Friday, October 17, 2008


அமெரிக்காவை தொடர்ந்து அடுத்தது இந்தியாவா?

அமெரிக்க நிதி நிறுவனங்களை சுனாமியாய் தாக்கி வரும் இந்த பொருளாதார நெருக்கடியின் மூலமான Housing Crisis அடுத்து இந்தியாவில் வரும் என்றே இந்தியாவில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் பலரும் எதிர் பார்க்கின்றனர். நண்பர்கள், உறவினர்கள் யாரிடம் சமீப காலமாக பேசினாலும் இதனை பற்றிய விவாதம் எழுந்து விடுகிறது.

அதற்கு வலு சேர்க்கும் விதமாய் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் செலவுகளுடன் சேர்த்து ஆட்களையும் குறைக்க தொடங்கியுள்ளனர். அதனால் பலரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Wall Street ஆட்டம் கண்டதால் மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீட்டுக்கட்டு மாளிகையில் ஒரு சீட்டை சிறிது அசைத்தால் மொத்த மாளிகையும் தொடர்ந்து பொல பொலவென்று விழுவது போல அங்கங்கே chain reactions நடக்க தொடங்கியுள்ளன.

நான் ஒரு பொருளாதார நிபுணன் கிடையாது என்றாலும் இதனை பற்றிய எனது கருத்துக்களை சொல்லலாம் என்பதினாலேயே இந்தப் பதிவு. அமெரிக்க நிலைமையையும் இந்திய நிலைமையையும் ஒவ்வொன்றாக கீழே ஒப்பிட்டுளேன். ஏதேனும் தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

Sub-Prime Crisis என்றால் என்ன என்று உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு எளிமையாக சொன்னால் கடனை திருப்பி கொடுக்கவே முடியாது என்ற நிலையில் உள்ளவர்களுக்கு கூட வீட்டு விலை பல மடங்கு ஏறிவிடும் என்று ஆசை வார்த்தை காட்டி அவர்களுக்கு கடன் கொடுப்பதே அது.

முதலில் அமெரிக்காவில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். 1997 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்தே அப்போதைய அதிபர் கிளிண்டனிடமிருந்து FannieMae மற்றும் FreddieMac நிறுவனங்களுக்கும் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. Sub-Prime கடன்களுக்கு வித்திட்டவர் அவர் தான்.

நிதி நிறுவனங்கள் முதலில் இதற்கு மறுத்தாலும், பின்னர் வீட்டின் விலை பல மடங்கு ஏறுவதால் கடனை திருப்பி கொடுக்க முடியாவிட்டாலும் வீட்டினை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கடனை கொடுக்க தொடங்கின. 0% down payment கொடுத்து, நிரந்தர வருமானமோ, இல்லை சேமிப்போ எதுவுமே இல்லாதவர்கள் கூட வீடு வாங்கலாம் என்ற நிலை வந்தது. அவர்கள் மாதம் கட்ட வேண்டிய பணத்தினை குறைக்க 5/1 Arm, 7/1 Arm, Interest Only போன்ற கடன்கள் கொடுக்கப்பட்டன.

வீட்டுக் கடன்களை வசூலிக்க 20 - 30 ஆண்டுகள் ஆகும் என்பதால் பலருக்கும் கடன் கொடுத்து தங்களிடம் உள்ள பணம் பெருமளவில் குறைந்து விட்ட நேரத்தில் புதிதாக வாங்குபவர்களுக்கு பணத்தினை கொடுக்க முடியாத நிலையில் இருந்த வங்கிகள் Lehman Brothers போன்ற நிறுவனங்களை நாடின.

Lehman Brothers போன்ற நிறுவனங்கள் அவர்களிடமிருந்து கடன்களை வாங்கி அதனை சிறு சிறு CDO க்களாக மாற்றி பல வளரும் நாடுகளில் முதலீடு செய்தன. பணத்தின் மீதுள்ள ஆசையினால் AIG போன்ற insurance நிறுவனங்கள் அதனை insure செய்தன.

அதனுடன் மட்டுமே விட்டிருந்தால் கூட பரவாயில்லை. புதிதாக வீடு வாங்குபவர்களை மட்டுமே நம்பினால் சந்தை பெரிதாகாது என்ற எண்ணத்தில் முன்னரே வீடு வாங்கியவர்களுக்கும் அவர்களின் வீட்டின் மதிப்பின் படி கடன்கள் கொடுக்கப்பட்டன. அதாவது ஒருவர் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஒரு வீட்டினை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு ஆண்டுகளில் அவரது வீட்டின் மதிப்பு நான்கு லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து விட்டதென்றால் அவருக்கு மேலும் இரண்டு லட்சம் டாலர்கள் கடனாக கொடுக்கப்பட்டன. இதற்கு பெயர் Home Equity Loan.

இதனால் பலரும் வீட்டின் மதிப்பில் 100 சதவிகிதமோ அல்லது குறைந்த பட்சம் 80 சதவிகிதமோ கடன் வைத்திருப்பவர்களாக ஆனார்கள்.

இது எல்லாமே ஒழுங்காக நடந்திருக்கும் முறையாக திருப்பிக் கொடுக்கும் மக்களுக்கு மட்டுமே கடன் கொடுத்திருந்தால்.

ஆனால் sub-prime கடன்களினால், 5/1 Arm, 7/1 Arm, Interest Only போன்ற கடன்கள் reset ஆக மாதம் கட்ட வேண்டிய பணம் உயர்ந்து பலரும் bankruptcy file செய்து வீட்டின் சாவியினை வங்கியிடம் கொடுத்துவிட்டார்கள். ஆரம்பித்தது ஆப்பு. Supply அதிகமானது, demand குறைந்தது. வீடுகளின் விலையும் குறைந்தது.

சரி இதுவே இந்தியாவில் எப்படி என்று பார்க்கலாம். இந்தியாவில் முதலில் 0% down payment என்ற கடன் முறையே கிடையாது. வீட்டின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே கடனாக கொடுக்கப்படும். மேலும் ஆளுக்கு தகுந்த வட்டி விகிதம் எல்லாம் கிடையாது. அனைவருக்கும் ஒரே வட்டி விகிதம் மட்டுமே. கடன் கொடுப்பவர் தங்கள் நலனுக்காக வட்டியை கூட்டியோ குறைத்தோ கொடுக்க முடியாது.

கடன் வாங்குபவர்களுக்கு நிரந்தர வேலை அவசியம். அப்படி இல்லையென்றால் வேறு சொத்துக்கள் இருக்க வேண்டும். வட்டி விகிதம் அமெரிக்காவை விட பல மடங்கு அதிகம். Interest Only, Arm Loans இதெல்லாம் கிடையவே கிடையாது. மேலும் bankruptcy file செய்வதெல்லாம் இந்தியாவில் எளிதும் கிடையாது. கடனை திருப்பி கொடுக்காவிட்டால் வீட்டிற்கு குண்டர்கள் வருவார்கள்.

இந்த Home Equity என்பதும் இந்தியாவில் கிடையவே கிடையாது. 10 லட்சம் மதிப்புள்ள வீடு 20 லட்சம் ஆனாலும் யாரும் புதிதாக 10 லட்சம் கடன் வாங்கப் போவதில்லை. அப்படியே கடன் வாங்க முற்பட்டாலும் அவர்களுக்கு திருப்பி செலுத்தும் திறன் இருக்கிறதா என்பதை கொண்டே வங்கிகள் கடன் கொடுக்கும்.

அடுத்த கட்டமாக இந்தியாவில் நகரத்தில் உள்ள நிலங்கள் குறைவு, மக்கள் தொகை அதிகம். மக்களுக்கு வசிக்க வீடு தேவை. அதனால் அவ்வளவு எளிதாக தேவைக்கு அதிகமான வீடுகள் எல்லாம் விற்பனைக்கு வராது. அப்படியே excess supply ஏற்பட்டாலும் பெரிய Real Estate முதலைகள் அனைத்து புதிய வீடுகளையும் வாங்கி வைத்து விற்காமல் Virtual Demand Hiking என்ற சூது விளையாட்டை செய்ய முடியும்.

மேலும் இந்தியாவில் "Real Estate is driven by Black Money". வேளச்சேரியில் இரண்டு கோடி ரூபாய் விற்கும் ஒரு மூன்று பெட்ரூம் அபார்ட்மென்ட் விற்பனையாளரிடம் சென்று கேட்டால், NRI க்கள் வாங்குகிறார்கள் என்றும், IT மக்கள் வாங்குகிறார்கள் என்று கூறுவார்கள்.

ஆனால் இது இரண்டாகவும் இருக்கும் எனக்கு தெரியும் மாத சம்பளம் வாங்கும் எவ்வளவு மக்களால் அதனை வாங்க முடியும் என்று. உண்மையில் அதனை வாங்குபவர்கள் சினிமாக் காரர்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், இவர்களின் பினாமிகள். இவர்கள் Return on Investment இற்காக இந்த வீடுகளை வாங்குவதில்லை. அவர்களின் நோக்கமே வேறு. மேலும் அவர்கள் கடன் வாங்கி வீடுகளை வாங்குவதும் இல்லை.

அதனால் வீட்டின் விலை குறைந்தாலும் வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. அதனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால் வீட்டின் விலை பல மடங்கு இந்தியாவில் இறங்கும் என்பதெல்லாம் உண்மை இல்லை. ஒரு சில இடங்களில் ஒரு சில சதவிகிதம் இறங்கலாம். பலர் வேலை வாய்ப்பை இழந்தால் வாடகை பெருமளவில் குறையலாம். மற்றபடி அமெரிக்கா சந்திக்கும் பொருளாதார வீழ்ச்சியினை போல ஒன்றை இந்தியாவும் சந்திக்கும் என்பது ஒரு மாயத் தோற்றமே.

12 Comments:

வெட்டிப்பயல் said...

நீங்க சொல்றது சரி தான்...

பெருமளவில் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டால் தான் இந்தியாவில் மாற்றம் ஏற்படும். மத்தபடி பெரிய வித்தியாசமிருக்கும் என்று தோன்றவில்லை.

ஒரு ரெண்டு வருஷம் ரெசஷன் தொடர்ந்தால் ஓரளவு வாடகை குறையலாம்.

Veera said...

//நண்பர்கள், உறவினர்கள் யாரிடம் சமீப காலமாக பேசினாலும் இதனை பற்றிய விவாதம் எழுந்து விடுகிறது.//

உண்மை. பேச்சு எங்கு ஆரம்பித்தாலும், முடிவது பங்குச்சந்தை நி(க)லவரத்தில்தான். இந்தியாவிலும் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பை இப்போதே நிறைய பார்க்க முடிகிறது.

இந்தியாவில் பூதம் வெளியே வர நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றே எனக்குப் படுகிற்து.

nagai said...

சரிஆன கனிப்பு

புருனோ Bruno said...

தெளிவான விளக்கங்கள்.

விடு விலை குறையாது
ஆனால் சென்னையில் வாடகை வீழ்ச்சி வரும் என்று நினைக்கிறேன்

சிறில் அலெக்ஸ் said...

விலை ஏற்ற விகிதம் குறையுமே தவிர இருக்கும் மதிப்பு குறையாது என்று நினைக்கிறேன். நல்ல அலசல்

யோசிப்பவர் said...

சத்யப்பிரியன்,
//ஆளுக்கு தகுந்த வட்டி விகிதம் எல்லாம் கிடையாது. அனைவருக்கும் ஒரே வட்டி விகிதம் மட்டுமே. கடன் கொடுப்பவர் தங்கள் நலனுக்காக வட்டியை கூட்டியோ குறைத்தோ கொடுக்க முடியாது.
//
இந்தியாவில் ஆளுக்கு தக்க வட்டிவிகிதம் உண்டு.

//இந்த Home Equity என்பதும் இந்தியாவில் கிடையவே கிடையாது.//
இந்த Home Equityயும் இந்தியாவில் உண்டு. இந்திய கடன் கொடுக்கும் நிறுவனங்கள் சிலவற்றுடன் எங்கள் நிறுவனத்துக்கு தொடர்புள்ள காரணத்தால், எனக்கு இது உறுதிபடத் தெரியும்.

SathyaPriyan said...

முதலில் யோசிப்பவருக்கு பதில் சொல்லி விடுகிறேன்.

//
யோசிப்பவர் said...
இந்தியாவில் ஆளுக்கு தக்க வட்டிவிகிதம் உண்டு.
//
யோசிப்பவர் இந்தியாவில் ICICI வங்கி Infosys நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கும். அது போல பல இருக்கும். இதெல்லாம் corporate discounted loan plans.

ஆனால் ICICI வங்கியில் வங்கியில் வேலை செய்யும் தனி ஒருவர் நினைத்தால் உங்களுக்கோ எனக்கோ கம்மி விகிதத்தில் கடன் கொடுக்க முடியாது.

மேலும் இங்கே எந்த ஒரு வட்டியையும் பணம் கொடுத்து வாங்க முடியும். அதற்கு பெயர் Discount Points. அதாவது இன்று எனக்கு முறையாக 7% வட்டி என்று வைத்துக் கொள்வோம், நான் 10000$ கொடுத்தால் அது 5% ஆகும். இது ஒரு உதாரணம் மட்டுமே. இதையும் எனக்கு பதிலாக வீட்டினை விற்பவரோ அல்லது Real Estate Agent ஓ கொடுத்து விடுவார்கள்.

இதெல்லாம் இந்தியாவில் கிடையவே கிடையாது என்றே நான் நினைக்கிறேன். தவறாக இருந்தால் சொல்லுங்கள்.

//
இந்த Home Equityயும் இந்தியாவில் உண்டு. இந்திய கடன் கொடுக்கும் நிறுவனங்கள் சிலவற்றுடன் எங்கள் நிறுவனத்துக்கு தொடர்புள்ள காரணத்தால், எனக்கு இது உறுதிபடத் தெரியும்.
//
இது எனக்கு புதிய செய்தி.

ஆனாலும் நான் முன்னரே குறிப்பிட்ட வகையில் இங்கு Home Equity எடுத்து பெரிய கார் போன்றவற்றை வாங்குவார்கள். ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஒரு பெரிய கார் வாங்கி 30 ஆண்டுகளில் அடைப்பதும் ஒன்று தான் முப்பதாயிரம் டாலர்களுக்கு ஒரு ஹோன்டாவோ இல்லை டொயாடாவோ வாங்கி ஐந்து ஆண்டுகளில் அடைப்பதும் ஒன்றுதான் இல்லையா?

இந்தியாவில் அதிக கடன் வாங்கினாலும் அதெல்லாம் செய்ய மாட்டார்கள். ஏதேனும் தொழில் தொடங்கவோ இல்லை அவசர தேவைக்கோ தான் செலவு செய்வார்கள்.

SathyaPriyan said...

//
வெட்டிப்பயல் said...
நீங்க சொல்றது சரி தான்...

பெருமளவில் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டால் தான் இந்தியாவில் மாற்றம் ஏற்படும். மத்தபடி பெரிய வித்தியாசமிருக்கும் என்று தோன்றவில்லை.

ஒரு ரெண்டு வருஷம் ரெசஷன் தொடர்ந்தால் ஓரளவு வாடகை குறையலாம்.
//
ஆமாம் அப்படித் தான் நடக்கும் என்று நான் நினைக்கிறேன்.

//
வீரசுந்தர் said...
உண்மை. பேச்சு எங்கு ஆரம்பித்தாலும், முடிவது பங்குச்சந்தை நி(க)லவரத்தில்தான்.
//
:-)

//
இந்தியாவிலும் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பை இப்போதே நிறைய பார்க்க முடிகிறது.
//
நிச்சயம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் வீட்டின் விலை இறங்காது என்பதே எனது நம்பிக்கை.

//
இந்தியாவில் பூதம் வெளியே வர நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றே எனக்குப் படுகிற்து.
//
பார்க்கலாம். இந்தியாவில் உள் கட்டமைப்பு பணிகள், e-Governance என்று எவ்வளவோ வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் உள்ள Foreign Reserves அனைத்தயும் இன்னும் சில ஆண்டுகளில் அதில் முதலீடு செய்யலாம். வேலை வாய்ப்புகளை பெருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் சரியான அரசு அமைய வேண்டும்.

SathyaPriyan said...

//
vipoosh said...
சரிஆன கனிப்பு
//
நன்றி vipoosh.

//
புருனோ Bruno said...
தெளிவான விளக்கங்கள்.
//
மிக்க நன்றி டாக்டர் புருனோ.

//
விடு விலை குறையாது
ஆனால் சென்னையில் வாடகை வீழ்ச்சி வரும் என்று நினைக்கிறேன்
//
அதே தான் நான் நினைப்பதும்.

//
சிறில் அலெக்ஸ் said...
விலை ஏற்ற விகிதம் குறையுமே தவிர இருக்கும் மதிப்பு குறையாது என்று நினைக்கிறேன். நல்ல அலசல்
//
நன்றி சிறில். பார்ப்போம் என்ன நடக்கும் என்று.

கணினி தேசம் said...

தங்கள் பதிவு ஒரு கூகிள் தேடலின் பலனாக கிடைத்தது.

Sub-Prime Crisis- ஐ எளிமையாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

இந்தியா அமெரிக்கா அளவுக்கு கவிழ்ந்து விடாது என்பதில் ஐயம் ஏதுமில்லை!

SathyaPriyan said...

//
கணினி தேசம் said...
தங்கள் பதிவு ஒரு கூகிள் தேடலின் பலனாக கிடைத்தது.

Sub-Prime Crisis- ஐ எளிமையாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

இந்தியா அமெரிக்கா அளவுக்கு கவிழ்ந்து விடாது என்பதில் ஐயம் ஏதுமில்லை!
//
வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கணினி தேசம். தொடர்ந்து வாருங்கள்.

Che Kaliraj said...

சத்யப்பிரியன்,

You are correct, America's economic problem is not nature. this is disnature. all humens are make money without work, so who is paid to them?.