Wednesday, January 10, 2007

குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்!

'நேதாஜி' என்று அன்புடனும், மரியாதையுடனும் அனைவராலும் அழைக்கப்பட்ட திரு. சுபாஷ் சந்திர போஸ், ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள கட்டக் நகரில் 1897 ஆம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதி பிறந்தவர். அவரது தந்தையார் திரு. ஜானகிநாத் போஸ் ஒரு அரசு வக்கீலாக இருந்து பின்னர் வங்காள சட்டசபையில் உறுப்பினரானவர். தாயார் திருமதி. பிரபாவதி தேவி.


தனது பெற்றோரின் 14 குழந்தைகளில் 9 ஆவது குழந்தையாக பிறந்தவர் நேதாஜி. "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்ற முதுமொழிக்கு இனங்க இளவயதிலேயே தேசப்பற்றும் மிகுந்த அறிவாற்றலும் கொண்டு இருந்தார் நேதாஜி. சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டார். மெட்ரிகுலேஷன் தேர்வில் கல்கட்டா மாகாணத்திலேயே முதல் மாணவராக தேரினார். கல்கட்டாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்சஸ் கல்லூரியில் தத்துவவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தனது பெற்றோரின் ஆசைக்கினங்க Indian Civil Services (ICS) தேர்வில் பங்கு கொள்ள 1919 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றார். தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்றார். ஆனாலும் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த ஜாலியன் வாலாபாக் படு கொலை அவரை வெகுவாக பாதித்தது. அதனால் தனது அலுவல் பயிற்சியை பாதியிலேயே விட்டு விட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.


இந்தியா திரும்பிய நேதாஜி, மகாத்மாவின் தலைமையில் தனது சுதந்திர போராட்டத்தை துவக்கினார். அதன் முதல் படியாக இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். காந்திஜியின் அஹிம்சை தத்துவங்களை ஏற்காமல் சிறிது காலத்திலேயே கல்கட்டா சென்று அங்கே சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் தலைமையின் கீழ் தனது போராட்டத்தினை மேற்கொண்டார். பின்னர் அவரையே தனது ஆசானாகவும் வழி காட்டியாகவும் ஏற்றுக் கொண்டார்.

1921 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வரவேற்பு ஏற்பாடுகளை கண்டித்து போராடி சிறை சென்றார். சிறையில் தனது ஆசான் சித்திரஞ்சன் தாஸ் அவர்களுக்கு பணிவிடை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு கல்கட்டா கார்ப்பரேஷனின் CEO வாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட மாத சம்பளம் 3000 ரூபாய். ஆனால் அவர் 1500 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் தீவிரவாதத்தை பரப்பிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1925 ஆம் ஆண்டு நடந்த சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் மரணம் அவரை வெகுவாக பாதித்தது.

1930 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். அதனால் மீண்டும் சிறை சென்றார். 1931 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி கையெழுத்தான காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை முன்னிட்டு, காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டார். இதனால் உடனே நேதாஜி சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டார். அதே மாதம் 23ஆம் தேதி பகத் சிங்கை அவரது 21 ஆம் வயதில் தீவிரவாதி என்று குற்றம் சுமத்தி ஆங்கிலேய அரசு தூக்கில் இட்டது. இத்தருணத்தில் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டதை கண்டு மனம் நொந்தார் நேதாஜி. காங்கிரஸ் தலைவர்கள் பகத் சிங்கையும் அவரது கூட்டாளிகளையும் விடுவிக்க முயற்சி எதுவும் செய்யாததே அதற்கு காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.


அதே ஆண்டு வங்காளத்தில் போராட்டத்தினை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டி மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார். அவரது உடல் நிலை பாதிப்படைந்தது. பகத் சிங்கின் முடிவால் நாடே கொதித்துக் கொண்டிருந்த வேளையில், நேதாஜி சிறையில் இறந்தால் கிளர்ச்சி ஏற்படும் என்று பயந்தது ஆங்கிலேய அரசு. அதன் தொடர்ச்சியாக 1932 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நாடு கடத்தப் பட்டார்.


அவர் வியன்னாவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டார். 1932 முதல் 1936 வரை அவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து பல தலைவர்களை சந்தித்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், முஸ்ஸோலினி (இத்தாலி), ஃபெல்டர் (ஜெர்மணி), வலேரா (ஐர்லாந்து) மற்றும் ரோமா ரோலான்ட் (ஃபிரான்ஸ்). அவர் ஹிட்லரையும் சந்தித்ததாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அந்நாட்களில் இந்திய சுதந்திர போராட்டத்தை பற்றிய விழிப்புணர்ச்சியை ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றார். 1934 ஆம் ஆண்டு "இந்தியாவின் போராட்டம்" என்ற நூலை அவர் வெளியிட்டார். இந்நூல் வெளியிட தனக்கு உதவி செய்த எமிலி என்ற ஆஸ்த்ரியா தேசத்து பெண்ணை காதலித்து 1937 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். அவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு அனிடா என்ற மகள் பிறந்தார்.

இதற்கிடையில், 1936 ஆம் ஆண்டு அவர் தனது இந்திய வருகையை அறிவித்து விட்டு, பம்பாய் வந்தார். அதற்காக அவர் மீண்டும் கைது செய்யப் பட்டார். 1937 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப் பட்டார். அதை தொடர்ந்து 1938 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அந்நிலையில், அவர் முஸ்ஸோலினி போன்ற தலைவர்களை ஐரோப்பாவில் சந்தித்ததை அறிந்த காந்திஜி, அவர் காங்கிரஸின் தலைவராக இருப்பதை விரும்பவில்லை. அதற்காக 1939 ஆம் ஆண்டு மீண்டும் நடந்த தேர்தலில் நேதாஜியை எதிர்த்து போட்டி இட நேரு மற்றும் ராஜேந்திர பிரஸாத் இருவரின் விருப்பத்தையும் கேட்டார். அவர்கள் இருவரும் அதற்கு இனங்காததால், நேதாஜியை எதிர்த்து போட்டி இட திரு. பட்டாபி சித்தராமையாவை நிறுத்தினார். ஆனால் நேதாஜி 1580 - 1371 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திஜி "நேதாஜியின் வெற்றி எனது தோல்வி" என்று அறிவித்தார். காங்கிரஸ் தலைவரான கையோடு ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவை இந்தியர்களிடம் ஒப்படைக்க 6 மாதங்கள் அவகாசம் கொடுத்தார். அதற்குள் ஒப்படைக்க மறுத்தால், நாடெங்கும் கிளர்ச்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கும் காந்திஜியின் ஒத்துழைப்பு கிடைக்க வில்லை. இதைத் தொடர்ந்து அவரால் பிற காங்கிரஸ் தலைவர்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போனது. அதனால் மனம் வருந்திய நேதாஜி, தனது பதவியை இராஜினாமா செய்தார். பின்னர் அவர் காங்கிரஸிலிருந்து 3 ஆண்டுகள் நீக்கப் பட்டார். வேறு வழி இல்லாமல் அவர் "Forward Block" என்ற கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களின் தலைமைகளை கலந்து ஆலோசிக்காமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை போரில் ஈடுபடுத்தினர். இதற்கு நேதாஜி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.


இதைத் தொடர்ந்து அவர் இந்திய மக்களுக்கு போருக்கு ஆயத்தமாகுமாரு ஒரு கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கைக்கு பலனாக பல லட்சம் மக்கள் திரண்டெழுந்தனர். அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த நேதாஜி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. உலக யுத்தம் நடக்கும் நேரத்தில், நேதாஜி இறந்து இந்தியாவில் உள் நாட்டு கலவரம் நடப்பதை விரும்பாத ஆங்கிலேயர்கள், அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி அவரும் அவரது உறவினர் திரு. குமார் போஸும் காவலில் இருந்து தப்பினர். அவர் காவலில் இருந்து தப்பித்த செய்தியே அரசுக்கு, ஜனவரி 26 ஆம் தேதி தான் தெரிந்தது.


(1940 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி திரு. வீர் சவர்க்கரை நேதாஜி மும்பையில் உள்ள சவர்கர் சதன் என்ற இடத்தில் சந்தித்ததாகவும், அவரின் ஆலோசனைப்படியே நேதாஜி போருக்கு ஆயத்தமாகுமாரு இந்திய மக்களுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், காவலில் இருந்து தப்ப திட்டமிட்டதாகவும், அதை செயல் படுத்தியதாகவும் பலர் நம்புகின்றனர். ஆனால் அதை உறுதிப் படுத்த போதுமான ஆதாரம் இல்லை.)

காவலிலிருந்து தப்பிய நேதாஜி, அப்வேக்கர் என்பவரின் உதவியுடன் பெஷாவர் சென்றடைந்தார். பெஷாவரில் அவர் அக்பர் ஷா, மொஹமத் ஷா, பகத் ராம் தல்வார் ஆகியோரை சந்தித்தார். பின்னர் அவர் அக்பர் ஷாவின் நன்பரான அபாத் கான் என்பவரின் இல்லத்திற்கு சென்று மறைந்திருந்தார். பின்னர் அவர் அக்பர் ஷாவின் உதவியுடன், காது கேட்காத, வாய் பேச முடியாத அஃப்கானிஸ்தான் பழங்குடியினரை போல் வேடம் திரித்து காபுல் வழியாக அஃப்கானிஸ்தானை கடந்து ரஷ்யா சென்றார். மாஸ்கோ சென்ற அவர் ரஷ்ய தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் அவர் எதிர் பார்த்த உதவியை ரஷ்ய தலைவர்கள் அளிக்கவில்லை. அவர்களுக்கு இந்திய விடுதலையில் அக்கறை இல்லை என்பதை உணர்ந்தார் நேதாஜி. அதனால் அவர்களின் உதவியுடன் ஜெர்மணியின் தலைவர்களுடன் பேச பெர்லினுக்கு சென்றார்.

பல மாதங்கள் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இந்திய சுதந்திரத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தர ஜெர்மணி முன் வந்தது. இந்நிலையில், நேதாஜி இறந்து விட்டார் என்ற வதந்தியை BBC இந்தியா முழுதும் பரப்பியது. அதை இந்திய மக்களும் நம்பினர்.


அப்பொழுது நேதாஜி அவர்களே 1941 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் ஜெர்மணியில் இருந்து உருவாக்கிய சுதந்திர இந்திய வானொலியில் உரையாற்றினார். "நான் இன்றும் உயிருடன் இருக்கும் சுபாஷ் சந்திர போஸ் பேசுகிறேன்." என்று தொடங்கும் அந்த உரையில் அவர், ஜெர்மணியில் இருந்தே சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். டாகூரின் "ஜன கன மன" கீதத்தை தேசிய பாடலாகவும், ஹிந்தியை தேசிய மொழியாகவும், காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார். "ஜெய் ஹிந்த்" என்ற பதத்தை முதன் முதலில் பயன் படுத்தியதும் அவர் தான். அவரின் இந்த உரைக்கு பின்னரே இந்த பதம் தேசப்பற்றை குறிக்கும் பதமாக மாறியது. இந்த உரைக்கு பின்னர் தான் அவரை மக்கள் அன்புடன் "நேதாஜி" என்று அழைக்க தொடங்கினர்.

இந்நிலையில் நேதாஜி உயிரோடு இருப்பதை அவரது உரை மூலம் அறிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அவரை கொலை செய்யுமாறு உளவுத்துரைக்கு ஆணை பிறப்பித்தனர். இந்த ஆணையை ஆராய்ந்து பார்த்தால் ஆங்கிலேயர்கள் நேதாஜியை சாதாரனமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

அவர் ஜெர்மணியில் இருந்த இக்கால கட்டத்தில் தான் அவரது மனைவி கருவுற்று அனிடா பிறந்தார்.


நேதாஜியின் திட்டங்கள் பெறுமளவில் ரஷ்யாவில் ஜெர்மணியின் வெற்றியை பொருத்தே தீர்மானிக்கப் படும் என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். ஜெர்மணி ரஷ்யாவில் பெற்ற பெரும் தோல்வியினால் அப்படை வீரர்கள் இந்தியா சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து ஜப்பானின் உதவியை நாட அவர் முடிவெடுத்தார். அதற்கு பலம் சேர்க்கும் விதம் அப்பொழுது ஜப்பானின் பிரதம மந்திரியாக இருந்த திரு. தோஜோ, ஜப்பானின் பாராளுமன்றத்தில் இந்திய சுதந்திரத்திற்கு ஜப்பானின் ஆதரவை தெரிவித்தார்.

ஜெர்மணியின் U-180 மற்றும் ஜப்பானின் I-29 ஆகிய இரு நீர் முழுகிக் கப்பல்களில் பயணம் செய்து சிங்கப்பூர் சென்றடைந்தார் நேதாஜி. 1942 ஆம் ஆண்டு, ஜப்பானிய படை சிங்கப்பூரை கைப்பற்றியது. அதை தொடர்ந்து (ஆங்கிலேய) இந்திய படை வீரர்கள் சிறைக் கைதிகளாக ஜப்பானியர் வசம் ஒப்படைக்கப் பட்டனர். அதைத் தொடர்ந்து கேப்டன் மோகன் சிங் அவர்களைக் கொண்டு இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்க விரும்பினார். அதைத் தொடர்ந்து அவர் வசம் அப்படை வீரர்கள் ஒப்படைக்கப் பட்டனர். அதைத் தொடர்ந்து திரு. ராஸ்பிஹாரி போஸ் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் அவ்வீரர்களுடன் கேப்டன் மோகன் சிங் இனைந்தார்.


ஆனாலும் நாளடைவில் திரு. ராஸ்பிஹாரி போஸ் அவர்களின் தலைமையை வீரர்கள் விரும்பவில்லை. அவர் இந்தியாவின் மேன்மையைவிட அதிகமாக ஜப்பானின் மேன்மையை விரும்புகிறார் என்ற எண்ணம் வலுக்கத் தொடங்கியது. அந்நிலையில் நேதாஜியின் திட்டங்களையும், செயல்களையும் அறிந்த அவ்வீரர்களிடையே அவரின் தலைமை தேவை என்ற எண்ணம் வேர் விடத்தொடங்கியது. அப்பொழுது தான் நேதாஜி அங்கு சென்றடைந்தார். அவரிடம் இந்திய தேசிய இராணுவத்தை ஒப்படைத்தார் ராஸ்பிஹாரி போஸ். ஜப்பானும் இந்திய தேசிய இராணுவத்திற்கு தணம், யுத்த தளவாடம் போன்றவற்றை தருவதுடன், யுத்தத்தில் கைப்பற்றப்படும் இந்திய நாட்டு பகுதிகளை நேதாஜியிடம் ஒப்படைக்க உருதி தந்தனர். 85000 வீரர்கள் இருந்த அந்த இராணுவத்தில், கேப்டன் லட்சுமியின் தலைமையில் தனி பெண்கள் பிரிவு படையும் இருந்தது.

அதையடுத்து இந்தியாவை நோக்கி முன்னேறிய இந்திய தேசிய இராணுவம், ஜப்பானின் உதவியுடன் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கைப்பற்றியது. பின் முதல் முறையாக இந்தியாவின் மூவர்ணக் கொடியை (காங்கிரஸ் கொடியை சற்றே மாற்றி அமைத்து) நேதாஜி ஏற்றிவைத்தார்.


1943 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினைத் தொடர்ந்து 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். அதனால் மனம் வருந்திய நேதாஜி வங்காள மக்களுக்கு பர்மிய அரிசியை தர முன் வந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு அதை ஏற்க மறுத்தது. மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வந்த உணவுப் பொருட்களை இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் நேதாஜியின் கோபம் பல மடங்கானது.


1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பர்மாவை கைப்பற்றியது ஜப்பானிய இராணுவம். அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை இரங்கூனுக்கு மாற்றினார் நேதாஜி. அதைத் தொடர்ந்து கோஹிமாவிலும், இம்பாலிலும் நடந்த போரில் ஜப்பானியர்களுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. அதனால் அவர்கள் இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு அளித்த உதவியையும் ஊதியத்தையும் நிறுத்திக் கொண்டனர்.


அதே சமயத்தில் (ஆங்கிலேய) இந்திய இராணுவத்திலிருந்து பலர் இந்திய தேசிய இராணுவத்திற்கு வருவார்கள் என்ற நேதாஜியின் நம்பிக்கைக்கு மாற்றாக இந்திய தேசிய இராணுவத்திலிருந்து பலர் வெளியேறினர். இதனால் அவர் வீரர்களை ஊக்குவிக்க பல உரைகளை ஆற்ற வேண்டி இருந்தது. அவரது உரைகளில் மிகவும் புகழ் பெற்றது 1944 ஆம் ஆண்டு பர்மாவில் இந்திய தேசிய இராணுவத்தினருக்கு அவர் ஆற்றிய "குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்" என்ற உரை. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே.


"நண்பர்களே! 1857 ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய சுதந்திர போருக்கு பிறகு நம் நாட்டு மக்கள் நிராயுதபாணிகளாகவே இருக்கிறார்கள். நவீன ஆயுதம் ஏந்தி வரும் படை முன்னே நாம் நிராயுதபாணிகளாக நின்று சுதந்திரம் அடைய முடியாது.


நண்பர்களே! இந்தியா சுதந்திரம் பெரும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஆனாலும் நம்மால் சுதந்திர இந்தியாவை பார்க்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைவதை பார்த்து மகிழுவது உங்களது லட்சியமாக இருப்பின், அதை போன்றதொரு தவரான லட்சியம் வேறு எதுவும் இல்லை. வாழ வேண்டும் என்ற கனவு உங்களுல் யாருக்கும் இருக்க கூடாது.


இனி நமக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருக்க வேண்டும். அது காலனைத் தழுவும் கனவு; மரணத்தை எதிர் நோக்கும் கனவு. ஆம் இந்தியா வாழ நாம் இறப்பது அவசியம்.


நான் உங்களிடம் முன்னர் இராணுவம் அமைக்க அடிப்படை தேவையான தணத்தையும், தளவாடங்களையும் கேட்டேன். உங்களது அன்பினால் அவைகளை நான் வேண்டிய அளவு பெற்று விட்டேன். ஆனால் அவை மட்டுமே நமக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க முடியாது.


இப்பொழுது நான் வேறு ஒன்றைக் கேட்கிறேன். அதை நீங்கள் கட்டாயம் எனக்கு தர வேண்டும். ஆம் இப்பொழுது நான் கேட்பது உங்கள் குருதியை. குருதி சிந்துவதால் மட்டுமே நாம் நமது இலக்கை அடைய முடியும். குருதி ஒன்றே சுதந்திரத்திற்கான விலையாக முடியும்.


நண்பர்களே! இளைஞர்களே! இளைஞிகளே! இச்சுதந்திர போராட்டத்தில் எனக்கு தோள் கொடுக்க துணிந்தவர்களே! எனக்கு உங்களின் குருதியை தாருங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்."

அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் நேதாஜிக்கு சாதகமாக இல்லை. ஜெர்மணி, ஜப்பான் மற்றும் இத்தாலியின் தொடர் தோல்விகள் நேதாஜியை சிந்திக்க வைத்தன. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது. உலகம் முழுவதும் 6 கோடி மக்களின் உயிரைக் குடித்த பிறகு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.


ஜப்பான் சரணடைந்தாலும் தான் சரணடைய மறுத்து, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி பாங்காக் சென்றார். 17 ஆம் தேதி அங்கிருந்து சாய்கோன் சென்றார். அவருடன் அபிபூர் ரெஹ்மான், ப்ரீதம் சிங், அபித் ஹாஸன், S.A. ஐயர், தேப்நாத் தாஸ் ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்து தாய்பேய் செல்ல இருந்த விமானத்தில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருப்பதாகவும், அவர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மட்டும் தாய்பேய் சென்றார். அங்கிருந்து டாய்ரன் செல்ல திட்டமிட்ட அவர் 17 ஆம் தேதி காலை 5 மணிக்கு இரு பெரிய பெட்டிகளில் தங்கத்துடன் மேலும் 10 ஜப்பானியர்களுடன் விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்பி உயரே பறந்து 30 அடி உயரம் சென்றதும் வெடித்து சிதறியது. அவரது மரணத்தை பற்றி பலர் பலவித கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அவரது மகள் அனிடா அதை நம்புவதாகவும் அதில் சந்தேகப் படுவதற்கு எதுவும் இல்லை என்றும் கூறுகிறார். தனது தந்தையின் மரணத்தை பற்றி அவர் கூறுகையில், "அவரது வாழ்வையும், சுதந்திர இந்தியா அமைய அவர் மேற்கொண்ட முயற்சிகளையும், அவரது தியாகங்களையும், அவரது போராட்டங்களையும் மட்டுமே நாம் நினைத்து பார்க்க வேண்டும். மாறாக அவர் 1945 ஆம் ஆண்டு இறந்தாரா? இல்லையா? என்பதில் நாம் கவனம் செலுத்துவது தேவையற்றது." என்கிறார். நானும் அதை முழு மனதுடன் ஒப்புக் கொள்கிறேன்.

அவரது வாழ்க்கை வரலாற்றை உற்று கவனித்தால் அவர் செய்த தியாகங்கள் நம் நெஞ்சை உலுக்குகின்றன.


    1. தனது 24 ஆவது வயதில் மிகுந்த பொருளீட்டக் கூடிய ICS பதவியை உதறியவர்.
    2. ஒரு பள்ளி ஆசிரியர் மாதம் 50 ரூபாய் சம்பளம் பெற்ற காலத்தில், மாதம் 1500 ரூபாய் சம்பளம் தந்த கல்கட்டா கார்ப்பரேஷனின் CEO பதவியை தக்க வைத்துக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அதே சமயத்தில் சுதந்திர போராட்டத்தில் தனது ஈடுபாட்டை சிறிதளவும் குறைத்துக் கொள்ளாமல் இருந்தவர்.
    3. மகாத்மாவின் அஹிம்சை போராட்டத்தில் நம்பிக்கை துளியும் இல்லாமல் இருந்தாலும் அவர் தோல்வி அடைய கூடாது என்ற காரணத்திற்காக தனக்கு கிடைத்த காங்கிரஸ் தலைவர் பதவியை உதறியவர்.
    4. தன்னை கருத்து வேறு பாடுகளினால் காங்கிரஸிலிருந்து வெளியேற்றிய மகாத்மாவை தேசத்தந்தை என்று அறிவித்தவர்.
    5. தனது காதல் மனைவியையும், பிறந்து 2 ஆண்டுகளே நிரம்பிய தனது மகள் அனிடாவையும் அதன் பிறகு பார்க்கவே முடியாது என்று நன்கு தெரிந்தும் இந்திய சுதந்திரத்திற்காக ஜெர்மணியை விட்டு சிங்கப்பூர் சென்றவர். அவர் நினைத்திருந்தால் அவர்களையும் கூட்டி சென்றிருக்க முடியும். ஆனால் அது தனது லட்சியத்திற்கு தடையாக இருக்கும் என்று அவ்வாறு செய்யவில்லை.

இவ்வளவு தியாகங்களையும் செயற்கறிய செயல்களையும் செய்தவருக்கு இந்நாடு செய்தது என்ன? என்று பார்த்தோமானால், ஏமாற்றமே மிஞ்சும். தேசப்பிதா காந்தியடிகள், நம் நாட்டின் முதல் பிரதமரான நேரு, சட்ட மேதை அம்பேத்கார், இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் போன்றோரின் தியாகங்களுக்கு சற்றும் குறைந்தது இல்லை நேதாஜியின் தியாகங்கள். ஆனால் அவருக்கு மற்றவர்களுக்கு கொடுத்ததைப் போன்றதொரு அங்கீகாரத்தை என்றுமே இந்தியா கொடுத்தது இல்லை. அவருடைய தியாகங்கள் அனைத்தும் வரலாற்று புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப் பட்டன. அவருக்கு என்று இல்லை, அவரது உரைகளை கேட்டு அவர்பால் ஈர்க்கப்பட்டு அவர் பின்னால் நின்ற 1 லட்சத்திற்கும் மேலான வீரர்களுக்கு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் என்ற அந்தஸ்தை கூட கொடுக்கவில்லை இந்தியா. தியாகிகளுக்கான பென்சன், இலவச இரயில் பயண வசதிபோன்ற எதையும் அவர்களுக்கு நாம் கொடுக்க வில்லை. சுதந்திரம் பெற்று 55 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் காரணங்களுக்காக அவருக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்ணா விருதும் அவருக்கு அவமானத்தையே தேடித் தந்தது. ஆனாலும் அவரது உள்ளம் அதை எல்லாம் நினைத்து வருந்தி இருக்காது. இந்தியா சுதந்திரம் பெற்ற அன்றே அவரது உள்ளம் சாந்தி அடைந்து இருக்கும்.

அவரின் 110 ஆவது பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதி அவரையும், அவரது தியாகங்களையும் வளையுலகில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளவே இப்பதிவை பதிகிறேன்.

பின்குறிப்பு : இக்கட்டுரைக்காக நான் பின்வரும் தளங்களில் இருந்து செய்திகளை எடுத்துள்ளேன். மாபெரும் தலைவரைப் பற்றிய கட்டுரை என்பதால் என்னால் முடிந்த அளவில் பல முறை உறுதி செய்த பின்னரே நிகழ்வுகளை பதிந்துள்ளேன். இருப்பினும் ஏதேனும் தகவல் பிழைகள் இருப்பின் தகுந்த சுட்டிகளுடன் தெரியப் படுத்தினால் திருத்தி விடுகிறேன். தகவல் பிழைகளுக்கு நான் முழு பொருபேற்பதுடன், அதனால் யாராவது புண்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.


இக்கட்டுரை அமைய உதவிய தளங்கள் :