Sunday, January 08, 2012


மாமி, மாமா மற்றும் மாட்டிறைச்சி

நவம்பர் 4, 2008 ஆம் ஆண்டு. இரவு சுமார் 10 மணி. அரிசோனா மாநிலத்தின் செனட்டர் திரு. ஜான் மெக்கேன் அங்கு திரண்டிருந்த மக்களுக்கிடையே உரையாற்ற தொடங்குகிறார். அதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் திரு. ஒபாமா திரு. மெக்கேனை தோற்கடித்து விட்டார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு திரண்டிருந்த மக்களுக்கிடையே கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டாம் என்பதால் அந்த முடிவுகள் அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. மெக்கேன் அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்று அங்கே இருந்த ஒவ்வொருவரும் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக மெக்கேன் அவர்கள் மேடையில் தோன்றி தனது தோல்வியையும், ஒபாமா அவர்களின் வெற்றியையும் அறிவித்தார். குழுமி இருந்த மக்கள் இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் "பூ" செய்தனர்.

உடனே இடை மறித்த மெக்கேன், "அவர் இப்பொழுது அதிபர் வேட்பாளர் இல்லை, உங்களுக்கும், எனக்கும், அனைத்து அமெரிக்கர்களுக்கும் இனி நான்கு ஆண்டுகளுக்கு அதிபர் அவர் தான். அவருக்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் மரியாதை அளிக்க வேண்டும்." என்று சற்று கடுமையாகவே கருத்து தெரிவித்தார்.

அதே நேரத்தில் இலினாய் மாநிலத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா தனக்கு முதல் வாழ்த்து மெக்கேனிடம் இருந்த வந்ததாகவும், மெக்கேன் அமெரிக்காவிற்கு செய்துள்ள சேவையை தன்னால் நினைத்து கூட பார்க்க இயலாதென்றும், அவருடன் ஒன்று சேர்ந்து இனி பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நாம் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, ஆங்கிலப் பாடல்களை, ஹாலிவுட் திரைப்படங்களை வெட்கமே இல்லாமல் காப்பி அடிக்கிறோம். நமது அரசியல் வாதிகளும் அமெரிக்க அரசியல் வாதிகளை காப்பி அடித்து தொலைத்தால் என்ன? என்று கேட்க தொன்றுகிறது.

ஜெயலலிதா கருணாநிதியை "திருக்குவளை தீய சக்தி" என்று கூறுவதும், கருணாநிதியின் அல்லக்கைகள் ஜெயலலிதாவின் ஜாதியின் மீதுள்ள துவேஷத்தால் வெறுப்பை கக்குவதும் கேவலமாக இருக்கிறது. ஒரு அறிக்கை விடுவதுடன் தலைவர்களான இவர்கள் வேலை முடிந்து விடும். இவர்கள் மீதுள்ள அபிமானத்தால் தொண்டர்கள் மீண்டும் ஒரு தர்மபுரி சம்பவத்தையோ இல்லை மதுரை சம்பவத்தையோ நிகழ்த்தினால் காலத்திற்கும் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள் தான்.

உடன்பிறப்புகளே! ரத்தத்தின் ரத்தங்களே! உங்களின் தலைமை மீது உங்களுக்கு உண்மையிலேயே அபிமானம் இருந்தால் அடுத்த முறை அமெரிக்காவில் இருந்து யாராவது தமிழகம் வரும் பொழுது மெக்கேன் மற்றும் ஒபாமாவின் மூ****தை ஒரு லிட்டர் கொண்டு வரச்சொல்லி உங்கள் தலைமைக்கு கொடுங்கள். அப்பொழுதாவது புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.

தொடர்புடைய செய்தி: நக்கீரன் இதழில் வெளிவந்த "'மாடு திங்கும் மாமி நான்', என்கிறார் ஜெயலலிதா" என்ற செய்தியினை ஒட்டி ஏற்பட்ட கலவரத்தில் இரண்டாம் நாளாக தொடர்ந்து நக்கீரன் அலுவலகங்கள் மீது அதிமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

2 Comments:

Vetirmagal said...

அவரவர்கள் கோபத்தில் சொன்னதாக இருந்தாலும் , பத்திரிக்கைகளும், அதை திரும்ப திரும்ப எழுதி, மக்களும் அதை ரசித்து, தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கும் இந்தியாவில் , எத்தனை உதாரணங்கள் கிடைத்தாலும் , உதாசீனம் தான்.

SathyaPriyan said...

முற்றிலும் உண்மை. வருகைக்கு நன்றி.