவர்களை அமர அனுமதிக்க மாட்டார்கள். ஏதோ இவர்கள் சொந்த பணத்தில் அவர்கள் பயணம் செய்வது போல நினைத்து பல விதங்களில் அவமதிப்பார்கள்.



சிறிது வளர்ந்து மீசை முளைக்க தொடங்கிய உடன் படிக்கட்டில் தொங்குவது, ஓடும் வண்டியில் ஏறுவது, இறங்குவது என்று எங்கள் சாகசங்கள் வேறு பரினாமத்திற்கு சென்றன. இன்று நினைத்து பார்க்கும் பொழுது அதன் அபத்தங்கள் புறிகின்றன. ஆனால் அந்த வயதில் அவை அனைத்தும் சாகசங்களாக கருதப்பட்டன.


பள்ளியின் இறுதியாண்டில் பாடச்சுமைகள் அதிகமானதாலும், பல டியூஷன் வகுப்புகளுக்கு செல்ல நேர்ந்ததாலும் எனது தந்தை எனக்கு ஒரு TVS Champ வாகனம் வாங்கி கொடுத்தார். ஆனால் நானோ அந்த டியூஷன் வகுப்புகளுக்கு செல்லாமல் டியூஷன் ஃபீஸை மட்டும் எனது தந்தையிடம் பெற்றுக்கொண்டு அந்த வண்டியில் ஊர் சுற்ற தொடங்கினேன். இதனால் எனது பேரூந்து பயணங்கள் வெகுவாக குறைந்தன. எனது மதிப்பெண்களும் தான்.



பள்ளி முடிந்த பின்னர் கல்லூரி வாழ்விலும் சரி அதன் பின்னர் பெங்களூரில் அலுவலகத்தில் சேர்ந்த உடனும் சரி பேரூந்துடனான எனது தொடர்பு இற்றுவிடவில்லை. அவ்வளவு ஏன்?, இதோ இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் அலுவலகத்திற்கு தினமும் பேரூந்தில் தான் பயணிக்கிறேன். ஆனாலும் நன்றாக உடையனிந்து, நுணி நாக்கு ஆங்கிலம் பேசி, வரிசையில் நின்று, பேரூந்தில் ஏறிய உடன் ஓட்டுனருக்கு அந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகளை சொல்லி, இறங்கும் முன் நன்றி சொல்லி பயணிக்கும் இந்த சொகுசு பேரூந்து பயணத்தில்; பின்னால் பொதி மூட்டை போல புத்தகங்களும், கையில் சாப்பாட்டு கூடையும், எண்ணை வழிய படிய வாரிய தலையும், உடுத்தும் போது தும்பை பூ நிறத்தில் இருந்து உடுத்திய அரை மணி நேரத்தில் பழுப்பு நிறத்திற்கு மாறும் மாயாஜால சட்டை அணிந்து கொண்டு, சக பயணிகளிடம் திட்டும் சில சமயம் அடி கூட வாங்கி இன்னும் பல சாகசங்கள் செய்து மேற்கொண்ட அன்றைய பயணங்களின் சுகம் எங்கே என்று தேடுகிறேன்............. ஏரியல் சோப்பு விளம்பரம் போல "தேடினாலும் கிடைக்காது" என்கிறது அது.

Saturday, December 15, 2007

Billa……….


I can hear people screaming out there “Et tu Brutus”. I am afraid I’ve to say “Yes”. I watched the film today. Is this the review of the film? Me reviewing a film…….. No way… Let the people who are best at it do it. These are just my thoughts after watching the film.

The first thing that awestruck me was the richness in the film. Right from the introduction scene of David Billa, the mafia don, where he gets down from a black Mercedes AMG coupe till the end, the film is crammed with richness. It’s richness richness richness everywhere. In the forms of bimmers, jaguars, yachts, silk robes, couches, ray-bans, rolexes, costly sets, mind blowing locations and what more ??????????

At the intro scene I whispered to my wife, “Can I buy that car?” and she replied “Of course, only if you can cut the check for a 100K” wow………. That’s too much for me. Sometimes I feel I am poor.

For people who watched DCH way back in 2001 and still waiting for such a stylish rich film in Tamil, Billa ends their wait. Remember it's only stylish and rich and is no where near DCH. Forget DCH, it’s not even near Sharukh’s Don.

The next thing which impressed me in the film is the costumes. Director Vishnu’s wife has done a commendable job. Kudos to her. The third one is the background scoring. Yuvan rocks these days. But I should say this, he has let the songs go off…… Except “Vethalaiya Pottendi” no other song makes an impact.

The action sequences are great. The car chase and the fights over the bridge were shot extremely well and could well be a trend setter for the future Tamil films. Cinematographer Nirav Shah has done a remarkable job in those sequences.

After a long time I am seeing an action film of a big star with a script which demands the lead lady to accompany him in almost every scene. Nayanthara does a good job though only next to her predecessors Zeenat Aman, Sripriya and Priyanka Chopra. Vishnu seemed to have more confidence in Nayan's cleavages than her acting skills.

Prabhu as DSP Jai Prakash has done his job but ofcourse nothing greater than Iftikhar or Balaji or Boman Irani. The suspense factor added over Boman Irani and the surprise ending in Sharukh's Don are missing here. Vishnu has done a honest remake of the old Billa without attempting any experiments in the screenplay. However the Pran, Thengai Srinivasan, Arjun Rampal character has been trimmed in this film. Raguman comes as the interpol officer and also as villian.

I liked the sequences in which Prabhu trains Velu (Ajith). Velu's reactions and dialogues bring in some humour. Santhanam as Velu's friend also tries to stimulate our humour sense.

On the flip side, Ajith fails to create the same impact Sharukh created. It trepidates us more when the later kills the infiltrator with a golf ball than when the former kills him with a dagger. The lack of suspense factors in the screenplay makes it boring towards the end. Probably Vishnu would have thought people to expect those after watching Sharukh's Don and lack of them would itself be a suspense.

Namitha is as usual wasted. The girl who used to be with the villians in the film Pokkiri could have been used. She would have done a better job than Namitha in this film.

Twin Tower backdrop coming in every alternate scenes irritated me a lot.

After watching all the four versions of this great entertainer, I would rate them in the following way.



1. DON (Sharukh) -- For the stylish presentation and screenplay
2. DON (Amithab) -- For original screenplay
3. BILLA (Thalaivar) -- Ofcourse for Thalaivar
4. BILLA (Ajith) -- Read the post :-)



Today I needed to take care of my 5 year old nephew and when he was reluctant to watch a Tamil film in theatre I convinced him rather fooled him by saying this film was the most thrilling movie ever made in the history of the cinema. When the movie started, to my surprise, it turned out to be true. Isn't it watching a 3 hr long movie in the theatre alone most thrilling and haunting experience? I think I got ESP. What say?

Wednesday, August 15, 2007

இந்தியாவின் வயது அறுபது!!!


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் இந்தியப் போர்களைப் பற்றிய எனது தொடர் பதிவுகளை நமது சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.


1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8

Tuesday, June 19, 2007

முதலாம் ஆண்டு நிறைவு

சென்ற 2006 ஆம் ஆண்டு ஜனவரியில், நான் அமெரிக்கா வந்த உடன் ஏற்பட்ட ஒரு விதமான தனிமையால், என்ன செய்வது?; தமிழுடன், தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் விட்டுப் போன தொடர்பை மீண்டும் எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது? என்று அஞ்சிய பொழுது எனக்கு அறிமுகமானது தமிழ்மணம். அதற்கு முன்பு எனக்கு தமிழில் வலை பதிவுகள் இருப்பதே தெரியாது. ஒரு ஆறு மாத காலம் பிறர் பதிவுகளை படித்து மேய்ந்து கொண்டிருந்துவிட்டு, நாமும் ஏன் பதிய கூடாது? என்ற கேள்வி என்னுள் எழ பிறந்ததுதான் எனது வலைப்பூ. [டேய்! பரதேசி! அந்த கேள்விக்கு நான் வேண்டாம், வேண்டாம்னு கத்தினேனேடா!]

இதோ வலைப்பூ தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற்றது. பதிவுகளின் எண்ணிக்கை என்று பார்த்தால் 31 பதிவுகளை தான் பதிந்துள்ளேன் (இது 32 ஆவது பதிவு). சராசரியாக மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள். ஆனால் பதிவுகளின் எண்ணிக்கையோ அல்லது பின்னூட்டங்களின் எண்ணிக்கையோ என்னை மகிழ்விப்பதில்லை. நான் எழுதிய "கமல் ஒரு சகாப்தம்" என்ற பதிவு அதிகபட்சமாக 38 பின்னூட்டங்களை பெற்றது. ஆனால் நான் மிகவும் மனம் நொந்து பம்பாய் இரயில் குண்டு வெடிப்பிற்கு பின்னர் எழுதிய "ஒரு மகன், ஒரு கணவன், ஒரு சகோதரன் - ஒரு மரணப்போராட்டம்" என்ற பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை. "கமல் ஒரு சகாப்தம்" பதிவை திரட்டிய பூங்கா இதழ் எனது "குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்!" என்ற நேதாஜியைப் பற்றிய பதிவையோ அல்லது இந்தியப் போர்களைப் பற்றிய தொடர் பதிவுகளையோ ஒன்றை கூட திரட்டவில்லை. அதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் கூடத்தான். [அடங்குடா! நல்லா இருந்தா திரட்டி இருப்பாங்க. அதுக்காக கமல் பதிவு நல்லா இருக்குன்னு நினைச்சுக்காதே. பூங்காலே யாரோ ரஜினி ஃபேன் இருக்காங்க. கமல கேவலப்படுத்த வேற வழி இல்லாம உன்னோடத யூஸ் பண்ணி இருக்காங்க.]

இதற்கிடையில் தமிழ்மண நட்சத்திரமாக என்னை தேர்வு செய்து என்னை கை தூக்கி விட என் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் தமிழ்மண நிர்வாகத்தினர் எனது ஒப்புதலை கோரினர். ஆனால் நான் அன்புடன் மறுத்து விட்டேன். [இதெல்லாம் ஒவர் டா! அவங்க பாவம் என்னடா பன்னுவாங்க. இருக்கறது 100 பேர். வாரா வாரம் ஒருத்தர்னா உனக்கு ஒரு சான்ஸ் வந்து தானேடா ஆகனும். ஆனா ஒன்னுடா, வேணாம்னு சொன்னே பாரு, அதான் சூப்பர். ஏன் சொல்றேன்னா? நட்சத்திர பதிவர்னா முகப்புலேயே ஃபோட்டோலாம் தெரியுமாம். உன்னோட ஃபோட்டோலாம் போட்டா உருப்புட்ட மாதிரி தான்.] ஒரே வாரத்தில் ஏழு பதிவுகள் எழுத நேரம் ஒதுக்க முடியாததே காரணம். அதே பொழுதில் வாய்ப்பு கிடைத்து விட்டதே என்பதற்காக ஏனோ தானோ என்று பதிவுகள் பதிந்து கிடைத்த வாய்ப்பையும் அவர்களது நம்பிக்கையையும் வீணடிக்க நான் விரும்ப வில்லை. இதுவும் ஒரு காரணம். [சோம்பேறித் தனத்த எவ்வளோ பெருமையா சொல்றான் பாரு நாதாரி.]

எனது மன அமைதிக்காகவே பதிவு எழுதத் தொடங்கினேன். ஆனால் தமிழ் வலையுலகமோ அதனினும் அதிகமாக, மன அமைதியுடன் பல நல்ல நண்பர்களையும் சேர்த்துக் கொடுத்தது. வலையுலகின் மூலம் எனக்கு அறிமுகமான Syam, Priya, Arun Kumar, Adiya, மு.கா., வெட்டிப்பயல், CVR, Radha Sriram, மணி ப்ரகாஷ், மாயவரம் சிவா, ஷைலஜா போன்றவர்களின் நட்பை சம்பாதித்ததில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களில் Syam, Priya தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளில் நான் அதிகம் பின்னூட்டியதில்லை. ஆனாலும் அவர்கள் எனது பதிவை படித்து பின்னூட்ட தவறியதில்லை. [டேய் பேரிக்கா மண்டையா! Syam மும், Priya வும் இன்னும் கமென்ட் மாடரேஷன் பன்னலேடா. அதுனாலே தான் உன்னோட கமென்ட் எல்லாம் அவங்க பதிவுலே தெரியுது. மத்தவங்க எல்லாம் உன்னோட பேர பாத்தோன்னயே Spam க்கு அனுப்பி, Shift+Delete பன்னி, குப்ப தொட்டி, கக்கூஸ் வழியா ஸெப்டிக் டாங்குக்கு அனுப்பிடறாங்க.]

மேலும் இன்னொரு காரணத்திற்காகவும் நான் வலையுலகிற்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். இட ஒதுக்கீடு, ஆரிய - திராவிட சிந்தனைகள், பார்ப்பணீயம், இந்துத்வா, இஸ்லாம், ஈழ சகோதரர்களின் நிலை, இந்திய மற்றும் தமிழக அரசியல், கம்யூனிஸம் போன்ற பலவற்றை பற்றிய எனது கருத்துக்களை மாற்றியது வலையுலகு. நான் மேலே கூறியவைகளில் பலவற்றில் நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையில் இப்பொழுது இல்லை. இவை அனைத்திலும் இரு தரப்பு வாதங்களையும் கூர்ந்து கவனித்து, உள் வாங்கிக் கொள்கிறேன். அதை மனதினில் அசை போட்டு தெளிவு பெறுகிறேன். [வேணாம்; வேணாம்; ஆட்டோ வருது சொல்லிட்டேன்.]

பள்ளி முடித்த பிறகு எனக்கு தமிழ் எழுதுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் தமிழ் தட்டச்சு செய்து பழக்கம் இல்லை. அதனால் எனது தமிழில் பல எழுத்து பிழைகள், சில இலக்கண பிழைகள் வந்த போது அதை அன்புடன் சுட்டிக் காட்டிய வலையுலகினர் அனைவருக்கும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். அது வரை ஏனோ தானோ என்று பதிந்து கொண்டிருந்த நான், அவர்கள் சுட்டிக் காட்டிய பிறகு சிறிது கவனமாக பதிய தொடங்கினேன். இதனால் எனது தமிழ் மேம்பட்டது. [மவனே! இருடி உன்னோட "மேம்பட்ட தமிழ்" லட்சனத்த பாக்கறேன். இந்த பதிவுலேயே ஆயிரம் தப்பு கண்டு பிடிச்சு செருப்பால அடிக்க போறாங்க.]


இதுவரை நான் எழுதியவை யார் மனதையும் புண் படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அவ்வாறு புண்பட்டு இருப்பின் தங்களது மன்னிப்பை கோருகிறேன். வரும் ஆண்டில், நேதாஜியின் சொற்பொழிவுகளை தொகுப்பாக பதிய வேண்டும் என்று ஆசை. அப்படியே பாரதி பற்றியும், விவேகானந்தரை பற்றியும் எழுத வேண்டும் என்றும் ஆசை. Greek Mythology பற்றியும் எழுத வேண்டும். கன்னி முயற்சியாக ஒரு கதை எழுதலாம் என்றும் நினைக்கிறேன். [கதையா? யூ மீன் லைக் "பாப்பா போட்ட தாப்பா","மல்கோவா மாமி" etc. ஐ லைக் இட் யா.]

ஒரு வருட காலமாக தொட்டிலில் கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு இருந்த நான், இரண்டாம் ஆண்டில் மெல்ல தவழ தொடங்கி இருக்கிறேன் உங்கள் வாழ்த்துக்களுடன். [நல்ல வேள. தொட்டில்ல மூச்சா போனது, கக்கா போனது இதெல்லாம் சொல்லாம விட்டான்.]

நன்றி. [அடேய் கீ போர்டுவாயா! பெரிய திண்டுக்கல் பூட்டா வாங்கி உன்னோட ப்ளாகுக்கு போடுடா. அவங்க எல்லாரும் "நன்றி!" உனக்கு சொல்லுவாங்க.]

Monday, May 14, 2007

உன்னாலே! உன்னாலே!


பொதுவாகவே இயக்குனர் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் திரைப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சேது, காதல், பிதாமகன், பருத்தி வீரன் போன்ற படங்களை விட என் மனதை அதிகம் பிசைவன அவரின் திரைப்படங்கள். பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை, என்னால் அவரது படங்களை எனது வாழ்க்கைக்குள் புகுத்தி பார்க்க முடிகிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம்.



அவரது 12B பார்த்து விட்டு ப்ரியாவை நினைத்து வருந்தி இருக்கிறேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காரணத்தினால் எனது அனுபவத்தில் ப்ரியாவைப் போன்றவர்களை நான் பார்த்ததில்லை என்றாலும் ஜோ, சக்திவேல் போன்றவர்களை அதிகம் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இடையே நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் என்னால் வேறொரு சந்தர்பத்தில் அருகில் இருந்து பார்க்கப்பட்டவை.



உள்ளம் கேட்குமே இறுதிக் காட்சியில் பூஜாவுடன் ஷ்யாம் இணையும் பொழுது என்னை அறியாமல் ஒரு பெரு மூச்சு வந்தது உண்மை. கல்லூரி முடிந்த பிறகு பார்த்த அந்த திரைப் படம் அந்த வாழ்வின் நினைவுகளை பசுமையாக முன்னிறுத்தியது. கல்லூரி நண்பர்களில் பூஜா யார்? இமான் யார்? ஷ்யாம் யார்? ப்ரியா யார்? ஐரின் யார்? என்றெல்லாம் மனம் கேள்வி கேட்டது. அதற்கு மனமே ஒவ்வொரு நண்பர்களாக அடையாளமும் காட்டியது.



இதோ நேற்று நான் பார்த்த உன்னாலே உன்னாலே படம் மீண்டும் என் மனதை பிசைந்து விட்டது. மனம் ஜான்ஸியை நினைத்து வருந்துகிறது. அவளது முடிவு சரியா? இல்லை தவறா? என்ற கேள்வியையும் தாண்டி நான் பார்த்து பழகிய, நான் அறிந்த ஜான்ஸிகள் நிலைமையும் அதுதானோ? என்று கேள்வி எழுகிறது. காதலில் Obsessive என்பது ஒருவகை, Over Possessive என்பது இன்னொரு வகை. தமிழ் சினிமா பொதுவாகவே முதல் வகை காதலைதான் (வாலி, படையப்பா, வல்லவன், உயிர் வரை) அதிகம் காட்டி இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் இரண்டாம் வகை காதலை அழகாக ஜீவா காட்டி இருக்கிறார்.



படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றும் பெரிதாக இல்லை. தமிழ் சினிமா முன்னரே பலமுறை மென்று துப்பிய சாதாரன முக்கோண காதல் கதை. ஆனால் இதற்கு அழகு சேர்ப்பது சம்பவங்களின் தொகுப்பாக அழகாக பின்னப்பட்ட திரைக்கதை. பொதுவாகவே யதார்த்தம் என்ற பெயரில் அதீத சோகங்களையே அதிகம் காட்டும் தமிழ் சினிமா இயக்குனர்களிடையே, நகரத்து மேல்தட்டு மக்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.



படத்தில் இயக்குனர் ஜீவாவை விட அதிகம் பாராட்டு பெறுபவர் ஒளிப்பதிவாளர் ஜீவா. கண்ணுக்கு குளிர்ச்சியான சென்னையையும், ஆஸ்திரேலியாவையும் அழகாக காட்டுகிறது அவரின் கேமரா.



புதுமுகம் விணய், தனூஜா இருவரும் புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி அருமையாக நடித்திருக்கிறார்கள். விணயின் முக பாவங்களும், தனூஜாவின் குறும்புகளும் ரசிக்க வைக்கின்றன. சதாவின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். குறிப்பாக தனூஜாவின் காரில் விணய் சென்ற உடன் அமைதியாக உட்கார்ந்து உணர்ச்சிகளை வார்த்தைகள் இல்லாமல் அவர் வெளிப்படுத்தும் காட்சி, simply out of the world. Keep up the good work Sada.



அடுத்ததாக படத்தில் அதிகம் என்னை கவர்ந்தது ராஜூ சுந்தரத்தின் நகைச்சுவை. மொழி படத்தில் பிரகாஷ் ராஜின் நகைச்சுவை போன்றே அழகாக கதையுடன் கலந்து வந்து சிரிப்பூட்டுகிறார். ஹேரிஸ் ஜெயராஜின் இசையில் உன்னாலே உன்னாலே, ஜூலை காற்றே பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன. பின்னனி இசையும் அபாரம். படத்தில் வசனங்களும் நன்றாக இருக்கின்றன. "முகம் மாறினால் மனம் மாறும், மனம் மாறினால் அவன் வருவான்" இது என்னை மிகவும் கவர்ந்த வசனம்.



மொத்தத்தில் மீண்டும் ஒரு நல்ல திரைப்படத்தை அளித்தமைக்கு ஜீவா அவர்களுக்கு நன்றி. ஆனாலும் இந்த படம் என்னுள் பல கேள்விகளை எழுப்பிவிட்டதை மறுப்பதற்கில்லை. ஜான்ஸி செய்த தவறு என்ன? காதலில் possesiveness என்பது தவறா? Possesiveness என்பது அன்பின் வெளிப்பாடு தானே? அவ்வாறு இருப்பவர்களுக்கு எல்லாம் இது தான் முடிவா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடுவதில் பயன் இல்லை. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கோ இல்லை வேறொரு நல்ல படத்தை பார்க்கும் வரையிலோ இந்த கேள்விகள் தானே எதிரொலித்து பின்னர் தேய்ந்து மறைந்து விடும்.

Sunday, May 06, 2007

8. இந்தியப் போர்கள் - இறுதிப் பகுதி

சியாச்சின் போர் (1982)


சியாச்சின் பனிமலை பிரதேசம் உலகில் துருவப் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளவைகளில் இரண்டாவது மிகவும் நீளமான பனிமலை பிரதேசம். அது நூப்ரா மற்றும் ஷையோக் நதிகளால் உருவானது. ஷையோக் நதியிலிருந்து உருகும் பனியினால் ஆன நீர் தான் சிந்து நதியின் மூலமாக இருக்கிறது. அங்கு குளிர் காலங்களில் -50 டிக்ரீ செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். அதனால் அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று. இதை பயன்படுத்தி பாகிஸ்தான் அந்த பகுதியை தனது என கூறியது. அத்தகைய புகழ் பெற்ற பகுதியில் உள்ள பனிமலை சிகரங்களில் பல மலையேற்ற வீரர்கள் ஏறுவதற்கு பாகிஸ்தான் அரசினை அனுமதி கேட்டனர். அரசும் அவர்களுக்கு அனுமதி அளித்தது. அவர்களும் பாகிஸ்தானின் அனுமதியுடன் அந்த பகுதிக்கு வந்து மலை ஏற முயன்றனர். அதே நிலை தொடர்ந்ததால் மெல்ல மெல்ல அப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது பாகிஸ்தான். அமெரிக்காவின் உதவியுடன் தனது தேசிய வரை படத்தையும் திருத்தி வெளியிட்டுக் கொண்டது.





இதனை அறிந்த இந்திய அரசு, 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி "Operation Meghdoot" என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. அதன்படி, கலோனல் N. குமார் அவர்களின் தலைமையில் ஒரு பட்டாளத்தை அனுப்பி அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்களை முழுவதுமாக விரட்டி, அப்பகுதியில் முழு பாதுகாப்பிற்கு வித்திட்டது. அப்பகுதியை சேர்ந்த 900 சதுர மைல்கள் முழுவதுமாக இந்தியா வசம் மீண்டும் வந்தது.




நான் முன்னரே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலை காரணமாக அப்பகுதியில் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற இயலாதாகையால் வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு பணியாற்றுகிறார்கள். அப்பகுதியில் காவலில் இருக்கும் பொழுது நமது வீரர்கள் தட்ப வெட்பம் காரணமாகவோ இல்லை எதிரிகளின் தாக்குதல்களிலோ இறந்தால் அவர்களின் சடலங்களுக்கு அங்கேயே வீர மரியாதை அளிக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது. ஏனென்றால் அங்கிருந்து அவர்களின் சடலங்களை எடுத்து செல்வது கடினம். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், இன்றும் அப்பகுதியில் பணியாற்றுவதை நமது வீரர்கள் மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறார்கள். சர்ச்சைக்குறிய அப்பகுதியை பார்வையிட சென்ற முதல் இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள், முதல் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அப்பகுதியினை மீண்டும் மீட்க பாகிஸ்தான் 1990, 1995, 1996 மற்றும் 1999 (லாகூர் ஒப்பந்தத்திற்கு முன்னர்) ஆம் ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.



கார்கில் போர் (1999)


சியாச்சின் பனிமலை பிரதேசத்தை இந்தியா மீண்டும் அடைந்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் நடத்தியது தான் கார்கில் ஊடுறுவல். கார்கில் போரினை பற்றி பார்ப்பதற்கு முன் அப்பகுதியின் முக்கியத்துவத்தை பார்க்கலாம். கார்கில் பகுதி காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்தியப் பகுதி. அதனால் எல்லையை கடந்து அப்பகுதிக்கு செல்வது எளிது. ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் சாலை கார்கில் வழியாகத்தான் செல்கிறது. அதனால் அப்பகுதியை கைப்பற்றினால் ஸ்ரீ நகரை எளிதாக மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து விட முடியும். மேற்கூறிய காரணங்களினால் சர்வதேச எல்லையை தாண்டி ஊடுறுவி கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க முடிவு செய்தது பாகிஸ்தான் இராணுவம்.






அணுகுண்டு சோதனைகளால் சீர் கெட்டிருந்த இரு நாட்டு உறவை புதுப்பிக்கும் நல்லெண்ணத்துடன் வாஜ்பாய் கையெழுத்திட்ட லாகூர் ஒப்பந்தத்தை காற்றில் பறக்க விட்டு முன்னால் புன்னகையுடன் கை குலுக்கி பின்னால் கொலை வெறியுடன் முதுகில் குத்தும் ஈன செயலை கார்கிலில் செய்தது பாகிஸ்தான். அப்பொழுது இராணுவ தலைமையில் இருந்த முஷாரஃப் அவர்களின் திட்டப்படி ஆயுதம் தாங்கிய சுமார் 5000 பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்குள் 1999 ஆம் ஆண்டு மே மாதம் ஊடுறுவினர். அவர்களுடன் காஷ்மீர் தீவிரவாத குழுக்களை சேர்ந்த சுமார் 1000 தீவிரவாதிகளும் இணைந்தனர். நான் முன்னரே குறிப்பிட்ட ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் NH-1A சாலையை ஒட்டியுள்ள மலை சிகரங்கள் பலவற்றை அவர்கள் கைப்பற்றினர். அதனால் அந்த சாலையில் பல பகுதிகள் முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.





இதனை அறிந்த இந்தியப் படையினர் அங்கு விரைந்தனர். "Operation Vijay" என்ற அவர்களின் திட்டப்படி முதலில் அந்த சாலையை மீட்க முனைந்தனர். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. அப்பகுதி முழுவதும் பாகிஸ்தானியர்கள் கண்ணிவெடிகளை புதைத்திருந்தனர். இந்தியர்கள் முதலில் அவைகளை கண்டுபிடித்து நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 9000 கண்ணிவெடிகள் அப்புரப்படுத்தப் பட்டன. பாகிஸ்தானியர்கள் வசம் இருந்த ஒவ்வொரு சிகரமாக மீண்டும் கைப்பற்றி அந்த சாலையை மீண்டும் இந்திய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.




அதன் பிறகு ஊடுறுவிய பாகிஸ்தானியர்களை முழுவதுமாக எல்லைப் பகுதியில் இருந்து துரத்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 1965 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப் போன்று சர்வதேச எல்லையை இம்முறை எக்காரணம் கொண்டும் கடக்க கூடாது என்று முடிவு செய்யப் பட்டது. இந்திய விமான படையினர் வான் வழி தாக்குதலை தொடங்கினர். அதே நேரத்தில் இந்திய பீரங்கி படையினர் போஃபர்ஸ் மற்றும் ஹோவிட்ஸர் பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தானியர் வசம் இருந்த தளங்கள் ஒவ்வொன்றாக மீட்கத் தொடங்கினர்.



சர்வதேச எல்லையை கடக்க கூடாது என்று முடிவு செய்தமையால் அவர்களை சுற்றி வளைப்பது இயலாமல் போனது. தாக்குதலினால் அவர்களை பின்வாங்க செய்வதே அவர்களை விரட்ட ஒரே வழியாகவும் இருந்தது. அதற்கு பெரிதும் உதவின இந்திய பீரங்கிகள். ஒரு சில தளங்களை எளிதாகவும், வேறு சிலவற்றை போராடியும் மீட்க வேண்டி இருந்தது. உதாரணத்திற்கு Tiger Hill என்ற மலை சிகரத்தை கடினமான போராட்டத்தின் பின்னரே இந்தியர்களால் அடைய முடிந்தது.



அதன் தொடர்ச்சியாக நடந்த சண்டையில் இந்தியா மூன்று விமானங்களை இழந்தது. MiG-27 விமானம் இயந்திரப்ப கோளாரினால் கீழே விழுந்து நொறுங்கியது. MiG-21, Mi-8 ஆகிய விமானங்கள் பாகிஸ்தனியர்களால் சுட்டு வீழ்த்தப் பட்டன. இந்திய வான் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த விமானங்களை அவர்கள் சுட்டது மிகவும் கேவலமான செயலாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினர் காராச்சி துறைமுகத்தை சுற்றி வளைத்து அதனை மற்ற கடல் பகுதிகளில் இருந்து துண்டித்தனர். இதுவும் இந்திய கடல் எல்லைப் பகுதியில் வைத்தே நடைபெற்றது.



இந்தியர்கள் சுமார் 80 சதவிகித பகுதிகளை மீட்டெடுத்த நேரம், இன்னும் 6 நாள் போருக்கு தேவையான தளவாடங்களே பாகிஸ்தானியர்கள் வசம் இருந்தது. இதனால் பாகிஸ்தானியர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த தீட்டிய திட்டம் அமெரிக்க உளவுத்துறையினரால் கண்டு பிடிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து கிளின்டன் கடுமையான எச்சரிக்கை ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அவர்களுக்கு விடுத்தார். அந்த எச்சரிக்கையினால் வேறு வழி இல்லாமல் தனது படையினரை இந்தியப் பகுதிகளில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டார் ஷெரிஃப்.



ஷெரிஃப் அவர்களின் இந்த முடிவு பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இராணுவ தலைவரான முஷாரஃப், ஷெரிஃப் அவர்களை பதவியிலிருந்து இறக்கி இராணுவ ஆட்சி அமைக்க வித்திட்டதும் இதுவே.



பாகிஸ்தான் இராணுவத்தினர் வெளியேறினாலும், அவர்களுடன் சேர்ந்து ஊடுறுவிய United Jihad Council என்ற தீவிரவாதக் குழு வெளியேற மறுத்து போரை தொடர்ந்தது. அவர்கள் மீது இந்தியர்கள் நடத்திய தாக்குதலினால் ஒரே வாரத்தில் அவர்கள் முழுவதுமாக ஒழிக்கப் பட்டனர்.



அதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி 527 இந்திய உயிர்களையும், சுமார் 4000 பாகிஸ்தானிய உயிர்களையும் குடித்த பிறகு ஒரு வழியாக கார்கில் போர் முடிவிற்கு வந்தது. அப்பொழுது பாகிஸ்தான் ஊடுறுவிய இந்திய பகுதிகளில் இந்திய இராணுவ வீரர்கள் ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே முகங்களில் இருந்து கண்கள் நோண்டி எடுக்கப்பட்டு பல வித சித்தரவதைகள் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பது மருத்துவ ஆய்வில் வெளியானது. போரில் சிறைக் கைதிகளை கண்ணியமாக நடத்த தவறிய பாகிஸ்தானின் செயல் உலக நாடுகளால் கண்டிக்கப்பட்டது. இந்தியப் பிரதமரின் லாகூர் நல்லினக்கப் பயனத்தையும், அவர் இந்திய பாகிஸ்தான் பேரூந்து போக்குவரத்து தொடங்கியதையும் மீறி சர்வதேச எல்லையை கடந்த பாகிஸ்தானியர்களின் செயல் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை கெடுத்தது. இதைப் பற்றி அமெரிக்க அதிபர் கிளின்டன் தனது சுயசரிதையில் "Sharif’s moves were perplexing" என்கிறார். ஒரு வேளை சர்வதேச எல்லையை கடப்பது என்று நாம் முடிவு செய்திருந்தால் இந்தியத் தரப்பில் நேர்ந்த உயிரிழப்புகளை வெகுவாக குறைத்திருக்கலாம். ஆனாலும் அந்த முடிவினால் அணுகுண்டு சோதனையின் பிறகு நாம் இழந்திருந்த வல்லரசு நாடுகளின் நன்மதிப்பை மீண்டும் பெற்றது இந்தியா. இதுவே இந்தியா சந்தித்த கடைசி போர் ஆகும். அதன் பிறகு அதிர்ஷ்டவசமாக இந்தியா எந்தவிதமானதொரு பெரிய போரையும் சந்திக்கவில்லை.




நண்பர்களே! போர் ஓய்ந்து விட்டாலும் முழூ அமைதி எல்லை பகுதிகளில் நிலவவில்லை. ஆங்காங்கே பல சலசலப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கர வாதமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இனி இது தொடர வேண்டாம். இதுவே இறுதியாக இருக்கட்டும். கார்கிலில் நடந்த போரே இந்தியா சந்தித்த இறுதிப் போராக இருக்கட்டும். பணி படர்ந்த அக்ஸாய் சின், சியாச்சின் பகுதிகளில் காவலில் இருக்கும் நமது இராணுவ வீரனை நினைத்து பாருங்கள். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அவனது வாழ்வை நினைத்து பாருங்கள். இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் அவனது மனைவியை நினைத்து பாருங்கள். அவன் இறந்தால் அவனது உடலை கூட பார்க்க உத்திரவாதம் இல்லாத அவனது குடும்பத்தினரின் நிலையை நினைத்து பாருங்கள். தனது ஒப்பந்தம் முடிந்து வந்தால் அவனுக்கு காத்திருக்கும் செக்யூரிட்டி வேலையிலோ இல்லை காண்ஸ்டபிள் வேலையிலோ காலம் தள்ள வேண்டிய அவனது சூழ்நிலையை நினைத்து பாருங்கள். போரில் மட்டும் இல்லாமல் தினமும் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதிலும் அவன் தான் முதன்மையில் நிற்கிறான். மேலும் இயற்கை சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் இராணுவ வீரனின் உதவி மகத்தானது. இத்தகையவனுக்கும் அவனது வாரிசுகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்க இங்கே யாரும் இல்லை. அவன் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து இட ஒதுக்கீடு கேட்கப் போவதும் இல்லை. அவனால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வரும் மனித உரிமை காப்பாளர்கள் தீவிரவாதியினால் அவன் கொல்லப்படும் போது வருவதில்லை. அந்த மனித உரிமை காப்பாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கூட அவன் தான் காப்பாற்றுகிறான். அவன் தனது உயிரை பனையம் வைத்து தமக்கு அளிக்கும் பாதுகாப்பினை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டே இந்திய இறையாண்மைக்கு எதிராக சுலபமாக ஒரு சிலரால் செயல்பட முடிகிறது. அவன் அளிக்கும் அதே பாதுகாப்பினை அனுபவிக்கும் மற்றவர்கள் கை கட்டி, கண் மூடி, வாய் பொத்தி, செவி அடைத்து காந்தியின் குரங்குகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.


வாழ்க சமூக நீதி. வளர்க பாரதம்.


முற்றும்!


முடிவுரை: இத்தொடரை தொடர்ந்து படித்து வரும் வலையுலக அன்பு நெஞ்சங்கள் இந்நாட்டுக்காகவும், இந்நாட்டு மக்களுக்காகவும் தங்களது உயிரை தியாகம் செய்த நமது இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் செய்ய விருப்பப்பட்டால் "Army Central Welfare Fund" என்ற பெயருக்கு வங்கி காசோலை எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலதிக தகவல்களுக்கு "Army Central Welfare Fund" என்று கூகிளாண்டவரிடம் முறையிடுங்கள்.


Army Central Welfare Fund,
Deputy Director (CW-8),
Adjutant General's Branch, Army Headquarters,
West Block-III, RK Puram,
New Delhi 110 066,
India


இத்தொடர் கட்டுரை அமைய உதவிய தளங்கள்:



Friday, May 04, 2007

7. இந்தியப் போர்கள்

மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1971) தொடர்ச்சி...


இருதலை கொள்ளி எறும்பாக இந்திரா தவித்துக் கொண்டிருந்த போது டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் இந்தியா மீது போர் ஒன்றை அறிவித்தார். மேலும் அவரின் திட்டப்படி சுமார் 50 பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவின் விமானத் தளங்கள் மீது சுமார் 180 குண்டுகள் பொழிந்தன. ஓடு தளங்கள் பல தகர்க்கப்பட்டன. ஆனாலும் இதில் இந்திய விமானங்களுக்கு சேதம் ஒன்றும் இல்லை. 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது இதே போன்றதொரு தாக்குதலை நடத்தி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் தாக்குதல் அவ்வளவாக பலனளிக்க வில்லை.




இந்தியாவின் மீது போரை பாகிஸ்தான் முதலில் தொடங்கியதால் அமெரிக்காவினால் இனி இந்தியாவை நிர்பந்திக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா தனது பதில் தாக்குதலை நடத்த தயாரானது. கிழக்கு பகுதியில் முக்திபாஹிணியுடன் இணைந்து மித்ருபாஹிணியாகவும், மேற்கு பகுதியில் தனியாகவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. மேற்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் போன்ற பல பகுதிகளை இந்தியர்கள் கைப்பற்றினர்.அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினரால் கராச்சி துறைமுகம் கைப்பற்றப்பட்டது. இந்திய விமானப் படையோ பல பாகிஸ்தான் விமானங்களையும், விமானத் தளங்களையும் தகர்த்தது. கிழக்கு பகுதியிலோ மித்ருபாஹிணி படையினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பின் வாங்கியது பாகிஸ்தான் இராணுவம். மேற்கு பாகிஸ்தானிற்கும், கிழக்கு பாகிஸ்தானிற்கும் இடையே தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. போர் இன்னும் நீடித்தால் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சிய பாகிஸ்தான் அதிபர் சரணடைவதாக அறிவித்தார்.


அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் தனி நாடாக உருவானது. இராணுவ அதிபர் யாஹ்யா கான் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரை அடுத்து பதவிக்கு வந்த சுல்ஃபிகார் அலி புட்டோ அவர்கள் சிறையிலிருந்த முஜிபுர் ரெஹ்மான் அவர்களை விடுதலை செய்தார். முன்னாள் அதிபர் யாஹ்யா கான் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார்.


இரண்டு வாரங்கள் நடைபெற்ற மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. இப்போரில் 93000 பாகிஸ்தானியர்கள் இந்திய அரசால் சிறை படுத்தப்பட்டனர். அவர்களில் 79676 பேர் இராணுவ வீரர்கள். மேலும் இந்தியா 5500 சதுர மைல்கள் பாகிஸ்தானிய பகுதிகளை கைப்பற்றியது. பாகிஸ்தானின் மொத்த இராணுவத்தில் 50 சதவிகித கப்பல் படையினர்களும், 25 சதவிகித விமானப் படையினர்களும், 30 சதவிகித தரைப்படையினர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இது இரண்டாம் உலகப் போருக்கு பின் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் கிடைக்காத மிகப் பெரும் வெற்றியாகும்.


ஆனாலும் 1972 ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா கைப்பற்றிய இராணுவ வீரர்களும், பாகிஸ்தான் பகுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப் பட்டன. சிறைப்படுத்தப்பட்டவர்களில் சுமார் 200 பேர் மீது போரில் கொடுஞ்செயல் புறிந்ததற்கான வழக்குகள் இந்திய இராணுவ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இருப்பினும் அவ்வழக்குகளை தள்ளுபடி செய்து அவர்களையும் விடுவித்தது இந்திய அரசு. இது இந்தியாவின் பெருந்தன்மையை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டியது. மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததும் 11 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி காத்த பாகிஸ்தான், மீண்டும் 1982 ஆம் ஆண்டு தனது கைவரிசையைக் காட்டியது.


இன்னும் வரும்...


Thursday, May 03, 2007

6. இந்தியப் போர்கள்

மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1971)


ஒரு நாட்டில் நடக்கும் உள்நாட்டுக் கலவரம் அண்டைய நாட்டை பாதித்து போருக்கு இழுக்க முடியுமா? முடியும் என்கிறது 1971 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஏற்பட்ட அனுபவம்.


1970 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 169 இடங்களில், 167 இடங்களை கைப்பற்றியது கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த அவாமி லீக் கட்சி. அக்கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரெஹ்மான் அவர்கள். மேலும் மொத்தம் உள்ள 313 இடங்களில் 167 இடங்களை கைப்பற்றியதால் தனிப்பெரும்பான்மையும் அக்கட்சிக்கே கிடைத்தது. அதனால் ஆட்சி அமைக்க தனது கட்சியை அழைக்குமாறு அதிபர் யாஹ்யா கான் அவர்களிடம் கோரிக்கை வைத்தார் முஜிபுர் ரெஹ்மான்.


அந்நாட்களில் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் மேற்கு பாகிஸ்தானில் மட்டுமே இருந்தார்கள். இராணுவத்திலும் அவ்வாறே. இதனால் கிழக்கு பாகிஸ்தான் மக்களிடையே தங்களுக்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது என்ற எண்ணம் வளரத்தொடங்கியது.



அதற்கு தூபம் போடும் விதமாக, ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்த அவாமி லீக் கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. அக்கட்சி தடை செய்யப் பட்டது. மேலும் கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரெஹ்மான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஏற்படும் கலவரங்களை அடக்க மேற்கு பாகிஸ்தான் வீரர்கள் அதிகம் கொண்ட இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் உள்ள வங்காள இஸ்லாமியர்கள் பல துயரங்களுக்கு ஆளானார்கள். அவாமி லீக் கட்சியினர், மற்றும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள் சுதந்திரம் மட்டுமே இத்தகைய அவலங்களுக்கு தீர்வு என்ற முடிவிற்கு வந்தனர். பாகிஸ்தான் படையின் ஒரு சிறு பிரிவிற்கு தலைமை தாங்கிய கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஸியௌர் ரெஹ்மான் அவர்கள் தன்னிடம் இருந்த அந்த சிறு படையினைக் கொண்டு 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி சித்தகாங் பகுதியில் ஒரு வானொலி நிலையத்தை கைப்பற்றி சுதந்திர பங்களாதேஷை பிரகடனம் செய்தார். மேலும் கிழக்கு பாகிஸ்தான் மக்களை போராட்டத்தில் ஈடுபடவும் தூண்டினார். மேலும் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்த அவாமி லீக் கட்சி தலைவர்கள் இந்தியாவில் இருந்தபடியே ஒரு தற்காலிக அரசையும் ஏற்படுத்தினார்கள்.



அதன் தொடர்ச்சியாக கிழக்கு பாகிஸ்தான் பகுதியை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு முக்திபாஹிணி என்ற படையை உருவாக்கினர். அவர்கள் பல இடங்களில் மேற்கு பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக கொரில்லா தாக்குதல்களை நடத்தினர். நாளாக நாளாக அவர்களின் எண்ணிக்கை கூடி, அவர்கள் மேற்கு பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஒரு பெரும் தலைவலியாக உருவெடுத்தனர்.


அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய பிரதமர் இந்திரா அவர்கள் பங்களாதேஷின் விடுதலைக்கு இந்தியாவின் ஆதரவை தெரிவித்தார். மேலும் அவர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவுடன் 20 ஆண்டு இராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். இது அமெரிக்காவையும், சீனாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனால் அமெரிக்கா பாகிஸ்தானிற்கு இராணுவ தளவாடங்களை அளிக்க முன் வந்தது. இதனால் புதிய தளவாடங்களை கொண்ட பாகிஸ்தானியரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் முக்திபாஹிணி படையினர்கள் பலர் இந்தியாவிற்கு தப்பி வந்தனர். அவர்களுக்கு தளவாடங்களும், அயுதப் பயிற்சியும் இந்தியா அளித்தது.


ஆனாலும் அமெரிக்காவின் ஆதரவினால் இந்தியாவிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு நிலையில் 1 கோடி அகதிகளுக்கு அதரவளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ஒருவருக்கு ஒரு நாள் உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றிற்கான செலவு இரண்டு ரூபாய் என்ற வகையில், இந்தியாவிற்கு ஒரு நாள் செலவு கிட்ட தட்ட இரண்டு கோடி ரூபாய் ஆனது. இது இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. இந்த நிலையில் அமெரிக்கா மேலும் மேலும் தளவாடங்களை பாகிஸ்தானிற்கு அளிக்க முன்வந்தது. இதனால் ஐரோப்பிய வல்லரசு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் இந்திரா. அதற்கு தகுந்த பலனும் கிடைத்தது. பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் அமெரிக்காவின் இச்செயலை கண்டித்தன. அமெரிக்காவும் தனது ஆதரவை குறைத்துக் கொண்டது.


ஆனாலும் அதனால் இந்தியாவிற்கு வருகை தரும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்ததே அன்றி இருக்கும் அகதிகளை சமாளிப்பது கடினமாக இருந்தது இந்தியாவிற்கு. போரில் இந்தியா ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாமல் இருந்த போதிலும், இது பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனை என்பதால் அமைதி காத்தது இந்தியா.


ஒரு பக்கம் போரில் தலையிட்டால் அமெரிக்காவின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்ற நிலை. போரில் ஈடுபடாமல் இருந்தாலோ இந்திய பொருளாதாரம் சீர்கெட்டு நிமிறவே முடியாத நிலை ஏற்படும். இருதலை கொள்ளி எறும்பாக இந்திரா தவித்துக் கொண்டிருந்த போது அவரின் வயிற்றில் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இந்தியர்களின் வயிற்றிலும் பால் வார்த்தது போன்ற அந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியாவும் வரலாறு படைக்க தயாரானது.


இன்னும் வரும்...

Wednesday, May 02, 2007

5. இந்தியப் போர்கள்

இரண்டாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1965)


சீனாவிற்கு எதிரான போரில் இந்தியாவின் படு தோல்வியினால் உற்சாகம் அடைந்த பாகிஸ்தானியர்கள் இந்தியா மீது மீண்டும் போர் தொடுக்க முயற்சி செய்தனர். அதன் ஆரம்பமாக 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் "Rann Of Kutch" பகுதியில் சுமார் 3500 சதுர மைல்கள் தனது எல்லையில் வருகிறது என்று பாகிஸ்தான் அறிவித்தது. அதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர்களுகிடையே நடந்த சண்டையில் பாகிஸ்தானியர்கள் கை ஓங்கியது. இதனால் எல்லாம் இந்தியர்களை குறைத்து மதிப்பிட்ட பாகிஸ்தானியர்கள் "Operation Gibraltar" என்ற திட்டத்தினை செயல்படுத்தினர்.



அத்திட்டத்தின் படி அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆயுதம் தாங்கிய சுமார் 600 பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுறுவினர். அந்த ஊடுறுவலை தடுக்க, ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை அறிவித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இரண்டாவது போர் தொடங்கியது.



போர் தொடங்கிய முதல் இரு வாரங்களில் இரு நாடுகளும் சம நிலையிலேயே இருந்தன. இந்தியாவை சேர்ந்த Tithwal, Uri மற்றும் Punch பகுதிகளை பாகிஸ்தானும், POK பகுதியில் மூன்று முக்கியமான இராணுவத் தளங்களை இந்தியாவும் கைபற்றின. மேலும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஜம்முவை சேர்ந்த Akhnoor பகுதியை நோக்கி பாகிஸ்தான் முன்னேறியது. பாகிஸ்தானியர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போகவே, இந்திய விமானப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டனர். உடனே பாகிஸ்தானியர்களும் தங்கள் விமானப் படையை போரில் ஈடுபடுத்தினர். ஆனாலும் இந்திய விமானப் படையின் தாக்குதலினால் பாகிஸ்தானியர் Akhnoor பகுதியை கைப்பற்ற முடியாமல் திரும்பினர்.



அதன் பிறகு வேறு வழி இல்லாமல் இந்தியப் படையினர் சர்வதேச எல்லையை செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி கடந்தனர். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் பிரஸாத் தலைமையில் ஒரு சிறு படையினர் Ichhogil கால்வாயின் வடக்கு கரையில் பாகிஸ்தானியர்களை முறியடித்தனர். அதன் பிறகு Barki மற்றும் Batapore பகுதிகளையும் கைப்பற்றினர். லாகூருக்கு மிக சமீபத்திய பகுதிகளை கைப்பற்றியதால் அவர்கள் லாகூர் சர்வதேச விமான நிலையத்தையும் கைபற்றி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. அந்நிலையில் அமெரிக்கா லாகூர் மக்கள் தங்கள் இருப்பிடத்தை காலி செய்யும் வரை அவகாசம் அளிக்குமாறு இந்தியாவை வேண்டியது. இந்தியாவும் அதற்கு ஒப்புதல் அளித்தது.


அதே நாளில் பாகிஸ்தான விமானப் படையினர் Pathankot பகுதியில் நடத்திய வான் வழி தாக்குதலில் சுமார் 10 இந்திய விமானங்கள் தகர்க்கப்பட்டன. அதே போன்றதொரு தாக்குதலை Halwara பகுதியிலும் நடத்த முயன்று தோல்வி அடைந்தன. பாகிஸ்தான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பின்னர் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி Beas நதியைக் கடந்து இந்தியாவில் Amristar பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான பீரங்கிப் படையினர் முயன்றனர். ஆனால் அவர்களால் எல்லையில் உள்ள Khemkaran பகுதி வரை மட்டுமே வர முடிந்தது. இந்தியப் படையினர் சுற்றி வளைத்ததால் சுமார் 100 Patton Tanks எனப்படும் அமெரிக்கா அளித்த பீரங்கிகளை விட்டு விட்டு அவர்கள் ஓட நேர்ந்தது.



அதுவரை இப்போரினால் இந்தியத்தரப்பில் 3000 உயிரிழப்புக்களும், பாகிஸ்தான் தரப்பில் 3800 உயிரிழப்புக்களும் நேர்ந்தன. மேலும் பாகிஸ்தானின் சுமார் 20 விமானங்கள் மற்றும் 200 பீரங்கிகள் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தான் வட பகுதியில் சுமார் 210 சதுர மைல்கள் இந்தியப் பகுதிகளையும், இந்தியா சுமார் 810 சதுர மைல்கள் பாகிஸ்தானிய பகுதிகளையும் கைப்பற்றின.



அந்நிலையில் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இந்தியப் பிரதமர் ஷாஸ்த்திரி அவர்களும், பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் அவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இருநாடுகளும் தங்கள் படையினரை தங்கள் எல்லைப் பகுதிக்கே திரும்பபெற முடிவு செய்தனர்.


புயலுக்கு பின் அமைதி என்பது போல போர் முடிந்த அடுத்த 6 ஆண்டுகளுக்கு அமைதி நிலவியது. அந்த 6 ஆண்டுகளில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் 585 முறை மீறியது என்று இந்தியாவும், இந்தியா 450 முறை மீறியது என்று பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். ஆனாலும் அத்தகைய சிறு சிறு சலசலப்புகளைத் தவிர எல்லைப் பகுதி அமைதியாகவே இருந்தது 1971 வரை.


இன்னும் வரும்...

Monday, April 30, 2007

4. இந்தியப் போர்கள்

இந்திய - சீன போர் (1962) தொடர்ச்சி...



சூழ்நிலையின் காரணமாக ஆசியாவின் இரு பெரும் நாடுகள் மோதிக் கொள்ள தயாராயின. முதலில் சீனா இந்தியா மீது தனது இருமுனை தாக்குதலை தொடுத்தது. அக்ஸாய் சின் பகுதியிலும், அருணாசல பிரதேச பகுதியிலும் சீனர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். அதில் அக்ஸாய் சின் பகுதியில் நடந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் இந்தியப் படையினர் பின் வாங்கினர். மெல்ல மெல்ல இந்தியப் பகுதிகளில் இருந்து முற்றிலும் இந்தியப் படையினர் விரட்டியடிக்கப் பட்டனர். இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்ததோடு மட்டும் அல்லாமல், இந்தியப் படையினரை சுற்றி வளைத்து அவர்களுக்கு தேவையான தளவாடங்கள், உணவு போன்றவற்றினை தடுத்து நிறுத்தினர்.




ஆனால் அருணாசல பிரதேச பகுதியிலோ நிலைமை ஓரளவிற்கு இந்தியாவிற்கு சாதகமாக இருந்தது. அப்பகுதியில் அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி நடந்த தாக்குதலில் 200 சீனர்கள் கொல்லப்பட்டனர். இந்தியத் தரப்பில் 9 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து நடந்த தாக்குதலில் இந்தியர்களை விட 9 மடங்கு அதிகம் சீனர்கள் கொல்லப் பட்டனர்.


அந்நிலையில் போரை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், பேச்சு வார்த்தைக்கு தயார் எனவும் சீனப் பிரதமர் நேருவிடம் தெரிவித்தார். அவர் அனுப்பிய கடிதத்தில், இரு நாட்டு எல்லைகளையும் பேச்சு வார்த்தை மூலம் வகுத்துக் கொள்ளலாம் என்றும், அருணாச்சல பிரதேசத்தில் மக் மோஹன் எல்லையை அங்கீகரிப்பதாகவும், ஆனால் அக்ஸாய் சின் பகுதியில் மக் டோணால்டு எல்லையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும், இரு தரப்பும் பரஸ்பர ஆக்கிரமிப்பை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டது. (இந்தியா சீனப் பகுதிகளில் எந்த விதமான ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. அக்ஸாய் சின் பகுதியை தனது பகுதி என்று கூறிய சீனா, அப்பகுதியில் இந்தியப் படையினர் இருந்தது இந்தியாவின் ஆக்கிரமிப்பு என்று உரக்க கூவியது.) இதை இந்தியத் தரப்பு ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 14 ஆம் தேதி மீண்டும் போர் தொடங்கியது. (இது நேருவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடதக்கது.)




இம்முறைத் தொடங்கபட்ட போர் இந்தியத் தரப்பினருக்கு சாதகமாக இல்லை. முன்னரே அக்ஸாய் சின் பகுதியில் கை ஓங்கி இருந்த சீனப் படையினர், மேலும் மேலும் முன்னேறி இந்தியப் படையினரை முற்றிலுமாக சுற்றி வளைத்தனர். அவர்கள் சீன எல்லை என்று அவர்கள் வகுத்த எல்லையை எளிதாக அடைந்தனர். பல நூறு இந்தியர்களின் உயிரைக் குடித்த பின் அக்ஸாய் சின் பகுதியில் யுத்தம் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது.




அருணாச்சல பிரதேசத்திலோ சீனர்கள் அவர்கள் வகுத்த எல்லையுடன் நிற்காமல் மேலும் மேலும் முன்னேறி அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் பகுதி வரை கைப்பற்றினர். இந்நிலையில் போரை சமாளிக்க அமெரிக்காவின் உதவியை நாடியது இந்திய அரசு. அமெரிக்காவும் தனது படையுதவியை அளிக்க முன்வந்தது. அதே நேரத்தில் ஒரு சில அரசியல் காரணங்களுக்காக போரை முற்றிலுமாக நிறுத்த விரும்பியது சீன அரசு. அருணாச்சல பிரதேசத்தில் அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை இந்தியா வசம் ஒப்படைத்து அப்பகுதியில் இருந்து சீனப் படையினரை வெளியேறவும் உத்தரவிட்டது. சீனாவின் இந்த முடிவிற்கு பின்னால் இருந்த காரணங்களை பற்றி சீனாவின் கம்யூனிஸ அரசு தெளிவாக தெரிவிக்கவில்லை. அது இன்று வரை ஒரு ரகசியமாகவே இருக்கிறது. அதே பொழுதில் அக்ஸாய் சின் பகுதியிலிருந்து வெளியேற மறுத்து விட்டது. அப்பகுதி முழுதும் சீனாவுடன் இணைக்கப் பட்டது. உலக நாடுகள் சீனாவின் இந்த செயலை "Blatant Chinese Communist Aggression Against India" என்றே கருதுகின்றன.



இந்தியா சந்தித்த இந்த தோல்வியே இந்தியர்களை வீறுகொண்டு எழ வைத்தது. நேருவின் வெளியுறவுக் கொள்கை அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இந்த பெரும் தோல்விக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு. மேனன் அவர்களின் நிர்வாக குறைபாடே காரணம் என்று இந்திய மக்கள் குறை கூறினர். நமது இராணுவத்தை வலிமை உள்ளதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. போர் முடிந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியப் படையினரின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப் பட்டது.


இந்தியா சீனாவிடம் சந்தித்த இந்த படுதோல்வியால் கவரப்பட்டு, இந்திய - சீன போர் முடிந்த முன்று ஆண்டுகளுக்குள் இந்தியா மீது மீண்டும் படையெடுத்தது பாகிஸ்தான். இந்தியா தனது தோல்வியினால் துவண்டு விழாமல் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டது என்பதை அறியாமல் இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு கிடைத்தது தக்க பதிலடி.


இன்னும் வரும்...

Thursday, April 26, 2007

3. இந்தியப் போர்கள்

இந்திய - சீன போர் (1962)


ஆம். 1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிர்பாராத பொழுதில் சீனாவின் வடிவில் வந்தது ஒரு மெகா சைஸ் ஆப்பு. அதற்கு காரணம் திபெத். 1914 ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில் திபெத் இந்திய அரசால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனாலும் சீனா அதை ஒப்புக் கொள்ளவில்லை. அப்பொழுது மூன்று நாடுகளுக்கு இடையே எல்லை கோடாக "மக் மோஹன் எல்லை" தீர்மானிக்கப் பட்டது.




இந்தியாவை பொருத்தவரை அது சீனாவை என்றுமே ஒரு எதிரியாக நினைத்தது இல்லை. 1949 ஆம் ஆண்டு சீனா ஒரு தனி குடியரசாக உருவானதை தொடர்ந்து அதை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1950 ஆம் ஆண்டு கொரிய யுத்தத்தில் சீனா தலையிட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றின் அதிருப்திக்கு ஆளானது. ஆனால் அந்நிலையிலும் இந்தியா சீனாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தது. 1951 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொரிய யுத்தத்தை நிறுத்த நடந்த அமைதி பேச்சு வார்த்தையை சீனா அழைக்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கனித்தது.




இந்த அளவிற்கு வெளிப்படையாக தனது ஆதரவையும் நட்பையும் வெளிப்படுத்திய இந்தியாவிற்கு சீனா செய்தது பச்சையான நம்பிக்கை துரோகம். 1950 ஆம் ஆண்டு சீனா திபெத் மற்றும் சிஞ்சியாங் பகுதிகளுக்கு இடையே சுமார் 1200 கிலோமீட்டர் நீளமான சாலை ஒன்றை இட்டது. அச்சாலை இந்திய எல்லைப் பகுதியில் (அக்ஸாய் சின்) சுமார் 180 கிலோமீட்டர் சென்றது. 1954 ஆம் ஆண்டு சீனா வெளியிட்ட தனது நாட்டு மேப்பில் சுமார் 120000 சதுர கிலோமீட்டர்கள் இந்தியப் பகுதிகளை தனது பகுதிகளாக காட்டி இருந்தது. காஷ்மீரை சேர்ந்த அக்ஸாய் சின் பகுதியையும், அருணாச்சல பிரதேசத்தையும் தனது நாட்டின் பகுதிகளாக காட்டியது. மேலும் அக்ஸாய் சின் பகுதியில் சில இடங்களை தனது இராணுவத்தைக் கொண்டு முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டது சீனா. அப்பொழுதும் இந்திய அரசு அது சீனாவின் தவறால் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சி என்று தான் நம்பியது. மேலும் இந்திய அரசு இந்தியாவிற்கும் சீனாவிற்குமான ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகளை நினைவுபடுத்தி "இந்தி - சீனி பாய் பாய்" என்றது. சீனாவின் மீது அதீத நம்பிக்கை வைத்து சீனப் பிரதமர் எடுத்து வைத்த பஞ்சசீலக் கொள்கைகளில் கையெழுத்திட்டது இந்திய அரசு. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் 1959 ஆம் ஆண்டு இந்திய அரசு தலாய் லாமா அவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தது சீனாவின் கோபத்தை தூண்டியது.


1961 ஆம் ஆண்டு கோவாவை போர்த்துகீஸியர்களிடமிருந்து மீட்க இந்தியப் படையினரின் உதவியை நாடியது இந்திய அரசு. "சீனா தனது படையினரை இந்தியப் பகுதிகளிடமிருந்து திரும்பப் பெறவில்லை என்றால் கோவாவில் நடந்தது மீண்டும் நடக்கும்" என்று அந்நாளைய இந்திய உள்துறை அமைச்சர் கூறியதாக ஒரு செய்தி சீனாவிற்கு கிடைத்தது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் சீர்கெட்டது. உலக நாடுகள் இந்தியாவையும் சீனாவையும் பேச்சு வார்த்தை நடத்த தூண்டினர். இந்தியாவோ சீனா இந்தியப் பகுதிகளில் இருந்து தனது படையினரை முழுவதுமாக விலக்கி கொள்ளாத வரை பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று தெளிவாக அறிவித்து விட்டது.


இதன் உச்ச கட்டமாக 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி எல்லை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 50 இந்தியப் படையினரை 1000 பேர் கொண்ட சீனப்படை சுத்தி வளைத்து படு கொலை செய்தது. அதில் இந்திய இராணுவத்தினர் சுமார் 25 பேர் இறந்தனர். மீதம் இருந்த 25 பேர் சிறைபடுத்தப் பட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து நடத்திய எதிர் தாக்குதலில் 33 சீனர்கள் கொல்லப்பட்டனர். அதுவரை இந்தியா சீனா தன் மீது போர் தொடுக்காது என்று உறுதியாக நம்பியது. மேலும் அணி சேரா நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்கியதால் அமெரிக்காவும், ரஷ்யாவும், பிரிட்டனும் தனது பாதுகாப்பிற்கு வரும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தது. அதனால் போருக்கு தம்மை தயார் படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் அதே பொழுதில் கியூபாவில் தனது அணு அயுதக்கிடங்கை ரஷ்யா எழுப்பியதால் தொடர்ந்த சர்ச்சையில் உலக நாடுகளின் கவனம் திசை திருப்பப்பட்டது.

இந்தியாவும், சீனாவும் ஒன்றினைந்து மேற்கத்திய நாடுகளுக்கு நிகராக பெரும் வல்லரசுகளாக உருவாகலாம் என்று நினைத்து கொண்டிருந்த நேருவின் நம்பிக்கை சுவர்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழ வேறு வழி இல்லாமல் ஆசியாவின் மிகப் பெரிய வலிமை வாய்ந்த படையுடன் இந்தியா மோத முடிவு செய்தது. ஆசியாவின் இரு பெரும் நாடுகள் மோதிக் கொள்ள தயாராயின.


இன்னும் வரும்...



Monday, April 23, 2007

2. இந்தியப் போர்கள்

முதல் இந்திய - பாகிஸ்தானிய போர் (1947 - 1948) தொடர்ச்சி...

சுதந்திரம் பெற்ற மூன்றே மாதங்களில் தனது முதல் போருக்கு தயாரானது இந்திய இராணுவம். இங்கே நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய கால கட்டத்தில் இந்திய இராணுவத்திலாகட்டும் இல்லை பாகிஸ்தான் இராணுவத்திலாகட்டும் அவர்களிடம் இருந்த யுத்த தளவாடங்கள் ஆங்கிலேயர்களால் விட்டு செல்லப்பட்டவையே ஆகும். மேலும் இருபக்க இராணுவத்திலும் வெகு சிலரே அத்தளவாடங்களை இயக்க போதுமான பயிற்சி பெற்றவர்கள்.

சுதந்திரம் பெற்று மூன்று மாதங்களே ஆன நிலை, பிரிவினை மற்றும் உள் நாட்டு மதக்கலவரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், இரண்டாம் உலகப் போரில் ஈடுபட நமது கஜானாவை முற்றிலும் சுரண்டிவிட்ட ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற பலவற்றிற்க்கு இடையே தான் இரு நாடுகளும் இப்போரை சந்தித்தன.

ஆக்கிரமிப்பை தடுக்க காஷ்மீர் பகுதிகளுக்கு இந்திய இராணுவம் சென்ற பொழுது பாகிஸ்தான் படையினர் முன்னரே 40 சதவிகித காஷ்மீரப் பகுதிகளை கைப்பற்றி இருந்தனர். காஷ்மீரின் பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டதோடு மட்டுமல்லாது பாகிஸ்தானிய படை ஸ்ரீ நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. Uri, Baramulla பகுதிகளை கைப்பற்றியதைத் தொடர்ந்து அப்படையினருக்கு ஸ்ரீ நகருக்கான பாதை திறந்தது [பார்க்க படம் 1 மற்றும் 2].


மேலும் அப்படை வீரர்களால் காஷ்மீரத்தில் உள்ள இந்துக்கள் பலர் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர். Mirpur பகுதியை சேர்ந்த இந்துக்கள் ஒட்டு மொத்தமாக கொலை செய்யப்பட்டார்கள். அந்நிலையில் இந்தியப் படையினர் முதலில் பாகிஸ்தானப் படையினர் ஸ்ரீ நகரை அடையும் வழியை தடுக்க முனைத்தனர். Gulmarg, Uri, Baramulla பகுதிகளை மீண்டும் கைப்பற்றி ஸ்ரீ நகரை பாதுகாத்தனர். பாகிஸ்தான் படையினர் வசம் இருந்த Punch பள்ளத்தாக்கையும் மீண்டும் கைப்பற்றினர் [பார்க்க படம் 3].

அதைத் தொடர்ந்து நடந்த சண்டையில் Naoshera பகுதியை பாகிஸ்தானியரும், Chamb பகுதியை இந்தியரும் கைப்பற்றினர் [பார்க்க படம் 4]. இந்தியர்கள் தென் பகுதியில் Jhanger மற்றும் Rajauri பகுதியையும் கைப்பற்றினர்.



இந்தியப் படையினர் காஷ்மீரின் தென் பகுதியில் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்க முனைந்து கொண்டிருந்த போது காஷ்மீரின் வட பகுதியில் அருமையாக திட்டமிட்டு Skardu (14-Aug-1948), Dras (06-Jun-1948), Kargil (22-May-1948), Khalatse (19-Jul-1948), Ladakh (26-Jun-1948) என்று வரிசையாக இந்தியா வசம் இருந்த காஷ்மீரப் பகுதிகளை கைப்பற்றினர் பாகிஸ்தானியர்கள். இதுவே அப்போரில் அவர்கள் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும் [பார்க்க படம் 5, 6 மற்றும் 7].


இடி மேல் இடி விழுந்த கதையாக 5-Sep-1948 அன்று இந்தியப் படையினர் Dras பகுதியை மீட்க முயன்று தோல்வி தழுவினர். மேலும் அதுவரை நம் வசம் இருந்த Punch பள்ளத்தாக்கையும் பாகிஸ்தானியர்கள் கைப்பற்றினர். அதுவரையில் இந்தியர்கள் இந்திய பீரங்கிப் படையினரை பெரிதும் பயன் படுத்த வில்லை. அவ்வளவு உயரத்தில் அக்காலத்தில் அவர்களை இயங்க வைக்க சாத்தியங்கள் இல்லை என்பது கண்கூடு. அந்நிலையில் தான் அவர்களின் உதவி இல்லாமல் போனால் நாம் காஷ்மீரை இழந்து விடுவோம் என்ற நிலையில் அவர்கள் களத்தில் இறங்கினர்.


பாகிஸ்தானியர்கள் சுமார் 12 மாதங்கள் போராடி கைப்பற்றிய Dras, Kargil, Khalatse, Ladakh பகுதிகள் மற்றும் Punch பள்ளத்தாக்கு பகுதி போன்ற அனைத்தையும் இரண்டே மாதங்களில் இந்தியப் படையினர் கைப்பற்றினர். மேலும் Ladakh வரையில் முன்னேறிய பாகிஸ்தானியர்கள் படுதோல்வி அடைந்து பின்வாங்கினர் [பார்க்க படம் 8, 9 மற்றும் 10].


அதே நிலை தொடர்ந்து இருந்தால் ஒரு வேளை இந்தியாவால் காஷ்மீர் பகுதிகள் முழுவதையும் எளிதாக பிடித்திருக்க முடியும். ஆனால் இந்தியர்களிடம் பீரங்கிப் படையினருக்கு தேவையான தளவாடங்கள் இல்லை. அவை வரும் வரை அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை விட்டு விடாமல் பாதுகாக்க முடிவு செய்தனர்.

ஆனால் அந்நேரத்தில் ஏதோ காரணத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை கோர முடிவு செய்தது நேரு அரசு. அதற்கு பொது மக்களிடத்தில் மட்டும் அல்லாது அவர்கள் அமைச்சரவையிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் இந்திய அரசு தனது முடிவில் பின்வாங்க வில்லை. போரை தற்காலிகமாக நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியது. பின்னர் இருதரப்பினருக்கும் அவர்கள் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் போரை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும், அப்பொழுது அவர்கள் வசம் உள்ள பகுதிகளுடன் கூடிய ஒரு தற்காலிகமான எல்லை நிறுவப்பட வேண்டும் என்றும், பாகிஸ்தான் தனது படையினரை முற்றிலுமாக காஷ்மீரப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், ஆனால் இந்தியா தேவையான அளவு குறைந்தபட்ச படையினரை அப்பகுதியில் வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.


ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டினால் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியத் தரப்பில் 3000 உயிர்களையும், பாகிஸ்தான் தரப்பில் 5000 உயிர்களையும் பலிவாங்கிய முதல் இந்திய - பாகிஸ்தான் யுத்தம் ஒரு வழியாக 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முடிவிற்கு வந்தது. காஷ்மீரை சேர்ந்த 101387 சதுர கிலோமீட்டர் பகுதியை இந்தியாவும் 85793 சதுர கிலோமீட்டர் பகுதியை பாகிஸ்தானும் கைப்பற்றிக் கொண்டன. இந்திய வசம் இருந்த காஷ்மீரப் பகுதிகள் 1957 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. தற்காலிக எல்லையாக அன்று நிர்னயிக்கப் பட்ட எல்லைதான் இன்றும் இந்திய எல்லையாக இருக்கிறது. நமது இராணுவத்தினர் வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்திய அரசு எடுத்த இந்த முடிவு பெரும் வரலாற்றுப் பிழையாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.


போர் ஒய்ந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த நேரம். எல்லை பாதுகாப்பு பிரச்சனை என்பது நாட்டின் வட மேற்கு பகுதியில் பாகிஸ்தானால் மட்டுமே வர முடியும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்க, முதல் இந்திய - பாகிஸ்தான் போர் முடிந்து 14 ஆண்டுகளுக்கு பின்னர் வட கிழக்கு பகுதியில் சீனாவின் வடிவில் இந்தியாவிற்கு வந்தது ஒரு மெகா சைஸ் ஆப்பு.


இன்னும் வரும்...

Friday, April 20, 2007

அழகுகள் ஆறு!

அழகைப் பற்றி பதிவிட வேண்டுமென்று ப்ரியா உத்தரவிட்டு விட்டார். மீற முடியுமா? நான் அழகைப் பற்றி சொல்வதற்கு முன், அழகைப் பற்றி ஔவைப்பாட்டி என்ன அழகாக கொன்றை வேந்தனில் சொல்லியிருக்கிறார் என்று முதலில் பாருங்கள். "மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு". ஆஹா! ஔவையார் வாழ்க. அவர் புகழ் ஓங்குக.


இனி நமது அழகிற்கு வருவோம். ப்ரியா சொல்லியது போல், வாழ்வில் அழகான மூன்று பருவங்கள், குழந்தை பருவம், விடலைப் பருவம், இளமைப் பருவம் அனைத்துமே திருச்சியில் தான் என்னிடம் வந்தடைந்தன (இப்போவும் இளமையா தாங்க இருக்கேன். தங்கமணி தான் ஒத்துக்க மாட்டேங்கராங்க.). அதனால் எனக்கு அழகென்றால் அது திருச்சி தான்.


1. பின் மாலை நேர மலைக் கோட்டை


திருச்சியில் இருப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள். சிலு சிலு வென்ற காற்று, ஊரைச் சுற்றி ஓடும் காவிரி, அதன் மேல் காவிரிப் பாலம், கார்த்திகை விளக்கை ஏற்றி வைத்தது போன்று பாலத்தின் மீது வரிசையாக வாகனங்கள், மலைக் கோட்டையை சுற்றி சிறு சிறு பொம்மைகளாய் வீடுகள், அவற்றின் அருகில் மனித நடமாட்டங்கள். ஆஹா என்ன அருமையான காட்சி. சட்டென்று அவற்றின் முன் நாம் உயர்ந்து விட்டது போன்ற ஒரு மாயத் தோற்றம். அழகு என்றால் எனது முதல் ஒட்டு பின் மாலை நேர மலைக் கோட்டைக்கு தான்.


2. இரவு நேர காவிரிப் பாலம்


திருச்சியிலே இருப்பவர்களுக்கு இது தான் மெரினா பீச். மாலையும், இரவும் கை கோர்க்கும் வேளையில் இங்கு வந்து விட்டால் போதும். கீழே அகண்ட காவிரிப் பிரவாகம். இங்கும் 'உள்ளேன் ஐயா!' என்று அட்டென்டன்ஸ் குடுக்க வரும் சிலு சிலு காற்று. இங்கும் அங்கும் எங்கு திரும்பினாலும் காதல் ஜோடிகள். ஆனால் சென்னை மெரினாவிற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இங்கே யாரும் தனிமை தேடி அலைவதில்லை. அதனால் தனிமை தரும் அநாகரீக அத்துமீறல்கள் இங்கு இல்லை. அதே நேரம் யாரும் அடுத்தவரின் சுவருகளில் அநாகரீகமாக நுழைவதில்லை. அடுத்தவர்களிடையே நடக்கும் உரையாடல்களை எளிதாக நீங்கள் அங்கே கேட்க முடியும். ஆனால் விரும்பி அவைகளை கேட்பவர்கள் குறைவு. காவிரிக் கரையில் எனது பள்ளி இருந்த காரணத்தினால் இப்பாலம் எனக்கு ஒரு உற்ற நண்பனைப் போல. நண்பர்கள் அழகு தானே.


3. திருச்சியில் நான் பிறந்து வளர்ந்த இல்லம்


திருச்சியில் உடையாண்பட்டி என்ற நகரத்து வாசம் முழுதும் வீசாத கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். திருச்சியில் வீடு வாங்க வேண்டும் என்று நினைத்த எனது தந்தை சதுர அடி 10 பைசாவிற்கு கிடைக்க அந்த கிராமத்தில் நிலம் வாங்கி வீடு கட்டி விட்டார். இது நடந்தது 1973 ஆம் ஆண்டு. நான்காயிரம் சதுர அடி நிலத்தில் கிட்டதட்ட 2000 சதுர அடி வீடு (இரு தளங்கள்). வீட்டை சுற்றி ஐந்து தெண்ணை மரங்கள், மூன்று வேப்ப மரங்கள், இரு மா மரம், ஒரு கொய்யா மரம். ஒரு கிணறு. வீட்டிற்கு சமீபத்தில் ஓடும் காவிரியின் கிளை ஆறான கோரையாறு. விடுமுறை நாட்களில் அங்கு குளிக்க சென்று விடுவோம். ஆழம் இல்லாத பகுதிகளில் குளிப்போம். நீச்சல் நன்கு தெரிந்தவர்கள் இக்கரையிலிருந்து அக்கரை செல்வார்கள். சில நேரங்களில் அருகில் இருக்கும் சாத்தனூர் ஏரிக்கும் செல்வதுண்டு. எனது குழந்தை பருவ நினைவுகளை அரவணைத்து பாதுகாக்கும் இந்த இல்லமும் எனக்கு அழகு தான்.


4. தஞ்சை பெரிய கோவில்


தஞ்சையில் கல்லூரியில் படித்த காரணத்தினால் பல நேரங்களில் எனக்கு புகலிடம் அளித்த இடம். வழிபடுவதற்காக இல்லாவிட்டாலும் பல நேரங்களில் மன அமைதிக்காக நான் செல்லும் இடம். இதைப் பற்றி புதியதாக சொல்ல என்ன இருக்கிறது? It is an Architectural Marvel.


5. பெங்களூர் இரவு வாழ்க்கை


வாரத்தில் ஐந்து நாட்களும் ஆணி புடுங்கிவிட்டு வெள்ளி மற்றும் சனி இரவுகள் வந்தால் காதலியிடம் செல்லும் காதலனைப் போல எனது மனம் திரையரங்கை நோக்கி செல்லும். 10:30 மணிக்கு தொடங்கும் இரவு காட்சி முடிந்து இரவு இரண்டு மணிக்கு வீடு திரும்பி, இரவின் எஞ்சிய பொழுதை சீட்டுடன் கழிக்கும் வாழ்க்கை இருக்கிறதே, அதற்கு ஈடு சொல்ல இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.


6. கிங்ஸ்


கல்லூரியில் மூன்று ஆண்டுகள், பின்னர் நான்கு ஆண்டுகள் ஆக மொத்தம் ஏழு ஆண்டுகள் எனது வலது கையில் ஆறாம் விரலாய் என்னுடன் இருந்த எனது உற்ற நண்பன். ஒரு நாளில் ஒன்று என்று தொடங்கி, ஒரு பாக்கெட் என்று வளர்ந்து, இன்று என்னால் முழுவதுமாக விரட்டியடிக்கப் பட்டவன். எனது உதட்டுடன் உறவாடிய ஒரே நண்பன் என்பதாலோ என்னவோ இவன் எனக்கு அழகனே.


இப்போ நான் அழக அழகா சொல்ல கூப்பிடறது,

1.Syam (பாவம் நயன்தாராவ யாரும் சொல்லலேன்னு வருத்தப் பட்டாரு. அதான். ஆமா, ஏன் அவர யாரும் இன்னும் டேக் பன்னலே?)

2.Radha Sriram (நம்ம ஊரு. மாட்டிவிடாம இருந்தா எப்படி?)


இவங்க இரண்டு பேரும் தான். நான் கூப்பிட நினைத்த பலரும் எழுதி விட்டதால், மூணாவது யாரும் இல்லை.


மக்கா நாம சொன்னத மட்டும் எடுத்துக்காதீங்க. "ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு" என்றும் கூட ஔவைப்பாட்டி சொல்லி இருக்கிறார்.

Tuesday, April 17, 2007

1. இந்தியப் போர்கள்

முன்னுரை: சுதந்திரம் கிடைத்து இன்று வரை பல போர்களை இந்தியா சந்தித்து இருக்கிறது. அப்போர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவே இப்பதிவு. அப்போர்கள் நடந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாகவே பதிவுகளை பதிய இருக்கிறேன். இப்பதிவிற்கான content களை பல தளங்களில் இருந்து பெற்றிருக்கிறேன். அவை என்ன என்பதை இறுதியில் குறிப்பிடுகிறேன். இப்பதிவுகளை "Compilation & Translation" என்ற அளவில் மட்டுமே நோக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் நிகழ்வுகளை இந்தியாவின் நிலையிலிருந்தே விளக்கி இருக்கிறேன். பாகிஸ்தானிய தளங்களுக்கோ, இல்லை சீனத் தளங்களுக்கோ சென்றால் அவைகளில் போருக்கான காரணமாக இந்தியாவின் தவறுகள் கூறப்பட்டிருக்கும். ஆனால் நான் இந்தியன் என்பதால் எனது தார்மீகக் கடமையாக அத்தளங்களில் கூறப்பட்டவைகளை ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை பதிந்துள்ளேன்.

முதல் இந்திய - பாகிஸ்தானிய போர் (1947 - 1948)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா முன் எப்பொழுதும் காணாத மாற்றங்களை கண்டது. முன்னூறு ஆண்டுகளாக இஸ்லாமியர்களால் ஆளப்பட்ட இந்திய நாட்டு இந்துக்கள் இஸ்லாமியர்களின் மீது அதிருப்தி கொண்டிருந்தனர். அதே நேரத்தில் தாங்கள் ஆங்கிலம் கற்பது தங்கள் மத நம்பிக்கைக்கு புறம்பானது என்று கருதினார்கள் இஸ்லாமியர்கள். இதனை மாற்ற சர் சையது அஹமது கான் அவர்கள் MAO கல்லூரியை (Muhammedan Anglo-Oriental College) 1875 ஆம் ஆண்டு அளிகாரில் தொடங்கினார். அது 1920 ஆம் ஆண்டு இஸ்லாமிய பல்கலைகழகமானது (Aligarh Muslim University). இவ்வளவு இருந்தும் இஸ்லாமியர்களின் நிலை குறிப்பிடதக்க அளவு மாறவில்லை. அதனால் அரசு அலுவலகங்களில் இந்துக்களே அதிகம் பணியாற்றினர். இது இஸ்லாமியர்களிடையே இந்துக்களுக்கு எதிராக அதிருப்தியை உருவாக்கியது. ஆங்கிலேயர்களின் "Divide & Rule" கொள்கை, அதற்கு தூபம் போட்டது. இஸ்லாமியர்களுக்காக வென்று ஒரு தனி அமைப்பு 1906 ஆம் ஆண்டு அன்றைய கிழக்கு வங்காளத்தில் உள்ள தாக்காவில் உருவானது. அதற்கு வெளிப்படையாகவே ஆங்கிலேயர்கள் ஆதரவளித்தனர். அந்நிலையில் 1942 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் "Quit India Movement" ஆரம்பித்தது. ஆனால் அதை மறுத்த முஸ்லிம் லீக் "Divide & Quit" என்று முழங்கியது.



குவாத் ஈ ஆஸாம் முகம்மது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீகில் அல்லாமா இக்பால், லியாகத் அலி கான், சவுத்ரி நாசர் அஹமத், ஃபாத்திமா ஜின்னா, ஹுசேன் ஷாஹீத், ஃபாஸுல் ஹக், அப்துர் ரப் நிஷ்தார் போன்ற பல தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி நாடாக பாகிஸ்தான் அமைவதில் முனைப்புடன் செயல்பட்டனர்.



அதே நேரத்தில் இரண்டாம் உலகப் போரினால் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த இங்கிலாந்து ஆசியாவில் தனது மாகாணங்களை இனி நிற்வகிக்க முடியாது என்று உணர்ந்தது. அதைத் தொடர்ந்து ஆங்கிலேய இந்தியாவில் இருந்த 565 மாகாணங்களின் தலைமைக்கும் அவர்கள் இந்தியாவிலோ இல்லை பாகிஸ்தானிலோ இணைய அவர்களையே முடிவெடுக்க விட்டனர் ஆங்கிலேயர். பஞ்சாப் இரண்டாக பிரிந்து மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானிலும், கிழக்கு பஞ்சாப் இந்தியாவிலும் இணைந்தன. அதே போன்று வங்காளம் இரண்டாக பிரிந்து மேற்கு வங்காளம் இந்தியாவிலும் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிலும் இணைந்தன. அவ்வாறு நடந்த பிரிவினையின் போது அப்பகுதி மக்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாயினர். எல்லை பகுதி என்பதால் கலவரம் வெடித்து ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர்.

அம்மக்கள் கூட்டம் கூட்டமாக பிரிவினையின் போது எல்லையை கடந்தனர். 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 14.5 மில்லியன் மக்கள் எல்லையை கடந்தனர். 7.226 மில்லியன் இஸ்லாமியர்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும், 7.249 மில்லியன் இந்துக்களும், சீக்கியர்களும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் குடிபெயர்ந்தனர். தாங்கள் பிறந்த ஊர், தங்களது அசையா சொத்துக்கள் அனைத்தையும் விட்டு விட்டு தங்களால் சுமக்க முடிந்தவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு எல்லையை கடந்த அவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது.


பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் நடந்ததை போன்றே மற்ற மூன்று மாநிலங்களில் பிரிவினை அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை. அவை ஜுனாகத், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர்.

இஸ்லாமிய மன்னரால் ஆளப்பட்ட ஜுனாகத் (இன்றைய குஜராத்) பாகிஸ்தானில் இணைய விருப்பம் தெரிவிக்க, அம்மாநிலத்தில் பெரும்பான்மையான இந்துக்களோ இந்தியாவில் இணைய விரும்பினர். இதனால் கலவரம் வெடித்தது. அதனை அடக்க முடியாமல் ஜுனாகத் மன்னர் பாகிஸ்தானிற்கு ஓடிவிட, ஜுனாகத் இந்திய பகுதியானது. ஹைதராபாத்திலும் அதே நிலவரம். ஆளும் இஸ்லாமிய மன்னரோ பாகிஸ்தானில் இணைய விரும்ப, பெரும்பான்மையான இந்துக்களோ இந்தியாவில் இணைய விரும்பினர். அங்கும் கலவரம் வெடித்து, இந்திய படையினர் சென்று கலவரத்தை அடக்கி ஹைதராபாத்தையும் இந்தியாவில் இணைத்தனர்.



காஷ்மீரை பொருத்த வரை இந்த நிலையில் சற்றே மாற்றம். அம்மாநிலத்தில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். ஆளும் மன்னரோ ஹரி சிங். அவர் ஒரு இந்து. அவர் இந்தியாவிலும் அல்லாமல், பாகிஸ்தானிலும் அல்லாமல் தனி நாடாக இருக்க விரும்பினார். மக்களிலோ ஒரு பகுதியினர் (இவர்களில் பல இஸ்லாமிய தலைவர்களும் அடக்கம்) இந்தியாவில் இணைய விருப்பம் தெரிவிக்க, மற்றொரு பகுதியினர் பாகிஸ்தானில் இணைய விரும்பினர்.



இந்நிலையில் காஷ்மீரில் உள்ள 48 சதவிகித மக்கள் இஸ்லாமியர்கள் அல்ல (இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர்) என்பதாலும், காஷ்மீரில் உள்ள ஷேக் அப்துல்லா போன்ற இஸ்லாமியத் தலைவர்கள் இந்தியாவில் இணைவதையே விரும்பியதாலும் காஷ்மீரும் இந்தியாவில் இணைந்து விடும் என்று அஞ்சிய பாகிஸ்தான் வட மேற்கு பகுதி வாழ் பழங்குடியினரை தூண்டி காஷ்மீரின் மீது படை எடுக்க செய்தது. அவர்களுடன் தங்கள் இராணுவத்தையும் இணைத்தது. அவர்கள் காஷ்மீரத்தில் பல பகுதிகளை ஆக்கிரமித்தனர். இந்த படையெடுப்பை கண்டு அஞ்சிய காஷ்மீர இந்து மன்னர், இந்திய அரசாங்கத்திற்கு செய்தி அனுப்பினார். அதில் காஷ்மீருக்கு மற்ற மாநிலங்களுக்கு அல்லாத சில சிறப்பு சலுகைகள் அளித்து தனி அந்தஸ்து அளிப்பதாயின் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகவும், அப்பொழுது நடக்கும் படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் முறியடிக்க இந்திய இராணுவத்தின் உதவியையும் வேண்டினார்.



அதற்கு சம்மதம் அளித்தது நேரு அரசு. அதுவரை காஷ்மீரின் மீதான பாகிஸ்தான படையெடுப்பாக இருந்த அந்த நிகழ்வு, அதற்கு பிறகு இந்தியா மீதான பாகிஸ்தான படையெடுப்பாக மாறியது. சுதந்திரம் பெற்று மூன்றே மாதங்கள் ஆன நிலையில் தனது முதல் போரை சந்திக்க தயாரானது இந்திய இராணுவம்.


இன்னும் வரும்...

Wednesday, April 11, 2007

"உடம்பொடு உயிரிடை"

பேராசிரியர் திரு.சத்யசீலன் அவர்களின் மேடை பேச்சு சிறு வயதிலிருந்து என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நான் படித்த பள்ளியின் தாளாளரின் நெருங்கிய நண்பர் அவர் என்பதால் இரண்டு மூன்று முறை எங்கள் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றி இருக்கிறார். நகைச்சுவையுடன் கலந்து நல்ல கருத்துக்களை கூறுவார்.


இன்று பட்டிமன்றங்களில் கொடி கட்டி பறக்கும் திரு. சாலமன் பாப்பையா, திரு. திண்டுக்கல் லியோணி போன்றவர்கள் அவரது பள்ளியிலிருந்து வந்தவர்கள் தாம். திரு. சத்யசீலன் நடுவராக இருக்க, திரு. அறிவொளி, திரு. பாப்பையா, திருமதி. காந்திமதி போன்றோர் இருதரப்பிலும் வாதம் செய்யும் பட்டிமன்றங்களையும், வழக்காடு மன்றங்களையும் அந்நாளில் திருச்சி மற்றும் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள். அதையெல்லாம் நாள்தோரும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.


இல்வாழ்க்கையை பற்றி அவர் உரையாற்றிய ஒரு சொற்பொழிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அதன் சில பகுதிகள் கீழே.


கணவன், மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது?


உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையொரு எம்மிடை நட்பு
[3. காமத்துப்பால் --> 3.1 களவியல் --> 3.1.5 காதற்சிறப்புரைத்தல் --> குறள் : 1122]


அதாவது "உடம்பொடு உயிரிடை" என்கிறார் வள்ளுவர். அதன் பொருள் கணவன், மனைவி உடலும் உயிரும் போல இருக்க வேண்டும். என்ன ஒரு அழகான உவமை பாருங்கள். இதனை ஒரு சாதாரன உவமையாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த உவமைக்கு பின்னால் இருக்கும் கருத்தை பார்க்க வேண்டும். உடலும் உயிரும் என்றால், ஒரு உடலுக்கு ஒரு உயிர் தான் இருக்க முடியும். ஒரு உடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உயிரோ அல்லது ஒரு உயிருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உடலோ இருக்க முடியாது. இது அந்த உவமைக்கு பின்னால் இருக்கும் முதல் கருத்து.


அடுத்ததாக உடலும் உயிரும் தனித்தனியாக ஒன்றன் துணை இல்லாமல் ஒன்று இயங்க முடியாது. ஒரு உடலும், உயிரும் இனைந்தால் தான் மனிதன். உடல் தனியாக இருந்தால் அதற்கு பெயர் பிணம். உயிர் தனியாக இருந்தால் அதற்கு பெயர் பேய். இது அந்த உவமைக்கு பின்னால் இருக்கும் அடுத்த கருத்து.


என்ன அழகாக கூறி இருக்கிறார் பாருங்கள். ஒரு கணவனுக்கு பல மனைவியரும், ஒரு மனைவிக்கு பல கணவர்களும் இருக்கவே முடியாது. மேலும் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒருவரை விட்டு மற்றவர் நீங்கவே கூடாது என்பதை "உடம்பொடு உயிரிடை" என்ற ஒரே உவமையில் கூறி இருக்கிறார்.

இனி இதை பார்த்ததும் எனக்கும் எனக்குள் இருக்கும் எனது இம்சைக்கும் (அதாங்க எனது மனசாட்சி) நடந்த உரையாடல்.


எ.ம.:டேய்! இத பாத்ததுல இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்குடா.
நான்:எதுக்கு மச்சி? இவ்வளோ சந்தோஷப் பட இதுலே அப்படி என்ன சொல்லிட்டாரு?
எ.ம.:என்ன சொல்லிட்டாரா? டேய் ஆப்ப சட்டி தலையா! அவரு புருஷன் பொண்டாட்டி எப்படி இருக்கனும்னு சொன்னாரு இல்லே.
நான்:ஆமாம் அதுக்கு என்ன?
எ.ம.:நீயும் உன்னோட பொண்டாட்டியும் எப்படி இருக்கீங்களோ அதையே சொல்லிட்டாருடா. சந்தோஷப் படாம இருக்க முடியுமா?
நான்:நிஜமாவா மச்சி? குறளுக்கு இலக்கணமாவா நாங்க வாழறோம்?
எ.ம.:பின்ன நான் உன் கிட்ட பொய் சொல்வேனா?
நான்:எப்படி மச்சி?
எ.ம.:அப்படி கேளுடா மைக்ரோவேவ் மண்டையா. அவரு என்ன சொன்னாரு? ஒரு பேய் கூட ஒரு பொணம் குடித்தனம் நடத்தறது தான் இல்வாழ்கைன்னு. அதே மாதிரி.........
நான்:டேய்! @#$%^&*!


என்று அவனை அடிக்க கை ஓங்க அதற்குள் அவன் சங்கத்தை கலைத்து விட்டு அப்பீட்டாகி விட்டிருந்தான். அவன விடுங்க மக்கள்ஸ். நம்ம கூடவே சுத்திகிட்டு திரியரதால அப்படிதான் அளவுக்கதிகமா நக்கல் விடுவான். சரி உங்க இல்வாழ்க்கை எப்படி? எங்கே வரிசையா வந்து சொல்லிட்டு போங்க. ரெடி ஸ்டார்ட் 1..2.....3..............

Wednesday, April 04, 2007

மொழியா அறிவு?

நீண்ட நாட்களாகவே இதைப் பற்றிய பதிவொன்று எழுத வேண்டும் என்றிருந்தேன். இன்று தான் கை கூடியது. பல தமிழ் படங்களில் இந்த அபத்தத்தை பார்த்திருப்பீர்கள். நாயகன் கேனயன் போன்று இருப்பான்; நாயகி அவனை அவமானப் படுத்துவாள்; பின்னர் ஒரு பொழுது அவன் ஆங்கிலத்தில் பேச உடனே அவள் அவன் மீது காதல் வசப்படுவாள். அட ராமா! எங்கே சென்று முட்டிக் கொள்வது?


நமது சமூகத்தில் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு கிடைக்கும் மரியாதை தமிழ் பேசுபவர்களுக்கு கிடைப்பதில்லை. பேண்டு சட்டை அணிந்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதை வேட்டி சட்டை அணிந்தவர்களுக்கு கிடைப்பதில்லை. முதலாமவர்களிடம் "எங்க சார் போகனும்? உக்காரதுக்கு இடம் இல்லியே சார். அடுத்த பஸ் நம்மலுது தான். மணிண்ணே! சாருக்கு ஒரு சீட் வைங்கண்ணே. தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டு. போங்க சார் போய் அதுலே வாங்க." என்று கூறும் நடத்துனர்கள் இரண்டாமவர்களிடம் "டிக்கட்டு அஞ்சு அம்பது. காசு இருந்தா மட்டும் ஏறு. பத்து காசு கம்மினாலும் இறக்கி விட்டுடுவேன்." என்று கூறுவதை பல பொழுது கண்டிருக்கிறேன். இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். இத்தனைக்கும் நடத்துனர்களும் கீழ் மட்டத்திலிருந்த வந்தவர்கள் தாம்.

அடித்தட்டு மக்கள் என்று இல்லை. நன்கு படித்த சமூகத்தில் மேல் மட்டத்தில் இருக்கும் மக்கள் கூட தமிழை விட ஆங்கிலத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள்.


ஒரு நண்பர். தமிழர். கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர். அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவரது ஐந்து வயது மகனுக்கு தமிழ் எழுதவோ, படிக்கவோ, பேசவோ, புரிந்து கொள்ளவோ இயலாது. நான் அவரிடம் கேட்டேன், "தமிழ் எழுத படிக்க தெரியவில்லை என்றால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பேசவோ இல்லை பேசுவதை புரிந்து கொள்ளவோ இயலவில்லை என்றால் எனக்கு புரியவில்லையே? நீங்கள் வீட்டில் தமிழில் தானே உரையாடுகிறீர்கள்?". அதற்கு அவர், "இவன் பிறப்பதற்கு முன்னர் அப்படித்தான். ஆனால் இவன் பிறந்த உடன் நாங்கள் தமிழில் பேசுவதை நிறுத்தி விட்டோம்." என்றார். அதற்கு அவர் கூறிய காரணம், "அவனுக்கு தமிழ் தெரிந்தால், நம்மை போன்று ஆங்கிலம் பேசும் போது, எதையும் தமிழில் நினைத்து, பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பேசுவான்" என்றும், "அவனுக்கு தமிழ் தெரியாமல் இருந்தால் எதையும் ஆங்கிலத்திலேயே நினைக்க (Thinking in English) முடியும்" என்றும் குறிப்பிட்டார்.

ஆங்கிலம் தெரியாது என்று கூனிக் குறுகி அவமானத்துடன் சொல்லும் பல தமிழர்களை பார்த்திருக்கிறேன். அதே பொழுது தமிழ் தெரியாது என்று பெருமையாக கூறும் தமிழர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஏன் இப்படி? இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயர்களுக்கு நாம் அடிமையாக இருந்து விட்ட காரணத்தினாலா? நுனி நாக்கு ஆங்கிலம் தான் மரியாதைக்கான கடவுச்சொல் என்றால் நல்ல நடத்தை, ஒழுக்கம், சமூக அக்கறை போன்றவை தேவை இல்லையா?


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றான் பாரதி. அவன் கூறலாம். தமிழ், ஃபிரன்சு, ஆங்கிலம், சமஸ்க்ரிதம் போன்ற பல மொழிகள் அறிந்தவன் அவன். ஆனால் அவனும் கூட தமிழ் மட்டும் போதும் என்று சொல்லவில்லை. "சிந்து நதியின் மிசை நிலவினிலே; சேரநன் நாட்டிளம் பெண்களுடனே; சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து" என்று காதல் செய்யவே சிந்து மொழி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பல மொழிகளை கற்க சொன்னவன் அவன். ஆக தமிழ் மட்டும் போதும் என்றோ, பிற மொழிகளை கற்க வேண்டாம் என்றோ நான் கூறவில்லை. ஆனால் மொழி என்பது எண்ணத்தை பிரதி பலிக்கும் கருவி மட்டுமே. நமது எண்ணத்தை எதிரே இருப்பவர் புறிந்து கொண்டாராயின் அதுவே வெற்றி. "குந்து நைனா" என்றாலும், "உட்காருங்கள் ஐயா" என்றாலும் பொருள் ஒன்று தான். ஒரு மொழியை இலக்கண சுத்தமாக பேச முயலுவதும், பேசுவதும் பாராட்ட தக்க செயலே. ஆனாலும் நம்மால் அது முடியாத பட்சத்தில் தாழ்வு மனப்பாண்மையில் ஊன்றி விடாமல், கண்டபடி உளருவதும் கூட தவறொன்றுமில்லை. அது பல வகையில் நன்மையே தரும்.


அதற்கு ஒரு நல்ல உதாரணம் தான் கீழே உள்ள கடிதம். அது எப்பொழுது, யாருக்கு எழுதப்பட்டது என்பதை பற்றி தெரியவில்லை. ஆனால் இந்த கடிதம் வங்காளத்தில் கண்டறியப்பட்டது. இந்திய இரயில்வே அருங்காட்சியகத்தில் இப்பொழுது இருக்கிறது. இதை எழுதியது ஒரு இரயில் பயணி. அந்தப் பயணி இரயில் நிலையத்தில் மலம் கழிக்க சென்றதை அறியாமல் இரயில் கிளம்பியதை தொடர்ந்து அவர் இரயில்வே உயரதிகாரிக்கு எழுதிய கடிதம். இதை இரயில்வே அதிகாரிகள் "Jackfruit Letter" என்று குறிப்பிடுகிறார்கள்.

Dear Sir,

I am arrive by passenger train at Ahmedpore station, and my belly is too much full of jack fruit. I am therefore went to privy, Just as I doing the nuisance, that guard making whistle blow for train to go off and I am running with lotah in one hand and dhotie in the next hand. I am fall over and expose my shockings to man, females, woman on platform. I am get leaved at Ahmedpore station.

This too much bad, if passenger go to make dung, that dam guard no wait train 5 minutes for him. I am therefore pray your honour to make big fine on that guard for public sake, otherwise I am making big report to papers.

Your faithful servant,
Okhil Ch. Sen

சரி, இந்த கடிதத்தில் என்ன இருக்கிறது?, என்கிறீர்களா? இக்கடிதம் கிடைத்த பிறகு தான் இரயில் பெட்டியில் கழிப்பறையின் அவசியத்தை இரயில்வே அதிகாரிகள் உணர்ந்தார்கள்.கழிப்பறை வரக் காரணமானது இந்த கடிதம் தான். அடிப்படை ஆங்கில இலக்கணப் பிழைகள் பல உள்ள இந்த கடிதம் சாதித்திருக்கும் சாதனையை பாருங்கள். ஆகவே நண்பர்களே! நாம் இனியாவது மொழி அறிவு என்பதை வைத்து ஒரு மனிதனை எடை போடுவதை தவிர்ப்போமா? ஆங்கிலம் தெரிந்தவன் எல்லாம் பண்டிதனும் அல்ல, அது தெரியாதவன் எல்லாம் பாமரனும் அல்ல.