Wednesday, April 04, 2007


மொழியா அறிவு?

நீண்ட நாட்களாகவே இதைப் பற்றிய பதிவொன்று எழுத வேண்டும் என்றிருந்தேன். இன்று தான் கை கூடியது. பல தமிழ் படங்களில் இந்த அபத்தத்தை பார்த்திருப்பீர்கள். நாயகன் கேனயன் போன்று இருப்பான்; நாயகி அவனை அவமானப் படுத்துவாள்; பின்னர் ஒரு பொழுது அவன் ஆங்கிலத்தில் பேச உடனே அவள் அவன் மீது காதல் வசப்படுவாள். அட ராமா! எங்கே சென்று முட்டிக் கொள்வது?


நமது சமூகத்தில் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு கிடைக்கும் மரியாதை தமிழ் பேசுபவர்களுக்கு கிடைப்பதில்லை. பேண்டு சட்டை அணிந்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதை வேட்டி சட்டை அணிந்தவர்களுக்கு கிடைப்பதில்லை. முதலாமவர்களிடம் "எங்க சார் போகனும்? உக்காரதுக்கு இடம் இல்லியே சார். அடுத்த பஸ் நம்மலுது தான். மணிண்ணே! சாருக்கு ஒரு சீட் வைங்கண்ணே. தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டு. போங்க சார் போய் அதுலே வாங்க." என்று கூறும் நடத்துனர்கள் இரண்டாமவர்களிடம் "டிக்கட்டு அஞ்சு அம்பது. காசு இருந்தா மட்டும் ஏறு. பத்து காசு கம்மினாலும் இறக்கி விட்டுடுவேன்." என்று கூறுவதை பல பொழுது கண்டிருக்கிறேன். இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். இத்தனைக்கும் நடத்துனர்களும் கீழ் மட்டத்திலிருந்த வந்தவர்கள் தாம்.

அடித்தட்டு மக்கள் என்று இல்லை. நன்கு படித்த சமூகத்தில் மேல் மட்டத்தில் இருக்கும் மக்கள் கூட தமிழை விட ஆங்கிலத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள்.


ஒரு நண்பர். தமிழர். கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர். அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவரது ஐந்து வயது மகனுக்கு தமிழ் எழுதவோ, படிக்கவோ, பேசவோ, புரிந்து கொள்ளவோ இயலாது. நான் அவரிடம் கேட்டேன், "தமிழ் எழுத படிக்க தெரியவில்லை என்றால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பேசவோ இல்லை பேசுவதை புரிந்து கொள்ளவோ இயலவில்லை என்றால் எனக்கு புரியவில்லையே? நீங்கள் வீட்டில் தமிழில் தானே உரையாடுகிறீர்கள்?". அதற்கு அவர், "இவன் பிறப்பதற்கு முன்னர் அப்படித்தான். ஆனால் இவன் பிறந்த உடன் நாங்கள் தமிழில் பேசுவதை நிறுத்தி விட்டோம்." என்றார். அதற்கு அவர் கூறிய காரணம், "அவனுக்கு தமிழ் தெரிந்தால், நம்மை போன்று ஆங்கிலம் பேசும் போது, எதையும் தமிழில் நினைத்து, பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பேசுவான்" என்றும், "அவனுக்கு தமிழ் தெரியாமல் இருந்தால் எதையும் ஆங்கிலத்திலேயே நினைக்க (Thinking in English) முடியும்" என்றும் குறிப்பிட்டார்.

ஆங்கிலம் தெரியாது என்று கூனிக் குறுகி அவமானத்துடன் சொல்லும் பல தமிழர்களை பார்த்திருக்கிறேன். அதே பொழுது தமிழ் தெரியாது என்று பெருமையாக கூறும் தமிழர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஏன் இப்படி? இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயர்களுக்கு நாம் அடிமையாக இருந்து விட்ட காரணத்தினாலா? நுனி நாக்கு ஆங்கிலம் தான் மரியாதைக்கான கடவுச்சொல் என்றால் நல்ல நடத்தை, ஒழுக்கம், சமூக அக்கறை போன்றவை தேவை இல்லையா?


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றான் பாரதி. அவன் கூறலாம். தமிழ், ஃபிரன்சு, ஆங்கிலம், சமஸ்க்ரிதம் போன்ற பல மொழிகள் அறிந்தவன் அவன். ஆனால் அவனும் கூட தமிழ் மட்டும் போதும் என்று சொல்லவில்லை. "சிந்து நதியின் மிசை நிலவினிலே; சேரநன் நாட்டிளம் பெண்களுடனே; சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து" என்று காதல் செய்யவே சிந்து மொழி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பல மொழிகளை கற்க சொன்னவன் அவன். ஆக தமிழ் மட்டும் போதும் என்றோ, பிற மொழிகளை கற்க வேண்டாம் என்றோ நான் கூறவில்லை. ஆனால் மொழி என்பது எண்ணத்தை பிரதி பலிக்கும் கருவி மட்டுமே. நமது எண்ணத்தை எதிரே இருப்பவர் புறிந்து கொண்டாராயின் அதுவே வெற்றி. "குந்து நைனா" என்றாலும், "உட்காருங்கள் ஐயா" என்றாலும் பொருள் ஒன்று தான். ஒரு மொழியை இலக்கண சுத்தமாக பேச முயலுவதும், பேசுவதும் பாராட்ட தக்க செயலே. ஆனாலும் நம்மால் அது முடியாத பட்சத்தில் தாழ்வு மனப்பாண்மையில் ஊன்றி விடாமல், கண்டபடி உளருவதும் கூட தவறொன்றுமில்லை. அது பல வகையில் நன்மையே தரும்.


அதற்கு ஒரு நல்ல உதாரணம் தான் கீழே உள்ள கடிதம். அது எப்பொழுது, யாருக்கு எழுதப்பட்டது என்பதை பற்றி தெரியவில்லை. ஆனால் இந்த கடிதம் வங்காளத்தில் கண்டறியப்பட்டது. இந்திய இரயில்வே அருங்காட்சியகத்தில் இப்பொழுது இருக்கிறது. இதை எழுதியது ஒரு இரயில் பயணி. அந்தப் பயணி இரயில் நிலையத்தில் மலம் கழிக்க சென்றதை அறியாமல் இரயில் கிளம்பியதை தொடர்ந்து அவர் இரயில்வே உயரதிகாரிக்கு எழுதிய கடிதம். இதை இரயில்வே அதிகாரிகள் "Jackfruit Letter" என்று குறிப்பிடுகிறார்கள்.

Dear Sir,

I am arrive by passenger train at Ahmedpore station, and my belly is too much full of jack fruit. I am therefore went to privy, Just as I doing the nuisance, that guard making whistle blow for train to go off and I am running with lotah in one hand and dhotie in the next hand. I am fall over and expose my shockings to man, females, woman on platform. I am get leaved at Ahmedpore station.

This too much bad, if passenger go to make dung, that dam guard no wait train 5 minutes for him. I am therefore pray your honour to make big fine on that guard for public sake, otherwise I am making big report to papers.

Your faithful servant,
Okhil Ch. Sen

சரி, இந்த கடிதத்தில் என்ன இருக்கிறது?, என்கிறீர்களா? இக்கடிதம் கிடைத்த பிறகு தான் இரயில் பெட்டியில் கழிப்பறையின் அவசியத்தை இரயில்வே அதிகாரிகள் உணர்ந்தார்கள்.கழிப்பறை வரக் காரணமானது இந்த கடிதம் தான். அடிப்படை ஆங்கில இலக்கணப் பிழைகள் பல உள்ள இந்த கடிதம் சாதித்திருக்கும் சாதனையை பாருங்கள். ஆகவே நண்பர்களே! நாம் இனியாவது மொழி அறிவு என்பதை வைத்து ஒரு மனிதனை எடை போடுவதை தவிர்ப்போமா? ஆங்கிலம் தெரிந்தவன் எல்லாம் பண்டிதனும் அல்ல, அது தெரியாதவன் எல்லாம் பாமரனும் அல்ல.

24 Comments:

துளசி கோபால் said...

ஆஹா............ ரொம்ப நாளா மனசுக்குள்ளேயும், வெளியேயும் நான் புலம்புனது இது.
ஆங்கிலம் என்பதை ஒரு மொழின்னு எடுத்துக்காம அறிவுன்னுதான் நம்ம
மக்கள்ஸ் நினைக்கிறாங்க(-:

ஆங்கிலத்துக்கு மட்டுமில்லைங்க. இந்தப் பணத்துக்கும் ஏகப்பட்ட மரியாதை
இருக்கு பார்த்தீங்களா?

'அவுங்க பெரிய பணக்காரங்க'ன்னு அதை ஒரு குவாலிபிகேஷனா ஏத்திச்
சொல்றப்ப எரிச்சலா வரும்.

பட்டுப்புடவைக்கு இருக்கும் மரியாதை, கிழிஞ்சதுணி கட்டுன ஏழைக்கு இருக்கா?

மனுஷனை மனுஷனா எப்பப் பார்ப்பாங்க மனுஷங்க?

Deiva said...

என்னுடைய மகனும் இங்கே பிறந்தவன் தான். ஆனால் அவனுக்கு தமிழ் நன்றாக புரியும். இங்கு நான் கேள்விப்பட்டவை வரை இரு மொழி தெரிந்தவர்கள் அதிக புத்திசாலிகள்

-L-L-D-a-s-u said...

ஆம் சத்யப்பிரியன்.. பலரும் ஆமோதிக்கும் கருத்தை அழகாக கூறியுள்ளீர்கள்.. நீங்கள் கொடுத்துள்ள கடிதம்.. ஏற்கெனவே படித்ததுதான் .. ஆனால் அதன் இலக்கணப்பிழைக்காக..ஆனால் அதன் பின்னால் இருந்த உண்மை இப்போதுதான் தெரியும்.. இந்தியாவிலேயே அழகான கடிதம் அதுதான் .

நீங்கள் இதை சொல்லும்போது என் நெருங்கிய உறவினரின் ஆங்கில காதல் நினைவு வருகிறது ..யாரும் அழகாக, இலக்கண சுத்தமாகப்பேசினால், அவரை மிக நல்லவர் என்றே கூறுவார் ..மகனுக்கு பார்த்த பெண்ணைப் பற்றி கூறும்போது கூட 'அவர் நல்லவராகத் தெரிகிறது . நல்ல ஆங்கிலம்' என்றே கூறினார் .;)

Priya said...

சத்யா, என் எண்ணத்தை பிரதிபலிச்சிருக்கு உங்க எழுத்து..
ஆங்கிலம் நல்லா தெரிஞ்சா பெருமைனு நினைக்கறத கூட பொறுத்துக்கலாம். தமிழ் தெரியலங்கறத பெருமைய நினைக்கறத என்ன சொல்றது?

நம்ம மக்களுக்கு சில விஷயங்கள்ல இருக்கற கருத்த மாத்தவே முடியாது -ஆங்கிலம் தெரிஞ்சாலே அறிவாளி, நல்ல கலரா இருந்தாலே அழகு - இந்த மாதிரி..

Priya said...

/ஆனால் மொழி என்பது எண்ணத்தை பிரதி பலிக்கும் கருவி மட்டுமே. நமது எண்ணத்தை எதிரே இருப்பவர் புறிந்து கொண்டாராயின் அதுவே வெற்றி. //

ஆங்கிலத்துல communication skills ஓரளவு தேவை தான். அதுக்காக அது மட்டும் இருந்தா போதும், அது இல்லனா அவங்க முட்டாள்னு நினைக்கறது தான் ரொம்ப கொடுமை.

என் கிட்ட சில பேர் சொன்ன சில டயலாக்ஸ்:

"அவனுக்கு இங்கிலீஷே ஒழுங்க பேசத் தெரியாதே. அவன் US ல எப்படி வேலை வாங்கினான்?"

"அவளுக்கு பயங்கர communication skills. அதான் காம்பஸ்ல வேலை வாங்கிட்டா"

"அவன் முதல்ல ஒழுங்கா இங்கிலீஷ் பேச கத்துக்கணும். இல்லனா வேலை கிடைக்கறது கஷ்டம் தான்"

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் IT ல வேலை கிடைக்க communication skills secondary தான். இது தெரியாம நிறைய புத்திசாலி மாணவர்கள் கூட inferiority complex ல கஷ்டப் படறாங்க.

Priya said...

//அவனுக்கு தமிழ் தெரியாமல் இருந்தால் எதையும் ஆங்கிலத்திலேயே நினைக்க (Thinking in English) முடியும்//

தாய் மொழில யோசிக்கறதே குற்றம்னு சொல்ற உங்க நண்பர என்ன சொல்றது?? தமிழ் தெரிஞ்சாலும் இங்க பொறந்து வளர்ற பையனுக்கு எப்படி ஆங்கிலத்துல யோசிக்க முடியாம போகும்னு கூட அவர் யோசிக்கலயே. Obsessed with English. வேற என்ன சொல்றது?

Adiya said...

ரொம்ப சரி சத்தியன்..

போன வாரம் எனக்கும் என் நன்பனுக்கும் இதை பற்றிய விவதம் நடந்தது.. கணிபொறி, மேலை நாட்டு தாக்கம் தாய் மொழிய பின் தள்ளுகிறது. eg.) Bangalore வாழ் மக்கள், அவர்கள் பேசும் மொழிகள் பலவிதம் என்றாலும் தமிழ்நாட்டு மக்கள் ( சராசரி ) போல குறைந்த பச்ச இலக்கிய நாட்டம் குறைவு .. காரணம் மெட்ரோ கலாசாரம்.

இது ஒரு உதாரனமே..

தமிழ்-பிளாகர் சதவிகிதம் அதிகம் என்பது கொஞ்சம் ஆரொக்கியமான ஒன்ரு..

Floraipuyal said...

//அவனுக்கு தமிழ்/தெலுங்கு/மலையாளம்/இன்னபிற தெரியாமல் இருந்தால் எதையும் ஆங்கிலத்திலேயே நினைக்க (Thinking in English) முடியும்//

இப்படிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். "yuck! I dont speak that language" என்று குழந்தைகள் கூறுவதைக் கேட்டு ஓரிரு நிமிடங்கள் அதிர்நதிருக்கிறேன். ஒரு ஆறுதல் - சில குழந்தைகள் அழகாகத் தாய்மொழியில் பேசுகின்றன. இங்கு தாய்மொழி என்பது தென்னிந்திய மொழிகளை மட்டுமே. மற்றையோரைப் பற்றித் தெரியாது. ஆனால் என்னை மிகவும் வருத்துவது தமிழகத்திலேயே இது போல் மிகப்பலரும் இருப்பது தான். இவர்களில் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் சரியாக வராது. இதை நான் தவறாகச் சொல்லவில்லை. தமிழ் தெரியாதவர்களிடம் ஆங்கிலம் பேசுவது சரி. ஆனால் நன்றாகத் தமிழ் பேசும் நம்மிடமே "I cannot able to undershtand" என்று கூறும் பொழுது இவர்களை ஏன் அறம் வைத்துப்பாடி அழிக்கக்கூடாது என்று தோன்றுகிறது. தமிழகத்தில் பலமுறை பல கடைகளிலும் அலுவகங்களிலும் தமிழில் பேசச்சொல்லி சண்டையிட்டிருக்கிறேன். பலன் தான் இல்லை. என்ன செய்வது.

இலவசக்கொத்தனார் said...

எவ்வளவு மொழிகள் தெரிஞ்சாலும் நல்லதுதான். இந்தப் பதிவைப் பாருங்க.

Floraipuyal said...

பலமொழிகள் தெரிந்திருப்பது நல்லது தான் கொத்தனார். ஆனால் தாய்மொழியைத் தெரியாதது போல் காட்டிக்கொள்வதும் தம் பிள்ளைகளை தாய்மொழி அறியாமல் வளர்ப்பதும் தான் வருந்த வைக்கிறது.

SathyaPriyan said...

//
துளசி கோபால் said...
ஆஹா............ ரொம்ப நாளா மனசுக்குள்ளேயும், வெளியேயும் நான் புலம்புனது இது.
//
வாங்க துளசி மேடம். ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.

//
மனுஷனை மனுஷனா எப்பப் பார்ப்பாங்க மனுஷங்க?
//
அதே கேள்வி தான் எனக்கும். :-(

//
Deiva said...
நான் கேள்விப்பட்டவை வரை இரு மொழி தெரிந்தவர்கள் அதிக புத்திசாலிகள்
//
அது உண்மை இல்லை Deiva. The left side of the Human Brain controls language and the right side controls intelligence. So they are mutually exclusive :-)

//
-L-L-D-a-s-u said...
என் நெருங்கிய உறவினரின் ஆங்கில காதல் நினைவு வருகிறது ..யாரும் அழகாக, இலக்கண சுத்தமாகப்பேசினால், அவரை மிக நல்லவர் என்றே கூறுவார் ..மகனுக்கு பார்த்த பெண்ணைப் பற்றி கூறும்போது கூட 'அவர் நல்லவராகத் தெரிகிறது . நல்ல ஆங்கிலம்' என்றே கூறினார் .;)
//
அவரை போன்ற பலரை நான் பார்த்திருக்கிறேன் -L-L-D-a-s-u.

//
Priya said...
சத்யா, என் எண்ணத்தை பிரதிபலிச்சிருக்கு உங்க எழுத்து..
//
நன்றி.

//
நம்ம மக்களுக்கு சில விஷயங்கள்ல இருக்கற கருத்த மாத்தவே முடியாது -ஆங்கிலம் தெரிஞ்சாலே அறிவாளி, நல்ல கலரா இருந்தாலே அழகு - இந்த மாதிரி..

என் கிட்ட சில பேர் சொன்ன சில டயலாக்ஸ்:

"அவனுக்கு இங்கிலீஷே ஒழுங்க பேசத் தெரியாதே. அவன் US ல எப்படி வேலை வாங்கினான்?"

"அவளுக்கு பயங்கர communication skills. அதான் காம்பஸ்ல வேலை வாங்கிட்டா"

"அவன் முதல்ல ஒழுங்கா இங்கிலீஷ் பேச கத்துக்கணும். இல்லனா வேலை கிடைக்கறது கஷ்டம் தான்"
//
எனக்கு ஏற்பட்டதை போன்று பல அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

//
Obsessed with English. வேற என்ன சொல்றது?
//
உங்கள் கோபத்தை என்னால் புறிந்து கொள்ள முடிகிறது.

//
Adiya said...
தமிழ்-பிளாகர் சதவிகிதம் அதிகம் என்பது கொஞ்சம் ஆரொக்கியமான ஒன்ரு..
//
ஆமாம் Adiya. உங்களது முழு பெயர் என்ன? விமல் மற்றும் விநோத் இருவராலும் உங்களை நினைவு கூற இயலவில்லை.

//
FloraiPuyal said...
இங்கு தாய்மொழி என்பது தென்னிந்திய மொழிகளை மட்டுமே. மற்றையோரைப் பற்றித் தெரியாது.
//
தமிழர்கள் தான் இவ்வாறு அதிகம் இருக்கிறார்கள் FloraiPuyal. ஆண்டு தோரும் நவராத்திரி அன்று தாண்டியா ஆடும் குஜராத்திகளையும், ஓணம் அன்று பூக்கோளம் போடும் மலையாளிகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் தெருவில் பொங்கல் வைக்கும் தமிழர்களை நான் பார்த்ததில்லை. தமது கலாச்சார அடையாளத்தை தொலைப்பதில் மற்ற அனைவரையும் விட தமிழர்கள் முன்னிலையில் உள்ளனர்.

//
இலவசக்கொத்தனார் said...
எவ்வளவு மொழிகள் தெரிஞ்சாலும் நல்லதுதான். இந்தப் பதிவைப் பாருங்க.
//
பார்த்தேன் கொத்ஸ். அந்த பல மொழிகளில் தமது தாய் மொழிக்கு இடம் இல்லை என்றால் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

Machi said...

மொழியா அறிவு ? இல்லை ஆங்கில மொழி அறிந்தவர்கள் அறிவாளிகள். என்ன செய்வது படித்தவர்களே இவ்வாறு எண்ணும் மாபெரும் முட்டாள்களாக இருக்கும் போது படிப்பறிவு குறைவாக உள்ள மக்கள் எப்படி நினைப்பார்கள்?

பெத்த தாயிக்கு சோறு போடாத மக்கள் இருக்கறப்போ தாய் மொழியை சொல்லிக்கொடுக்காத மக்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
என் எண்ணங்களை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது.

நல்ல பதிவு.

SathyaPriyan said...

//
FloraiPuyal said...
பலமொழிகள் தெரிந்திருப்பது நல்லது தான் கொத்தனார். ஆனால் தாய்மொழியைத் தெரியாதது போல் காட்டிக்கொள்வதும் தம் பிள்ளைகளை தாய்மொழி அறியாமல் வளர்ப்பதும் தான் வருந்த வைக்கிறது.
//
அது தான் எனது கருத்தும். Multi-lingual ஆக இருப்பதற்கும் ஒரு தனி திறமை வேண்டும்.

//
குறும்பன் said...
பெத்த தாயிக்கு சோறு போடாத மக்கள் இருக்கறப்போ தாய் மொழியை சொல்லிக்கொடுக்காத மக்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
//
ஆம் குறும்பன். ஆனால் இதனால் தமிழுக்கு கேடு ஒன்றும் வந்துவிடப் போவதில்லை. திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், அக்கால மன்னர்களை பற்றி கூறும் புறநானூற்றுப் பாடல்கள், காதலை கூறும் அகநானூற்றுப் பாடல்கள், ஆழ்வார்கள் நாயன்மார்களின் பேரின்பப் பாசுரங்கள், பாரதியின் கவிதைகள், எத்தனையோ அருமையான நாவல்கள் போன்ற பலவும் உள்ள ஒரு மொழியினை ஒரு தலைமுறைக்கு தெரியாமல் மறைப்பதால் கேடு அம்மொழிக்கு இல்லை. அத்தலைமுறையினருக்கு தான்.

//
என் எண்ணங்களை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது.
நல்ல பதிவு.
//
மிக்க நன்றி.

யாழினி அத்தன் said...

நிறைய நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே. பாராட்டுக்கள்.

தெரிஞ்சோ தெரியாமலோ நாம் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் ஆங்கிலத்திற்கு (ஆங்கிலேயனுக்கு)அடிமைதான். நம் அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்தும் சீப்பு, சோப்பு, கண்ணாடியிலிருந்து அதன் ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கிறது. ஆங்கிலேயன் இந்தியாவுக்கு செய்த பெரிய கெடுதல் (நன்மை) அவன் மொழியை விட்டுச் சென்றதுதான். அவன் பார்வையில் அவன் வ்ருகைக்கு முன் நாம் சட்டை போடாத காட்டுமிராண்டிகளாகத் தான் தெரிந்திருக்கிறோம். அவன் மேல் நம் சார்பு இருக்கும் வரை இந்த அடிமைத்தனத்திலிருந்து விமோசனம் இல்லை. ஒரு பாமரத் தமிழனின் பார்வையில் அவன் ஒரு நாகரீக முன்னோடியாகத் தான் தெரிகிறான். அந்தத் தாழ்வு மனப்பான்மை போக வேண்டுமென்றால் ஜப்பானைப் போன்றோ, இல்லை ஜெர்மனியைப் போன்றோ பொருளாதாரத்தில் சுயசார்பு பெற்ற நாடாக ஆக வேண்டும்.

வெள்ளைக்காரனுக்கு சொல்லிக் கொடுக்க இந்த நவீன காலத்தில் நம் நெஞ்சை மார்தட்டிச் சொல்ல என்ன இருக்கிறது?

சாதிச் சண்டைகள், மொழிச் சண்டைகள், மதச் சண்டைகள் போன்ற பிரச்சினைகள் நம்மிடம் இருந்த ஓரிரு நல்ல தாக்கங்களையும் கீழே அமுத்திவிட்டது. "இந்தியா ஒளிர்கிறது" என்ற கூற்றே நம்முடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு தான்.

ஒரு ஐந்து தமிழர்களால் சாதிகளைத் தாண்டி, அரசியல் தாண்டி, மதங்களைத் தாண்டி, இனங்களைத் தாண்டி தன்னைத் தானே வேறுபடுத்திக் கொள்ளாமல் நல்ல மனித நேயம் உள்ள மனிதர்களாக இருக்க முடியுமா என்று பாருங்கள். அதை நாம் பெற்று விட்டோமென்றால், நீன்கள் சொன்ன மொழியுணர்வு தானாக வந்துவிட்டதாகப் பொருள்.

இது என் சொந்தக் கருத்து மட்டுமே!

Adiya said...

probably they would have forget me :) leave it :) ha ha

SathyaPriyan said...

அருமையான கருத்துக்கள் யாழினி அத்தன். அழகான தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல.

//
Adiya said...
probably they would have forget me :)
//
I don't think so. Actually I tried to explain you to Vimal and I don't have enough information except that your name is Adiya, you are in PA and you are Vinod's classmate.

SathyaPriyan said...

//
இலவசக்கொத்தனார் said...
நீங்களும் வர வேண்டும் என்பது எங்கள் ஆசை.
//
ஆஹா! என்ன நடக்குது இங்கே? ஒருத்தரு நட்சத்திரமா இருக்கியான்னு கேக்கறாரு, நீங்க வலை பதிவர் சந்திப்புக்கு வர முடியுமான்னு கேக்கறீங்க......

சுத்திவர எல்லாரும் குழி தோண்டினா எப்படிப்பு? எந்த குழில நான் விழ? ஒரே குழியா தோண்டுங்க. மூடரதும் ஈஸில்ல.......

அவசியம் வர முயற்சி செய்கிறேன் கொத்ஸ்.

Radha Sriram said...

சத்யன் இப்போதுதான் இந்த பதிவை படிதேன், பல நல்ல கருத்துக்கள் உங்களிடம் இருந்தும், பின்னூட்டங்களிலும்.
நாம் பேசும் மொழியை வைத்தும் மட்டுமா நாம மத்தவங்கள judge பண்ணரோம்.....we are judgemental all the time......we keep judging people with our own preconceived notions....
மொழி மட்டும் இல்ல. நினைச்சு பாருங்க நம்மூருல historyய majorஅ எடுத்து படிச்சவங்களுக்கு என்ன மறியாதை?? முட்டாள்கள்தான் history படிப்பாங்கன்னு ஒரு தீர்மானத்தோடயே பேசுவாங்க எல்லாரும்...ஏன் அவங்களுக்கு அந்த சப்ஜெக்ட் புடிக்ககூடாதா??என்னவோ போங்க.....

Raghavan alias Saravanan M said...

சத்யப்பிரியன்,

நல்லதொரு பதிவு. ஏற்கெனவே எல்லோரும் கூறியுள்ளபடி, மொழியை ஒரு அளவுகோலாக வைத்து மனிதனை எடைபோடுவது மிகவும் வருந்தத்தக்க செயல்.

SathyaPriyan said...

வருகைக்கு நன்றி Radha Sriram மற்றும் Raghs.

Madurai Veeran said...

யாம் படித்த பதிவுகளில் நல்ல பதிவென்று கோரும் வகையில் இருக்கிறது உமது பதிவு.

SathyaPriyan said...

மிக்க நன்றி Madurai Veeran.

Syam said...

இந்த பதிவ எப்படி பாக்காம போனேன்...என்னதான் சொல்லுங்க சத்யா..என்ன பொருத்த வரைக்கும்...முட்டை பரோட்டா, மட்டன் பிரியானி பண்ண தெரிஞ்சவங்கதான் அறிவாளி, அவங்க பெருமை பட்டுக்கலாம்....வேற ஏதாவது கருத்து சொன்னா நம்ம மக்கள் திருந்தவா போறாங்க :-)

SathyaPriyan said...

You missed another as well Syam. I had a special gift for you there.

http://sathyapriyan.blogspot.com/2007/04/blog-post_11.html