Sunday, April 26, 2015


பொடிமாஸ் - 04/26/2015

நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் பீதியை ஏற்படுத்துகிறது. மலை பிரதேசம் என்பதால் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. சுமார் 3000 உயிர்களை இதுவரை பலி வாங்கியுள்ளது. இறந்தவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இதிலிருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.


கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் பரிந்துரைத்த திருநங்கைகளுக்கான தனி உரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இதில் குறிப்பிட வேண்டியது இது ஒரு தனிநபர் மசோதா என்பது தான். சுமார் 45 ஆண்டுகளுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேறிய ஒரு தனி நபர் மசோதா இது தான்.

இந்தியாவில் திருநங்கைகளின் வாழ்வு மிகவும் கவலைக்கிடமாகவே இருக்கிறது. திருநங்கைகளின் முன்னேற்றத் திட்டங்களுக்கு தேசிய அளவிலான கொள்கை உருவாக்கவும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கவும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

திருச்சி சிவா திருச்சியை சேர்ந்தவர் மட்டும் அல்ல, நான் படித்த ஈ. ரெ. மேல்நிலை பள்ளியில் படித்தவர். சென்ற ஆண்டு தான் அவரது துணைவியார் தனது இன்னுயிரை நீத்தார். அந்த நிலையிலும் பொது வாழ்க்கையில் இருந்து விலகாமல் தொடர்ந்து அவர் உழைப்பது எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

சக திருச்சிக்காரனாக மட்டும் அல்ல, சக பள்ளி மாணவனாகவும் அவரது சாதனைக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.


கடந்த முறை இந்தியா சென்ற பொழுது பல நாவல்களை வாங்கி வந்தேன். அவற்றில் ஆறு சுஜாதா நாவல்களும் அடக்கம். அவை அனைத்தும் முன்னரே படித்தது தான் என்றாலும் படித்து நெடு நாட்கள் (இன்னும் சொல்ல போனால் பல வருடங்கள்) ஆகி விட்டதால் வாங்கினேன். அவற்றை படிக்க இப்போதுதான் நேரம் கிடைத்தது. அவரது கொலையுதிர் காலம் அப்போது படிக்கும் போது எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது மிகவும் தட்டையாக இருப்பது போல தோன்றியது. சுத்தமாக பிடிக்கவில்லை. அதே நேரத்தில் வாய்மையே சில சமயம் வெல்லும் அப்போது படிக்கும் போது ஏற்படுத்திய அதே உணர்வுகளை இப்போதும் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். சுஜாதா எப்போதுமே ஒரு புதிர் தான். இன்னும் இரண்டாவது காதல் கதை, பிரிவோம் சந்திப்போம் (2 பாகங்கள்), ஸ்ரீரங்கத்து தேவதைகள் எல்லாம் இருக்கின்றன. விரைவில் படித்துவிட வேண்டும்.


தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வரும் என்பது உறுதியாகி விட்டது. தளபதியா அல்லது கேப்டனா என்பது தான் கேள்வி. கேப்டன் காய் நகர்த்த தொடங்கிவிட்டார். ஒரே நாளில் நேற்று கலைஞர், ஸ்டாலின், இளங்கோவன், வைகோ, வாசன், தமிழிசை சௌந்தர்ராஜன் என்று பல தலைவர்களை சந்தித்து பேசி இருக்கிறார். மேகதாது அணை தொடர்பாகவும், ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பாகவும் பிரதமர் மோதியை சந்திக்க தலைமையேற்று இருக்கிறார். தளபதி முதல்வர் போட்டியில் இருந்தாலும் தமிழக நன்மையை ஒட்டி கனிமொழி மற்றும் திருச்சி சிவா இருவரும் கேப்டன் தலைமையில் செல்வார்கள் என்று உறுதியளித்துள்ளார். இது ஆரோக்கியமான செயலாக தெரிகிறது. நமக்குள் பல கருத்து வேறுபாடு இருந்தாலும் பொது நன்மை என்று வரும் போது நாம் ஒன்று கூடுவது அவசியம். தமிழக அரசியலில் இந்த மாற்றம் மகிழ்ச்சியை தருகிறது.


சென்ற முறை போல் இல்லாமல் இம்முறை CSK அட்டகாசமாக விளையாடி வருகிறது. இப்போது இருக்கும் ஃபார்மில் ப்ளே ஆஃபுக்கு நாம் தகுதி பெறுவது நிச்சயம் என்றே நம்புகிறேன். முரளி விஜய் இல்லாதது சற்று வருத்தம் அளித்தாலும், மெக்கல்லமும், ஸ்மித்தும் அட்டாகாசமாக விளையாடுகிறார்கள். தோனிக்கு வயசாகி விட்டது நன்றாக தெரிகிறது. முன்பு விளையாடியது போல ஷார்ட் பால்களை விளையாட அவரால் முடியவில்லை. ஆனாலும் அவரது விக்கெட் கீப்பிங்கும், தலைமையும் அட்டகாசம். லெக் ஸ்லிப், லெக் கல்லி, ஸில்லி மிட் ஆன் போன்ற இடங்களில் எல்லாம் இப்போது டெஸ்ட் போட்டிகளிலேயே ஆட்களை வைப்பது இல்லை. இவரோ T20 யில் ஆட்களை வைத்து பேட்ஸ்மேனை அவுட் ஆக்குகிறார். பேட்ஸ்மேனின் உடலசைவை வைத்தே அவரது நோக்கத்தை அறியும் இவரது திறமை அட்டகாசம்.

MS is undoubtedly the best captain in today's contemporary cricket.


சமீபத்தில் பார்த்த படங்களிலேயே மிகவும் பிடித்திருந்தது Furious 7. பால் வால்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஜேசன் ஸ்டேதமை கொல்லாமல் விட்டு விட்டதால் அடுத்த பகுதியிலும் அவர்தான் வில்லன் என்பது உறுதியாகி விட்டது. நான்கு வாரங்களில் உலகலவில் $1.32 பில்லியன் டாலர்கள் (சுமார் எட்டாயிரம் கோடி) கலெக்க்ஷன் செய்திருக்கிறது. தற்பொழுது உலகலவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் மூன்றாம் இடத்துக்கு சென்றுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.


சமீபத்தில் பார்த்ததில் என்னை மிகவும் கவர்ந்த வீடியோ. நீங்களும் நிச்சயம் இதனை ரசிப்பீர்கள். பார்த்து ரசியுங்கள்.



4 Comments:

Avargal Unmaigal said...

நீண்ட நாட்களுக்கு அப்புறம் பொடிமாஸ் சாப்பிட தந்தற்கு நன்றி.இதோட நின்றுவிடாமல் பிஸினஸ் சம்பந்தமான் சுவையான நிகழ்வுகளையும் தாருங்கள்..... நீங்கள் எம்பிஏ படிக்கும் போது நிறைய கட்டுரைகள் எழுதி இருப்பீங்க அதையும் தமிழ் ஆக்கம் செய்து எழுதுங்கள்

நண்பா said...

பொடிமாஸ்க்கு நன்றி..

வருண் said...

எல்லாமே புதிய செய்திகள். இந்தியாவுடன் உங்கள் பிணைப்பு அப்படியே இருக்கிறது. சுஜாதா கதையை திரும்பப் படிப்பதுடன்,,கிரிக்கட், திருச்சி சிவா, தமிழ்நாடு அரசியல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருக்கீங்க!

குடியுரிமையை துறந்தாலும் இந்த்இயக் குடிமகனாகத்தான் பலரும் வாழ்றீஙக- அமெரிக்காவில்

எனக்கு..

பேஸ் பால் சீசன், ஸ்டாண்லி கப் ப்ளே ஆஃப், என் பி எ ப்ளே ஆஃப் னு பொழுதைக் கழிக்கிறேன்.. அடுத்த என் எஃப் எல் ஆரம்பிக்கும் வரை. :)

SathyaPriyan said...

//
Avargal Unmaigal said...
பிஸினஸ் சம்பந்தமான் சுவையான நிகழ்வுகளையும் தாருங்கள்..... நீங்கள் எம்பிஏ படிக்கும் போது நிறைய கட்டுரைகள் எழுதி இருப்பீங்க அதையும் தமிழ் ஆக்கம் செய்து எழுதுங்கள்
//
நிச்சயம் எழுதுகிறேன் அண்ணாத்தே.

//
நண்பா said...
பொடிமாஸ்க்கு நன்றி..
//
மிக்க நன்றி சிவா.

//
வருண் said...
குடியுரிமையை துறந்தாலும் இந்த்இயக் குடிமகனாகத்தான் பலரும் வாழ்றீஙக- அமெரிக்காவில்
//
அடுத்த பதிவெழுத நல்ல மேட்டர் ஒன்றை குடுத்து விட்டீர்கள். நன்றி.