Monday, August 03, 2015


பொடிமாஸ் - 08/03/2015

கடந்த டிசம்பர் அல்லது ஜனவரியில் ஏதோ ஒரு நாள். தொடர்ந்து ஒரே வாரத்தில் இரு பெரும் பனிப் பொழிவுகள். வழக்கம் போல தங்கமணி உள்ளிருந்து உத்தரவு போட எனது drive way யை தனியாக சுத்தம் செய்து கொண்டிருந்தேன். முன்னரே பெய்த பனியினால் drive way இன் இரு ஓரங்களிலும் இடுப்பளவு பனிக்கட்டிகள் குவிந்து விட்டன.

மனதில் பல சிந்தனைக் குவியல்கள். அப்போது தான் ப்ரணவின் ஆசிரியர் அவன் படிப்பில் இன்னும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றும், சரியாக எழுதுவது இல்லை என்றும், வகுப்பில் கவனம் செலுத்துவது இல்லை என்றும், ஏரோப்ளேன் ஓட்ட தெரியவில்லை என்றும், மல்டிபில் ரெக்ரஷன் அனாலிஸிஸ் தெரியவில்லை என்றும், அமிர்த வர்ஷினி க்கும் ஆபேரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றும், இப்படி இன்னும் பல இல்லை என்றும் பெரிய பட்டியல் ஒன்றை அளித்திருந்தார்.

சார் அவனுக்கு வயசு நாலு தான் ஆகுது என்று சொல்ல வந்து, ஆனால் சொற்கள் வெளிவராமல் நாவின் அடியில் அடங்கி, பெரு மூச்சாக வெளிப்பட்டது.

நான் சுத்தம் செய்வதை அறையில் இருந்து ப்ரணவ் பார்த்துக் கொண்டே இருந்தான். முன்பே சொன்னது போல அங்கே இருந்த பனிக்குவியலால் அவனுக்கு நான் சுத்தம் செய்வது சரியாக தெரியவில்லை. நான் எங்கள் வீட்டின் பனிக்கட்டிகளை எடுத்து சாலையில் போடுவது போல அவனுக்கு தெரிந்தது. உடனே தடால் புடால் என்று மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன், "அப்பா! you can't make a mess like this. Others will fall." என்றான். அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்பதை விளங்கி கொள்ளவே எனக்கு சில விநாடிகள் ஆனது.

ஒரு தகப்பனாக மிகவும் பெருமையடைந்த தருணம் அது. வெளியில் கடும் குளிர், இவனோ ஒரு மெல்லிய ஷார்ட்ஸ் மற்றும் சட்டை அணிந்திருக்கிறான். அவனுக்கே குளிர் நடுக்குகிறது. இந்த நிலையிலும், தனது தந்தையால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று நினைக்கும் அந்த சிவிக் சென்ஸ் இருந்தால் போதும். பெரிய படிப்பு படித்து கிழித்தவர்கள் எல்லாம் நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்?


இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க சுதந்திர தினத்தை தொடர்ந்து இங்கிலாந்து சென்றோம். ஒரு வார சுற்றுப் பயணம். மிகவும் நன்றாக இருந்தது. அதுவும் நாங்கள் சென்ற நேரத்தில் மூன்று முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடந்தன, விம்பிள்டன், ஆஷெஸ் கிரிக்கெட், மற்றும் ப்ரிடிஷ் க்ரான்ட் ப்ரி. எங்கு சென்றாலும் நல்ல கூட்டம். முதலில் நுழையும் போதே இமிக்ரேஷன் ஆஃபீசர் மிகுந்த நட்புடன் உரையாடினார். அமெரிக்காவில் செந்திலை பார்க்கும் கவுண்டர் போலவே மூஞ்சியை வைத்துக் கொண்டிருப்பார்கள். உள்ளே நுழையும் போதே எதற்கு இந்த ஊருக்கு வந்தோம் என்று இருக்கும். அடுத்ததாக கட்டிடங்கள் எல்லாம் பெரும்பாலும் கலோனியல் காலத்தின் பதிவுகளாகவே இருக்கின்றன. ஐந்தடுக்கு பாதாள மெட்ரோ ரயில் போக்குவரத்து. சுமார் 12 கிலோ மீட்டர்கள் பாதையை கட்டி முடித்து அது என்னால் முடிந்ததா உன்னால் முடிந்ததா என்று நம்மவர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லண்டன் மெட்ரோ 1863 ஆம் ஆண்டு தொடங்கியது என்பதை அறியும் போது நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. "ஊர கொள்ளையடிச்சு உலையில போட்டா ஏன் செய்ய முடியாது?" என்று எனக்கு நானே அதற்கு சமாதானமும் சொல்லிக் கொண்டேன்.

லண்டன் நகரின் பரப்பளவு சுமார் 600 சதுர மைல்கள் தான். அதனை ஒரு வட்டமாக பாவித்தால் சுமார் 25 மைல்கள் பயணம் செய்தால் அதனை முழுதுமாக கடந்து விடலாம். அப்படிப்பட்ட நகரத்தின் அடியில் சுமார் 260 மைல் நீள ரயில் பாதைகள் போடப்பட்டு இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு காரோ, பஸ்ஸோ, டாக்சியோ தேவையே இல்லை.

பொது வெளியில் மது அருந்துவது சட்டப்படி தவறு என்றாலும் அங்கே பலர் அவ்வாறு செய்வதை பார்க்க முடிந்தது. பக்கிங்காம் மாளிகையின் வெளியே உள்ள ஒரு பகுதியில் பலர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டேன். அது போலவே லண்டனில் இருந்து மில்டன் கெய்னஸ் என்ற பகுதிக்கு வெர்ஜின் விரைவு ரயிலில் பயணம் செய்யும் போது அங்கும் பலர் மது அருந்துவதை கண்டேன்.

அடுத்ததாக என்னை ஆச்சரியப்படுத்தியது அந்நகரின் பசுமை. உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரில் இருந்து சுமார் 20 மைல்கள் பயணத்தில் என்னால் பல ஆடு, மாடு, மற்றும் குதிரை பண்ணைகளை பார்க்க முடிந்தது. நம்மூராக இருந்திருந்தால் லண்டனுக்கு மிக அருகில் என்று அதிகாலை இரண்டு மணிக்கு யாராவது கூவிக் கூவி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

அமெரிக்கர்களை விட பலர் அங்கே கட்டுக் கோப்பாக இருக்கிறார்கள். உணவின் அளவு அமெரிக்க அளவில் பாதி கூட இல்லை. சென்ற முதல் நாள் ஒரு கடையில் எக்ஸ்ட்ரா லார்ஜ் பர்ரீடோ வாங்கினோம். அது அமெரிக்க அளவில் பாதி இருந்தது. மாலை ஐந்து மணிக்கே எல்லா கடைகளையும் மூடி விடுகிறார்கள். இப்படி இருந்தால் எப்படி வியாபாரம் நடக்கும், லாபம் வரும்?

நாங்கள் சென்ற நேரம் கோடை காலம் ஆனதால் இரவு 11 மணி வரை வெளிச்சம் இருந்தது. அதனால் இரவு நேர லண்டனை பெரிதாக மகிழ்ந்து அனுபவிக்க இயலவில்லை. அடுத்த முறை டிசம்பர் மாதம் செல்ல வேண்டும். மொத்தத்தில் லண்டன் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.


சென்ற வாரம் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு முதலாளித்துவமே காரணம் என்று பலர் ஜல்லியடித்துக் கொண்டனர். உண்மையில் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு சோஷியலிசமே காரணம். 54 வயதில் ஓய்வு, அதிக அளவு ஓய்வூதியம், வாரத்துக்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை, என்றெல்லாம் இருந்தால் எப்படி ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும்? இன்னும் 30 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டில் 60 வயதை கடந்தவர்கள் சுமார் 50 சதவிகிதம் இருப்பார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. இப்படி இருக்கும் ஒரு நாட்டில் ஓய்வூதியத்தை அளித்துக் கொண்டே இருந்தால் எப்படி? யாருடைய உழைப்பு அதனை ஈடுகட்டும்?

சோஷியலிசம் ஒரு வித sense of entitlement ஐ மக்கள் மனதில் விதைத்து விடுகிறது. மக்களை பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை தான். நான் மறுக்கவில்லை. ஆனால் அது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பெற்றோர்களின் கடமை போன்றது. ஒரு வயது வரை நாம் பார்த்துக் கொள்ளலாம், அதன் பின்னர் அவர்கள் தான் தங்கள் காலில் நிற்க வேண்டும். அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி. அதன் பின்னர் நீ என்ன ஆனாலும், நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்தாலும் அரசாங்கம் கவலைப்படாது. அதே நேரம் பணக்காரர்களாக பார்த்து அதிக வரி விதித்து அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையையும் அமெரிக்க அரசு செய்யாது. ஒருவன் வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி அமெரிக்க அரசு கண்டு கொள்ளாது. அது தான் சரி என்பது தான் என்னுடைய கருத்தும்.


50 before 50 என்பதை இலக்காக வைத்திருக்கிறேன். இது வரை பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு வாரம் தங்கிய நாடுகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை ஒன்பது. வயதாகிக் கொண்டே போகிறது. குழந்தை, படிப்பு என்றாகிவிட்ட பிறகு முன்பு போல பயணம் செய்ய இயலவில்லை. ஆனாலும் செய்ய வேண்டும் என்ற ஆவல் அப்படியே இருக்கிறது.

சென்ற ஆண்டு தான் ஜே கண்ணையன் பற்றி அறிந்தேன். அமெரிக்காவில் நல்ல வேலை வாய்ப்பு, வசதி என்று இருந்தவர், அவை அனைத்தையும் விட்டு விட்டு தனது மோட்டர் சைக்கிளில் உலகம் முழுதும் பயணம் செய்ய தொடங்கினார். அமெரிக்காவில் தொடங்கி, மெக்சிகோ சென்று, அனைத்து தென் அமெரிக்க நாடுகளையும் கடந்து, தென் கோடிக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பா கப்பலில் சென்று, அங்கிருந்து ஆப்ரிக்கா வந்து, ஆப்ரிக்காவின் தென் கோடி வரை வந்து, அங்கிருந்து இந்திய தென் கோடிக்கு கப்பலில் வந்து, பின்னர் அங்கிருந்து லடாக் சென்று தனது பயணத்தை முடித்திருக்கிறார். இந்த பயணத்தை மேற்கொள்ள அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. இப்போது இந்தியாவில் இருந்து இது போன்ற பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் நான் அறிந்து மிகவும் வியந்த ஒரு நபர்.

அவரை பற்றி அறிந்து கொள்ள http://jamminglobal.com/ தளத்திற்கு செல்லவும்.


Put Chutney தளத்தை முன்பே அறிமுகப்படுத்தி இருக்கிறேனா என்பது தெரியவில்லை. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ. அட்டகாசம். நீங்கள் மார்வெல் காமிக்ஸ் ரசிகராக இருந்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.



4 Comments:

வருண் said...

***ஒரு தகப்பனாக மிகவும் பெருமையடைந்த தருணம் அது. வெளியில் கடும் குளிர், இவனோ ஒரு மெல்லிய ஷார்ட்ஸ் மற்றும் சட்டை அணிந்திருக்கிறான். அவனுக்கே குளிர் நடுக்குகிறது. இந்த நிலையிலும், தனது தந்தையால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று நினைக்கும் அந்த சிவிக் சென்ஸ் இருந்தால் போதும். **

இன்னும் சில வருடங்கள் சென்றவுடன், உங்க பதிவை வாசிச்சுப் பார்த்துவிட்டு ப்ரணா மிகவும் சந்தோஷப்படுவான். தமிழ் வாசிக்க சொல்லிக் கொடுத்துடுங்க! :)

வருண் said...

***பொது வெளியில் மது அருந்துவது சட்டப்படி தவறு என்றாலும் அங்கே பலர் அவ்வாறு செய்வதை பார்க்க முடிந்தது. பக்கிங்காம் மாளிகையின் வெளியே உள்ள ஒரு பகுதியில் பலர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டேன். அது போலவே லண்டனில் இருந்து மில்டன் கெய்னஸ் என்ற பகுதிக்கு வெர்ஜின் விரைவு ரயிலில் பயணம் செய்யும் போது அங்கும் பலர் மது அருந்துவதை கண்டேன்.***

Hmm, Interesting!! :)

***அமெரிக்கர்களை விட பலர் அங்கே கட்டுக் கோப்பாக இருக்கிறார்கள். உணவின் அளவு அமெரிக்க அளவில் பாதி கூட இல்லை. சென்ற முதல் நாள் ஒரு கடையில் எக்ஸ்ட்ரா லார்ஜ் பர்ரீடோ வாங்கினோம். அது அமெரிக்க அளவில் பாதி இருந்தது. மாலை ஐந்து மணிக்கே எல்லா கடைகளையும் மூடி விடுகிறார்கள். இப்படி இருந்தால் எப்படி வியாபாரம் நடக்கும், லாபம் வரும்?***

நான் இதுவரை டாக்கோ பெல் போனதே இல்லை. என்ன கஅரணம்னு தெரியலை பரீட்டோ எங்கேயுமே சாப்பிட்டதில்லை. மற்ற எல்லாமே சாப்பிட்டு இருப்பேன்னு நினைக்கிறேன். :)

-----------------

"ஒபீஸிட்டி" பிரச்சினை யு எஸ்லதான் அதிகம்னு நினைக்கிறேன். அதுவும் ஏழைகளாக இருந்தால் சாப்பிட மட்டும் நல்லா செலவழிச்சு குண்டாயிடுறாங்க!! :)) நம்ம ஊரில் பணக்காரங்கதான் ஓவர் வெய்ட்டா இருப்பாங்க, யு எஸ்ல ஏழைகள் தான் குண்டாயிருக்காங்க. :)

என்னதான் இருந்ந்தாலும் நீங்க ப்ரிடிஷை உயர்த்தி அமெரிக்கர்களை குறைத்துசொல்றதை என்னால தாங்கிக்க முடியலை. என்னுடைய அமெரிக்க ரத்தம் கொதிக்கிது. சரி நம்ம சத்யப் பிரியந்தானேனு பெரிய மனது பண்ணி விட்டுட்டுப் போறேன். :))

வருண் said...

***சென்ற வாரம் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு முதலாளித்துவமே காரணம் என்று பலர் ஜல்லியடித்துக் கொண்டனர். உண்மையில் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு சோஷியலிசமே காரணம். 54 வயதில் ஓய்வு, அதிக அளவு ஓய்வூதியம், வாரத்துக்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை, என்றெல்லாம் இருந்தால் எப்படி ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும்? இன்னும் 30 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டில் 60 வயதை கடந்தவர்கள் சுமார் 50 சதவிகிதம் இருப்பார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. இப்படி இருக்கும் ஒரு நாட்டில் ஓய்வூதியத்தை அளித்துக் கொண்டே இருந்தால் எப்படி? யாருடைய உழைப்பு அதனை ஈடுகட்டும்?***

எல்லா நாட்டிலுமே லைஃப் எக்ஸ்பக்டன்ஸி அதிகமாயிடுச்சு. இப்போ நம்ம ஊரில் புதுசா வேலைக்கு சேர்ரவனுக்கெல்லாம் "பென்ஷன் ப்ளானை" இல்லாமல் பண்ணீட்டாங்க. அதேபோல் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கு. க்ரீஸ்ல உள்ளவங்களுக்கு மட்டும் ஏன் இது புரிய மாட்டேன்கிதுனு தெரியலை. :)

-----------------------------------

ஆமா, உங்களை மாரி பொறுப்பா நல்ல தமிழில் ஒரு அழகான அனுபவப் பதிவு எழுதினால் ஒரு பயலும் பின்னூட்டம் போட மாட்டேன்கிறான். ஒரு வேளை, உங்க பேங்க் அக்கவுண்ட், ஹவ்ஸ் வால்யூ எல்லாம் எல்லாருக்கும் தெரியுமா என்ன? பொறாமையா? பணக்காரரர் நீங்கனு பழிவாங்குறானுகளா என்ன உங்க பதிவைப் புறக்கணித்து? :)) டேக் இட் ஈஸி ஹியர்! :)

SathyaPriyan said...

//
வருண் said...

இன்னும் சில வருடங்கள் சென்றவுடன், உங்க பதிவை வாசிச்சுப் பார்த்துவிட்டு ப்ரணா மிகவும் சந்தோஷப்படுவான். தமிழ் வாசிக்க சொல்லிக் கொடுத்துடுங்க! :)
//
நன்றி வருண். உண்மையில் அதனால் தான் அவனுக்கு பல சங்கடங்கள். நாங்கள் வீட்டில் விடாமல் தமிழில் தான் உரையாடுகிறோம். இப்படிப்பட்ட குழந்தைகள் குழம்பி விடுவார்கள் அதனால் ஆங்கிலம் சரியாக பேச தாமதமாகும் என்று எல்லோரும் கூறுகிறார்கள்.

எனக்கு அவன் இப்போது தமிழ் கற்றுக் கொள்ளவில்லை என்றால் பின் எப்போதும் கற்றுக் கொள்ள இயலாது என்பதால் அவ்வாறு செய்ய ஒப்புதல் இல்லை.

//
ஒரு வேளை, உங்க பேங்க் அக்கவுண்ட், ஹவ்ஸ் வால்யூ எல்லாம் எல்லாருக்கும் தெரியுமா என்ன? பொறாமையா? பணக்காரரர் நீங்கனு பழிவாங்குறானுகளா என்ன உங்க பதிவைப் புறக்கணித்து? :))
//
என்னங்க இப்படி கிளம்பிட்டீங்க? :-))

நானும் பல பதிவுகளை படித்தாலும் நேரம் காரணமாக என்னாலும் பின்னூட்டம் இட இயலவில்லை. அதனால் கூட இருக்கலாம்.