Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, August 01, 2015

இரு மரணங்களும் கொஞ்சம் வலியும்

சென்ற வாரத்தில் இரண்டு மரணங்கள். இறந்தவர்கள் இருவருமே இஸ்லாமியர்கள். ஆனால் ஒருவர் மரணத்துக்கு இந்த தேசமே அழுதது. மற்றொருவர் மரணத்தை இந்த தேசமே கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் வேதனை என்னவென்றால் பலரும் அந்த மரணத்தையும் எதிர்த்தார்கள் என்பது தான்.

எப்படி அப்துல் கலாம் போன்றவர்களை தமிழர், இஸ்லாமியர் என்ற குறுகிய வட்டத்துக்குள் வைக்க முடியாதோ, அது போலவே யகூப் மேமன் போன்றவர்களையும் அடக்க முடியாது. அப்துல் கலாம் இந்த தேசத்தின் சொத்து. அனைவருக்கும் பொதுவானவர். அது போலவே யகூப் மேமன் இந்த தேசத்தின் எதிரி.

அவன் ISI பணத்தினை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவியவன். 300 அப்பாவிகளை பலி வாங்கிய குண்டு வெடிப்பு சம்பவத்தினை நடத்த உதவியவன். திட்டமிட்டபடி குண்டு வெடிப்பு நடந்த உடன் கராச்சியின் உள்ள ISI உளவாளி ஜாலியாவாலாவின் உதவியுடன் குடும்பத்துடன் தப்பி சென்றவன். பாகிஸ்தானின் ISI ஆல் அவனுக்கு யூஸுஃப் அஹமத் என்ற போலி பெயரில் போலி பாகிஸ்தான் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது, அவன் தாய்லாந்தில் ஒளித்து வைக்கப்பட்டான். இறுதி வரை அவனை பாதுகாக்க ISI முயன்றது.

அவன் தானாகவே முன் வந்து சரணடைந்தான் என்பதெல்லாம் கட்டுக் கதை. அவனை நேபாளத்தில் நேபாள போலீசார் கைது செய்தனர் என்பது தான் உண்மை. உண்மை இப்படி இருக்க, என்னமோ அவன் ஒரு மஹாத்மா போலவும் இந்தியா திட்டமிட்டு இஸ்லாமியர்களை பழிவாங்குகிறது என்பது போலவும் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. முக நூலில் ஒருவர் ஒன்றை பகிர்ந்திருந்தார். சுதந்திர இந்தியாவில் இது வரை 174 பேர் தூக்கில் இடப்பட்டதாகவும், அதில் 15 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும். இதிலிருந்தே தெரியவில்லையா எது உண்மை எது திட்டமிட்டு சொல்லப்பட்ட பொய் என்பது.

அவன் இந்திய உளவுத்துறைக்கு தான் கைதான பிறகு ஒத்துழைப்பு கொடுத்தான் என்பதாலும் தனது குடும்பத்தினர் இந்தியா வர உதவி செய்தான் என்பதாலும் மட்டுமே அவன் செய்த குற்றங்கள் சரியாகி விடுமா? உயிரிழந்த 300 பேருக்கும், உடல் உறுப்புகளை இழந்த 2,000 பேருக்கும் இந்திய அரசும் நீதித்துறையும் நியாயம் அளிக்க வேண்டாமா?

பம்பாய் குண்டு வெடிப்பு என்பது பாகிஸ்தானின் ISI யால் திட்டமிடப்பட்டு இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர். இதில் மாற்றுக் கருத்து இருப்பவர்களுடன் விவாதிப்பதே சுவற்றில் முட்டிக் கொள்வதற்கு நிகர். ஒருவர் என்னடா வென்றால் பம்பாய் குண்டு வெடிப்பு பாஜக மற்றும் சிவசேனையின் மத அரசியலுக்கான பதிலடி என்று சொல்கிறார். பாகிஸ்தானில் எத்தனையோ இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கெல்லாம் அங்குள்ள இந்துக்கள் குண்டு வெடிப்பு நடத்திக் கொண்டா இருக்கிறார்கள்? இதை சொல்வதன் மூலம் மசூதி இடிப்பை நான் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. நான் கூறுவது அப்பாவி மக்களுக்கெதிரான தீவிரவாதம் எதன் காரணமாக வந்தாலும், எதன் பெயரில் வந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டியதே. ஒரு தவறை இன்னொரு தவறால் நியாயப்படுத்தவே முடியாது.

மற்றொருவர் யாரோ ஒரு பாஜக எம்பி இஸ்லாமியர்கள் எல்லோரும் பாகிஸ்தான் போங்கள் என்று உளறினான் என்பதற்காக இந்திய தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சரி என்று எழுதுகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒவைசி, "சட்டம் தனது கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த தேசத்தின் 80 கோடி இந்துக்களையும் 15 நிமிடங்களில் அழித்து விடுவோம்" என்று சொன்னது பாவம் அவருக்கு தெரியவில்லை போலும்.

இஸ்லாமியர்கள் ஹிந்து மத வெறியர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தங்களை ஒவைசி போன்ற மத வெறியர்களிடமிருந்தும், செக்யூலரிசம் பேசும் பன்னாடைகளிடமிருந்தும் காப்பாற்றிக் கொள்வது. இவர்கள் தான் தீவிரவாதிகளுக்கு இஸ்லாமியர்கள் என்ற மத சாயம் பூசுபவர்கள். இவர்கள் தீவிரவாதிகளால் இறந்த இஸ்லாமியர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்க மாட்டார்கள். ஆனால் அஃப்சல் குருவுக்கும், யகூப் மேமனுக்கும் ஆதரவாக வருவார்கள். ஒரு வேளை கசாப் பலரை கொல்லும் காட்சிகள் படமாக்கப் படவில்லை என்றால் அவனுக்கும் ஆதரவாக கிளம்பி இருப்பார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியின் நீட்சியாகவே இவர்கள் இருக்கிறார்கள்.



அது சரி, யகூப் பற்றி நிறைய பேசியாகி விட்டது. கலாம் பற்றி பேச ஒன்றும் இல்லையா? என்று கேட்டால், பேச நிறைய இருக்கிறது. ஆனால் தேவை இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை. யாருமே பேசவில்லை என்றால் தான் நாம் பேச வேண்டும். இங்கு தான் எல்லோருமே கலாம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே. குறிப்பாக ஜெயமோகனின் கலாம் குறித்த கட்டுரை அருமை. கீழே அதிலிருந்து சில பகுதிகள்.

"அவர் தனக்கென வாழவில்லை. இந்த நாட்டை அவர் விரும்பினார். இதன் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமென கனவுகண்டார். அதற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனக்கென எதையும் சேர்க்கவில்லை. அத்தகைய மகத்தான முன்னுதாரணங்கள் நம் முன் இன்று குறைவே.

தனக்கும் தலைமுறைகளுக்கும் சொத்துசேர்ப்பதன்றி பிறிது எதையுமே அறியாதவர்கள் தலைவர்களாகக் கொண்டாடப்படும் இந்நாட்டில் இளைய தலைமுறையினர் அண்ணாந்து நோக்கும் இலட்சிய வடிவங்கள் மிகச்சிலவே. ஆகவேதான் கலாம் கொண்டாடப்படுகிறார். இலட்சியவாதத்திற்கு இன்னும் இங்கே பெருமதிப்பு உள்ளது என்பதையே காட்டுகிறது இது.
"

ஒரு சோறு பதம். அதனால் இதுவே போதும் என்று நினைக்கிறேன். கட்டுரையை முழுதும் படிக்க இங்கே செல்லுங்கள்.

http://www.jeyamohan.in/77432#

சாரு கேட்கிறார், "கலாம் பற்றிப் பேசும் போது அவர் நல்லவர் என்று பாராட்டுகிறார்கள். ஒருவரை நல்லவர் என்று பாராட்டுகின்ற அளவுக்காக நாட்டில் நல்லவர்களின் எண்ணிக்கை அருகி விட்டது? மனிதனாகப் பிறந்த ஒருவரின் அடிப்படைப் பண்பு அல்லவா அது?" என்று. நியாயமான கேள்வி தான். ஆனால் எந்த நிலையில் இருந்து அப்படி வாழ்கிறோம் என்பது தான் ஒருவனது தன்மையை நிர்ணயிக்கிறது. சாதாரண மக்களாகிய நீங்களும் நானும் நல்லவர்களாக வாழ்வது ஒன்றும் பெரிய செயல் அல்ல. ஆனால் அதிகார மையத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு தவறு செய்ய பல வாய்ப்புகள் இருக்கும் பட்சத்திலும் அதனை செய்யாமல் இருக்க அசாத்திய மன திடம் வேண்டும். அதற்காகவே கலாம் போற்றப்படுகிறார்.

ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி விமர்சிக்க கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை, என்றாலும் அவர் செய்த செயல்களை வைத்து தான் அவரை விமர்சிக்கலாமே தவிர அவர் செய்யாததை வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பது சரி என்று எனக்கு படவில்லை. எத்தனையோ பாரதரத்னாக்களை இந்திய மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவர்களுள் முதன்மையானோர்களின் பட்டியல் ஒன்று தயாரித்தால் அதில் கலாம் நிச்சயம் இடம் பெறுவார். RIP Mr. Kalam.

Friday, February 15, 2013

குமுதம் ரிப்போர்ட்டருக்கு எனது பாராட்டுகள்

தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவதில் புதிய சாதனை செய்து இருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரையும் அதன் ஆசிரியரையும் மனம் நெகிழ பாராட்டுகிறேன். செய்தியை படித்த திமுக மற்றும் திக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தில் ஈடு பட்டு அதில் தர்மபுரியை போல, மதுரையை போல அப்பாவி பொது மக்கள் சிலர் இறந்து போனால் நமக்கென்ன. நமக்கு எதற்கு சமூக பொறுப்பு? நமக்கு தேவை பரபரப்பு தலையங்கம் தானே.

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.


Thursday, January 24, 2013

I Support Kamalhaasan


நாட்டில் போராடுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்க ஒரு சினிமாவை பிடித்துக் கொண்டு தொங்கும் நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன.

படத்தை தடை செய்தால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் நிலை மாறிவிடுமா? இல்லை படம் வெளியானால் தான் அவர்கள் நிலை மாறி விடுமா? இரண்டும் இல்லை. இன்று படம் வெளியாகவில்லை என்றால் இன்னும் ஒரு வாரத்திற்கு பின்னர் படம் வெளியாகத்தான் போகின்றது.

சென்சார் போர்டு சான்று பெற்ற படங்களை தனிக் குழுக்கள் போராட்டம் என்று பயம் காட்டி தடை செய்யலாம் என்ற நிலை நிச்சயம் ஆரோக்கியமானது இல்லை. பெரும்பாலான இந்தியர்கள் மத நல்லிணக்கத்துடன் தான் வாழ்கிறார்கள். ஒரு படம் வந்து இந்த நல்லிணக்கத்தை கெடுத்து விடும் என்பதெல்லாம் சரியான பேத்தலாக இருக்கிறது.

போராட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்களுக்கு படம் ஒரு சாக்கு. அவ்வளவு தான். அப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனையோ, இல்லை போராட்டமோ வந்தால் அதை அடக்குவது அரசின் வேலை.

இந்த நிலை தொடர்ந்தால் பெரும்பாலான படங்களின் நாயகர்களாக நடிக்கும் ஆண்களையே நல்லவர்களாக காட்டுகிறார்கள் என்று பெண்கள் அமைப்பும், வில்லன்களாக நடிக்கும் ஆண்களையே கெட்டவர்களாக காட்டுகிறார்கள் என்று ஆண்கள் அமைப்பும் போராட தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. சினிமா என்பது பொதுபுத்தியை காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காலத்தில் சினிமாவில் வில்லன்களுடன் வரும் குறைந்த ஆடை உடுத்திய பெண்களை கிருத்துவர்களாகவே காட்டினார்கள். அவர்கள் பெயர் ஸ்டெல்லா, ரீட்டா என்று ஏதாவது தான் இருக்கும். அதற்காக படம் பார்க்கும் அனைவரும் கிருத்துவர்களை அப்படியா நினைத்துக் கொண்டார்கள்.

படத்தை பார்க்காமல் கருத்து தெரிவிப்பது சரி கிடையாது. அது படத்தின் தடையை ஆதரிப்பவர்களுக்கும் பொருந்தும் படத்தின் தடையை எதிர்ப்பவர்களுக்கும் பொருந்தும். ஒரு வேளை படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்துவது போல காட்சிகள் இருந்தால் படத்தை இக்னோர் செய்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.

அரசு இயந்திரத்தில் லஞ்ச ஊழலையும், மருத்துவமும், கல்வியும் வியாபாரமாகி விட்டதையும், ஜாதி மத வெறிகளையும், உணவு பொருட்களில் கலப்படத்தையும், விவசாயம் அழிந்து கொண்டிருப்பதையும், மனிதம் செத்துவிட்டதையும் இக்னோர் செய்வோம், ஆனால் திரைப்படத்தில் எங்களுக்கு பிடிக்காத காட்சிகள் வந்தால் தெருவில் இறங்கி போராடுவோம் என்ற நிலை நகைப்பாக இருக்கிறது.

கீழே இருப்பது படத்தின் தடை குறித்து திரைத்துறையை சேர்ந்த ஒரு சிலர் எழுதிய ட்வீட்டுகள்.

Prakash Raj: BAN on Vishwaroopam. NOT FAIR. This cultural terrorism should stop. We should stand for the right to express. We are with you Kamal sir. When Tamil, Telugu and Hindi three censor boards of this democratic country has cleared Vishwaroopam. Where does this ban come from???
Spoke to distributors and people of Malaysia. It’s a Muslim country and the censor board has cleared Vishwaroopam, released the film today. People who saw the film in Malaysia say there is nothing against Muslims to worry. It’s a wonderful film by Kamal sir is someone listening?

Mahesh Bhatt: It clearly stated that once the Censor Board has cleared the film for public viewing, screening of the same cannot be prohibited. The Supreme Court order had quashed the decision of the Uttar Pradesh State Govt suspending the screening of the film ‘Aarakshan’ in UP.

Madhur Bhandarkar: I’m appalled by the TN Govt’s decision to ban Kamal Haasan’s Vishwaroopam. After the film has passed by the censor board. Not done!!!

Shirish Kunder: Kamal Haasan is no stranger to opposition in his creative endeavours.

Shekhar Kapur: For a man facing a ban on his film and loss of over 60cr, Kamal Haasan has the calm look of a man who completely who believes in what he is doing. I stand up for Kamal Haasan right to show the world Vishwaroopam and let the people decide, especially after Censor Board has passed the film. You?

ஆரூர் மூணா செந்திலின் பதிவில் கருத்து தெரிவித்த பதிவர் அஞ்சா சிங்கம் "பாருங்க ரஜினி ரசிகரை கமல் ரசிகராக மாத்தீட்டாங்க. அப்படியே நடுநிலை ஆளுங்களை இந்துத்துவா வாதிகளாக மாற்றும் வரை ஓயாமாட்டாங்க போல் இருக்கு." என்றார். அது கூட பரவாயில்லை. ஒரு வேளை "I support Kamalhaasan" என்பதை "I support Modi" என்று மாற்றி தொலைத்து விட்டால்?

Wednesday, November 28, 2012

சில்லறை வர்த்தகம் - ஜாக்கி சேகருக்கு பதில்

நம்ம பதிவுலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் சில்லறை வர்த்தகம் குறித்து பதிவொன்றை எழுதியுள்ளார். ஒரு வாடிக்கையாளரின் பார்வையில் இருக்கும் அதனுடன் வரிக்கு வரி உடன்படுகிறேன். ஆனால் அதே நேரத்தில், இம்மாதிரியான முதலீடுகள் வாடிக்கயாளரை மட்டும் பாதிப்பதில்லை. அதனால் பல தரப்பில் இருந்து இதை நாம் பார்க்க கடமைபட்டுள்ளோம்.

பதிவினை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு ஜாக்கி சேகரின் பதிவை படித்து விடுங்கள்.

சுட்டி: http://www.jackiesekar.com/2012/11/blog-post_28.html

இனி நாம் பதிவுக்கு போகலாம்.

அன்பின் ஜாக்கி சேகர் அவர்களே,

உங்கள் பதிவினை படித்த உடன் பின்னூட்டம் இடலாம் என்று தான் முதலில் நினைத்து தட்டச்ச தொடங்கினேன். பின்னூட்டம் பெரிதானதால் தனிப் பதிவாக போட்டு விடலாம் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு.

முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். வாடிக்கையாளருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து நீங்கள் சொன்னது நூறு சதவிகித உண்மை. அதனுடன் வரிக்கு வரி ஒத்து போகிறேன். ஆனால் அதே நேரத்தில் மளிகை கடை காரர்களுக்கு பாதிப்பு இல்லை என்று சொல்வது உங்களுக்கு விவரம் தெரியாது என்பதையே காட்டுகிறது. உங்களை குற்றம் சொல்ல அதில் எதுவும் இல்லை.

வால்மார்ட் போன்ற நிறுவனங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கீழே என்னால் முடிந்த வரையில் விரிவாக சொல்ல முயற்சிக்கிறேன்.

1. லோக்கல் கடைகளுக்கு உடனடி ஆப்பு:

இதை பற்றி விரிவாக சொல்ல ஒன்றும் இல்லை. நீங்களே சொல்லி விட்டீர்கள் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன என்று. வீட்டிற்கே வந்து பொருட்களை சப்ளை செய்வது, மிக குறைந்த விலையில் பொருட்களை கொடுப்பது, பரிசு பொருட்கள் கொடுப்பது என்று ஜிகினா வேலைகள் பல செய்து போட்டியாளர்களுக்கு ஆப்படிப்பார்கள்.

அவர்கள் கொடுக்கும் குறைந்த விலை பொருட்கள் உங்களை வாழவைக்க இல்லை, உங்கள் பக்கத்து வீட்டு கடைக்காரரை அழிக்க என்ற உண்மை உங்களுக்கு தெரிந்தால் மகிழ்ச்சி. லோக்கல் கடைக்காரர்கள் அனைவரும் அழிந்த பின்னரும் இவர்கள் குறைந்த விலைக்கே பொருட்களை கொடுப்பார்களா? இல்லை விலையேற்றம் செய்வார்களா? என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டு விடை சொல்லுங்கள்.

2. வால்மார்ட்டின் சப்ளையர்களுக்கு சிறிது காலம் கடந்து ஆப்பு:

உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் 100 பொருட்கள் மட்டுமே தயாரிக்கும் திறன் கொண்ட உற்பத்தியாளருக்கு ஒரு லட்சம் பொருட்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப் படும். அவரும் கடன் வாங்கி தொழிற்சாலையை விரிவு படுத்தி, பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி ஒரு லட்சம் பொருட்களை தயாரித்து விடுவார். தயாரித்து முடிந்ததும் முதல் ஆண்டு சொன்ன விலைக்கு வாங்கப் படும். அடுத்த ஆண்டு மிகவும் குறைந்த விலைக்கே பொருட்களை கேட்பார்கள். உற்பத்தியாளரும் ஓரளவு சமாளித்து குறைந்த விலைக்கு பொருட்களை கொடுப்பார். அதற்கு அடுத்த ஆண்டு இன்னும் குறைந்த விலைக்கு கேட்பார்கள். இப்படியே தொடர்ந்து ஒரு கட்டத்தில் உற்பத்தியாளருக்கு நஷ்டம் என்ற நிலையில் வந்து முடியும்.

உற்பத்தியாளர்களுக்கு வந்தது ஆப்பு. உற்பத்தியை அதிகரிக்க பல இன்வெஸ்ட்மென்டுகளை செய்திருப்பாளர்கள் அவர்கள். அதனால் தரத்தில் கை வைக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு வந்து விடும்.

3. வால்மார்ட்டில் வேலை செய்பவர்களுக்கு நிரந்தர ஆப்பு:

குறைந்த சம்பளத்தில் அதிக நேர வேலை, இன்ஸியூரன்ஸ் போன்ற பெனிஃபிட்ஸ் ஒன்றும் கிடையாது, 20 பேர் வேலை செய்ய வெண்டிய கடையில் 10 பேர் கூட வேலைக்கு இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நிரந்தர வேலையும் கிடையாது. பகுதி நேர வேலை மட்டுமே கிடைக்கும். வேலை செய்யும் போது ஏதெனும் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் நஷ்ட ஈடு ஒன்றும் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

4. வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு நன்மை

வாடிகையாளர்களுக்கு நன்மை என்பது பணத்தில் மட்டுமே. வால்மார்ட் பொருட்களின் தரம் குறித்த மாற்று பார்வை இங்கே உண்டு. வால்மார்டுக்கென்றே தனியாக பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கூட இங்கே உண்டு. ஒரே பிரான்ட் பொருள் குறைந்த தரத்தில் வால்மார்ட்டுக்கும் நல்ல தரத்தில் மற்ற இடத்துக்கும் கொடுப்பார்கள். ஏனென்றால் வால்மார்ட் கொடுக்கும் குறைந்த விலைக்கு அப்படி தயாரித்து கொடுப்பதினால் மட்டுமே லாபம் சம்பாதிக்க இயலும் என்பதால்.

யோசித்து பாருங்கள் வேலை செய்பவர்களுக்கும், கஸ்டமர்களுக்கு உச்ச கட்ட பாதுகாப்பு இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இவ்வளவு கொடுமைகளை செய்யும் வால்மார்ட் இந்தியா போன்ற தேசத்துக்கு வந்தால் என்னென்ன செய்வார்கள்.

வால்மார்ட்டின் வேர்களை நம் மண்ணில் பதியவிட்டால் அது நமது நாட்டின் வாழ்வாதாரங்களை அசுர வேகத்தில் குடித்து முடித்து அழித்து விடும்.

யார் எக்கேடு கெட்டு போனால் என்ன, எனக்கு குறைந்த செலவில் பொருட்கள் கிடைத்தால் போதும் என்பவர்களுக்காக இதை நான் சொல்லவில்லை. 18 மணி நேர மின்வெட்டில் கூட கூடாங்குளம் வேண்டாம் என்று கூறி போராடிய மக்கள் போன்றவர்களுக்காக இதை சொல்கிறேன்.

ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும், அரசு கூடாங்குள போராட்டத்தில் என்ன நிலை எடுத்ததோ, அதே நிலையை இதிலும் எடுக்கும். அரசுக்கு தேவையான சட்டங்கள் நிச்சயம் நாட்டில் வந்துவிடும். ஆனால் அதற்கு எதிரான நமது கருத்துக்களை பதிய வைத்தோமானால் நமது மனசாட்சிக்கு மட்டுமாவது நாம் உண்மையுள்ளவனாக இருக்க முடியும்.

பதிவினை தொடரந்து படித்தமைக்கு நன்றி. மாற்றுக் கருத்து இருப்பின் பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்துங்கள். தொடர்ந்து விவாதிப்போம்.

இவன்,
சத்யப்ரியன்

Sunday, April 15, 2012

நிழல் வீரனின் கடைசி நிமிடங்கள்

அங்கிருந்து தப்பித்து செல்வது இயலாத செயல். அந்த அறை மிகவும் சிறியது. எட்டு அடி நீளம், பத்து அடி அகலம். மண் சுவற்றினால் ஆனது. அந்த அறையில் பூட்டிய கதவை தவிர்த்து ஒரே ஒரு கம்பி வைத்த ஜன்னல் மட்டுமே இருந்தது. அந்த ஜன்னல் மட்டுமே வெளிச்சம் மற்றும் காற்றுக்கான மூலம். அந்த அறையை சுற்றி பொலிவியா நாட்டு போர் வீரர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு ஒன்று மட்டுமே தேவையாக இருந்தது. அவர்களுக்கு சிறைக்கைதிகள் தேவை இல்லை. அவர்களுக்கு பிணங்கள் மட்டுமே தேவை. கொரில்லாக்கள் அனைவரும் செத்தொழிய வேண்டும். நான் கதவை திறந்து கொண்டு அந்த அறைக்கு சென்றேன். கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கிடந்தான் அவன்.

அந்த அறைக்கு பின்னால் இருந்த அதே போன்றதொரு அறையில் ஆண்டோனியோவும், அர்ட்யூரோவும் இறந்து கிடந்தனர். இது அவனுக்கு தெரியும். பக்கத்து அறையில் ஆனிஸெக்டோ இறப்பதற்கு தயார் நிலையில் இருந்தான். இதுவும் அவனுக்கு தெரியும்.

நான் அவன் அருகில் சென்று பார்த்தேன். அந்த அறையில் இருந்த மரப்பலகையின் விளிம்பை பிடித்துக் கொண்டிருந்தான். அவனது உடம்பில் பல காயங்கள் இருந்தன. அவனது உடை பல இடங்களில் கிழிந்து இருந்தது. அவனது சிகையும் தாடியும் சேறும் சிகதியுமாக இருந்தது. அவனது கால்களில் ஷூக்கள் இல்லை. தோல் பை ஒன்றை கால்களை சுற்றி அதன் மீது கயிற்றினால் கட்டி இருந்தான்.

ஒரு டாக்டர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாட்டின் அமைச்சராக இருந்தவன். இன்று எனது காலடியில் கிடப்பது எனக்கு வியப்பாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பே ஆஃப் பிக்ஸ் சண்டையில் எனது நண்பன் பிணோ இவனது காலடியில் இப்படித்தான் நாய் போல கிடந்தான்.

பிணோவை உயிருடன் பிடித்த காஸ்ட்ரோவின் வீரர்கள் அவனை அடித்தே கொல்ல முடிவு செய்தனர். அவன் மீது தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த அடிகள் திடீரென்று நிறுத்தப் பட்டன. காரணம் அறிய கண்களை திறந்த பிணோவிற்கு அருகில் நன்கு பாலீஷ் செய்யப்பட்ட பூட்ஸ்கள் அணிந்த இரு கால்கள். அது இவனுடையது. பிணோவின் காதுகளில் இவன் சொன்னது, "உங்கள் அனைவரையும் நாங்கள் கொல்லப் போகிறோம்."

ஆனால் இன்று நிலைமை அனைத்தும் முற்றிலும் மாறி விட்டது. இவன் எனது காலடியில் நாய் போல கிடக்கிறான். இவனை நான் இப்பொழுது என்ன செய்தாலும் ஏன் என்று கேட்பதற்கு நாதியே கிடையாது. அவனது இன்றைய நிலையை அவனுக்கு உணர்த்த விரும்பி அவனிடம் சிறிது உரையாடலாம் என்று அவனிடம் பேசத் தொடங்கினேன்.

"ஏய்!, நான் உன்னிடம் சிறிது பேச வேண்டும்."

அவ்வளவு நேரம் அங்கே சுருண்டு கிடந்த அவனுள் இருந்த போர் வீரன் விழித்துக் கொண்டான்.

"என்னை கேள்வி கேட்கும் ஆண்மகன் இன்னும் பூமியில் பிறக்கவில்லை."

அவன் எனக்கு பதிலளித்ததே எனக்கு வியப்பாக இருந்தது.

"நான் உன்னிடம் கேள்வி கேட்க விரும்பவில்லை. நம் இருவரின் நம்பிக்கைகளும், சித்தாந்தங்களும் வேறு வேறு. ஆனாலும் நான் உன்னை கண்டு வியக்கிறேன். உனது வீரத்தை கண்டு, உனது கொள்கையில் நீ காட்டிய உறுதியை கண்டு, அதற்காக நீ செய்த தியாகத்தை கண்டு, இப்பொழுது உனது மரணத்தை கண்டு. உன்னிடம் நான் உரையாடவே விரும்புகிறேன்."

"எதை பற்றி?"

"ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நீ க்யூபா நாட்டு அமைச்சர், ஒரு மருத்துவர். ஆனால் இப்பொழுது? உனது நிலையை பார்த்தாயா? உனது கொள்கைகளே உன்னை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றன."

அவன் அதற்கு பதில் சொல்லாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"இந்த பெஞ்சில் அமர்ந்து கொள்ளட்டுமா?"

நான் உடனே ஒரு போர் வீரனை கூப்பிட்டு அவனது கட்டுக்களை அவிழ்க்க செய்து அவனை பெஞ்சில் அமர்த்தினேன். அவன் புகை பிடிப்பதற்காக சுருட்டை அளித்தேன்.

பின்னர் இருவரும் சுருட்டு பிடித்துக் கொண்டே உரையாட தொடங்கினோம். அவனது போர் திட்டங்களை பற்றி, கொரில்லா படையினரின் திட்டங்களை பற்றி அவன் ஒன்றும் சொல்ல மாட்டான் என்பது எனக்கு தெரியும். நேரத்தை வீணாக்காமல் பொதுவான விஷயங்களை பற்றி கேட்கத் தொடங்கினேன்.

"இவ்வளவு தென் அமெரிக்க நாடுகள் இருக்கையில், நீ ஏன் க்யூபாவின் வெற்றியினை தொடர்ந்து பொலிவியாவை தேர்ந்தெடுத்தாய்?"

"அதற்கு முன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் வெனிஸூலா போன்ற நாடுகளை நாங்கள் கைப்பற்ற முனைந்தால் அமெரிக்கர்களால் அழித்தொழிக்கப் படுவோம். அதற்காக அமெரிக்காவிற்கு தொலைவாக இருக்கும் நாடுகளை கைப்பற்ற நினைத்தோம்.

இரண்டாவது காரணம், பொலிவியா ஏழை நாடு. அரசு அதிகாரிகளும், இராணுவ ஜெனரல்களும், அமைச்சர்களும் சொகுஸு கார்களின் வலம் வரும் போது பொலிவியா நாட்டு மக்கள் மூன்று வேளை உணவுக்கே கஷ்டப் படுகிறார்கள்.

முன்றாவது காரணம், பொலிவியாவின் பூகோள அமைப்பு. பொலிவியாவை நாங்கள் கைப்பற்றினால் அதன் சுற்றியுள்ள நாடுகளான பெரு, அர்ஜென்டினா, ப்ரேஸில், பராகுவேய், சிலி போன்ற நாடுகளுக்கு செல்ல எங்களுக்கு எளிதாக இருக்கும்."

"க்யூபாவில் பெற்ற வெற்றியினை ஏன் உன்னால் பொலிவியாவில் பெற முடியவில்லை?"

"பொலிவியாவில் எங்களது போராட்டத்திற்கு அவ்வளவாக ஆதரவில்லை. அவர்களுக்கு க்யூபா நாட்டவனான எனது தலைமையின் கீழ் போராட விருப்பம் இல்லை."

அதன் பிறகு நாங்கள் க்யூபா நாட்டின் நிலைமை பற்றிய பேச்சை தொடங்கினோம்.

"அமெரிக்கா க்யூபாவின் மீது பொருளாதார தடைகளை விதித்த உடன் க்யூபாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டதே? ரஷ்யாவின் உதவியும் க்யூபாவிற்கு பெரிய அளவில் உதவ வில்லையே?"

அவன் அதற்கு ஒப்புக் கொள்வது போல தலையசைத்தான்.

"உன்னை க்யூபாவின் நிதியமைச்சராக்கிய பொழுது நீ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லையா? நீ ஒரு மருத்துவன். உனக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்?"

அதற்கும் பதிலில்லை. அதன் பிறகு காஸ்ட்ரோவை பற்றிய எனது கேள்விகள் ஒன்றுக்கு கூட அவனிடமிருந்து பதில் இல்லை. காஸ்ட்ரோவை பற்றிய எந்த தவறான கருத்தையும் அவனது வாயால் அவன் கூற அவன் விரும்பவில்லை என்பது மட்டும் எனக்கு தெரிந்தது.

"உனக்கு என்னை பற்றியும் க்யூபாவை பற்றியும் நிறைய தெரிந்திருக்கிறதே. நீ பேசுவதை கேட்கும் பொழுது நீ ஒரு பொலிவியனா என்று சந்தேகம் வருகிறது."

"நீ கூறுவது உண்மை தான். நான் யாராக இருக்கும் என்று யூகிக்க முடிகிறதா?"

"நீ ஒரு க்யூபனாக இருக்கக் கூடும். அமெரிக்க உளவுத்துறையில் வேலை செய்பவனாக இருக்கலாம்."

"சரியாக சொன்னாய். பே ஆஃப் பிக்ஸ் சண்டையில் உங்களுக்கு எதிராக இருந்தவன்."

"உனது பெயர் என்ன?"

"ஃபெலிக்ஸ்."

"முழூ பெயர்?"

"ஃபெலிக்ஸ்." சற்று அழுத்தமாக சொன்னேன்.

வேறு எதுவும் என்னை பற்றி நான் அவனிடம் கூறவில்லை. ஒருவேளை அவன் இந்த சிறையிலிருந்து தப்பித்து சென்றால் என்னை பற்றிய வேறு எந்த தகவலும் அவனுடன் வெளியேறுவதை நான் விரும்பவில்லை.

அப்பொழுது பக்கத்து அறையிலிருந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. ஆனிஸெக்டோ கொல்லப்பட்டான் என்பது அவனுக்கு தெரிந்தது. இட வலமாக தலையை பல முறை ஆட்டினான். அவனது எண்ண ஓட்டங்களை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

அப்பொழுது எனது ரேடியோ ஒலித்தது. இராணுவ தலைமையிடமிருந்து அழைப்பு. எடுத்து பேசினேன்.

"கேப்டன்! அவன் இறந்து விட்டானா?"

"அவனை தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான்."

"அவனை எப்பொழுது கொல்லப் போகிறீர்கள்?"

"எதற்கு கேட்கிறீர்கள்?"

"அவன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகளை வெளியிட்டு விட்டோம். சீக்கிரம் முடித்து விடுங்கள்."

மீண்டும் அவனிடம் சென்றேன்.

"என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டேன். என்னை மன்னித்து விடு."

"அவசியம் இல்லை கேப்டன். நான் போரில் செத்துவிட்டதாக மக்கள் நம்புவதையே விரும்புகிறேன். அதற்காக பொலிவிய இராணுவத்திற்கு நன்றி. ஒரு ஆண்மகனை கொல்லப் போகிறீர்கள். மகிழ்வுடன் இருங்கள்."

அப்பொழுது நானே வியக்கும் படி ஒரு செயலை செய்தேன். அவனை கட்டித் தழுவிக் கொண்டேன். அதற்கு சில மணித்துளிகள் முன்பாக யாராவது நான் அவனை கட்டித் தழுவுவேன் என்று கூறியிருந்தால் சிரித்திருப்பேன். ஆனால் அப்பொழுது நான் இருந்த நிலை வேறு. இப்பொழுது நான் இருக்கும் நிலை வேறு.

நேற்று வரை நான் கொல்ல வேண்டும் என்று தேடி அலைந்தவனை இன்று கொல்லும் முன்பு எனது இதயம் லேசாக வலிக்கிறது. மரணத்தை இப்படி எதிர் கொண்டவனை இதற்கு முன்னர் நான் பார்த்தது இல்லை.

நான் அறையிலிருந்து வெளிவந்தேன். கடிகாரம் மணி மதியம் 1 என்று காட்டியது. வெளியில் எனது ஆணைக்காக இராணுவ வீரன் ஒருவன் காத்திருந்தான். அவனிடம் தலையசைத்தேன். பின்னர் அவனது காதில் அவனை கழுத்துக்கு கீழே சுடும் படியும் முகத்தில் சுட வேண்டாமென்றும் கட்டளையிட்டேன். மாபெரும் வீரனுக்கு என்னால் முடிந்த மரியாதை.

எனது அறைக்கு திரும்பிய பின்னர் நான் எனது அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்காக குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தேன். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. மணி மதியம் 1:10 என்று காட்டியது.

எனது கை எழுதிக் கொண்டிருந்தது, "சே குவாரா இறந்து விட்டான்."

"மரணம் எப்பொழுது எங்கே நம்மை நெருங்கினாலும் இருகரம் கொண்டு அதனை தழுவுங்கள். ஆனால் அதற்கு முன்பு நமது குரலை அதிகாரத்தில் உள்ளவர்களின் காதுகளிலும், நமது ஆயுதங்களை நமக்கு பின்னர் இப்போராட்டத்தை எடுத்து செல்லும் கைகளிடமும் சேர்த்து விடுங்கள்." - சே குவாரா




ஃபெலிக்ஸ் ரொட்ரீக்வெஸ் எழுதிய ஷேடோ வாரியர் (நிழல் வீரன்) புத்தகத்திலிருந்து.

ஃபெலிக்ஸ் ரொட்ரீக்வெஸ் முந்நாள் CIA உளவாளி. இவரிடம் சே குவாரா இறக்கும் பொழுது கட்டி இருந்த ரோலெக்ஸ் கடிகாரம் இன்னும் இருக்கிறது.

Sunday, March 18, 2012

மோதி விளையாடு


இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அப்பொழுது எனது சகோதரர் ஸ்வீடன் நாட்டின் மிகப் பெரிய ஃபார்மஸிடிகல் நிறுவனம் ஒன்றின் இந்திய கிளையின் தலைவராக இருந்தார் (CFO & Head - India Operations). இந்தியாவில் ஒரு தொழிற்சாலை தொடங்கும் முயற்சியை அப்பொழுது அவர் மேற்கொண்டிருந்தார். அவர் அப்பொழுது சென்னையில் இருந்ததினால் தமிழகத்தில் அதை தொடங்க விரும்பினார்.

தமிழகத்தில் ஃபார்மஸிடிகல் நிறுவனங்களுக்கான ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் (SEZ) பெரம்பலூர் அருகில் இருந்தது. அதில் தனது நிறுவனத்திற்கு இடம் ஒதுக்க கடுமையாக போராடினார். மிகப் பெரிய சிபாரிசின் பேரில் தான் தமிழக அதிகாரி எனது சகோதரரை பார்க்கவே சம்மதித்தார். அதன் பிறகும் கூட அந்த அதிகாரி பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அந்த தொழிற்சாலை தமிழகத்தில் வருவதற்கு எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் எனது சகோதரரிடம் கூறியதன் சுருக்கம் கீழே.

"சார்!, தமிழகத்தில் எங்கெல்லாம் ஃபார்மஸிடிகல் நிறுவனங்களுக்கான ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் இருக்கின்றன என்பது எனக்கு தெரியாது. இதை நீங்கள் தெரிந்து கொண்டு வந்தாலும், அவற்றில் எவ்வளவு இன்னும் ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அதையும் நீங்களே தெரிந்து கொண்டு வந்தாலும், அவற்றில் இடம் பெற உங்கள் நிறுவனம் தேர்வு பெறுமா என்று தெரியாது. அப்படி உங்கள் நிறுவனம் தேர்வு பெற்றாலும், உங்கள் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய எனக்கு அனுமதி அரசாங்கத்தில் இருந்து வருமா என்று தெரியாது. பேசாமல் என்னிடம் நீங்கள் நேரத்தை செலவிடாமல் மத்தியில் பேசி அனுமதியுடன் வந்து மாநில அமைச்சகத்துடன் பேசுங்கள்."

அதே நேரத்தில் குஜராத் மாநில அரசு இணைய தளத்தில் இருக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரியை எடுத்து எந்த சிபாரிசும் இல்லாமல் ஒரே ஒரு மின்னஞ்சலை அனுப்பினார் எனது சகோதரர். அடுத்த நாளே அவரை தொலை பேசியில் அழைத்த குஜராத் மாநில அதிகாரி, எனது சகோதரரின் தேவை, நிறுவனத்தினை பற்றிய தகவல்கள் போன்றவற்றை பெற்றுக் கொண்டார். அவர் பின்னர் அடுத்த வாரமே சென்னை வந்து விட்டார். எனது சகோதரை சந்தித்து குஜராத்தில் இருக்கும் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன்களை பற்றிய தகவல்களை விளக்கி அவருக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய தங்கள் அரசின் ஒப்புதலை தெரிவித்தார். மேலும் எனது சகோதரர் விருப்பப்பட்டால் குஜராத் அரசின் செலவிலேயே எனது சகோதரரை நேரில் அழைத்து சென்று நிலத்தை காமித்து அவரையே எந்த பகுதியில் நிலம் வேண்டும் என்று தேர்ந்தெடுக்கவும் அனுமதி அளித்தார்.

மேலே நான் கூறியது அரசியல் ஆதாயத்திற்காக கூறப் படும் புனைவு அல்ல. எனது சகோதரருக்கு நேரிடையாக கிடைத்த அனுபவம். தமிழக மற்றும் குஜராத் அரசுகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடு இதுதான். ஒரு மாநிலத்தில் இப்படி ஒரு ஆட்சி நடப்பதற்கு அம்மாநில முதலமைச்சருக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதனால் நிச்சயம் மோதி பாராட்டுக்குரியவர்.

அவரது ஆட்சியில் குஜராத் பெற்ற வளர்ச்சியை பாராட்டி டைம் பத்திரிக்கை அவரது புகைப்படத்தை தனது அட்டையில் வெளியிட்டுள்ளது. மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், லால் பஹதூர் ஷாஸ்த்ரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்கள் இதற்கு முன்பே டைம் பத்திரிக்கை அட்டையில் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் அனைவரும் தேசிய அளவில் அரசியலில் பங்கு பெற்றவர்கள். ஒரு இந்திய மாநில அரசியல்வாதி டைம் பத்திரிக்கையின் அட்டையில் வருவது இதுவே முதல் முறை. அவருக்கு எனது பாராட்டுக்கள்.

Thursday, January 12, 2012

அமெரிக்கா அழிவின் பாதையில் செல்கிறதா? - பகுதி 2


சென்ற பகுதியில் அமெரிக்கா எப்படி இங்கிலாந்தை ஓரம் கட்டிவிட்டு உலகின் மிகப் பெரிய வல்லரசானது என்பதை பார்த்தோம். இந்தப் பகுதியில் அமெரிக்காவின் வீழ்ச்சியை அல்லது வீழ்ச்சியை போன்ற தோற்றத்தினை பார்ப்போம்.

தொட்டதெல்லாம் பொன்னாகும் நம்ம ஊர் சூப்பர் ஸ்டாருக்கு கூட அவ்வப்பொழுது ஒரு நாட்டுக்கொரு நல்லவனோ இல்லை பாபாவோ வந்து விடுகிறது. உலகின் சூப்பர் ஸ்டார் அமெரிக்கா மட்டும் என்ன விதி விலக்கா? அமெரிக்காவிற்கும் அது போலவே மூன்று ஆப்புகள் தொடர்ச்சியாக வந்தன.

2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் அமெரிக்காவை உலக நாடுகள் முன்னிலையில் தலை குனிய வைத்தது. இது அமெரிக்காவிற்கு கிடைத்த முதல் ஆப்பு. அமெரிக்கா தனது வல்லமையை உலக நாடுகளுக்கு நிரூபிக்க ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தது. அதனால் பெரும் பொருட் சேதமும் நேர்ந்தது.

அதே நேரத்தில் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தனது நாடு இனி எண்ணை வர்த்தகத்தில் ஈடுபடும் பொழுது யூரோவிலேயே வர்த்தகம் செய்யும் என்று அறிவித்தார். முதல் பதிவில் கூறியது போன்று அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தி வைக்க ஈராக்கின் இந்த முடிவை எதிர்த்தது அமெரிக்கா. ஆனால் அமெரிக்க டாலருக்கு மாற்றாக யூரோ வரும் என்று எதிர் பார்த்த ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக ஈராக்கின் இந்த முடிவை ஆதரித்தன. இது அமெரிக்காவிற்கு கிடைத்த இரண்டாவது ஆப்பு. இதிலிருந்து மீண்டு வர ஈராக் மீது போர் தொடுப்பது அமெரிக்காவிற்கு அவசியம் ஆனது.

அமெரிக்காவிற்கு மூன்றாவது ஆப்பு சப் ப்ரைம் க்ரைஸிஸ் என்ற பெயரில் வந்தது. அதை பற்றி விரிவாகவே எனது முந்தைய பதிவான அமெரிக்காவை தொடர்ந்து அடுத்தது இந்தியாவா? என்ற பதிவில் விளக்கியுள்ளேன். சப் ப்ரைம் க்ரைஸிஸ் பற்றி தெரியாதவர்கள் அதனையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ச்சியான இந்த மூன்று ஆப்புகளாலும் அமெரிக்காவிற்கு பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. அமெரிக்காவின் மத்திய தர மக்கள் சொல்ல இயலா துயரடைந்தனர். பலர் வேலை வாய்ப்பையும் அதனால் மருத்துவ காப்பீட்டையும் இழந்தனர். பலர் தங்களது ஓய்வூதியத்தை இழந்தனர். பலர் தங்களது இல்லத்தை இழந்தனர்.

மேலோட்டமாக பார்த்தால் மீளவே முடியாத பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா இருப்பதை போலவே இது தோன்றும். ஆனால் உண்மையில் அவ்வளவு பாதிப்புகள் இல்லை. நம்ப முடியாவிட்டாலும் அது தான் நிஜம்.

முன் பதிவில் சொன்னதை போன்று அமெரிக்கா நீங்கலாக உலகின் மற்ற அனைத்து நாடுகளின் அன்னியச் செலாவணியில் பெரும் பகுதி அமெரிக்க டாலர்களிலேயே இருக்கிறது. அமெரிக்கா வீழ்ந்து அதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தால் பெரும் ஆப்பு அந்த நாடுகளுக்கு தான். அதனால் அமெரிக்காவே நினைத்தாலும் பிற நாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்க அனுமதிக்காது. பல ட்ரில்லியன் டாலர்கள் கொடுத்து அமெரிக்க பாண்டுகளை சீனா வாங்கியதும் அதனால் தான்.

அதே போல ஜெர்மன் கார்களாகட்டும், ஜப்பானிய டிவிக்களாகட்டும், இந்திய சாஃப்ட்வேர்களாகட்டும் அவற்றினை பெரிதும் உபயோகிப்பவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்கா அழிந்தால் இந்த பொருட்களின் நுகர்வோர் பெருமளவில் அழிந்ததாக பொருள். குறிப்பாக எவ்வளவு சுரண்டல்கள் நடந்தாலும் தென் அமெரிக்க நாடுகள் பெரிதும் நம்பி இருப்பது அமெரிக்காவை தான்.

மேலும் ஈராக்கினை போர் தொடுத்து ஒரேயடியாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததில் மற்ற OPEC நாடுகளுக்கு ஒரு வலுவான செய்தியை அமெரிக்கா அளித்துவிட்டது. டாலரில் எண்ணை விற்காமல் வேறு ஒரு பணத்தில் எண்ணை விற்றால் விளைவது என்ன என்று அந்த நாடுகள் அறிந்து கொண்டுவிட்டன. பரவலாக எண்ணை வாங்கும் மற்ற நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து டாலரை புறக்கணித்தால் ஒரு வேளை அந்த நாடுகளுக்கு சிறிது துணிச்சல் வரலாம்.

அனால் அப்படி ஒரு துணிச்சல் வருவதற்கு வேறொரு வலுவான பணம் வேண்டும். பொருளாதாரம் நன்றாக இருந்த போது நன்றாக உயர்ந்து வந்த யூரோ இப்பொழுது முக்கு முக்கு என்று முக்குகிறது. மேலும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஜெர்மனி போன்ற நாடுகள் யூரோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. ஆனால் க்ரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் யூரோவை கீழே தள்ளுகின்றன. யூரோவின் வருங்காலம் இந்த நாடுகளில் எவை ஜெயிக்கும் என்பதை பொருத்தே அமையும். அது எப்படி இருந்தாலும் யூரோ டாலரின் இடத்தை பிடிக்கும் என்று சொல்வது வரிசையாக இரண்டு மூன்று சூப்பர் ஹிட்களை கொடுத்த ஒரு இளம் நடிகர் சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பார் என்று சொல்வதை போன்று இருக்கிறது. அது நடக்கலாம் நடக்காமல் போகலாம், ஆனால் அப்படி நடப்பதற்கு ஐரோப்பிய குழுமத்தின் ஒற்றுமையும், கடுமையான உழைப்பும், தொலை நோக்கு பார்வையும், வலுவான ஒரு தலைமையும் வேண்டும். இன்றைய நிலையில் பார்க்கும் பொழுது இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு டாலரை அசைத்துக் கொள்ள முடியாது என்பதே உண்மை.

ஒருவேளை மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக செக் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி ஏதாவது நடந்தாலும் அமெரிக்காவை ஒன்றும் புடுங்க முடியாது. அமெரிக்கா தனது எண்ணை தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளை நம்பி இருக்கிறது என்பது ஒரு பெரிய மாயை. பார்க்க US Energy Information Administration Report. முதல் 15 நாடுகளில் மூன்றே மூன்று மத்திய கிழக்கு நாடுகள் தான் உள்ளன. அவற்றில் சவுதி தவிர்த்து பிற நாடுகள் ஏற்றுமதி செய்வது துச்சமான அளவு. முதல் நாடான கனடா ஏற்றுமதி செய்யும் எண்ணையை விட சவுதி ஏற்றுமதி செய்வது பாதி அளவே. இதை தவிர்த்து உலக நாடுகள் அனைத்திற்கும் நூறு ஆண்டுகளுக்கு தேவையான எண்ணை வளம் அமெரிக்காவின் கொலராடோ மற்றும் அலாஸ்கா மாநிலங்களில் உள்ளன. வழக்கம் போலவே மற்ற உலக நாடுகளின் எண்ணை முழுதும் உறிஞ்சி எடுக்கப்படும் வரை அதை வெளியில் விடாது அமெரிக்கா. விக்கிலீக்ஸ் கோப்புகளில் அதனை பற்றிய தகவல்கள் தெளிவாக உள்ளன.

அதனால் சொல்கிறேன் நண்பர்களே! அமெரிக்கா தற்பொழுது சந்திக்கும் இந்த பின்னடைவு தற்காலிகமானது. ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயரே எழுந்து பறந்து வரும் அமெரிக்கா. அதுவே உலகத்திற்கு நன்மையும் கூட.

In God We Trust.

Wednesday, January 11, 2012

அமெரிக்கா அழிவின் பாதையில் செல்கிறதா? - பகுதி 1


சமீப காலமாக வலையுலகில் மட்டும் இல்லாமல் பிற ஊடகங்களிலும் அமெரிக்காவின் ஆளுமை குறைந்து கொண்டிருக்கிறது என்றும் விரைவில் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு என்ற நிலையில் இருந்து கீழே இறங்கி விடும் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார வீழ்ச்சியை பார்க்கும் பொழுது ஒரு வேளை இப்படி நடந்தாலும் நடக்கலாம் என்பதே பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா உலகின் நாட்டாமையாக பல செயல்களை செய்து வருவதால் பலருக்கும் அமெரிக்கா மீதிருந்த அதிருப்தி இப்படி வெளிவருகிறது. உண்மையில் இப்படி நடக்காவிட்டாலும் நடந்து தொலைத்தால் என்ன என்ற நப்பாசை பலருக்கு இருக்கிறது.

முதலில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் வல்லரசாக இருந்த பிரிட்டன் நாட்டை முந்தி எப்படி அமெரிக்கா இந்த நிலைக்கு வந்தது என்று பார்ப்போம். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஐரோப்பிய, ஆசிய, ஆப்ரிக்க நாடுகள் அனைத்தும் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்தன. மீளவே முடியாத நிலையில் தான் பல நாடுகளும் இருந்தன. பல ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் தேவையான உள்கட்டமைப்பு இல்லை. ஐரோப்பிய நாடுகளிலோ அவற்றை பாதுகாக்க போதுமான பொருளாதார வசதிகள் இல்லை.

இரண்டாம் உலகப் போர் நடக்கும் பொழுதே அமெரிக்கா புத்திசாலித்தனமாக ஒரு சகுனி வேலையை செய்தது. போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு யுத்த தளவாடங்கள், மருத்துகள், உணவுப் பொருட்கள் போன்றவை தேவைப் பட்டன. அதற்கு அமெரிக்காவின் உதவியை நாடின அவை. அமெரிக்காவும் அந்த நாடுகளுக்கு தான் உதவுவதாகவும், ஆனால் உதவிக்கு பணம் டாலரிலேயே செலுத்தப்படவேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஐரோப்பிய நாடுகள் வசமோ போதுமான டாலர்கள் இல்லை. அதனால் அமெரிக்காவே ஒரு வழியையும் கூறியது. அதாவது முதலில் அதிகப்படியான தங்கத்தினை ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் கொடுத்து விட வேண்டும். அமெரிக்காவும் அதன் மதிப்பில் உள்ள டாலரினை ஐரோப்பிய நாடுகளுக்கு கொடுத்து விடும். பின்னர் ஐரோப்பிய நாடுகள் தங்களது தேவையை பொருத்து டாலரினை கொடுத்து வேண்டிய உதவிகளை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். பின்னர் போர் முடிந்த உடன் மிஞ்சிய டாலர்களை கொடுத்து தங்கத்தினை மிண்டும் பெற்றுக் கொள்ளலாம். இப்படியாக பெருமளவில் தங்கமும், டாலரும் கை மாறின. டாலர் உலகப் பொதுப்பணமாக வித்திட்டது இந்த நிகழ்வுதான்.

இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்த நிலையில், அமெரிக்க இராணுவ பலத்தின் மீது கொண்ட அச்சத்தால் சில ஐரோப்பிய நாடுகளும், உயர்ந்து கொண்டே இருக்கும் டாலரின் மதிப்பினால் இன்னும் சில காலம் பொறுத்திருந்தால் அதிக தங்கம் கிடைக்கும் என்ற பேராசையினால் சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவிடம் தங்கத்தை மீண்டும் ஒப்படைக்க சொல்லி நிர்பந்திக்க வில்லை. அதனால் அமெரிக்கா அந்த தங்கத்தினை கொண்டு பல தொழிற்சாலைகளை தனது நாட்டில் உறுவாக்கிக் கொண்டது. அந்த காலத்தில் சுமாராக உலகின் 80 சதவிகித தங்கம் அமெரிக்காவின் வசம் இருந்ததாகவும், 40 சதவிகித தொழிற்சாலைகள் அமெரிக்காவின் வசம் இருந்ததாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் பேராசிரியர்களுமான சோகன் ஷர்மா மற்றும் சூ ட்ரேசி இருவரும் குறிப்பிடுகிறார்கள்.

1944 ஆம் ஆண்டு நடந்த ப்ரெட்டன் வுட்ஸ் மாநாட்டில் உலக வங்கி மற்றும் IMF இரண்டும் அமெரிக்காவில் தொடங்கப்பட்டன. இது அமெரிக்காவின் ஆளுமையை உலகுக்கு உணர்த்தியது. அதன் பின்னர் அமெரிக்காவிற்கு ஏறுமுகம் தான். அப்பொழுது அமெரிக்காவின் வசம் இருந்த தங்கத்தினை மதிப்பு செய்து (சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதன் அடிப்படையில் அமெரிக்க டாலர் மதிப்பை முடிவு செய்தனர்.

எல்லாம் ஒழுங்காக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்காவிற்கு வியட்னாம் போர் என்ற பெயரில் வந்தது சனி. சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை குடித்து ஏப்பம் விட்டது அந்த போர். போர் முடிந்த நிலையில் அமெரிக்கா வசம் வெறும் 10 பில்லியன் டாலர்கள் தங்கமே இருந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு பெருமளவில் குறைந்தது.

அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த நிக்ஸன் தங்கத்தின் அடிப்படையில் இருந்த டாலரின் மதிப்பினை மாற்றம் செய்து டாலருக்கு பொய்யான ஒரு மதிப்பினை அளித்தார். இதை உலக நாடுகள் எதிர்பார்க்கவே இல்லை. இதை நிக்ஸன் ஷாக் என்றே அனைவரும் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் அமெரிக்காவின் டாலர் மதிப்பினை உயர்த்தியே வைக்க நியூயார்க் மெர்கன்டைல் மூலமாகவே எண்ணை வர்த்தகம் நடக்குமாறு சட்டங்கள் எழுப்பப்பட்டன. வல்லரசான அமெரிக்காவின் இந்த செயலுக்கு எதிராக செயல்பட ஒருவருக்கும் துணிவில்லை. அதாவது இந்தியா சவுதியிடம் இருந்து எண்ணை வாங்க வேண்டும் என்றால் இந்திய ரூபாயிலோ அல்லது சவுதி ரியாலிலோ வாங்க முடியாது. அமெரிக்க டாலர் வேண்டும். ஆக எண்ணை வளம் இல்லாத அனைத்து உலக நாடுகளும் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க தொடங்கினர். அனைத்து நாடுகளின் அன்னியச் செலாவணியில் பெரும் பகுதி அமெரிக்க டாலர்களிலேயே இருந்தது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்தே இருந்தது.

இதன் மூலம் மட்டுமே டாலர் மதிப்பை உயர்த்த முடியாது என்று எண்ணி அமெரிக்கா உற்பத்தியையும், ஏற்றுமதியையும் குறைத்து இறக்குமதியை அதிகரித்தது. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது அமெரிக்கா. மற்ற நாடுகளுக்கு டாலர்களை ஏற்றுமதி செய்தது போலவும் ஆயிற்று, மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவின் மீதுள்ள சார்பை உறுதி செய்தது போலவும் ஆயிற்று.

மற்ற நாடுகளும் டாலரும், வேலை வாய்ப்பும் கிடைக்கிறதே என்று இதை விரும்பி ஏற்றுக் கொண்டன. இப்படி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கும், கார்கள் தயாரிப்பு ஜெர்மனி மற்றும் ஜப்பானிற்கும், இயற்கை வளங்களை அழித்து தயாரிக்கும் மரம், காகிதம், மணல் போன்ற பொருட்கள் தயாரிப்பு தென் அமெரிக்க நாடுகளுக்கும், மற்ற பொருட்களின் தயாரிப்பு சீனாவிற்கும், சாஃப்ட்வேர் தயாரிப்பு இந்தியாவிற்கும் ஓரளவிற்கு முழுமையாகவே அமெரிக்காவை விட்டு நீங்கி சென்றது. இப்படி இருபதாம் நூற்றாண்டின் முடிவில் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய நுகர்வு நாடாக உருவானது. உலகின் எந்த நாட்டில் எந்த பொருள் தயாரானாலும் அதை அமெரிக்க சந்தையில் விற்றால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற நிலை உருவானது.

இப்படி 50, 60 ஆண்டுகளாக ஏறுமுகத்திலேயே சென்று கொண்டிருந்த அமெரிக்கா இறங்குமுகத்தில் எப்படி சென்றது? உண்மையில் இறங்குமுகத்தில் செல்கிறதா? இல்லை அது ஒரு மாயத் தோற்றமா? அப்படி உண்மையில் சென்றால் அதற்கான காரணம் என்ன? ஒருவேளை அமெரிக்கா அழிவின் பாதையில் சென்றால் மற்ற உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் நிலை என்ன? இதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

Sunday, January 08, 2012

மாமி, மாமா மற்றும் மாட்டிறைச்சி

நவம்பர் 4, 2008 ஆம் ஆண்டு. இரவு சுமார் 10 மணி. அரிசோனா மாநிலத்தின் செனட்டர் திரு. ஜான் மெக்கேன் அங்கு திரண்டிருந்த மக்களுக்கிடையே உரையாற்ற தொடங்குகிறார். அதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் திரு. ஒபாமா திரு. மெக்கேனை தோற்கடித்து விட்டார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு திரண்டிருந்த மக்களுக்கிடையே கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டாம் என்பதால் அந்த முடிவுகள் அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. மெக்கேன் அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்று அங்கே இருந்த ஒவ்வொருவரும் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக மெக்கேன் அவர்கள் மேடையில் தோன்றி தனது தோல்வியையும், ஒபாமா அவர்களின் வெற்றியையும் அறிவித்தார். குழுமி இருந்த மக்கள் இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் "பூ" செய்தனர்.

உடனே இடை மறித்த மெக்கேன், "அவர் இப்பொழுது அதிபர் வேட்பாளர் இல்லை, உங்களுக்கும், எனக்கும், அனைத்து அமெரிக்கர்களுக்கும் இனி நான்கு ஆண்டுகளுக்கு அதிபர் அவர் தான். அவருக்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் மரியாதை அளிக்க வேண்டும்." என்று சற்று கடுமையாகவே கருத்து தெரிவித்தார்.

அதே நேரத்தில் இலினாய் மாநிலத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா தனக்கு முதல் வாழ்த்து மெக்கேனிடம் இருந்த வந்ததாகவும், மெக்கேன் அமெரிக்காவிற்கு செய்துள்ள சேவையை தன்னால் நினைத்து கூட பார்க்க இயலாதென்றும், அவருடன் ஒன்று சேர்ந்து இனி பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நாம் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, ஆங்கிலப் பாடல்களை, ஹாலிவுட் திரைப்படங்களை வெட்கமே இல்லாமல் காப்பி அடிக்கிறோம். நமது அரசியல் வாதிகளும் அமெரிக்க அரசியல் வாதிகளை காப்பி அடித்து தொலைத்தால் என்ன? என்று கேட்க தொன்றுகிறது.

ஜெயலலிதா கருணாநிதியை "திருக்குவளை தீய சக்தி" என்று கூறுவதும், கருணாநிதியின் அல்லக்கைகள் ஜெயலலிதாவின் ஜாதியின் மீதுள்ள துவேஷத்தால் வெறுப்பை கக்குவதும் கேவலமாக இருக்கிறது. ஒரு அறிக்கை விடுவதுடன் தலைவர்களான இவர்கள் வேலை முடிந்து விடும். இவர்கள் மீதுள்ள அபிமானத்தால் தொண்டர்கள் மீண்டும் ஒரு தர்மபுரி சம்பவத்தையோ இல்லை மதுரை சம்பவத்தையோ நிகழ்த்தினால் காலத்திற்கும் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள் தான்.

உடன்பிறப்புகளே! ரத்தத்தின் ரத்தங்களே! உங்களின் தலைமை மீது உங்களுக்கு உண்மையிலேயே அபிமானம் இருந்தால் அடுத்த முறை அமெரிக்காவில் இருந்து யாராவது தமிழகம் வரும் பொழுது மெக்கேன் மற்றும் ஒபாமாவின் மூ****தை ஒரு லிட்டர் கொண்டு வரச்சொல்லி உங்கள் தலைமைக்கு கொடுங்கள். அப்பொழுதாவது புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.

தொடர்புடைய செய்தி: நக்கீரன் இதழில் வெளிவந்த "'மாடு திங்கும் மாமி நான்', என்கிறார் ஜெயலலிதா" என்ற செய்தியினை ஒட்டி ஏற்பட்ட கலவரத்தில் இரண்டாம் நாளாக தொடர்ந்து நக்கீரன் அலுவலகங்கள் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

Wednesday, December 21, 2011

ஹிந்தி திணிப்பு பற்றி அறிஞர் அண்ணா


தேசிய மொழியாக ஹிந்தியை அங்கீகரிப்பதை பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ராஜ்ய சபையில் ஆற்றிய உரையின் சிறு பகுதி.

தமிழில்:

"இந்தியாவில் பெரும்பான்மையாக பேசப்படுவதால் ஹிந்தியை பொதுவான தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அது சரியான வாதமாகும் பட்சத்தில் நாம் ஏன் புலியை நமது தேசிய விலங்காக கருதுகிறோம்? எலி தானே தேசிய விலங்காக இருக்க வேண்டும். அது தானே எண்ணிக்கையில் அதிகம் உள்ளது. மயிலை ஏன் தேசிய பறவையாக கருதுகிறோம்? காகம் தானே எண்ணிக்கையில் அதிகம் உள்ளது."

"இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆங்கிலத்தை கற்பிப்பதால் அதையே நாம் ஏன் பொதுவான தேசிய மொழியாக கருதக் கூடாது? அதன் மூலமே ஏன் நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள கூடாது? தமிழர்கள் ஏன் வெளி நாட்டினருடன் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தையும், மற்ற மாநிலத்தினருடன் தொடர்பு கொள்ள ஹிந்தியையும் கற்க வேண்டும்? பெரிய நாய்க்கு பெரிய கதவும், சிறிய நாய்க்கு சிறிய கதவும் அவசியமா? சிறிய நாய் ஏன் பெரிய கதவினை உபயோகிக்க கூடாது?"

ஆங்கிலத்தில்:

"It is claimed that Hindi should be common language because it is spoken by the majority. Why should we then claim the tiger as our national animal instead of the rat which is so much more numerous? Or the peacock as our national bird when the crow is ubiquitous?"

"Since every school in India teaches English, why can't it be our link language? Why do Tamils have to study English for communication with the world and Hindi for communications within India? Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!"

Thursday, December 01, 2011

அமெரிக்காவில் ஆந்திர கம்யூனிஸ்டுகள்

சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அது ஒரு பூஜை. நண்பர் ஆந்திராவை சேர்ந்தவர். இங்கு அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் நம்மவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. விழா தட புடலாக நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது திடீர் என்று ஒரு பரபரப்பு. ஒரு நபர் விழாவிற்கு வந்தார். அவருக்கு ஒரு ஐம்பது அல்லது அறுபது வயது இருக்கும். உடனே பலரும் ஓடி சென்று அவரை அழைத்து வந்து அமர வைத்தார்கள். அதன் பிறகு விழா முடியும் வரை அவரை சுற்றி ஒரு பத்து பேர் இருந்து கொண்டே இருந்தார்கள். எனக்கு அவர் யாரோ பெரிய மனிதர் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை.

எனதருகில் இருந்த வேறு ஒரு நண்பரிடம் அவர் யார் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆந்திராவின் கம்யூனிஸ்டு கட்சியின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்று அவரது பெயரை குறிப்பிட்டார். அவரது மகன் மற்றும் மகள் இருவரும் இங்கே அமெரிக்காவில் வசிப்பதாகவும், அவர்களை பார்க்க வருடத்திற்கு ஒரு முறை இங்கே அவர் வருவதாகவும், விழாவை நடத்தும் நண்பர் அவருக்கு உறவு என்றும் குறிப்பிட்டார்.

எனக்கு முதலில் வியப்பாக இருந்தது. அவர் மீது மரியாதை அதிகம் வந்தது. தனக்கு இருக்கும் கம்யூனிஸ்டு கொள்கையை தனது பிள்ளைகளிடம் திணிக்காமல் இருக்கிறாரே என்று. எனது வியப்பையும் மரியாதையையும் அந்த நண்பரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் லேசாக சிரித்தார். அதில் ஒரு நக்கல் தெரிந்தது. அதற்கான காரணம் என்ன என்று வினவினேன். அவர் அங்கு அப்பொழுது பலரும் இருப்பதால் அடுத்த நாள் அலுவலகத்தில் சொல்வதாக சொன்னார்.

அடுத்த நாள் அவர் அலுவலகத்தில் சொன்ன செய்திகள் எனக்கு பெரும் வியப்பளித்தது. அதன் சுருக்கம் கீழே.

ஆந்திராவில் உள்ள கம்யூனிஸ்டுகள் பெரும்பாலானோர் தங்கள் மக்கள் அமெரிக்காவில் இருப்பதையே விரும்புகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் பல ஆண்டுகள் இருந்தாலும், அவர்கள் பச்சை அட்டை தான் வாங்குகிறார்களே தவிர அமெரிக்க குடியுறிமை வாங்குவது இல்லை. ஏனென்றால் அவர்களில் பலருக்கும் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்களை விட விவசாய நிலங்கள் அதிகம். வெளிநாட்டு குடியுறிமை பெற்றவர்கள் விவசாய நிலங்களை வைத்துக் கொள்ள பல சட்ட சிக்கல்கள் இருப்பதாலும், பின் காலத்தில் இந்தியாவிற்கு வந்து கட்சியிலும், அரசியலிலும் பங்கு வகிக்க சிக்கல்கள் வந்து விடக் கூடாதென்றும் அவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். இதற்கே வாய் பிளந்த நான் கடைசியாக அவர் சொன்னதை கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். முந்தைய நாள் விழாவிற்கு வந்த நமது கம்யூனிஸ்ட் தலைவர் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஒரு காரை ஜெர்மனியிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்திருக்கிறார் என்பது தான் அது.

இவர்களுடன் நான் தமிழகத்தின் கம்யூனிஸ்ட் தலைவர்களான நல்லகண்ணு, சங்கரையா, தா. பாண்டியன், ராமகிருஷ்ணன் போன்றவர்களை ஒப்பிட்டேன். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நல்லகண்ணு அவர்கள் கட்சி தொண்டர்கள் பல நாட்கள் தொடர்ந்து திரட்டி அளித்த சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்க மறுத்து அதை கட்சிக்கே திருப்பி அளித்தார்.

நல்லா இருங்கடே! என்று தான் சொல்ல தோன்றியது.

Friday, May 13, 2011

தேர்தல் கார்ட்டூன்ஸ்









நல்லதொரு தொடக்கம்


2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், ஒன்றே ஒன்று தான் சொல்ல தோன்றுகிறது.

பணம், இலவசங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கும் முதுகெலும்பில்லாதவன் தமிழன் இல்லை என்பது தான் அது. இந்த தேர்தலில் மக்கள் மிகவும் சரியானதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். பண பலம், ஆட்சி பலம் அனைத்தையும் கடந்து அதிமுக இந்த வெற்றியை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பின் வரும் காரணிகளே வெற்றியை தீர்மானிக்கும் என்று நான் முன்னர் ஊகித்தேன்.

1. மின் வெட்டு
2. 2G ஊழல்
3. விலைவாசி உயர்வு
4. தமிழக மீனவர்கள் பலி
5. சட்டம் ஒழுங்கு
6. தமிழ் சினிமாவில் குடும்ப ஆதிக்கம்
7. மணல் கொள்ளை

சுமார் 80 சதவிகித ஓட்டு பதிவு என்ற உடனேயே எனக்கு எனது எண்ணம் வலுப்பட்டது.

ஆனாலும் 140 இடங்கள் அதிமுக விற்கு கிடைக்கும் என்றே நான் நினைத்தேன். அதிலும் முக்கிய திமுக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இன்று திமுக பிரதான எதிர் கட்சி என்ற அந்தஸ்தையும் தேமுதிக விடம் இழந்து விட்டது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் அதிமுக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பாக கலைஞர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன், வடிவேலு, குஷ்பு, சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், வாசன், பீட்டர் அல்போன்ஸ், சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்களின் பிரச்சாரம், திமுக ஊடகங்கள் செய்த விஜயகாந்தின் மீதான தாக்குதல் போன்ற பலவற்றையும் மீறி கிடைத்திருக்கும் இந்த வெற்றி சதாரணமானது அல்ல. அதிமுக தரப்பில் ஜெயலலிதா மற்றும் தா. பாண்டியன் தவிர்த்து வேறு ஒருவரின் பேச்சையும், பிரசாரத்தையும் காது கொடுத்து கேட்க முடியாது.

அவ்வாறு இருந்தும் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு திமுக ஆட்சி மீதிருந்த வெறுப்பே காரணம்.

நிச்சயமாக அதிமுக வின் இந்த அமோக வெற்றி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. திமுக ஆட்சி நிச்சயமாக போக வேண்டிய ஆட்சி.

1. 2G ஊழல் எல்லாம் நகரத்தில் தான் எடுபடும்.
2. கிராமத்தில் ஒரு ரூபாய் அரிசியை வைத்தே ஜெயித்து விடலாம்.
3. நகரத்தில் ஒருவரும் வந்து ஓட்டு போடப்போவதில்லை.
4. இலவசங்களையும், பணத்தையும் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம்.
5. மின் வெட்டிற்கு காரணம் முந்தைய அதிமுக ஆட்சி தான் என்று மக்களை நம்ப வைத்து விடலாம்.

என்றெல்லாம் திமுக தலைமை நினைத்ததை பொய்யாக்கி விட்டார்கள் தமிழ் மக்கள்.

திருக்குறளுக்கு உரை எழுதிய கலைஞர், பின்வரும் குறள்களை ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முறையாவது படித்திருக்கலாம்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.


எது எப்படியோ திமுக வின் இந்த தோல்வியிலிருந்து அடுத்து வரப்போகும் ஆட்சியாளர்கள் பாடம் கற்று, நல்லாட்சி தருவார்கள் என்று நம்புவோம்.

வாழ்த்துக்கள் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களே. வாருங்கள், நல்லாட்சி தாருங்கள்.

பின்னர் சேர்த்தது: இங்கு அமெரிக்காவில், 10 மணிநேர பின்னடைவில் தான் செய்திகள் ஒளிபரப்பப்படும். இப்பொழுது தேர்தல் முடிவுகள் தெரிந்த நிலையில், நக்கீரன் கோபால் கலைஞர் டிவியில் தங்களது தேர்தல் கணிப்புகள் தான் சிறந்தது, திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று வடிவேலு ரேஞ்சிற்கு காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

Thursday, June 22, 2006

பெரியாரை பற்றி ஜீவா


1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியாரை பற்றி தலைவர் ப.ஜீவானந்தம் அவர்கள் பேசியது:

தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன்.

பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர் ' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன.

இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.

ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.ஜாதியமுறையை விரும்பாத, ஜாதியமுறையை எதிர்க்கிற, தம்மைப் பொறுத்த முறையில் ஜாதியமுறையை ஒழித்துவிட்ட எல்லாப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்தப் பெரும்பணியை ஆற்றுவதற்கு ஜனநாயக ரீதியான சமாதானமான மனமாற்றும் முறைகள் மிகச்சிறந்த முறை என்பதையும் பலாத்காரமுறை தகுந்தமுறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதிய தீய பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக்கட்டி விடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி இந்தச் சிலரின் பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.

இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா 'காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'இந்துமதம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும் ' என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.

(சிரிப்பு)

நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.

(சிரிப்பு)

இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்.கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.

அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.

காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது. சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா?

(ஒரே சிரிப்பு)

காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா?

(சிரிப்பு)

நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம்?

(சிரிப்பு)

குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா?

(சிரிப்பு)

ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா?

(சிரிப்பு)

பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா?

எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக் கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்தப் பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரிகச் செயல்கள் அல்ல, அநாகரிகச் செயல்கள் என்கிறோம். நிதானமான செயல்கள் அல்ல, வெறித்தனமான செயல்கள் என்கிறோம்.

எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம். இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால் .. என்று வைத்துக் கொள்வோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும்.

(சிரிப்பு)

இதிலிருந்து வெட்டுப்பழி, குத்துப்பழிக்கு வழிபிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு - இந்த அநாகரிகப் போக்கு அனுமதிக்கப்படத் தக்கதுதானா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

குறிப்பிட்ட ஒரு ஜாதியை தனிமைப்படுத்தி, அநாகரிகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.

ஆகவே ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் - இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரங்கெட்ட செயலாகும்.

(நூல்: மேடையில் ஜீவா)