Friday, November 18, 2011


பொடிமாஸ் - 11/19/2011

பெட்ரோல் விலை ஏறியது ஏறியது என்று கூவி ஒரு வழியாக நேற்று தான் இறங்கியது. இப்பொழுது பேரூந்து கட்டணமும், பால் விலையும் ஏறி விட்டது. மின்சாரமும் உயரும் என்று சொல்கிறார்கள். விலைவாசி உயர்வை ஒரு நிலைக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அரசு தேவை இல்லாமல் அளிக்கும் மானியங்களை தவிர்த்தாலே போதுமானது. சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சமையல் எரிவாயு நானூறு ரூபாய்க்கு அளிக்கப் படுகிறது. மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவனுக்கு எதற்கு இந்த மானியம்? ஒரு லேத்து பட்டறை வைத்திருபவனுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தின் தொடக்க விலை ஐந்து ரூபாய். மூன்று கோடி ரூபாய் அபார்ட்மென்டில் பத்து டன் ஏசியை நாள் முழுதும் ஓடவிடும் ஒருவனுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தின் தொடக்க விலை ஒரு ரூபாய் பத்து காசுகள். இந்த முட்டாள் தனத்தை நிறுத்துவதை விட்டு விட்டு ஏழைகள் உபயோகிக்கும் பாலிலும், பேரூந்திலும் கை வைக்கிறார்கள். கேட்க நாதி இல்லை.



நவம்பர் 22 ஆம் தேதி மும்பையில் தொடங்கும் இந்தியா - மேற்கு இந்திய அணிகளுக்கிடையே நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் தனது நூறாவது சதத்தை அடித்தால் அவருக்கு நூறு தங்க காசுகள் அளிப்பதாக மும்பை கிரிக்கெட் வாரிய தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் அறிவித்துள்ளார். முன்னரே வங்காள கிரிக்கெட் வாரியமும் கொல்கத்தாவில் கடந்த வாரம் நடந்த போட்டியில் சச்சின் தனது நூறாவது சதத்தை அடித்தால் அவருக்கு நூறு தங்க காசுகள் அளிப்பதாக அறிவித்திருந்தது. மாநில கிரிக்கெட் வாரியம் தனியார் வாரியமா இல்லை அரசு வாரியமா என்று தெரியவில்லை. தனியார் வாரியமாக இருந்தால் இதில் தவறொன்றுமிலை. அரசு வாரியமாக இருந்தால் நமது மக்களை உம்மாச்சி தான் காப்பாற்ற வேண்டும்.



சமீப காலமாக விஜய் டிவியில் வரும் கணா காணும் காலங்கள் - கல்லூரியின் கதை தொடரை விரும்பி பார்த்து வருகிறேன். கல்லூரி நாட்களுக்கு மீண்டும் சென்றது போலவே இருக்கிறது. பாத்திரங்களுக்கு பொருந்துவது போல சரியான நடிகர்/நடிகை களை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் என்ன வழக்கம் போல திடீர் திடீர் என்று சிலர் காணாமல் போய் விடுகிறார்கள். தொடர் தொடங்கும் முன்னரே நடிப்பவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறது இந்தியாவில்.



இந்த வோல்க்ஸ்வேகன் கார்களில் அப்படி என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அமெரிக்க பெண்கள் அனைவரும் ஒன்று வோல்க்ஸ்வேகன் ஜெட்டா வைத்திருக்கிறார்கள் இல்லை வோல்க்ஸ்வேகன் பீட்டில் வைத்திருக்கிறார்கள். எனக்கென்னவோ அது சரியான மொக்கை காராகவே தோன்றுகிறது. ஜெர்மன் கார்களில் படு மொக்கையானது வோல்க்ஸ்வேகன் தான். உரிமையாளர்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள். இது எனது கருத்து.



வெர்ஸடாலிட்டி என்றால் கவிஞர் வாலி தான். "நான் ஆணை இட்டால்", "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்" எழுதிய கைகள் தான் "முக்காலா முக்காபுலா", "ஓ மாரியா", "காதல் வெப்சைட் ஒன்று" போன்ற பாடல்களை எழுதின என்றால் நம்ப முடிகிறதா? இதனை போன்ற பாடல்களுக்கு நடுவே "வைகாசி நிலவே" போன்ற பாடல்களை அவரால் மட்டுமே கொடுக்க முடியும். பொதுவாக ஒரு கால கட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்த தலைமுறையினரால் ரசிக்கப்படுவது கடினம். பாலசந்தர், பாரதி ராஜா போன்றவர்கள் அதற்கு சிறந்த உதாரணம். அவ்வளவு ஏன்? நமது ராஜாவை எடுத்துக் கொள்ளுங்கள். நான் கரடியாக கத்தினாலும் எனக்கு தெரிந்த இன்றைய கல்லூரி மாணவர்கள் ரெஹ்மான் ரெஹ்மான் என்று தான் கூவுகிறார்கள். ராஜாவின் இசை கேட்டால் தூக்கம் தான் வருகிறது என்கிறார்கள். ஆனால் வாலி அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்.



ஹம் ஆப்கே ஹைன் கௌன் படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. படம் பார்த்து விட்டு எனது அண்ணிக்கு ஒரு தங்கை இல்லையே என்று வருந்தி இருக்கிறேன். பல முறை பார்த்து இருக்கிறேன். எவ்வளவு முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவது மாதுரியின் அழகா? படத்தின் கதையா?, திரைக்கதையா?, வசனங்களா?, SPB குரலில் ஒலிக்கும் அருமையான பாடல்களா? தெரியவில்லை. கீழே உள்ள காட்சியை பாருங்கள். சல்மான் மாதுரியிடம் தன் காதலை சொல்லாமல் சொல்லும் காட்சி. உங்களுக்கும் பிடிக்கும்.


2 Comments:

செ. நாகராஜ் - C. Nagaraj said...

HUmaapke hain koun எனக்கும் மிகவும் பிடித்த படம், ஒரு 60 தடவை பார்த்திருப்பேன். 4 வருடம் மும்பையில் இருந்தபோது புது வருடம் துவங்கும் அன்று கட்டாயம் இந்த படம் தான் பார்த்து கொண்டிருந்தேன். நான்கு வருடமாக ஒரே தியேட்டரில் ஓடிய படம்.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நாகராஜ். தொடர்ந்து வாருங்கள்.