Tuesday, August 15, 2006


பிரதாப முதலியார் சரித்திரம் - ஒரு பார்வை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது (நன்றி : http://www.tamil.net/projectmadurai/) தமிழின் முதல் நவீனம் அல்லவா அது. எந்த விஷயத்திலுமே முதல் முயற்சி என்பது பாராட்டப் படவேண்டியதே ஆகும். அந்த வகையில் இதை படித்த உடன் இதை பற்றிய எனது கருத்துக்களை எழுத முடிவு செய்தேன்.

இந்த நவீனத்தில் முதலில் என்னை கவர்ந்தது இதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளே. இதில் உள்ள பல துணுக்குகள் தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக இடம் பெற்றிருக்கின்றன. கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரின் பல சிறந்த நகைச்சுவைகள் இந்த நவீனத்திலிருந்தே சுடப்பட்டிருக்கின்றன (வாழைப்பழ காமெடி இதில் இல்லை:-)). முன்னரே பல முறை பார்த்து, கேட்டு ரசித்து விட்ட காரனத்தினாலோ என்னவோ இப்பொழுது இதை படிக்கும் போது சிரிப்புணர்ச்சி அதிகம் வரவில்லை. ஆனாலும் அக்காலத்தில் இதை அனைவரும் வியந்து ரசித்திருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

உதாரணத்திற்கு, கண்களை மூடிக்கொண்டு மணலை கண்களில் போட்டுக்கொள்வது, போர்க்களத்தில் எதிரியின் தலையை கொய்யாமல் காலை கொய்ததற்கான காரனமாக அவன் முன்னரே இறந்து விட்ட செய்தியை கூறுவது போன்றவற்றை குறிப்பிடலாம்.

திரைப்படத்தில் இடம் பெறாத நல்ல நகைச்சுவைகளும் பல இதில் உள்ளன. குறிப்பாக, கனகசபை உட்பட நால்வரின் திருமணத்தின் போது ஒருவருக்கு தாலி எடுத்துக் கொடுக்க மறந்து விட்ட புரோகிதர், பின்னர் அதை தெரிந்து கொண்டு இரவு மணப்பெண்கள் தூங்கும் அரைக்கு வந்து தாலி இல்லாத ஒரு பெண்ணிற்கு தாலி கட்டி விட முயற்சிக்கும் செயல் நல்ல தமாஷ்.


இதில் அடுத்ததாக என்னை கவர்ந்தது, பல இடங்களில் மிக நல்ல கருத்துக்களை ஆங்காங்கே கதைகள் மற்றும் பல கதா பாத்திரங்களின் வாயிலாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது.


உதாரணத்திற்கு, கல்வி செல்வம் படைத்தவருக்கு தேவை இல்லை என்று பிரதாப முதலியார் குறிப்பிடும் பொழுது, அவரது அண்ணை, கல்வியின் சிறப்பை அழகாக விளக்குகிறார். பிரதாப முதலியார் கல்வி கற்று முடித்த உடன், அவரது ஆசிரியர், "ஏட்டுக்கல்வி தான் முடிந்ததே அன்றி கல்வி முடியவில்லை. பள்ளியில் கற்பது வெறும் அஸ்திவாரமே. அனுபவக்கல்வியாகிய கட்டடத்தை இதன் மீது நீ கட்டவில்லை என்றால் அஸ்திவாரத்திற்கு பலனே இல்லை." என்று அழகாக கூறுகிறார்.


மேலும் பெண்களை உயர் பண்புள்ள கதாபாத்திரங்களாக உலவ விட்டிருக்கிறார். பிரதாப முதலியாரின் தாயார் மற்றும், அவரது மனைவி ஞானாம்பாள் இருவரின் உயர் பண்புகளும் பல இடங்களில் தெரிகின்றன.


உதாரணத்திற்கு வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்யலாம் என்ற பிரதாப முதலியாரின் யோசனையை நிராகரித்து, ஞானாம்பாள் சொல்லும் பதில். அழகாக இருக்கிறது.

மற்றொரு பொழுதில் தங்களது கணவன்மார்கள் அனைவருக்கும் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டு அவர்களின் மனைவியர் அழுது புலம்ப, பிரதாப முதலியாரின் தாயார் மட்டும் சிந்தித்து செயல் பட்டு அவர்களை அந்த இக்கட்டிலிருந்து மீட்டெடுக்கிறார்.

தையற்காரனிடன் ஒரு ரூபாய் திருடி அகப்பட்டு கொண்ட திருடன் தனது பக்க நியாயத்தை தேவராஜ பிள்ளையிடம் அழகாக விளக்குகிறான். தான் ஒரு ரூபாய் திருடியதற்கு தண்டனை என்றால், அரசர்கள் பலரும் பல நாடுகளுக்கு படை எடுத்து சென்று அங்கே கொள்ளையடிக்கின்றனரே அதற்கு என்ன தண்டனை என்று கேட்கிறான்.

மேலும் தான் கடன் வாங்கிய சொற்ப பணத்தை திருப்பி தர இயலாத நிலையில் வழக்கை சந்திக்கும் ஒரு கடனாளி, "வறுமையின் காரனமாக சொற்ப பணத்தை திருப்பி தராத எனக்கு கடும் தண்டனை என்றால், வங்கிகளில் பல ஆயிரம் கடன் வாங்கி திருப்பி தராதவர்களுக்கு என்ன தண்டனை?", என்று வினவுகிறான்.

இதை படிக்கும் பொழுது ஆச்சரியமாக இருந்த மற்றொரு விஷயம்,


1. லஞ்ச ஊழல்

2. பொய் சாட்சியம் உரைத்தல்

3. பொய் சான்றிதழ் அளித்தல்

4. பிறர் மனைவியை பெண்டாடுதல்

5. அரசாங்க சொத்தை அபகரித்தல்


போன்ற பல குற்றங்களை அக்காலத்திலும் அரசு பதவியில் இருந்தோர் செய்து வந்தனர் என்று ஒருவர் குறிப்பிடுகிறார்.


நம்மில் பலர் ஏதோ சுதந்திரம் கிடைத்த பின்னர் தான் இதெல்லாம் தலை தூக்க ஆரம்பித்தது என்றும், பிரிட்டிஷார் ஆண்டிருந்தால் இந்த தேசம் நன்றாக இருந்திருக்கும் என்றும் நினைத்துக் கொண்டிருக்க, அவர்கள் ஆட்சியிலும் அரசியல் மற்றும் சமூக சீர்கேடுகள் பல இருந்தன என்பது தெளிவாகிறது.

வேட்டைக்கு சென்ற கணவனை தேடிச் சென்ற ஞானாம்பாள் தற்செயலாக ஒரு நாட்டின் அரசியாகி விட, அதை அவள் மறுத்தளிக்கும் காரனம் அழகாக சொல்லப்பட்டிருக்கின்றது.

இராஜ்ய பாரம் எத்தகையது என்றும், அரசனானவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் அழகாக அவள் குறிப்பிடுகிறாள். பிற ஸ்த்ரிகள் காணாத மார்புடையவனாகவும், எதிரிகள் காணாத முதுகுடையவனாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

அதே போன்று, வக்கீல்கள் தமக்கு வரும் வழக்குகளை எவ்வாறு ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் தமிழிலேயே வழக்கு விசாரனையின் போது பேச வேண்டிய அவசியத்தையும் அழகாக விளக்குகிறார்.

இவ்வாறு பாராட்டத்தக்க விஷயங்கள் பல இருக்கும் இந்த நவீனத்தில் என்னை முகம் சுளிக்க வைத்த சிலவற்றை பார்ப்போம்.


இந்த நவீனத்தில் அக்காலத்து வாழ்க்கை முறை தெளிவாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அக்காலத்தில் இருந்த குல ஏற்றத்தாழ்வுகள்.


உதாரணத்திற்கு, பிரதாப முதலியார் நகைச்சுவையாக இவ்வாறு குறிப்பிடுகிறார். "எல்லோருக்கும் மரியாதை தர வேண்டும் என்று என் தாயார் குறிப்பிட்டதால் நான் என் வீட்டிற்கு வரும் வண்ணானுக்கும் தோட்டிக்கும் கூட மரியாதை குடுத்தேன்". மேலும் பிரதாப முதலியாரின் தந்தையும், சம்பந்தி முதலியாரும் சண்டை போடும் பொழுது, "நீ வண்ணான் பரம்பரை அல்லவா?" என்றும், "நீ அம்பட்டன் பரம்பரை அல்லவா?" என்றும் திட்டிக் கொள்கிறார்கள்.


அதாவது முடிதிருத்தும் தொழிலோ அல்லது துணி துவைக்கும் தொழிலோ செய்வதே பாவம் என்றும், அவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் நகைப்புக் குறிய செயலென்றும் குறிப்பிடுகிறார்.


மேலும் ஆங்காங்கே அக்காலத்தில் இருந்த பெண்ணடிமைத்தனம் நன்றாகவே தெரிகிறது. உதாரணத்திற்கு, பிரதாப முதலியார், தனது மனைவியான ஞானாம்பாளிடம் பெண்களை உயர்த்தி பேசும் பொழுது, "இந்நாட்டில் தனது கணவர் இறந்த உடன் தானும் உடன்கட்டை ஏறிய பதிவிரதைகள் பலர் உள்ளனர்." என்கிறார். மேலும் பொல்லாத கணவன் , மனைவி பற்றி அவர்கள் பேசும் பொழுது, பொல்லாத கணவனை (விபச்சாரிகளிடன் சென்ற கணவனை) பொருமை காட்டி மனைவி திருத்தினாள் என்றும், பொல்லாத மனைவியை (பிடிவாத குணம் உள்ள மனைவியை) பிறம்பால் அடித்து கணவன் திருத்தினான் என்றும் கூறுகிறார்.


இதில், ஒழுக்கம் இல்லாத கணவனை திருத்த மனைவிக்கு வழியாக கூறியது பொருமை, ஆனால் பிடிவாத குணம் கொண்ட மனைவியை திருத்த கணவனுக்கு வழியாக கூறியது தண்ட உபாயம். மேலும் உடன்கட்டை ஏறியவர்களே பதிவிரதைகள் என்ற சான்றிதழ் வேறு.

அதே போன்று, புலி துரத்திக் கொண்டு வரும் பொழுது தங்களுடைய மனைவிகளை விட்டு விட்டு ஓடி ஒளிந்த கணவர்களை பார்த்து அவர்களது மனைவியர் ஓடிய பொழுது அவர்களது கால்களில் முட்கள் குத்தி இருக்குமே என்று கவலை கொள்கிறார்கள்.

பிரதாப முதலியாரின் தாயார் அவரது கணவரையும், பிரதாப முதலியாரையும் மற்றும் பலரையும் ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றிய உடன் அவரை பாராட்ட பலர் வருகிறார்கள். அவ்வாறு வந்தவர்களில் அநேகம் பேர் பிற புருஷர்கள் ஆகையால் அவர்களை பிரதாப முதலியாரின் தாயாரை பார்க்க அனுமதிக்கவில்லை.


அதாவது உறவினர்கள் அல்லாத வேற்று ஆண்கள் தம் வீட்டு பெண்களை பார்க்க கூட அனுமதி இல்லை என்ற நிலைதான் அக்காலத்தில் இருந்தது.


இதன் உச்ச கட்டமாக கலாச்சார சீரழிவு என்று ஒரு உதாரணம் குறிப்பிடுகிறார். அது என்னவென்றால், ஒரு ஆண் பிற புருஷர்கள் பங்கு கொள்ளும் பல விசேஷங்களுக்கு தன்னுடைய மனைவியை கூட்டி செல்கிறான். இதனால் அவன் கெட்டு சீரழிந்தான் என்று கூறுகிறார்.


இதை எல்லாம் பார்க்கும் பொழுது தீண்டாமையும், பெண்ணடிமையும் அக்காலத்தில் (1850 களில்) படித்த மக்களிடையே கூட தலை விரித்து ஆடியது என்பது தெளிவாகிறது.

ஆனாலும் இத்தகைய முகம் சுளிக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் கருத்தாக கொள்ளாமல் அக்காலத்து வாழ்க்கை முறை இவ்வாறு தான் இருந்தது என்பதை உணர்ந்து பார்க்கும் பொழுது இது ஒரு நல்ல நவீனம் என்று கூறலாம். தமிழ் இலக்கிய உலகில் இது முதல் நவீனம் என்ற ஒரு உண்மையை சேர்த்து பார்த்தோமானால், இது ஒரு சிறந்த படைப்பு, அனைவரும் அவசியம் படித்து மகிழ வேண்டிய ஒரு படைப்பு.

9 Comments:

Sivabalan said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Syam said...

நானும் இந்த நாவல் பத்தி கேள்விபட்டு இருக்கேன்...இவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்து பார்த்தது கூட இல்லை...நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்....

SathyaPriyan said...

வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

Unknown said...

intha kathai nan net le irunthu download seithu padithu vitten. Pala kruthukkalai ore kathaiyil solli irukkirar. Paravai illai. book publish aana kalathil ithu periya vishayam. Nantraka irunthathu

SathyaPriyan said...

நன்றி raams.

தருமி said...

"அந்தக் காலத்தில்" படித்து மிக ரசித்தது. அப்போதைய வயதில், நீங்கள் சொல்லும் விஷயங்களை விடவும் நகைச்சுவையே மேலோங்கித் தெரிந்தது; புரிந்தது.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தருமி ஐயா.

Geetha Sambasivam said...

puthagathai nalla anupavichu padichu vimarisanam seythirukinga. nanri.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கீதா மேடம். இதுவும் ஒரு பழைய பதிவு. இன்று பல பழைய பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வருகின்றன. :-)