Sunday, March 03, 2013


விஜயகாந்த் என்றால் அவ்வளவு மட்டமா?

சென்ற மாதம் விஷ்வரூபம் குறித்து எழுதிய விமர்சனப் பதிவுக்கு என்னை திட்டி தினமும் பல பின்னூட்டங்கள் வருகின்றன. தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகம் இருப்பதால் அவற்றை வெளியிட விரும்புவதில்லை. திட்டுபவர்கள் என்னை மட்டும் திட்டினால் ஒரு பிரச்சனையும் இல்லை. எனது குடும்பத்தினரையும் சேர்த்து திட்டுவதனால் தான் வெளியிட முடிவதில்லை.

ஒரு திரைப்படத்தை விமர்சித்தால் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்பது மட்டும் எனக்கு விளங்கவே இல்லை. ஒரு கலைஞனை விமர்சிப்பது என்பது வேறு, அவனது கலை படைப்பை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் நம் நாட்டில் தான் இரண்டையும் பிரித்து பார்க்காமல் சேர்த்து பார்த்து குழம்புகிறார்கள், நம்மையும் குழப்புகிறார்கள். ஒரு கலைஞனை பிடிக்கவில்லை என்றால் அவனது படைப்பு எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதை தெருவில் வீசி 'குப்பை' என்று கூறுகிறார்கள், அதே நேரத்தில் நமக்கு பிடித்த கலைஞனின் படைப்பு உண்மையிலேயே குப்பையாக இருந்தாலும் கோபுரத்தின் உச்சியில் வைத்து 'காவியம்' என்று போற்றுகிறார்கள். அவர்களின் இந்த லூசுத்தனத்தை அவர்களுடனேயே வைத்துக் கொண்டால் ஒன்றும் பாதகம் இல்லை. ஆனால் அதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பே எரிச்சலை ஏற்படுத்துகிறது.

உலகில் மற்ற நுகர்வு பொருட்களை விமர்சிப்பதை விட ஒரு படி அதிகமாகவே திரைப் படங்களை விமர்சிக்க நுகர்வோனுக்கு உரிமை உண்டு. ஏனென்றால் திரைப்படங்களை தான் ஒருவன் பார்ப்பதற்கு முன்னரே காசு கொடுத்து வாங்குகிறான். மற்ற பெரும்பான்மையான நுகர்வு பொருட்கள் ஒரு முறையாவது பார்த்த பிறகே வாங்கப்படுகின்றன. சரி அதையெல்லாம் விட்டு விடுங்கள். பதிவு அதை பற்றியது இல்லை.

நேற்று வந்த ஒரு பின்னூட்டத்தில் "உங்களுக்குள்ள மழுங்கல் மூளைகளுக்கெல்லாம் விஜயகாந்த் படங்கள்தான் லாயக்கு!" என்று ஒரு அறிவு ஜீவி கருத்து தெரிவித்திருந்தார். ஒருவர் என்னை முட்டாள் என்று கருதுவதில் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை, அதே போல ஒருவர் என்னை அறிவாளி என்று கருதுவதிலும் எனக்கு ஒரு சகாயமும் இல்லை. அதனால் பதிவு அவரது என்னை பற்றிய கருத்தை பற்றியதும் அல்ல. ஆனால் விஜயகாந்த் படங்கள் எல்லாம் மழுங்கல் மூளை உள்ளவர்களுக்கு தான் லாயக்கு என்ற கருத்து தான் என்னை இப்பதிவெழுத தூண்டியது.

அறிவு ஜீவிகள் என்று தங்களை தாங்களே கருதுபவர்கள் தேவையே இல்லாமல் தங்களை ஒரு வரையறைக்குட்படுத்திக் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு தமிழ் சினி ரசிகர்களை எடுத்துக் கொண்டால், கமலை, மணிரத்னத்தை, சுஜாதாவை சிலாகிப்பவர்கள் அறிவு ஜீவிகள் என்றும், விஜயகாந்தை, அர்ஜுனை, சரத் குமாரை ரசிப்பவர்கள் குறைந்த ரசனை உடையவர்கள் என்றும் கருதுவது; அதே போல தமிழ் புத்தக வாசிப்பில் கி வா ஜவையும், லா ச ராவையும், ஜெயகாந்தனையும், ஜானகிராமனையும், பிரபஞ்சனையும், நீல. பத்மநாபனையும் படிப்பவர்கள் உயர்ந்த ரசனை உடையவர்கள் என்றும், பாக்கெட் நாவல் வாங்கி ராஜேஷ் குமாரை படிப்பவர்கள் குறைந்த ரசனை உடையவர்கள் என்றும் கருதுவது எல்லாம் அவர்களின் பொது புத்தியின் வெளிப்பாடே. பொது புத்தியெல்லாம் சரியாகவே இருக்க வேண்டும் என்பது ஒன்றும் அவசியம் இல்லை. வெள்ளையா இருக்கிறவன் பொய் பேச மாட்டான் என்று கருதுவதும் கூட ஒருவகை பொது புத்தி தான்.

பொதுவாகவே இந்த ஆதிக்க உலகில் வாழும் மக்களுக்கு ஒரு படி நிலை தேவைப் படுகிறது. தங்கள் மொழி மேல், மற்ற மொழிகள் எல்லாம் கீழ்; தங்கள் கலாச்சாரம் மேல், மற்ற கலாச்சாரங்கள் எல்லாம் கீழ்; தங்கள் மதம் மேல், மற்ற மதங்கள் எல்லாம் கீழ்; தங்கள் சாதி மேல், மற்றவர் சாதிகள் எல்லாம் கீழ்; ஆண்கள் மேல், பெண்கள் கீழ்; பெரியவர்கள் மேல், குழந்தைகள் கீழ்; படித்தவர்கள் மேல், படிக்காதவர்கள் கீழ்; சிகப்பாக இருப்பவர்கள் மேல், கருப்பாக இருப்பவர்கள் கீழ்; பணக்காரர்கள் மேல், ஏழைகள் கீழ்; இது போலத்தான் தங்கள் ரசனை மேல், மற்றவர் ரசனை கீழ் என்ற படி நிலையும்.

வகுப்பில் எல்லோரும் முதல் ரேங்க் வாங்கினால் முதல் ரேங்க் வாங்குபவன் எப்படி மற்றவர்களிடம் தனது சாதனையை சொல்லி பீற்றிக் கொள்ள முடியும்? எல்லோரிடமும் BMW இருந்தால் எப்படி BMW வைத்திருப்பவன் பேரூந்தின் படியில் தொத்திக் கொண்டு அலுவலுக்கு செல்பவன் முன்பு பந்தா விட முடியும்? அதனாலேயே இந்த ஆதிக்க படி நிலையின் போதையில் வாழ்பவர்களுக்கு தாங்கள் ஆதிக்கம் செலுத்த குறைந்த ரசனை உள்ளவர்கள் தொடர்ந்து தேவை படுகிறார்கள். குறைந்த ரசனை உடையவர்கள் இல்லை என்றால், இவர்கள் யாருடன் தங்களை ஒப்பிட்டு தங்களின் அறிவு ஜீவித்தனத்தை காட்டிக் கொள்ள முடியும்?

Ayn Rand எழுதிய Atlas Shrugged நாவலில் ஒரு கதாபாத்திரம் இப்படி சொல்லும். அறிவு ஜீவிகள் மற்றவர்களின் ரசனையை மட்டம் தட்டும் போது எனக்கு இது தான் நினைவுக்கு வந்தது.

"I like to think of fire held in a man's hand. Fire, a dangerous force, tamed at his fingertips. I often wonder about the hours when a man sits alone, watching the smoke of a cigarette, thinking. I wonder what great things have come from such hours. When a man thinks, there is a spot of fire alive in his mind–and it is proper that he should have the burning point of a cigarette as his one expression."

நெருப்பை உங்கள் விரல் இடுக்குகளில் வைத்து உள் இழுப்பதனால் நீங்கள் அதனை வெற்றி கொண்டீர்கள் என்று பொருள் இல்லை. அப்படி உங்களை நம்ப வைத்து நெருப்பு உங்களை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி கொள்கிறது அல்லவா, அது தான் நெருப்பின் வெற்றி.

அறிவு ஜீவிகளே! இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் முன் வரிசை ரசிகர்கள் தான். அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் சமூக, பொருளாதார பிரச்சனைகள் ஏராளம் ஏராளம். அவர்களை தங்கள் பிரச்சனைகளை எல்லாம் ஒரு மூன்று மணி நேரம் மறக்க செய்து மகிழ்விக்கும் ஒரு கலைஞனை நீங்கள் மழுங்கல் மூளை உள்ளவர்களுடன் தயங்காமல் நாள் தவறாமல் ஒப்பிட்டுக் கொண்டே இருங்கள். தயவு செய்து அதை நிறுத்தி விடாதீர்கள். ஏனென்றால், முன் வரிசை ரசிகர்களான எங்களுக்கும் தராதரத்தில் ஒரு படி நிலை தேவைப்படுகிறது.

9 Comments:

நண்பா said...

Vanakkam Sathyapriyan,
I have been looking for some post from you everyday.
Last'la pardha eppadi oru post poongi elundhu pottu irrukukingaa. :)
Enna achu??.
I 100% agree with your Views. Please ignore such comments as you were doing and continue with your postings which you are doing it just to share your view..
Keep Going Friend.. :)

வருண் said...

நீங்க கமல் ரசிகரா இருக்கும்போதே இப்படினா, மற்றவர்கள் நிலைமையை யோசியுங்கள்.:-))))

திட்டுவதையெல்லாம் தட்டி விட்டுவிட்டுப் போங்க, சத்யப்பிரியன்!

உங்களைப்போல் காமெண்ட் மாடெரேஷன் செய்வதுதான் நல்லது.

நான் எல்லாம் மாடெரேஷன் செய்யாமல், பதிலுக்கு பதில் அதே "கரண்சியில்" திருப்பி கொடுப்பது வழக்கம். அதனால் எனக்கும், என் தளத்திற்குத்தான் கெட்ட பெயர்- அனானியாக வரும் "பெரியமனிதர்களுக்கு" இல்லை!

மருதநாயகம் said...

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் செய்யும் வழக்கமான விஷயம் தான் இது, இவற்றை புறம் தள்ளுவது தான் சரியாக இருக்கும். குழப்பம் விளைவிக்கிற அறிவு ஜீவியாக இருப்பதை விட மழுங்கல் மூளையுடன் இருப்பவர்களே மேல். இந்த பதிவில் பல இடங்கள் நச் ரகம்

Senthil Kumaran said...

//
முன் வரிசை ரசிகர்களான எங்களுக்கும் தராதரத்தில் ஒரு படி நிலை தேவைப்படுகிறது.
//
Classic சத்யப்ரியன் டச். மருதநாயகம் சொன்னது போல நச் பதிவு.

SathyaPriyan said...

@வருண், @Siva, @மருதநாயகம், @Senthil Kumaran,

உங்கள் அனைவருக்கும் நன்றி.

@வருண், @Siva,

இந்தப் பதிவில் நான் சொல்ல வந்தது, என்னை திட்டுவதை பற்றி அல்ல. திட்டுவதை விட எனக்கு அதிக ஆபாசமாக தெரிவது என்னை திட்டிய பலரும் தங்கள் ரசனையை உயரியதாகவும் படம் புரியாதவர்கள், பிடிக்காதவர்கள் ரசனையை தாழ்வாகவும் கருதியது தான்.

வெடிகுண்டு முருகேசன் said...

Atlas Shrugged எடுத்துக்காட்டு அட்டகாசம். சூப்பர் பதிவு. வாழ்த்துகள்.

arasan said...

உங்கள் தளத்தைப் பற்றி சிறு விளக்கம் ...
காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_12.html

S.டினேஷ்சாந்த் said...

ஒரு கலைஞனை பிடிக்கவில்லை என்றால் அவனது படைப்பு எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதை தெருவில் வீசி 'குப்பை' என்று கூறுகிறார்கள், அதே நேரத்தில் நமக்கு பிடித்த "கலைஞனின் படைப்பு உண்மையிலேயே குப்பையாக இருந்தாலும் கோபுரத்தின் உச்சியில் வைத்து 'காவியம்' என்று போற்றுகிறார்கள். அவர்களின் இந்த லூசுத்தனத்தை அவர்களுடனேயே வைத்துக் கொண்டால் ஒன்றும் பாதகம் இல்லை. ஆனால் அதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பே எரிச்சலை ஏற்படுத்துகிறது."

யதார்த்தம் இது தான் நண்பரே.அவர்களாகவும் புரிந்து கொல்ல மாட்டார்கள் புரிய வைக்க முயல்பவனையும் முட்டாள் ஆக்கி விடுவார்கள்

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பரே...
இன்றைய வலைச்சரத்தின் பதிவு மூலம்...
உங்கள் தளம் வந்தேன்...
ஆழ்ந்த எண்ணங்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன...
அத்தனையும் படிக்கிறேன்
நேரம் கிடைக்கையில்...
வாழ்த்துக்கள்...