Monday, April 21, 2008


ரங்க பவனம் - VIII

இப்படியே ஓராண்டு காலம் ஓடியது. அடுத்த கல்வி ஆண்டின் தொடக்க நாளான முதல் நாள், சௌம்யாவிற்கு Lehman Brothers நிறுவனத்தில் Financial Consultant வேலை கிடைத்தது. ஆண்டு வருமானம் 18 லட்சம் ரூபாய். மும்பையில் வேலை. அன்றிரவே தொலைப்பேசியில் அழைத்து செய்தியை சொன்னாள். "You know I am getting into the corporate finance. Budgetting, Operations Planning etc. etc. etc. It's going to be loads and loads of fun." என்றாள்.

ஆனால் ஏனோ அவள் தனது காதலை ஏற்றுக் கொண்ட போது, தனக்கு வேலை கிடைத்த போது, அவளுக்கு IIM இல் இடம் கிடைத்த போது அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை போல இம்முறை அவனுக்கு ஏற்பட வில்லை. இதை ராமனாதன் எளிதாக புரிந்து கொண்டான்.

"ஏன்டா! அவ thrice that of you சம்பளம் வாங்கப் போறான்னு உனக்கு problem ஆ?" என்று கேட்டே விட்டான்.

"ஏய்! என்ன பத்தி நல்லா தெரிஞ்சு நீயே இப்படி கேக்கலாமாடா? நானும் நீயும் பார்க்காத பணமா? எங்க engineering college லே ஒருத்தருக்கு management seat குடுத்தா 2 லட்சம் கிடைக்கும். அவ 5 வருஷத்துலே சம்பாதிக்கறத நான் ஒரு வருஷ admission லே சம்பாதிச்சுடுவேன். என்னமோ தெரியலே மனசு ஒரு மாதிரி சங்கடமா இருக்கு. காரணம் தெரியலே." என்றான். அவனது தந்தை திருச்சியில் சென்ற ஆண்டு புதிதாக ஒரு பொறியியல் கல்லூரி ஒன்றை துவக்கி இருந்தார். அதை தான் அவன் குறிப்பிட்டான்.

நான்கு மாதங்கள் கழித்து அந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தால் 9 நாட்கள் விடுமுறை வந்தது. அதனால் தீபா, ராமனாதன், பார்கவ் மூவரும் 9 நாட்கள் விடுமுறையை கல்கட்டா சென்று கொண்டாட முடிவு செய்தனர். பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு கல்கட்டா சென்றனர். சௌம்யாவும் முதல் ஆண்டைப் போல இரண்டாம் ஆண்டில் அவ்வளவு busy யாக இல்லை. அதனால் அவளும் அவர்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருந்தாள்.

கல்கட்டா சென்ற உடன் ஒரு பெரிய ஹோட்டலில் அறை வாடகைக்கு எடுத்து தங்கினார்கள். அவர்கள் இருவரும் மட்டும் வந்திருந்தால் ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கி இருப்பார்கள். கூடவே தீபாவும் வந்திருப்பதால் நல்ல ஹோட்டலில் தங்க வேண்டியது அவசியம் ஆனது. முதலில் கல்கட்டா அருங்காட்சியகம் சென்றார்கள். அங்கு தான் சௌம்யா வருவதாக கூறி இருந்தாள். மாலை காளிகாட் காளி கோவில் செல்வதாக திட்டம். சொன்ன நேரத்திற்கு சரியாக வந்திருந்தாள் சௌம்யா. கூடவே அவளது கல்லூரி தோழன் பங்கஜ் ஜங்கம் வந்திருந்தான். மத்திய பிரதேசம், போபாலை சேர்ந்தவன். அறிமுகம் செய்து வைக்கும் போது ராமனாதனையும், பார்கவையும் நண்பர்கள் என்றே அறிமுகம் செய்தாள். திருச்சியில் இருந்த போது இரண்டு மூன்று நாட்கள் இருவரும் சந்திக்காமல் இருந்து பின்னர் சந்தித்தாலே மகிழ்ச்சியில் பூக்கும் சௌம்யாவின் முகம் இப்பொழுது சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பார்கவை சந்திக்கும் போது எந்த விதமான மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த வில்லை. தீபாவை கட்டி அனைத்துக் கொண்டதும் கூட ஒரு விதமான செயற்கையான செயல் போல தோன்றியது இவனுக்கு.

பெங்களூரிலிருந்து கிளம்பும் போது இருந்த உற்சாகம் இப்பொழுது அவனிடம் தொலைந்தது போல் காணப்பட்டது. மாலை கோவிலுக்கு சென்றார்கள். நீண்ட வரிசையில் நின்று காளியை தரிசனம் செய்துவிட்டு வெளி வருவதற்கு 1 மணி நேரம் ஆகி விட்டது. மனதிற்கு சிறிது அமைதியாக இருந்தது. வெளியில் வந்ததும் ராமனாதனின் சட்டைப் பையில் கை விட்டு சிகரெட் பாக்கெட்டை எடுத்து பற்ற வைத்தான். சௌம்யாவின் முன்னால் அவனது இந்த செய்கை ராமனாதனுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. சௌம்யா ஏதாவது சொல்லப் போகிறாளே அன்று பதறியவன் திரும்பி அவளைப் பார்த்தான். அவளோ அதை கண்டு கொள்ளவே இல்லை.

அன்றிரவு உணவை முடித்தார்கள். முடித்த உடன் வந்த சர்வரிடம் "Check please" என்றாள் சௌம்யா. அதைக் கேட்டு ராமனாதன் "என்ன சொன்னே? Check?" என்றான். தீபா உடனே "Bill னு அர்த்தம்." என்று விளக்கினாள். பங்கஜ் அதை புரிந்து கொண்டு மெலிதாக புன்னகைத்தான். பார்கவின் முகம் உடனே ஒரு மாதிரியாக மாறியது. வேறொரு நேரமாக இருந்தால் அவ்வாறு தனது உற்ற நண்பனை நடத்தியதற்கு அங்கு ஒரு பெரிய சண்டையே நடந்திருக்கும். ஆனால் இப்பொழுது அமைதி காத்தான் பார்கவ். அன்றிரவு ஹோட்டலுக்கு சென்றதும் தொலைப்பேசியில் அடுத்த நாள் பங்கஜ் வருவது தனக்கு பிடிக்க வில்லை என்பதை தெரிவித்தான். ராமனாதனை அவமானப் படுத்த அவனுக்கு ஒரு அருகதையும் இல்லை என்று பொரிந்து தள்ளினான். அதற்கு சௌம்யா அளித்த பதில் அவனை செருப்பால் அடித்தது போல இருந்தது.

"என்ன சொல்றே Saumi?"

"Yes. எனக்கு கூடத்தான் Ramanathan வர்றது பிடிக்கலே. எப்போ பார்த்தாலும் ஒன்னு நகத்த கடிக்கறது இல்லே மூக்க நோண்டறது. அருவெறுப்பா இருக்கு."

"Saumi!, this is too much. ஏன் நீ நகத்த கடிச்சதே இல்லையா? இல்லே மூக்க நோண்டினதே இல்லையா?"

"இங்கே பாரு எதுக்கு தேவை இல்லாத பேச்சு? Pankaj is my friend. என்னுடைய compri க்கு அவன் எவ்வளவோ help பண்ணி இருக்கான். அப்படியெல்லாம் அவன விட முடியாது. அவன் என் கூட தான் இருப்பான். உனக்கு கஷ்டமா இருந்தா I'll not come to meet you tomorrow."

"So உனக்கு என்னவிட அவன் தான் முக்கியமா?"

"எனக்கு அப்படியெல்லாம் இல்லே, ஆனா உனக்கு என்னவிட Ramanathan தானே முக்கியம்?"

"சத்தியமா அப்படி இல்லே. ஆனா that doesn't mean your friend can insult him."

"என்னது insult ஆ? Indecent ஆ behave பண்ணினா சிரிக்கத் தான் செய்வாங்க."

"எது indecent? மவளே! நீ இருந்ததாலே தப்பிச்சான். இல்லேன்னா ங்கோ** மூஞ்சி பு** எல்லாம் கிழிச்சுருப்பேன்."

"Yuck.... see this is what really you are. I don't want to discuss this any further." தொலைப்பேசி துண்டிக்கப்பட்டது.

பேசி முடித்து விட்டு அறைக்கு திரும்பிய பார்கவ் ஒன்றும் பேசவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று வரிசையாக சிகரெட்டுகள் ஊதப்பட்டன. ஐந்தாவது சிகரெட்டை பற்ற வைக்கும் போது அதுவரை அமைதியாக இருந்த ராமனாதன், "டேய்! என்னடா ஆச்சு உனக்கு? இங்கே வந்ததுலேர்ந்தே நீ சரி இல்லை." என்று கேட்டான். அதை கேட்டு திரும்பிய பார்கவினுடைய கண்கள் கலங்கி இருந்தன. "என்னடா ஆச்சு? எதுவா இருந்தாலும் சொல்லுடா. நான் இருக்கேன்."

அவ்வளவு தான். மடை திறந்த வெள்ளம் போல அனைத்தயும் கொட்டினான் பார்கவ். அனைத்தையும் கேட்ட ராமனாதனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. தன்னால் தனது நண்பனின் காதலில் குழப்பம் என்ற எண்ணமே அவனுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. அவனால் முடிந்த மட்டும் ஆறுதல் கூறினான். தனக்கு ஒரு வருத்தமும் இல்லை என்றும், இன்னும் சொல்லப் போனால் அந்த பங்கஜ் சிரித்ததை கூட தான் கவனிக்கவில்லை என்றும் குறிப்பிட்டான். அடுத்த நாள் தான் வரவில்லை என்றும் தன்னால் அவர்களுக்கிடையில் மனக் கசப்பு வரக் கூடாது என்றும் கூறினான். பின்னிரவு வரை சோகமாக இருந்த பார்கவ் அதன் பிறகு கொஞ்சம் தேறினான். அடுத்த நாள் முதல் வேலையாக அவளை சமாதானப் படுத்த வேண்டும் என்பதில் மட்டும் அவன் தெளிவாக இருந்தான். அவள் என்ன சொன்னாலும் கோபமே படாமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

மறு நாள் காலையிலேயே சௌம்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக முந்திய தினம் நடந்ததை பற்றி அவள் பேசவே இல்லை. காலை Tram மற்றும் Metro இரண்டிலும் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை பார்கவ் கூற அனைவரும் பயணம் செய்தார்கள். பின்னர் நேராக விக்டோரியா நினைவு இல்லத்திற்கு சென்றார்கள்.

அங்கு இருந்த போது சிறிது தனிமை கிடைத்தது. கிடைத்த நேரத்தில் தான் நினைத்ததை சொல்லி விடலாம் என்று பார்கவ் சௌம்யாவின் அருகில் சென்று "Sorry, Saumi!" என்றான்.

"எதுக்கு?"

"நேத்திக்கு நான் அப்படி பேசி இருக்க கூடாது. ரொம்ப sorry."

"பரவா இல்லே. இதுலே என்ன இருக்கு? ஏதோ கோபத்துலே பேசிட்டே. இருக்க போறது இன்னும் மூனு நாள். அதுலே எதுக்கு நாம சண்டை போட்டுக்கனும்? Let's forget it."

அன்று முழுவதும் கல்கட்டாவில் இருந்த முக்கியமான நான்கைந்து இடங்களை பார்த்தார்கள். நாள் வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டதால் சிரமமாக இல்லை. இரவு அறைக்கு திரும்பினர்.

அடுத்த நாள் காலை கிளம்பி சுந்தர்பன்ஸ் சதுப்பு நில காடுகளுக்கு செல்வதாக திட்டம். West Bengal Tourism ஏற்பாடு செய்திருந்தார்கள். இரண்டு பகல், இரண்டு இரவு முழுவதும் கப்பலில் பயணம். காடுகளில் பல இடங்களில் நிறுத்தி புலிகளும், முதலைகளும் இன்ன பிற விலங்குகளும் பார்க்கலாம். முதல் கடல்/கப்பல் பயணம் என்பதால் அனைவரும் உற்சாகத்துடன் காணப் பட்டார்கள்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கல்கத்தாவிலிருந்து கிளம்பிய அந்த பேரூந்தில் அனைவரும் பயணம் மேற்கொண்டார்கள். சுமார் ஐந்து மணி நேர பயணமுடிவில் அவர்களுக்காக காத்திருந்தது அந்த கப்பல். கப்பலில் ஏறிய உடன் அவர்களை வரவேற்றது உயர் தரமான சைவ மற்றும் அசைவ உணவு வகைகள். அனைத்தையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு பின்னர் கப்பலின் மேற்தளத்திற்கு சென்று எங்கும் பரந்து விரிந்து கிடந்த நீர் போர்வையின் அழகை ரசிக்க தொடங்கினர். ஆங்காங்கே சிறு சிறு தீவுகளைப் போல சதுப்பு நில காடுகள். அதில் அதிசியமாக ஒன்றோ இரண்டோ குடிசைகள். குடிசை வாசலில் சில குழந்தைகள். "இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? இவர்களுக்கு கல்வி/பள்ளி என்றெல்லாம் ஒன்று இருப்பதே தெரியாமல் வளர்கிறார்களே? நாம் இவர்களைப் போல உள்ள குழந்தைகளுக்கு என்ன செய்வது?" என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அமைதியாக நின்று கொண்டிருந்தான் பார்கவ்.

இவ்வாறு மேலோட்டமாக அவனது எண்ணங்கள் எழுந்தாலும், அவனது உள் மனது மிகவும் துயருற்றிருந்தது. அவனுக்கும் சௌம்யாவிற்கும் இடையில் கண்ணிற்கு தரியாத ஒரு வித சுவர் எழும்பியதை உணர்ந்தான். வாழ்க்கை அவர்கள் இருவரையும் எண்ணச் சமநிலையின் இருவேறு துருவங்களுக்கு தள்ளி விட்டிருந்தது. பயணம் தொடங்குவதற்கு முன்னர் அதனை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது "எப்போது பயணம் முடியும்? எப்போது பெங்களூர் செல்லலாம்?" என்று எண்ணத் தொடங்கினான்.

அவனது நிலையை நன்கு உணர்ந்து ராமனாதன் அவனது அருகில் அமைதியாக நின்றான். அன்று இரவு ஒரு மணிக்கு மற்ற அனைவரும் தூங்கிய உடன் ராமனாதனும் பார்கவும் தனித்து இருக்கும் நேரத்தில் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான். அவனுக்கு ஆறுதல் கூறுவதற்காக பேச்சை தொடங்கிய ராமனாதன் அடுத்த அரைமணி நேர உரையாடலில் பார்கவ் சௌம்யாவை முழுவதுமாக பிறிய முடிவு செய்து விட்டான் என்பதை அறிந்து கொண்டான்.

"என்னடா சொல்றே? மப்புல இருக்கியா?"

"இல்லடா. எனக்கும் அவளுக்கும் ஒத்து வரும்னு தோனல. படம், music, books, career இப்படி எதுலயும் எனக்கும் அவளுக்கும் ஒரே thinking இல்லை. இப்போ பாரு அந்த Pankaj நம்ம கூட வர்றது எனக்கு பிடிக்கலே. இது அவளுக்கு நல்லா தெரியும். Tour முடிஞ்ச உடனே அவ அவன் கூட தான் இருக்க போறா. ஒரு அஞ்சு நாளைக்கு எனக்காக அவன் இல்லாம இருந்தா என்ன? எனக்காக இந்த சின்ன விஷயத்த கூட செய்யாதவளோட எப்படிடா வாழ்க்கைய ஓட்ட முடியும். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் பார்த்து பேசி பழகி காதலிச்ச சௌம்யாக்கும் இப்போ இருக்கற சௌம்யாக்கும் வித்தியாசம் நிறைய இருக்குடா. இந்த சௌம்யா எனக்கு வேண்டாம்."

"சரி. நீ easy யா சொல்லிட்டே. அவ எவ்வளோ கஷ்டப்படுவான்னு யோசிச்சியா?"

"டேய்! உனக்கு அவள பத்தி தெரியலே. நான் ஊருக்கு போன உடனே ஒரு ரெண்டு மாசம் அவளுக்கு phone பண்ணாம mail அனுப்பாம இருந்தா அவளே என்னோட பேசறத நிறுத்திடுவா. இன்னும் சொன்னா என்ன மறந்தாலும் மறந்துடுவா."

"நீ ரொம்ப exaggerate பண்ணறயோன்னு எனக்கு தோணுது."

"இல்ல நீ பாரு."

பார்கவின் உதடுகளில் ஒரு வரண்ட மெல்லிதான புன்னகை பரவியது. அவனது மனதின் வேதனையும், வலியும் ராமனாதனால் நன்கு உணரப்பட்டன. மேலும் அவனை கிளராமல் அமைதியாக இருந்தான் ராமனாதன்.

8 Comments:

நாதஸ் said...

அண்ணாச்சி நீங்க இந்த கதைய சொல்கின்ற விதம் டாப்பு... :)

SathyaPriyan said...

//
nathas said...
அண்ணாச்சி நீங்க இந்த கதைய சொல்கின்ற விதம் டாப்பு... :)
//
தலைவா நன்றி.

CVR said...

ம்ம்ம்ம்....

அப்புறம்??.. :)

santha said...

அடுத்து எப்பங்க தொடர் வரும். சீக்கிரம் போட்டிடுங்க.

கோபிநாத் said...

தல

சூப்பரு எழுத்து நடை தல ;))

இந்த பகுதி ரொம்ப நன்றாக வந்திருக்கு..வாழ்த்துக்கள் ;)

SathyaPriyan said...

//
CVR said...
ம்ம்ம்ம்....

அப்புறம்??.. :)
//
:-)

//
Santha Kumar said...
அடுத்து எப்பங்க தொடர் வரும். சீக்கிரம் போட்டிடுங்க.
//
விரைவில் பதிந்து விடுகிறேன்.

//
கோபிநாத் said...
தல

சூப்பரு எழுத்து நடை தல ;))

இந்த பகுதி ரொம்ப நன்றாக வந்திருக்கு..வாழ்த்துக்கள் ;)
//
நன்றி தலைவா.

Ramya Ramani said...

Difference of Opinion-நிறையவே தெரியும்போது விலகி இருந்தால் புரிதல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என நினைகிறேன்

SathyaPriyan said...

//
Ramya Ramani said...
Difference of Opinion-நிறையவே தெரியும்போது விலகி இருந்தால் புரிதல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என நினைகிறேன்
//
ரொம்ப சரியா சொன்னீங்க Ramya. பிரிவு தான் பல நேரங்களில் பலரை ஒன்று சேர்க்கிறது.