Monday, July 30, 2012


க்ரிஸ் சேஸ் என்ற மடையனுக்கு நன்றி

சமீபத்தில் நடந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற இந்திய அணியின் அணிவகுப்பில் இந்திய அணியில் இல்லாத ஒரு பெண்ணும் கலந்து கொண்டார். சிறிய விசாரணைக்கு பின்னர் அவர் லண்டனில் வசிக்கும் பெங்களூரை சேர்ந்த பெண் என்றும் அவரது பெயர் மதுரா நாகேந்திரா என்றும் தெரிய வந்தது. இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய இந்திய ஒலிம்பிக்ஸ் குழு தலைவர் முரளிதரன் ராகா "இது பாதுகாப்பில் ஏற்பட்ட பெரிய ஓட்டை" என்றும், "வெட்கப்படக் கூடிய செயல்" என்றும் கருத்து தெரிவித்தார்.

1972 ஒலிம்பிக்ஸில் நடந்த ம்யூனிக் படுகொலைகளை யாரும் அவ்வளவு விரைவில் மறந்திருக்க முடியாது. அந்த பின்னணியை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால் முரளிதரன் தெரிவித்த கருத்துக்களின் பொருள் விளங்கும்.

ஆனால் இதை பற்றியெல்லாம் சிறிதும் அறியாமல், செய்திகளை வெளியிடும் பொழுது தனது சொந்த கருத்துக்களை வெளியிடக் கூடாது என்ற அடிப்படை கூட தெரியாமல், ஒட்டு மொத்த தேசத்தையும் விளையாட்டு என்ற ஒரே அளவு கோலை வைத்து மட்டும் அளவிடக் கூடாது என்ற தெளிவு இல்லாமல் யாஹூவின் விளையாட்டு செய்தியாளர் க்ரிஸ் சேஸ் என்ற மடையன்.

"அந்த பெண் அந்த அணிவகுப்பில் இடம் பெற்றது வெட்கப்படக் கூடிய செயல் கிடையாது; 112 ஆண்டுகளாக ஒலிம்பிக்ஸில் இடம் பெறும் இந்தியா மைக்கேல் ஃபெல்ப்ஸை விட நான்கு பதக்கங்களே அதிகம் பெற்றிருக்கிறது. அது தான் வெட்கப்படக் கூடிய செயல்." என்று தனது சிந்தை கழிவுகளை செய்தியின் ஊடே கொட்டி இருக்கிறான்.

எனது பழைய பதிவில் நான் முன்னர் எழுதியதை இங்கே கீழே மீண்டும் வெளியிடுகிறேன்.

"சென்ற வாரம் இங்கே இருக்கும் ஒரு இந்திய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு பல இடங்களுக்கு சென்று கடைசியாக "100 கோடி மக்கள் இருக்கும் இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு தங்கத்திற்கு முக்குகிறது" என்ற அந்நியன் வசனத்தில் வந்து முடிந்தது. கடந்த ஒலிம்பிக்கில் எட்டு தங்க பதக்கங்களை வாங்கிய அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவின் கலோரிகள் எவ்வளவு தெரியுமா? சுமார் 12000 கலோரிகள். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் உணவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஆறு சராசரி மனிதர்கள் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவினை இவர் ஒருவர் மட்டுமே சாப்பிடுகிறார். அவர் ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவு கீழே உள்ளது பாருங்கள்.

காலை: முட்டை, சீஸ், லெட்டூஸ், தக்காளி, வெங்காயம், மேயோ சேர்த்த சான்ட்விச்கள் மூன்று. ஐந்து முட்டை ஆம்லெட் ஒன்று. சாக்லேட் சிப்கள் கலந்த பான்கேக் மூன்று. ஃபிரென்ச் டோஸ்ட் மூன்று. இரண்டு கப் காபி.

மதியம்: ஒரு பவுண்டு பாஸ்தா. ஹாம், சீஸ், மேயோ சேர்த்த பெரிய சான்ட்விச்கள் இரண்டு. சுமார் 1000 கலோரி எனர்ஜி ட்ரின்க்குகள்.

இரவு: ஒரு பவுண்டு பாஸ்தா. ஒரு பெரிய சைஸ் சீஸ் பீசா. சுமார் 1000 கலோரி எனர்ஜி ட்ரின்க்குகள்.

யோசித்து பாருங்கள். இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களில் எவ்வளவு மக்களால் இப்படி தினமும் சாப்பிட முடியும்?"

ஆனால் இவ்வளவு நடந்தும் அந்த மடையனுக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். ஏனென்றால் அவனது கருத்தை படித்த பல நாட்டு மக்கள் அதில் உள்ள அசிங்கத்தையும் அநாகரீகத்தையும் சுட்டிக் காட்டியதுடன் இல்லாமல் அவனை இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்கும் படி கூறி இருக்கிறார்கள்.

அதற்காக, "க்ரிஸ் சேஸ் என்ற மடையனுக்கு நன்றி".

0 Comments: